Thursday 28 February, 2008

தலைச்சன்


இந்த கதை தொடங்கும் காலத்தை எப்படி சொல்வது என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. ஆண்டு, மாதம், நாள் என்ற கால அளவீடுகள் எல்லாம் ஒழிந்து போய், உயிர் வாழ்தலே ஒரு சவாலாக இருக்கும் ஒரு சூன்யமான காலகட்டம் என்று சொல்ல முடிகிறது. இந்த நூற்றாண்டிலிருந்து குறைந்த பட்சமாக ஆறு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன எனக் கொள்ளலாம். அரசாங்கம், பொருளாதாரம், சமூகம் என்ற வரையறைகள் அற்றுப் போய்விட்ட காலம் என்று சொல்லி உங்களை பயமுறுத்த வேண்டியிருக்கிறது.

ஏன் இப்படி ஆயிற்று ? அதற்கு பல காரணங்கள்.

சுற்று சூழல் ஆர்வலர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்த உலக நாடுகளுக்கு 2192ல் முதல் அடி கிடைத்தது. நியூஸிலாந்தின் தென் கோடி நகரமான டுநோடினை கடல் கொண்டது. அதற்கு அன்டார்டிக் பனிப்பாறைகள் உருகி வருவதே காரணம் என்றார்கள். அதன் தொடர்ச்சியாக கனடாவின் க்யூபெக் தீவுக் கூட்டங்களில் பல தீடீர் திடீரென கானாமல் போயின. ஒரே மாதத்தில் மாலத்தீவுகள் அனைத்தும் கடலில் மூழ்கின. பசிபிக் தீவுகள் பலவும் இதே நிலைமைக்கு ஆளாயின. இயற்கை ஒரு பக்கம் வஞ்சித்துக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து மற்ற நாடுகளை பொருளாதார சிக்கலில் லோல்பட வைத்து தங்களின் சுகமான வாழ்க்கையை தொடர்ந்தார்கள். அதன் விளைவாக அரசியல் பகை மேலும் மேலும் வலு பெற்றது. இரான், இராக், வட கொரியா, லெபனான், சிரியா, லிபியா, பிரேசில், பெரு போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்து மேலை நாடுகளை நேரடியாக எதிர்க்க ஆரம்பித்தன. உகலளாவிய தீவிரவாதம் ஒரு மாபெரும் தீய சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்தாலும், பேரழிவின் ஆரம்பம் 2356ம் ஆண்டு என்று சொல்லலாம். அந்த ஆண்டு, ஒரு உயிரியல் போர் தாக்குதலில் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஒரு கோடி பேர் மாண்டார்கள். அதற்கு உடனடி பதிலடியாக இரானின் பாதி பகுதியை அமெரிக்க படைகள் குண்டு வீசி அழித்தன. அதன் பிறகு எல்லாமே கோளாறு. டன் டன்னாக யுரேனியமும் தோரியமும் விண்ணிலும் மண்ணிலும் தன் சாகசங்களை நிகழ்த்தின. சரித்திரத்தில் குறிப்பெழுத அவசியமில்லாவிட்டாலும் நாம் அதனை கடைசி உலகப்போர் என கொள்ளலாம். நிலம், நீர், காற்று, ஆகாயம் விஷமாக போய்விட, உலக சீதோஷ்ண நிலையே நிலை தடுமாறி போனது.

அதன் பிறகு இரண்டே நூற்றாண்டுகளில் கிட்டதட்ட 95% உயிரினங்கள் அழிந்து போய்.... போதும். கதைக்கு வருவோமா ?

மெல்லிய இருட்டின் சில்லவுட்டில் அவர்கள் இருவரும் பெண்கள் என்று தெரிகிறது. இருவரும் வேகவேகமாக எங்கிருந்தோ தப்பித்து வருகிறார்கள் என்பது அவர்களின் பதட்டத்திலிருந்து புரிகிறது. இருவருக்குமே இலைகளும் தழைகளும் உடைகளாக இருக்கின்றன. இருவரில் ஒருத்தி நிறைமாத கர்பிணி. மூச்சு வாங்க சற்று பின்னால் ஓடி வந்தவள் ஒரு கட்டத்தில் களைத்துப் போய் கால்பரப்பி உட்கார்ந்து விட்டாள். வலியில் ஓலமிட முன்னால் சென்றவள் ஓடி வந்து அவள் வாயை பொத்தினாள்.

"டேரா, வா. இன்னும் கொஞ்ச தூரம் போய்விடுவோம். உன் அலறல் அவர்களுக்கு கேட்டுவிட்டால் காரியம் கெட்டுவிடும்."

"என்னால் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. சிகா, விட்டுவிடு. நடப்பது நடக்கட்டும்."

சிகா ஒரு தீர்மானத்தோடு டேராவை கைகளில் தூக்கிக் கொண்டு ஓடினாள். சகதியான ஒரு ஓடையை தாண்டி மேட்டில் ஏறத் தொடங்கும் போது டேராவின் அலறல் வேகமெடுத்தது. ஒருவித திருப்தியோடு அவளை அந்த பாறையில் படுக்க வைத்தாள். பரபரவென இயங்கினாள். டேராவின் உச்சபட்ச கத்தலின் தொடர்ச்சியாக, கொஞ்ச நேரத்திலேயே ரத்தமும் சதையும் அப்பியவாறு ஒரு குழந்தை வெளிப்பட்டது.

"என்ன குழந்தை சிகா?"

"தலைச்சன்"

"அப்படியென்றால் ?"

"முதல் குழந்தை பிள்ளையென்றால் அந்த காலத்தில் தலைச்சன் என்று சொல்வார்கள்."

