Monday 27 August, 2007

கல்வெட்டு


கல்வெட்டு

'டும்,' 'டமால்', 'டுப்', 'டம்', 'டம்', 'டும்,' 'டமால்'. பாறைகள் வெடித்து சிதறின. திடீரென ஒரு தொழிலாளி கத்தினான்.

குரல் வந்த திசையை நோக்கி சுந்தர் ஓடினான். முதலாளி செல்லமுத்துவும் பதட்டத்துடன் பின் தொடர்ந்தார்.

"ஐயா. இங்க பாருங்க. பாறையில என்னென்னவோ எளுதியிருக்குது."

சுந்தருக்கு பார்த்ததுமே புரிந்துவிட்டது! சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள்! சிதறியிருந்த மற்ற பாறைகளிலும் கல்வெட்டுக்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினான்.

"அப்பாடி. நம்ம ஆள்படைகளுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே? இவன் சவுண்டு வுட்டதும் பயந்திட்டேன். போடா, போய் மத்த வேலையப் பாரு. என்ன சுந்தரு? ஏதாவது புதையல் மாதிரியா? "

"கிட்டத்தட்ட புதையல் மாதிரித்தான் சார். இவைகளெல்லாம் நம்ம ராஜா காலத்து கல்வெட்டுக்கள். தொல்பொருள் இலாக்காகிட்ட சொன்னோம்னா அவங்க நம்மள பாராட்டுவாங்க. டி.வி.காரங்க பத்திரிக்கைகாரங்க வந்து போட்டோ புடிப்பாங்க. ஒங்கள பேட்டி எடுப்பாங்க."

சுந்தர் மகிழ்ச்சியில் அடுக்கிக் கொண்டே போனான். அவனுக்கு கால்கள் பரபரத்தன.

நீண்ட யோசனைகளுக்கு பிறகு செல்லமுத்து கேட்டார். "சுந்தரு. பாராட்டு, பேட்டியல்லாம் இருக்கட்டும்யா. பணம் எவ்வளவு தருவாங்க?"

அதிர்ந்து போனான் சுந்தர். "நஷ்ட ஈடு நிச்சயம் தருவாங்க சார். தவிர, இவைகள்..."

"யப்பா. இப்பத்தான் கஷ்டப்பட்டு அவனை இவனை புடிச்சி கான்ட்ராக்ட் எடுத்திருக்கேன். நஷ்ட ஈட வாங்கிக்கிட்டு நாக்கு வளிக்கறதா? இத மாதிரி நூத்துக் கணக்கில நாட்ல இருக்குதுப்பா. என் கொளுந்தியா கிராமத்து வீட்டாண்ட கொல்ல கக்கூசுக்கு பக்கத்தில ஒரு இருட்டு மண்டபம் இருக்குது. அங்க இத மாதிரி ஏகத்துக்கும் எளுதியிருக்குது. வௌவ்வா புளுக்க வீச்சம் அடிக்கும். அத வுடு. நீ சொன்ன மாரியே நான் போய் சொன்னா என்ன ஆகும் தெரியுமா? வேலை நின்னிடும். போட்டோ புடிப்பானுவ. ஆளாளுக்கு வருவானுவ. இன்னொரு கான்ட்ராக்ட் கெலிக்கற வரைக்கும் மிசினு வாடகை, ஆள் கூலி, உன் சம்பளம், என்னோட வருமானத்துக்கு என்ன வளி?"

செல்லமுத்து கிடுகிடுவென அடுத்த பெரு வெடிக்கு கட்டளையிட்டார்.

"சுந்தரு. நல்லா கேட்டுக்க. நாலு மணிக்குள்ளார எளுத்து இருக்கிற எல்லா கல்லும் தூளாகி லாரில ஏறிடணும். புரிஞ்சிச்சா. துடிப்பான பையனா இருக்காங்காட்டி ஒன்னிய வேலைக்கு வைச்சிருக்கேன். அதிகமா ரோசனை செய்யாம வேலையப் பாரு."

எந்த சிக்கலும் இல்லாமல் மாலைக்குள் வேலை முடிந்த திருப்தியில் வீட்டுக்கு போனார் செல்லமுத்து.

அவர் பேரன் சந்தீப் எதிர் கொண்டு வரவேற்றான்.

"தாத்தா. இந்த ஹிஸ்ட்டரி ரொம்ப போரு தாத்தா. அக்பர் குளம் வெட்டினாராம். சாலைகள் ஓரத்தில மரம் நட்டாராம். இப்ப இருக்கிற கம்ப்யூட்டர் வேர்ல்டுல இதுக்கு என்ன தாத்தா அவசியம்?"

தாத்தாவுக்கு ஏற்ற பேரன்!

Thursday 23 August, 2007

எது வாழ்க்கை?


