Wednesday 26 December, 2007

டிசம்பர் சீசன் - கேள்வி இன்று.. பதில் நாளை

நேற்று டிசம்பர் இசை விழாவின் ஒரு அங்கமாக முத்ரா (சென்னை-தி.நகர்) ஒரு
வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தியது. இதில் கர்நாடக இசை, பரதநாட்டியம்,
நாடகம் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. திரு ஞானி
அவர்கள் நாடகம்-சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகளை தொடுத்தார்கள்.
பார்வையாளர்களிலிருந்து ஒரு சிலர் மேடைக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம்
ஒரு சில கேள்விகள் தொடுக்கப்பட்டது. அந்த வகையில் எனக்கு ஒரு குறுந்தகடு
பரிசு கிடைத்தது.

இனி கேள்விகள்


1. ஒரு நடிகர், தான் மிக பிரபலமாக தமிழ் திரைப்படங்களில் நடித்துக்
கொண்டிருந்தாலும், தனது நடிப்பை செம்மை படுத்துவதற்காக, ஒரு நாடக
குழுவினரை அனுகி, அதில் தன்னை இனைத்து கொண்ட்டார். அவர் யார்?


2. மலையாள இயக்குனர்கள் தமிழில் நேரடி படங்கள் எடுத்து (ரீ மேக் அல்ல)
தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் இருவரை குறிப்பிடுக.
அந்த படங்கள் எவை?


3. ஒரு தமிழ் திரைப்படத்திற்கான சென்ஸார் சாண்றிதழ் திரும்பப்
பெறப்பட்டது. அந்தப்படம் எது?


4. நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காலமான மிகப்பெரும் நாடக
நடிகர் யார்?


5. கபாலீஸ்வரர் கோயிலின் கடைசி தேவதாசி யார்?


6. நிறம் என்பதன் மொழியாக்க்த்தில் பரதநாட்டியத்தின் ஒரு பிரசித்தமான ஒரு
சொல் வெளிப்படும். அது என்ன?


7. ஒரு திரைப்படத்தில் மூன்று விதமான கதைகள் நாயகியால் சொல்லப்பட்டும்.
ஆனால், முடிவு வேறுவிதமாக இருக்கும். அந்த திரைப்படத்தின் பெயர் என்ன?


8.கால்பந்தை மையமாக வைத்து சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் எது?


9. ஓம் சாந்தி ஓம் என்ற ஹிந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு தமிழர்.
அவர் யார்?


10. நீராரும் கடலுடுத்த.. என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு
இசையமைத்தவர் யார்? அந்த பாடலை பாடியவர்கள் யார்?


உங்களுக்கு தெரிந்த பதில்களை பிண்ணுட்டமாக கொடுங்கள்.


எனது பதில்கள் நாளை வெளிவரும்.

Wednesday 12 December, 2007

உன் கண்ணில் நீர் வழிந்தால்....

நேற்று பாரதி பிறந்த நாள். நேற்றைய கனவில் பாரதியும், கண்ணதாசனும் வந்தார்கள். உடனே இந்த பதிவு. தமிழ்நாடுடாக் என்ற இனைய குழுமத்தில் நான் சில நாட்களுக்கு முன்னால் எழுதியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

பாரதி ஒரு பாடலில் (சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா...) ஒரு ஒற்றை வரியாக சொன்னதுதான் - 'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி'. இந்த வரி கண்ணதாசனை கவர்ந்துவிட்டது. எடுத்தார் பேனாவை. மேற் சொன்ன வரியையே முதல் வரியாக வைத்து அருமையான பாடல எழுதினார். பாடல் ஜிவ்வென்று உயரே பறக்கிறது.


எல்லோரும் ஆலமரத்தை அதன் விழுதுகளை சம்பந்தப்படுத்தி உயர்வாகச் சொல்வார்கள். அதாவது, மரம் இற்று போன பிறகும், விழுதுகள் தாங்கும் என்று சொல்லி விழுகளின் மேன்மையை சொல்வார்கள். இங்குதான் கண்ணதாசனின் மாற்று கோண பார்வை விழுகிறது.