"போச்சு. அப்படியானால் இவர்களின் சட்டப்படி இதை கொன்று விடுவார்களே. என்ன செய்ய ?"

"கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன். இவர்களின் கூட்டத்திலிருந்து தப்பித்து போக முயற்சி செய்வோம். நான் உன் குழந்தையை காப்பாற்றித் தருகிறேன். குழந்தை சோனியாகத்தான் இருக்கிறது. பிழைத்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்."

கொஞ்ச தூரம் போய் ஓடையின் அழுக்குத் தண்ணிரில் குழந்தையை கழுவி எடுத்து வந்தாள். பாறையின் இடுக்கில் ஒளித்து வைத்திருந்த இலைப் பசையை எடுத்து டேராவிடம் தின்ன கொடுத்தாள்.

"போதும், இந்த இலைப் பசை வயிற்றை குமட்டுகிறது. கிழங்குமாதிரி எதுவும் கிடைக்கவில்லையா ?"

"பிறகு தருகிறேன். அவர்களின் சேமிப்பிலிருந்து திருடி வைத்திருக்கிறேன். இப்போதைக்கு பிழைக்கும் வழியைப் பார். அவர்கள் தேடி வருவதற்குள் நாம் வெகு தூரம் போய்விட வேண்டும்."

சிகா குறிப்பிட்ட 'அவர்கள்' கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். ஆற்றங்கரையை ஒட்டி ஆண்களும் பெண்களுமாக சுமார் இருபது பேர் நிறுத்த வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கைகளும் வாயும் கொடிகளாலும் தழைகளாலும் கட்டப்பட்டிருந்தன. கூட்டத் தலைவன் ஜோடோ அமைதியாக வந்து அவர்கள் எதிரே வணங்கினான்.

"நம் நிலைமையை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நம் குறிக்கோள் இந்த மனித சமுதாயத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே தவிர நாம் வாழ வேண்டும் என்பது அல்ல. நீங்கள் பசியில் வாடி செத்துப் போவதைவிட இப்போது ஆற்றில் மூழ்கி செத்துப் போய்விடுவதே நல்லது. உணவு கையிருப்பு ரொம்பவும் குறைந்து விட்டது. அனைவரும் ஒட்டு மொத்தமாக செத்துப் போவது தவிர்கப்பட வேண்டும். வயதான ஆண்களான உங்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அதே மாதிரி அளவுக்கு அதிகமாகவே பிள்ளை பேற்றை பெற்று நலிந்து போய்விட்ட பெண்களான உங்களாலும் எந்த பயனும் இல்லை. எனவே உங்கள் சம்மதத்தோடு உங்களை ஆற்றில் தள்ளிவிட உத்திரவிடுகிறேன். சரியா ?"

ஜோடோ அவர்களை உற்று பார்த்தான். கொஞ்சம் மிரட்சியோடு அவர்கள் தலையாட்டினார்கள். ஆற்றை நோக்கி திரும்பி நின்று கொண்டார்கள். வேறு வழியில்லை. அவர்களுக்கு நேற்று முழுவதும் உணவு தரப்படாததால் மிகவும் களைத்திருந்தார்கள். ஜோடோ ஒருவனுக்கு சைகை காட்டினான். அவன் மரக்குச்சியால் ஒவ்வொருவரையும் ஆற்றில் தள்ளிவிட்டான். நதியில் அவர்கள் அடித்து போவதை எந்த சலனமும் இல்லாமல் கூட்டம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

"போச்சு. எல்லாம் போச்சு. நாம் ஒட்டு மொத்தமாக அழிந்து போகப் போகிறோம். நம் மக்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். சுகா அவர்களே, ஏன் ஒன்றும் பேசமாட்டீர்களா ?" ஜோடோ இயலாமையில் கத்தினான்.

கண்ணெதிரே உயிர்கள் கொல்லப்படுவதின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் சுகா தடுமாறிக் கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் அதிகம் விஷயம் தெரிந்தவர் அவர்தான். பதிலுக்காக ஜோடோ இன்னும் காத்திருப்பதைப் பார்த்ததும் அவர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தொண்டையை செருமினார்.

"பேச என்ன இருக்கிறது? இனிமேலும் நம் உயிர் வாழ்தல் ரொம்பவும் சிரமம் என்றே தெரிகிறது. முன்பெல்லாம் நம் உணவு சேமிப்பையும், சந்ததிகளை உண்டாக்க வேண்டும் என்பதற்காக இளம் பெண்களையும் கொள்ளையடிக்கும் கூட்டம் அடிக்கடி வரும். அவர்கள் எங்கே போனார்கள் ? உயிரோடு இருக்கிறார்களா தெரியவில்லை. இலைப் பசை அதிகம் கிடைக்கிறது. ஆனால் மீன்களும் கிழங்குகளும் குறைந்துவிட்டன. அந்தப் பகுதியில் ஒரு பாறையை விலக்கிப் பார்த்தேன். நீளநீளமாக புழுக்களைப் பார்த்தேன். இனிமேல் அதை சாப்பிட வேண்டியதுதான். நாம் அழிந்து போனாலும் அவைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். எனவே உலகம் ஒட்டு மொத்தமாக அழிந்துவிடாது என்றே நினைக்கிறேன்."

"முன்பெல்லாம் ஆகாயத்தில் சிவப்பாக ஒன்று வருமாமே. கண்கள் கூசுமாமே. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?"