எது வாழ்க்கை?


அழுகையும் பயமுமாக ஓடிவந்து அம்மாவின் கால்களை கட்டிக் கொண்டாள் நீரஜா. கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பேச்சு உடனடியாக வராததால் வார்த்தைகள் சிக்கின.

"அம்மா. சின்னசாமி தாத்தா செத்துப் போயிட்டாங்களாம். அவங்க வீட்ல எல்லாரும் அழறாங்க. ஏம்மா. செத்துப் போறதுன்னா என்னம்மா ?"

சின்னப் பெண் திக்கித் திணறி கேட்டாள். மரணம் என்றால் என்ன என்பதை அறியாத வயதில் அதை பார்த்திருக்கிறாள்! தாங்கமுடியாத பேரதிர்ச்சிதான். எப்படி இந்த சின்னஞ்சிறு தளிருக்கு இதை புரியவைப்பது? அம்மா கொஞ்சம் குழம்பிப் போனாள். சட்டென ஒரு ஐடியா வந்தது

"நீரஜ். உன்னோட பொம்மைக்கு சாவி கொடுத்தா ஓடறது இல்லையா? ஆனா, கொஞ்ச நேரம் ஓடின பிறகு நின்னுடுதுதானே. அதே மாதிரிதாம்மா செத்துப் போறதும். சாவி கொடுத்த மாதிரி நமக்குள்ள உயிர் ஓடிக்கிட்டு இருக்கு. முறுக்கி விட்டது தீர்ந்து போனது மாதிரி நாம ஒரு நாளைக்கு செத்து போயிடுவோம். ஆனா அது எப்பன்ணு நமக்கு தெரியாதும்மா?"

ஏதோ ஒரளவுக்கு புரிந்த மாதிரி தலையை ஆட்டியது. இன்னும் சில கேள்விகள் கேட்டது. அம்மா அகல் விளக்கை காட்டி ஏதோ சொன்னாள். பிறகு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பேச்சை மாற்றியதில் குழந்தை சகஜ நிலைக்கு வந்தது. அம்மா நிம்மதியானாள்.

ஆனால் மறுநாளே நீரஜா மீண்டும் அம்மாவை நோக்கி ஓடி வந்தாள்.

"அம்மா. நேத்திக்கு அந்த தாத்தா வீட்டில அவ்வளவு அழுதாங்களே. அதெல்லாம் சும்மா. அவங்க வீட்டு டி.வி.ல வடிவேலு காமெடி பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஹோட்டல்லேர்ந்து டி·பன் வாங்கி சாப்பிட்டுகிட்டிருக்காங்க. அய்ய..."

இரு வேறு நிலைகளை கண்டு குழந்தை குழம்பி போயிருக்கிறது. என்ன சொல்லி விளக்கினால் புரிந்து கொள்வாள்? அம்மா யோசித்ததில் பளீரென மனதில் மின்னலடித்தது. நீரஜாவை வாரியள்ளி கைகளில் ஏந்திக் கொண்டாள்.

"நீரஜ். நீ ஒரு பாதையில முக்கியமான வேலைக்காக போயிகிட்டு இருக்கே. திடீர்னு உன் காலுல ஒரு முள்ளு குத்திடுது. 'ஆ'ன்னு கத்துவ. முள்ள எடுத்து எறிவ. ஆனா அதுக்காக நீ போக வேண்டிய பயணத்தை நிறுத்திடுவியா என்ன? கொஞ்ச நேரம் விந்தி விந்தி நடந்திட்டு வலிய மறந்து நடக்க ஆரம்பிச்சிடுவே இல்லையா? அந்த மாதிரிதான் நாம வாழறதும். ஒரு மரணத்துக்காக நாம எல்லாத்தையும் நிறுத்திட்டு அதையே நினைச்சுக்கிட்டு இருக்க முடியாது. புரிஞ்சுதா?"

சிறுமி இந்த முறை விழிகள் விரித்து இரட்டை பின்னல்கள் அசைய தலையை ஆட்டினாள்.v

Wednesday 1 August, 2007

வந்தார் வென்றார் சென்றார்

அமுதசுரபி - ஆகஸ்ட் 2007

"கல்யானமா? நோ சான்ஸ்! என்றுதான் நான் இருந்தேன் என் இளம் வயதில், திரு விஸ்வேஸ்வரனை சந்திக்கும் வரை. 1972ல் அவர் கரம் பிடித்தேன். ஆண்டுகள் பல போயின. இனி விஸ்வேஸ்வரன் இல்லாமல் என் நாட்டிய நாடகங்கள் இல்லை, நானும் இல்லை என்ற நிலைக்கு வந்தேன். இப்படி ஒரு தென்றலாக போய் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை எனக்கு அளித்தாயே ஆண்டவா உனக்கு நன்றி என்று திருப்தி பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் புயலாக வந்தான் காலன். அவரை தட்டிப் பறித்து சென்றுவிட்டான்" என்று கண் கலங்கினார் திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன். சென்ற மாதம் காலமான தன் கனவர் திரு விஸ்வேஸ்வரனின் நினைவுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் அவர்.