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.

வேர்தான் முக்கியம். வாழ்வியலில் இருத்தல் முக்கியமில்லை. வாழ்தல்தான் முக்கியம். விழுதுகள் தாங்குவது வெற்று இருத்தல்.

கண்ணதாசனுக்கு உடனே மஹாபாரத போர் காட்சி ஞாபகம் வந்து விடுகிறது. பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடக்கிறார். அதுவும் ஒரு இருத்தலே. அவர் உத்ராயணம் வருவதற்காக காத்திருக்கிறார். அந்த அம்பு படுக்கையை போட்ட அர்ஜுனனை உலகம் பாராட்டியது. கண்ணதாசன் கொஞ்சம் மாற்று சிந்தனையை ஓட்டினார்.

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ பேதமை செய்ததடி

பாரதியின் இன்னொரு பாடல்...

காட்டினில் ஒரு அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்
அதை மரப் பொந்தினுள் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு

என்கிறார். இதில் காடு என்பது அறியாமையின் உருவகம். அக்னி குஞ்சு என்பது அறிவு. மரப் பொந்து என்பது உள்ளம். உள்ளத்தில் ஏற்றிய விளக்கு, காடு முழுவதையும் வெளிச்சமாக்கியது.

பாரதி ஒரு சாகரம். அதில் ஒரு சில முத்துக்களை பார்த்து நாம் அதிசயிக்கிறோம். நீங்கள் ரசித்த வரிகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்...

Monday 3 December, 2007

நதியின் குற்றமா?


காஸ்ட்லியான சில ஆம்ப்யூல்களை உடைத்து விட்டேன். எதையோ நினைத்துக் கொண்டு ·பிரிட்ஜிலிருந்த ஒரு ட்ரேயை நகர்த்தினேன். முந்திரிக் கொட்டை மாதிரி முன்னால் இருந்த அந்த கண்ணாடி குப்பிகள் பிதுங்கி தொப்பென விழுந்தன. கிழம் வந்தவுடன் அந்த ஸ்மெல்லை வைத்தே கண்டுபிடித்துவிடும். 'காள் காள்' என்று ஹை டெசிபலில் விடாமல் டாபமர்மன் மாதிரி கத்தும். 'தீர்ந்தது உன் கணக்கு' என்று சீட்டை கிழிக்கும். இதோடு ஆறே மாசத்தில் நான்கு இடங்களில் வேலை பார்த்தாகிவிட்டது. எல்லாம் இந்த மாதிரி சேல்ஸ்மேன் வேலைகள்தான். எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

நானும் இஞ்சினீயரிங் காலேஜில் படித்தவன்தான். படிக்கும் போது வருங்காலத்தில் பெரிய உச்சாணி கொம்பில் இருப்பது மாதிரி கனவுகளோடு இருந்தேன். த்ரிஷாவும் அசினும் என் கனவுகளில் அடிக்கடி வந்து 'என்னை கல்யாணம் செய்து கொள்ளேன்' என்று அடம் பிடித்திருக்கிறார்கள். படிப்பு முடியும் சமயத்தில்தான் நான் எதிர்பார்க்காத டிராஜிடி க்ளைமாக்ஸ் என் வாழ்வில் வந்தது. என்னோடு படித்தவர்களுக்கெல்லாம் காம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்து சென்னை, பெங்களூர், கொச்சின் என்று போய்விட்டார்கள். நான் இன்னும் தஞ்சாவூரின் சந்து பொந்துகளிலேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏன் நல்ல வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது? புரியவே இல்லை.