"இல்லை. எனக்கு முன்னால் இருந்தவர்கள் சொல்ல நான் உங்களுக்கு சொல்கிறேன். அதற்கு சூரியன் என்று பெயர். பெரும் தூசு மண்டலம் அதை மறைத்திருக்கிறது. அது எப்போது விலகுமோ அப்போதுதான் நமக்கு வாழ்வு. நேரடியான சூரிய வெளிச்சம் நமக்கு வேண்டும். முதலில் இந்த அழுக்கு மழை நிற்க வேண்டும். அது வரைக்கும் நாம் இழுத்து பிடித்து வாழவேண்டும். இல்லையேல் அது எந்த பகுதியில் தெரிகிறதோ அங்கே போக வேண்டும். அந்த காலத்தில் படு வேகமாக இந்த பகுதியிலிருந்து அந்த பகுதிக்கு விண்ணிலும் மண்ணிலும் செல்வார்களாம். இது போல பல விஷயங்கள் வெறும் செய்திகளாக நம்மிடம் இருக்கின்றன. அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை."

"சுகா. கொஞ்சம் பொறுங்கள். ஒரு வேளை அந்த பகுதி நமக்கு கிடைத்துவிட்டால் கூட அங்கு உயிர்வாழ்தல் கடினம் என்று ஒரு முறை சொன்னீர்களே?"

"ஆமாம். அந்த அச்சுறுத்தலும் இருக்கிறது. வேண்டாம். நாம் இங்கேயே இருப்போம்."

ஜோடோ தன் கூட்டத்திலிருப்பவர்களை கணக்கெடுக்கச் சொன்னான். 320 பேர். அதில் நாற்பது பேர்களே பெண்கள். அதிலும் 15 பெண்களே பிள்ளைபேறு பெறக் கூடியவர்கள்.

"மக்களே! கேட்டுக் கொள்ளுங்கள். நமக்கு உடனடியாக இரண்டு தேவைகள் இருக்கின்றன. ஒண்று உணவு. சாப்பிட நிறைய உணவு வேண்டும். இரண்டாவது, நமது எண்ணிக்கையை அதிகரிக்க பெண் குழந்தைகள் அதிகம் வேண்டும். மீன்கள் அதிகமாக கிடைக்கும் வரை உணவாக இலை பசையே தரப்படும். இனி ஒரு வேளை மட்டுமே கிழங்கு தரப்படும். அரைகுறை வெளிச்சம் இருக்கும் போது எவ்வளவு உணவு கிடைக்குமோ அவ்வளவையும் கொண்டு வாருங்கள். புதிதாக ஏதாவது தென்பட்டால் அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள். அது விஷப் பொருளாகவும் இருக்கலாம். சுகாவை கேட்டுச் செய்யுங்கள்."

அப்போது ஒருவன் கொஞ்சம் தயக்கத்தோடு முன்னே வந்து நின்றான். "ஜோடோ! டேராவையும் சிகாவையும் காணவில்லை."

"என்ன ! டேராவை காணவில்லையா? அவளுக்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கும்படியாகத்தானே இருந்தது."

"ஆமாம் ஜோடோ. ஆனால் அவள் கொஞ்ச நாட்களாகவே சரியில்லை. நம் கொள்கைபடி நான்காவதாக பிறக்கும் ஆண்மகவை மட்டுமே வைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு உரிமையுண்டு என்பதை அவள் ஏற்றுக் கொள்ளமாட்டாளாம். அதற்கு சிகாவும் உடந்தை. சிகாவுக்கு இனிமேல் பிள்ளை பெறும் வாய்ப்பில்லை. அவளுக்கு செத்துப் போக விருப்பமில்லையாம். எனவே அவர்கள் தப்பித்து போயிருக்கலாம் என்று தெரிகிறது."

ஜோடோவின கண்கள் சிவந்தன. ஆத்திரத்தில் பற்களை நரநரவென கடித்தான். "போங்கள். போய் டேராவை தேடுங்கள். சிகா தேவையில்லை. டேராவும் அவள் குழந்தையும் நமக்கு அவசியம் தேவை."

"அதற்கு அவசியம் இல்லை". ஜோடோவின் பெயரை உரக்க அழைத்துக் கொண்டு இருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு மையப் பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்களின் பின்னால் டேராவும், சிகாவும். சிகா டேராவின் குழந்தையை இறுக பற்றியிருந்தாள். கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது.

"சுகா அவர்களே. நீங்களே விசாரணையை நடத்துங்கள். முதலில் அந்த குழந்தை என்னது என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்."

"தலைச்சன். ஆண் பிள்ளை. ஆனால் இதை கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன். எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமையில்லை தெரியுமா?" சிகா வெடித்தாள்.

"அது அந்தக் காலம். இப்போது நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்." ஜோடோ கத்தினான்.

டேரா சுகாவின் முன்னால் மண்டியிட்டாள். " சுகா அவர்களே. என் குழந்தையை கொன்று விடாதீர்கள். அடுத்த குழந்தை நிச்சயம் பெண்ணாக பிறக்கும். உங்களுக்கு என் வாழ்நாளில் பத்து குழந்தைகள் வரை பெண்களாய் பெற்று தருகிறேன். இதை மட்டும் விட்டுவிடுங்கள். என் முதல் குழந்தை. எனக்கு மட்டும் உணவு கொடுங்கள். போதும். நான் சமாளித்துக் கொள்கிறேன்."

"உனக்கு உணவு குறைந்து போனால் எப்படி அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றுக் கொள்வாய். முட்டாள்தனமாக பேசாதே. ஜோடோவிடம் குழந்தையை ஒப்படைத்துவிடு. அதுதான் உனக்கு நல்லது." சுகா ஆகாயத்தை பார்த்துக் கொண்டே பதிலளித்தார்.