என்னைப் பற்றியே அதிகமாக ஊடகங்களில் செய்திகள் அதிகம் வந்ததாலோ என்னவோ என் கனவரின் பல சாதனைகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. அதற்காக அவர் வருத்தப்பட்டதும் இல்லை. க்ளாசிகல் கிடாரிலும் ஆப்ரிக்க ஜிப்ஸிகள் வாசிக்கும் ப்ளமிங்கோ கிடாரிலும் அவர் நிபுணர். லஷ்மிகாந்-பியாரேலால், ஆர்.டி,பர்மன் ஆகியோர் இசையமைத்த பல ஹிந்திப் பாடல்களில் அவரது இசை பங்களிப்பு இருந்திருக்கிறது. நான் நாட்டிய நாடகங்களுக்கு அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருந்த போது, அவர் சென்னைக்கும் மும்பைக்கும் போய் வந்து கொண்டிருந்தார். இங்கு தமிழில் எம்,எஸ்.விஸ்வநாதனில் தொடங்கி இளையராஜா ரஹமான் வரைக்கும் இசையமைத்த பின்னனி பாடல்களுக்கு இசைகருவிகள் வாசித்திருக்கிறார். என்னுடைய பல நாட்டிய நாடகங்கள் வெற்றி பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரனம் இவர் வடிவமைத்த இசைதான்.

பண்டிட் சிவகுமார் சர்மாவிடம் குறுகிய காலத்தில் சந்தூர் இசை கற்றார். அவரே மெச்சும் அளவுக்கு சந்தூரில் கர்நாடக சங்கீதம் வாசிக்கும் திறமை பெற்றார். திடீரென்று வீனை கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார். ஜாஸ் இசையை பற்றியும், சிம்போனி பற்றிய தகவல்களை திரட்டி வைத்துக் கொண்டு ஆராய்ந்து கொண்டிருப்பார்.

அவர் மனசு போன வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. 84ல் அவருக்கு ஒரு அட்டாக் வந்தது. இனி அவர் மும்பையில் ஒரு காலும் சென்னையில் ஒரு காலுமாக இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். அபோதுதான் எனக்கு தோன்றியது! ஏன் இவரை எனது நாட்டிய நாடகங்களுக்கு பாட வைத்துக் கொள்ளக் கூடாது என்று.

அப்போது தொடங்கி அவரது அந்திம காலம் வரை எனக்கு அவர் ஒரு உமையொரு பாகனாகதான் இருந்தார். நாட்டியம் சம்பந்தமாக எந்த ஊர் போனாலும் அந்த ஊரின் சங்கீதம், இசை கருவிகள் பற்றி தேடுதல் வேட்டையை ஆரம்பித்து விடுவார்.

புதுமைகள் செய்ய வேண்டுமென்றால் அவருக்கு பசி தூக்கம் இருக்காது. தென்னகத்து ஆண்டாளயும், வடநாட்டு மீராவையும் இனைத்து அருமையான கர்நாடக இந்துஸ்தானி ·ப்யூஷன் வழங்கியிருக்கிறார். சீதாவையும், சாவித்ரியையும், பாஞ்சாலியையும், ஜான்ஸி ராணியையும் இணைத்து ஒரு நாட்டிய நாடகம் உருவாக்கினார். யாருமே அதிகம் கேட்டிராத குலசேகராழ்வார் எழுதிய தேவகியின் புலம்பலை நாடகமாக்கினார்.

கர்நாடக சங்கீதத்திற்கு கமகம்தான் பிரதானம். ஆனால் சந்தூரில் கமகமே கிடையாது. ஆனாலும் அவர் விட்டாரில்லை. சமீபத்தில் திறுவையாற்றில் சந்தூரில் கர்நாடக இசை கச்சேரி செய்தார். ஆனால் எந்த ஒரு பத்திரிகையும் அதை பதிவு செய்யவே இல்லை. தான் வாசித்தோம் என்பதை விட இந்த புது முயற்சி ஏன் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்தது. என் மரணத்திற்கு பிறகுதான் அதை பற்றி எழுத நேரம் வரும் போலிருக்கிறது என்று சொன்ன போது அதிர்ச்சியடைந்தேன். அப்படிதான் ஆகிவிட்டது" என்று கண்கலங்க சொல்லி முடித்தார் சித்ரா விஸ்வேஸ்வரன்.