நான் படிப்பில் ஆவரேஜ்தான். ஆனால் என்னைவிட ஆவரேஜ்கள் நல்ல வேலையில் சேர்ந்திருக்கிறார்களே? அது எப்படி? அவர்களின் அப்பாக்கள் அங்கே இங்கே ஆள் பிடித்து, பணத்தால் அடித்து, இன்·புளுயன்ஸ் செய்து வேலை கிடைக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் என் அப்பா அப்படியெல்லாம் செய்யமாட்டாராம். அப்பா நிழலில் மகன் சுகம் காணக் கூடாதாம். தானும் ஒரு இன்·போசிஸ் நாராயண மூர்த்தி என்ற நினைப்பு அவருக்கு. போன வாரம் வீட்டில் ஏக ரகளை ஆனது. அம்மா ஓவென அழுதாள். என்னை இந்த உலகம் வஞ்சித்து விட்டது. கடவுள் கூட வேண்டியர், வேண்டாதவர் பார்க்க ஆரம்பித்துவிட்டார். நான் இனி எதற்கு வாழ வேண்டும் ? செத்துப் போய்விடலாம் என்று தீர்மானித்துவிட்டேன்.

கிழம் வந்து அதே மாதிரி கத்தியது. நானும் பதிலுக்கு கத்தினேன். கஸ்டமர்கள் வேடிக்கை பார்த்தார்கள். நிறைய அட்வைஸ் செய்தார்கள். 'நீயுமாச்சு உன் வேலையுமாச்சு' என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். சரி, எப்படி சாவது? நீண்ட யோசனைகளுக்கு பிறகு ரயில் முன் பாய்ந்து உயிரை விடுவது என்று தீர்மானித்தேன். ரெயில்வே டிராக்கை நோக்கி நடையை செலுத்தினேன்.

திடீரென எனக்கு முன்னே ஒரு சிறுவன் பொம்மை துப்பாக்கியை நீட்டினான்.

"அங்கிள் நீங்கள் ஜெயிச்சுட்டீங்களா? இல்லை, தோத்துடீங்களா?"

"நான் தோத்துட்டேன்ப்பா."

தோள்களை குறுக்கி கைகளை விரித்தேன், வேலு நாயக்கர் மாதிரி.

"அப்டீன்னா, நீங்க ஜெயிக்கப் போறீங்கன்னு அர்த்தம்." சிறுவன் கலகலவென சிரித்தான்.

"சரி. ஜெயிச்சுட்டேன்னா?"

"இன்னும் ஜெயிக்கப் போறிங்கன்னு அர்த்தம்" என்று சொல்லிக் கொண்டே ஓடிப் போய் விட்டான். என் பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது. 'தோல்வியைக் கூட பாசிடிவ்வாக யோசி' என்று சொல்லிவிட்டு போய்விட்டானே? 'டேய்! அந்த பையன் சொல்வது என்ன? நான் சொல்வதைக் கேள். முதலில் உன்னை சரி செய்து கொள். பிறகு மற்றவர்களில் குறை காணலாம்' என்று உள்மனது சொன்னது. ஆமாம்! என் படகில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள்! அதைவிட்டு விட்டு நதியை குறை சொன்னால் எப்படி?

இனி நான் புது மனிதன். ஜெயிக்கப் போகிறேன். இன்னும் ஜெயிக்கப் போகிறேன்.

என் நடையை கூட்டினேன், நம்பிக்கையோடு.

இந்த கதைக்கான தீப்பொறி.... (செல்வி ரம்யா)

விஸ்காம் எக்ஸாம், குறும்படம், எ·ப் எம் லைவ் ஷோ, தொகுப்பாளினி என மிகுந்த டென்ஷனோடு நான் அலைந்ததை என் அப்பா கவனித்து, 'நீ பின்னாளில் என்னவாக இருக்கப் போகிறாய் என்பதை தெளிவாக தீர்மானம் செய். செய்யும் வேலையை ரசித்து ரசித்து செய். உனக்கு இன்னும் பலம் சேருமே தவிர அலுப்பே தட்டாது" என்றார்.

(விகடன் தீபாவளி மலர் 2007)