அதற்கு பிறகு அதிகம் பேச்சில்லை. ஒருவன் டேராவை தரதரவென இழுத்துக் கொண்டு போனான். சிகாவிடமிருந்து குழந்தை வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது. அதன் கைகளும் வாயும் கட்டப்பட்டன. சிகா ஒரே பாய்ச்சலில் ஜோடோவை நெருங்கி அவனை பிராண்டினாள். மற்றவர்கள் விலக்குவதற்குள், ஜோடோவின் இடது தோள்பட்டை பகுதியில் தோல் கிழிந்து ரத்தம் பீறிட்டது. ஜோடோ மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அமைதி திரும்பியது.

"ஜோடோ! என்ன சொல்கிறாய் ?" சுகாவின் குரல் கம்மியிருந்தது.

"சொல்வதற்கு என்ன இருக்கிறது. நம்மிடம் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். விதிகளை மாற்ற இப்போதைக்கு அவசியமில்லை. ஆற்றில் வீசிவிடச் சொல்லுங்கள்."

ஜோடோவின் ஆணை நிறைவேறுவதைப் பார்க்க சகிக்காமல் சுகா சிறிது தூரம் விலகிப் போய் திரும்பி நின்று கொண்டார்.

"சுகா அவர்களே! மிகவும் உணர்ச்சிவசப் பட்டுவிட்டீர்களா? நீங்களே இப்படிச் செய்தால் நான் என்ன செய்ய? எனக்கு எதற்கு இந்த தலைவர் பதவி ?" ஜோடோ பின் தொடர்ந்தான்.

"ஜோடோ என்னை மன்னித்து விடு. என் புத்தி ஒத்துக் கொண்டாலும் மனசு ஒத்துக் கொள்ள மறுக்கிறது. டேராவின் அலறல் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளை கொன்று விடுவார்களாம் !"

" அப்படியா ! பைத்தியக்கார்கள். " ஜோடோ ஆச்சர்யப்பட்டான்.

(குங்குமம் - 6 மார்ச் 2008)

Monday 25 February, 2008

காதலைச் சொல்லிவிடு


ஸ்ரீலேகா போட்டிக்கு தயாரானாள். பாஸ்கெட் பந்தை தரையில் இரு முறை தட்டி கூடையை நோக்கி வீச அது வளையத்தில் மோதி வலைக்குள் விழாமல் பக்கவாட்டில் விழுந்தது. கோர்ட்டுக்கு வெளியிலிருந்து அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் கோச் செல்வா. ரிலாக்ஸாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாலும் அவனுக்குள் ஒரு பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஸ்ரீலேகாவும் அவள் தோழி ஸ்வாதியும் அவனிடம் பாஸ்கெட் பால் கோச்சிங் எடுத்துக் கொள்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். அழகிய கல்லூரி மாணவிகள். ஸ்வாதியை செல்வாவுக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியானவள். தான் உண்டு தன் விளையாட்டு பயிற்சி உண்டு என்று இருப்பவள். பாஸ்கெட் பால் கோர்ட்டில் எந்த அளவுக்கு அவள் எதிரணியை அலற வைப்பாளோ அந்த அளவுக்கு படிப்பிலும் சூரப்புலி என்று கேள்விப்பட்டிருக்கிறான். அவளை ஏன் காதலிக்க கூடாது என்று சில வாரங்களாக அவனுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை அவளிடம் சொல்லத் தயக்கம். ஒரு வார்த்தை ஏதாவது எக்ஸ்ட்ராவாக பேசினால்தானே காதலைச் சொல்ல நம்பிக்கையும் தைரியமும் வரும். அப்படியே வலுக்கட்டாயமாக சொல்லி வைத்து, அவள் 'சாரி சார். எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டால் ?'

ஸ்ரீலேகா அதற்கு நேர் எதிர். லொடலொடவென்று ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாள். எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ் அனுப்புவாள். பூனை குட்டி மாதிரி செல்வாவை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருப்பாள். உரிமையோடு முதுகில் குத்துவாள். மூக்கை கிள்ளுவாள். அவள் தன்னை காதலிக்கிறாளோ என்ற பயம் செல்வாவுக்கு இருக்கிறது. உன் மேல் எனக்கு காதல் இல்லை ஸ்வாதியிடம்தான் என்று மூஞ்சியில் அடித்த மாதிரி எப்படி அவளிடம் சொல்வது? அதுவும் தப்பாகப் போய், 'சார். நீங்கள் உங்கள் கோச் வேலையை மட்டும் பாருங்கள். வீணாக எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள்' என்று ஆரம்பித்து வேலைக்கே உலை வைத்துவிட்டால் ?

சே! ஒருத்தியிடம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இன்னொருத்தியிடம் இல்லை என்று சொல்ல வேண்டும். காதலை சொல்வதில் எவ்வளவு சிக்கல் ? யோசித்து யோசித்து கடைசியில் செல்வாவுக்கு ஒரு ஐடியா உதித்தது. பாஸ்கெட் பாலில் ஸ்ரீலேகாவை ஒரு போட்டிக்கு இழுக்க வேண்டும். அது கடினமாக இருக்க வேண்டும். தோற்கடித்து தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும்.

"செல்வா சார்! நான் ரெடி. போட்டியை ஆரம்பிக்கலாமா?"

"ஸ்ரீ. கவனமா கேளு. இந்த போஸ்டிலிருந்து எதிர் போஸ்ட் வரைக்கும் நடந்துகிட்டே பந்தை மேல் நோக்கி தட்டிக்கிட்டே வரனும். நிற்கவோ, பந்தை கையால பிடிச்சுக்கிட்டோ நடக்கவோ கூடாது. பத்து தப்படில மொத்த தூரத்தையும் கடக்கனும். தவிர, நான் ஏதாவது பேச்சு கொடுப்பேன். அதுக்கும் பதிலும் சொல்லனும். ஓகே?"

"ஓகே. நான் ஜெயிச்சா நான் என்ன சொல்வேனோ அதை நீங்கள் கேட்கனும்."

"ஓகே. அதே மாதிரி நான் ஜெயிச்சா...."

"அதற்கு சான்ஸே இல்லை. நான்தான் ஜெயிப்பேன்."

ஆனால் செல்வாவுக்கு நம்பிக்கை இருந்தது. நிச்சயம் தோற்றுவிடுவாள். ரெகுலர் ஸ்போர்ட்ஸ் டிரெஸில் வராமல் சுடிதாரில் வந்திருக்கிறாள். துப்பட்டா நிச்சயம் தொந்திரவு செய்யும்.

ஸ்ரீலேகா முதல் அடி எடுத்து வைத்தாள். "ஸ்ரீ. இன்று நீ ரொம்பவும் அழகாய் இருக்கிறாய்."

"என்ன கிண்டலா?" ஹீரோ ஸ்டைலில் பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு குறுக்கிட்ட செல்வாவை சாமர்த்தியமாக கடந்து போனாள் ஸ்ரீலேகா.

செல்வா அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.

"ஆனால் உன் மூக்கு. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது."

"போட்டி முடியட்டும் சார். அதற்குள் உங்கள் மூக்கை இன்ஷூர் செஞ்சுடுங்க"

செல்வா சரமாரியாக கேள்விகளை அம்புகளாக வீசி வந்தாலும் ஸ்ரீ£லேகா அசரவில்லை. எட்டு தப்படி முடித்துவிட்டாள். இன்னும் இரண்டே தப்படிதான். செல்வாவுக்கு உலகமே காலுக்கடியில் சரிவது போல இருந்தது. தப்பு கணக்கு போட்டுவிட்டோமோ? வேறு வழியே இல்லை. எடு பிரமாஸ்திரத்தை. அதிரடியாக கேள்விகள் கேட்க வேண்டியதுதான். அதை கேட்டு அவள் கவனம் சிதற வேண்டும். அவள் தோற்க வேண்டும்.

"லுக். ஸ்ரீ. இது பர்சனல். உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதில் நட்பு மட்டுமே இருக்கு. அதற்கு மேல் இல்லை...."

"அப்படியா? போட்டி முடியட்டுமே. அதை நான் தீர்மானித்துவிடுவேனே?"

சரியாக பத்து தப்படியில் முடித்துவிட்டாள். பந்து கீழே விழவேயில்லை. சே! என்ன முட்டாள்தனம் !

"ஸ்ரீ. நீ ஜெயிசுட்ட. ஓகே. ஆனால் நான் சொல்லறத கொஞ்சம் கேளு. வாழ்கையென்பது ஒரு போட்டியில் முடிவு செய்யக் கூடிய அற்பமான விஷயமில்லை. இரண்டு மனசு சம்பந்தப்பட்டது." தோல்வி பயத்தில் செல்வா உளறினான்.

"அதெப்படி? போட்டி வைச்சது நீங்கள். ஜெயிச்சது நான். என்ன சொல்லணும்கிறத நான்தான் தீர்மானிப்பேன்."

"சரி. சொல்லு."

செல்வா அவஸ்தையாக நெளிந்தான். ஸ்ரீ£லேகா வெற்றிக் களிப்பில் செல்வா அருகில் வந்தாள். கண்ணோடு கண் நோக்கினாள். சட்டென்று விலகி பெரிசாக ஓடி ஓடி சிரித்தாள்.

"ஸார். தப்பா நினைச்சுக்காதீங்க. இப்ப உங்க மூஞ்சி ப்யூஸ் ஆன பல்பு மாதிரி இருக்கு."

"ஸ்ரீ... ப்ளீஸ்"

"ஓகே. ஐயாம் சீரியஸ். செல்வா சார். நீங்க ஸ்வாதியை கல்யாணம் செஞ்சுப்பீங்களா? அவ உங்ககிட்ட சொல்லத் தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கா. நீங்க அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டா அவ மனசு உடைஞ்சு போயிடுவா. நீங்க போட்டின்ணு சொன்னதும் எனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக பட்டது. அவளுக்காகத்தான் இந்த போட்டிக்கே நான் ஒத்துக்கிட்டேன்."

"தாங்க்ஸ் ஸ்ரீ. ஐ ஆம் சாரி. உன்னை எப்படியாவது ஜெயிக்கனுங்கற வேகத்துல உன் மனசு நோகற மாதிரி பேசிட்டேன்."

"பரவாயில்லை சார். நீங்க உண்மைத்தானே சொன்னீங்க. சார் நட்பை தவிர நம்மிடையே இன்னொன்றும் இருக்கு. அது இந்த பாஸ்கெட் பால் விளையாட்டு. அதைதான் நான் மிகவும் விரும்புகிறேன். இந்தாருங்கள்." பந்தை செல்வா நோக்கி வீசிவிட்டு சிட்டாக பறந்தாள் ஸ்ரீலேகா. செல்வாவின் இதயத்தில் பட்டாம் பூச்சிகள் பறந்தன.

(தேவி - 27 பிப்ரவரி 2008)

Friday 1 February, 2008

சில ரகசியங்கள்


ஆனந்த விகடன் - 06 பிப்ரவரி 2008

மாலதி ஈமெயில் அனுப்பியிருந்தாள். 'உன் ரிடர்ன் டிக்கெட்டை உடனே கேன்செல் செய். வெள்ளி இரவு ஹாம்பர்கிலிருந்து லுப்தான்ஸாவில் நான் மும்பை வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து திருப்பனந்தாள் போய் மாமாவை பார்க்கிறோம்' என்று எழுதியிருந்தாள்.

மாமா! திருப்பனந்தாள் சேது மாமா! நினைத்ததுமே இனிக்கும் அந்த வார்த்தைகள் என்னை கிறங்க அடித்து பின்னோக்கி இழுத்து சென்றன.

எங்கள் சின்ன வயசு விஷம காலங்களில் மாமாவைப் போல் இனிதான விஷயம் வேறு எதுவும் இருந்ததாக நினைவில்லை. என் அப்பாவுக்கு உகான்டா இந்திய தூதரகத்தில் வேலை என்பதால் நாங்கள் எங்கள் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தோம். செங்கல்பட்டில் வேலை பார்த்துக் கொண்டு சனி ஞாயிறுகளில் வந்து போகும் சேதுதான் எங்கள் உற்ற நண்பன். அதனால்தான் என்னவோ எங்களுக்கு சேதுவுக்கு மாமா என்ற ச·பிக்ஸ் கூட தேவையில்லாத வார்த்தையாக இருந்தது. வெள்ளிக்கிழமை நெருங்க நெருங்க எங்கள் பேச்சு சேதுவை பற்றியே இருக்கும். அதே மாதிரி ஞாயிறு இரவு பழி சோகம் அப்பிக்கொள்ளும். வெள்ளிக்கிழமை வரை எங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உள்ளூர் தோழர் தோழிகளை சனி ஞாயிறுகளில் டூ விட்டு விடுவோம்.

ஒவ்வொரு முறையும் இந்த தடவை சேது வரும் வரை எப்படியாவது முழித்துக் கொண்டிருப்பது என்று நாங்கள் தீர்மானம் செய்வோம். ஆனால் அது நடக்காது. எட்டரை மணி ஆனதும் என் தலையாட்டம் ஆரம்பித்துவிடும். மாலு அடிக்கடி மூஞ்சி அலம்பி விட்டு என்னை கவலையாக பார்ப்பாள். தாத்தாவின் ரயில் வண்டி புகை மாதிரியான தொடர் திட்டுகள் ஆரம்பித்து விடும். 'போடு லெட்டரை. உகான்டாவுக்கு அனுப்பு இந்த வானரங்களை. கல்யாணம் பண்ணி விட்டாச்சு. கடமை முடிஞ்சுது. எனக்கெதுக்கு இந்த தலைவலி ?' என்று ஆரம்பித்துவிடுவார். மாலு விறுக் விறுக்கென்று என்னையும் இழுத்துக் கொண்டு தேரடி பஸ் ஸ்டாப் வரை நான்கைந்து முறை போய் வருவாள். 'எனக்கு தூக்கம் வர்றதுடி' என்று நான் நச்சரிக்க ஆரம்பிப்பேன். தூரத்தில் தெரியும் ஒவ்வொரு இரட்டை வெளிச்ச புள்ளிகளையும் காண்பித்து அதுதான் சேது வரும் பஸ் என்பாள். ஆனால் அது அதுவாக இருக்காது. கடைசியில் வெறுத்துப்போய் என் பிடுங்கல் தாங்காமல் வீட்டுக்கு வந்துவிடுவோம். இத்தனைக்கும் பத்து மணிகூட ஆகியிருக்காது.

சொல்லி வைத்த மாதிரி ஒவ்வொரு தடவையும் எங்கள் தலை சாய்ந்த பிறகே மாமா வருவாராம். 'பேய் மாதிரி ராத்திரி பதினோரு மணிக்கு என்னடா சாப்பாடு? செங்கல்பட்டுலேயே சாப்புட்டு வரக் கூடாது. இதே வழக்கமா போச்சு. அதுகள் அஞ்சு நாள் அடிக்கற லூட்டிய தாங்கமுடிலைன்னா, இவனும் அதுகளோட சேர்ந்துக்கிட்டு...' என்ற தாத்தாவின் கீறல் விழுந்த பிளேட்டை எங்களை மாதிரியே மாமாவும் சட்டை செய்யமாட்டாராம். விடிகாலையில் அரைதூக்கத்தில் நான் காலை தூக்கி போடவும் அதில் மாமாவின் ஸ்பரிஸம் புரியும். 'சேது' என்று விழி அகல ஆச்சர்யப்பட்டு மாமாவை கட்டிக் கொள்வேன். அந்த சந்தோஷத்திலேயே ஒரு பத்து நிமிஷம் குட்டித் தூக்கம் போடுவேன். ஒவ்வொரு முறையும் நாங்கள் 'சேது' என்று உரக்க சப்தமிட்டு கூப்பிட 'அவன் முழங்கால் அளவு கூட இல்லை, என்னவோ இதுக பேரு வச்சமாதிரி சேதுன்னு கூப்பிடதுக. டேய்! மாமான்னு சொல்லணும் புரிஞ்சுதா' என்று பாட்டி எவ்வளவோ சொல்லியும் நாங்கள் கேட்டதே இல்லை. அஞ்சரை அடி ஒல்லிபிச்சான் சேது எங்களோடு பழகும் போது மூன்றடி சிறுவனாகி போய்விடுவார்.

வார நாட்களில் வீட்டுக் கொல்லையிலேயே பல் தேய்ப்பது, குளிப்பது என்றால் சனி ஞாயிறுகளில் எங்களுக்கு எல்லாம் மண்ணியாற்றில்தான். மாமா ஒரு துண்டை எடுத்து முண்டாசு கட்டிக் கொள்வார். இடுப்பு வேட்டியில் பிரஷ், பேஸ்ட், சோப்பு டப்பா வகையறாக்களை முடிந்து கொண்டு எனக்கும் ஒரு சின்ன முண்டாசு கட்டி விடுவார். 'சேது. சங்கரை அழைச்சிகிட்டு போ. மாலு வேண்டாமே' என்று பாட்டி சொல்லிக் கொண்டே இருப்பாள். 'போ பாட்டி. முடியாது. நானும் போவேன்' என்று மாலு எங்களுக்கு முன்னால் கிளம்பிவிடுவாள். தெரு தாண்டும் வரைதான் அமரிக்கையாக வருவாள். செல்லியம்மன் கோயில் வந்ததும் அவளும் ஆம்பிளை காமாட்சி ஆகிவிடுவாள். கலியமூர்த்தி கடையில் இரண்டு வாடகை சைக்கிள் எடுத்துக் கொள்வோம். மாமா என்னை டபுள்ஸ் ஏற்றிக் கொள்ள மாலு இன்னொரு சைக்கிளில் வருவாள்.

மண்ணியாற்றில் ஒரு மூலையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அரையடி ஆழ தண்ணீரில் எதிர்பக்கமாக தடதடவென ஓடி பொத்தென்று விழுவோம். கண்கள் சிவந்து போகும் வரை கைகால்கள் பரப்பி மல்லாந்து படுத்துக் கொண்டு தண்ணீரில் ஊறிக் கொண்டிருப்போம். குளித்து கரையேறியதும் கரையோரம் வந்து இடுக்குகளில் ஒளிந்திருக்கும் தண்ணீர் பாம்புகளை சீண்டுவோம். மாமா பாம்பின் தலை எந்த பக்கம் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு வால் பக்கம் குத்துவார். பாம்பு சீற்றத்தோடு வெளியே வரவும் கவட்டை மாதிரி இருக்கும் குச்சியால் தலையை அமுக்கிவிடுவார். சரண்டர் ஆன பாம்பின் வால் சரசரவென வெளியே வரும். நிதானமாக வாலை பிடித்து தீபாவளி பட்டாசில் சாட்டையை பிடிப்பது மாதிரி தூக்கிப் பிடிப்பார். அது ஸ்ப்ரிங் ஆக்ஷனில் சுழன்று சுழன்று வாயை பிளக்கும். நான் பயந்து ஓடுவேன். ஆனால் திரிதண்டி மாலு கொஞ்சமும் பதட்டப்படாமல் மாமாவின் தைரியத்தில் கொஞ்ச நேரம் பிடித்துக் கொண்டு என் பக்கம் ஆட்டுவாள். மாமா ஒரு வீர விளையாட்டுக்காக பாம்பை பிடிப்பாரே தவிர அதை கொல்ல மாட்டார். மறுபடியும் தண்ணீரில் வீசி எறிந்து விடுவார். அது தண்ணீரில் எஸ் போட்டுக் கொண்டே போவது வேடிக்கையாக இருக்கும்.

ஆற்றங்கரைக்கு பக்கத்திலேயே நிறைய மாந்தோப்புகள் உண்டு. மாமாவும் மாலுவும் வேலியை பிரித்து தோட்டக்காரனுக்கு தெரியாமல் மரத்தில் ஏறுவார்கள். வடு மாங்காய்களை பறித்து ஆற்றில் வீசி எறிவார்கள். என் வேலை அதை பொறுக்கி வைத்துக் கொள்வதுதான். இத்தனைக்கும் அந்த தோட்டத்தின் முதலாளி மாமாவுக்கு தெரிந்தவர்தான். என்ன இருந்தாலும் திருட்டு மாங்காயின் ருசியே தனிதான்.

மாமாவுக்கு இயல், இசை நாடகம் எல்லாமே அத்துபடி. எல்லாவற்றிலும் நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாக இருப்பதுதான் ஸ்பெஷாலிடி. மாமாவுக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. லேடஸ்ட் சினிமா பாடல்களை சுருதி சுத்தமாக பாடி காட்டுவார். வேடிக்கைக்கு சோகப் பாடல்களை டப்பாங்குத்து மெட்டில் பாடி எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். சினிமா கதை சொன்னால் முதல் எழுத்து போடுவதில் ஆரம்பித்து சீன் பை சீனாக பிஜிஎம்மோடு சொல்வார். நம்பியார் அப்படி திரும்பி பார்ப்பார், 'டண்ட்ர டைன்' என்று ம்யூசிக் எ·பக்டோடு சொல்லும் போது நாங்கள் நம்பியாரையே நேரில் பார்ப்போம். பைட் சீன் சினிமாவில் பத்து நிமிடங்கள் வந்தால் மாமா குறைந்த பட்சம் அதை மூன்று நிமிடங்களுக்கு குறையாமல் 'எம்.ஜி.ஆர். இப்படி கையை மடக்கி குத்து விட்டார். ஜெஸ்டின் அப்படி உருண்டு விழுந்தான்' என்று விளக்கிச் சொல்வார். அவர் சொல்ல சொல்ல என் கை மற்றும் முக பாவனைகள் அதற்கு ஏற்ற மாதிரி போகும். மாலுவும் நானும் சண்டை போட்டுக் கொள்ளும் போது கூட அந்த உத்திகள் வெளிப்படும். அதே மாதிரி மாமா தான் அமர்சித்ரகதாவில் படித்த டூப்டூப் முதலை, சமடாகா நரி, காலியா காக்கை பற்றிய கதைகள் சொல்லும் போது முகத்தில் ஏக சேஷ்டைகள் செய்து சொல்வார்.


திருப்பனந்தாளில் பச்சை காளி பவழ காளி திருவிழா நடக்கும். பச்சையிலும் சிவப்பிலும் பெரிது பெரிதாக முகமூடிகளை கட்டிக் கொண்டு நடு ரோட்டில் நடனம் ஆடிக் கொண்டு காளிகள் வரும். அந்த வாரம் எங்களுக்கு மாமா பச்சை காளி பழவ காளி டான்ஸ் ஆடி காட்டுவார். அதற்கும் வாயாலேயே 'டன்டனக்கா, டன்டனக்கா' என்று ம்யூசிக் போட்டுக் கொள்வார். அப்போதெல்லாம் சினிமாவில் ட்விஸ்ட் நடனம் ரொம்பவும் பாபுலர். ஒரு முறை மாலு அது மாதிரி எப்படி ஆடுவது என்று கேட்டு வைக்க, மாமா எளிதாக கற்றுக் கொடுத்தார். 'ரொம்ப சிம்பிள். மாலு. தையல் மிஷினில் டைலர் துணியை தள்ளுவது பார்த்திருக்கிறாயா? அதே மாதிரிதான் இதுவும்' என்று சொல்லி அதே மாதிரி செய்து காட்டுவார். இதை நான் என் ஸ்கூலில் அபிநயம் செய்து ஹெட்மாஸ்டரிடம் பேர் வாங்கினேன்.

மாமா சீட்டுக் கட்டில் பல பிரமிக்கதக்க விளையாட்டுக்கள் செய்வார். அதில் சில விளையாட்டின் சூட்சுமங்களை சொல்லியிருக்கிறார். அது தெரிந்ததும் சே! இவ்வளவுதானா என்று தோன்றும். சிலவற்றுக்கு எவ்வளவு கெஞ்சியும் சொல்ல மாட்டார். 'வேண்டாம் சங்கர். சில ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும். அப்பத்தான் அதுக்கு மதிப்பு' என்பார். அதில் முக்கியமான விளையாட்டு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சீட்டுக் கட்டிலிருந்து பத்து கார்டுகளை எடுத்து தான் பார்த்துவிட்டு பத்து பேர்களிடம் கொடுப்பார். பத்து பேர்களும் அவர் சொன்ன இடத்தில் நிற்க வேண்டும். தங்கள் கார்டை இன்னொருவரிடம் எத்தனை முறை வேண்டுமானலும் யாரிடமும் மாற்றிக் கொள்ளலாம். பத்து பதினைந்து பரிவர்தனைகளுக்கு பிறகு மாமா யாரிடம் என்ன கார்டு இப்போது இருக்கிறது என்று சரியாக சொல்வார். அது எப்படி சாத்தியம் என்று இன்று வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'ரொம்ப சிம்பிள் சங்கர். என்னென்னு தெரிஞ்சா ஒண்ணுமேயில்லை' என்பார்.

மாலு பெரியவள் ஆனதும் தாத்தாவின் நச்சரிப்பு அதிகமானது. அந்த சமயத்தில் அப்பாவுக்கும் இங்கிலாந்துக்கு டிராண்ஸ்பர் ஆனது. எங்கோ ஒரு பலவீனமான சந்தர்பத்தில் பாட்டி ஏதோ யாரிடமோ சொல்லப்போக அதற்கு கைகால் முளைத்து வேறு விதமாக என் அப்பாவுக்கு போய் சேர்ந்தது. அதன் பலன் ஒரே வாரத்தில் நாங்கள் திருப்பனந்தாளிலிருந்து பிடுங்க்கப்பட்டு லண்டனில் நடப்பட்டோம். மாலு சமாளித்துக் கொண்டாள். நான்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பெரியவர்கள் போட்ட யுத்த சத்தத்தில் எங்கள் மாமா கோவில் குளத்தில் கரைத்த வெல்லம் மாதிரி காணாமல் போனார். மாலு கல்யாணம் ஆகி ஹாம்பர்க் போனாள். நான் படிப்பை முடித்ததும் நாரதர் மாதிரி திரிலோக சஞ்சாரி ஆகி தற்போது சிட்னியில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். இப்போது மாலுவுக்காக காத்திருக்கிறேன்.

சொல்லி வைத்த மாதிரி மாலு வெள்ளி இரவு வந்தாள். படபடவென திருப்பனந்தாள் போக எல்லா ஏற்பாடுகளும் செய்தாள். சென்னை போய் டூரிஸ்ட் டாக்சியில் அமர்ந்து தாம்பரம் தாண்டியதும் மாமாவை பற்றிய அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள். என்னால் நம்பவே முடியவில்லை.

"ஏன் மாலு. மாமா கல்யாணமே பண்ணிக்கலை. மாமாவுக்கு இப்ப 60 வயசு இருக்குமா?"

"இருக்கும். சிரிக்க சிரிக்க பேசறவங்க பின்னாடி ஒரு சோகம் இருக்கும்னு சொல்வாங்க இல்லையா? அது மாமாவுக்கும் ஒட்டிக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். மாமாவுக்கு குழந்தை மாதிரி வெள்ளை மனசுடா. வெள்ளந்தியா எல்லாகிட்டையும் பழகுவாரு. அதுவே அவருக்கு பல சமயங்கள்ல பலவீனமா போயிருக்கு. ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா காதலிச்சாராம். அது அவரை ஏமாத்தின அதிர்ச்சியை அவரால தாங்க முடியலையாம். ஒரு வழியா சமாளிச்சு எழுந்து நின்னவரை பிசினெஸ் பண்ணலாம் வான்னு சொல்லி அவரோட ஒரு சில நண்பர்களே அவரை கவுத்துட்டாங்களாம். இதெல்லாம் நடந்து இருபது வருஷத்துக்கும் மேல ஆயிருக்குது. திடீர்னு ஒரு நாள் மாமா ஊர விட்டு ஓடி போய் எங்கேயோ கண்கணாத இடத்தில இருந்தாராம். போன வருஷம்தான் ஏதோ கொஞ்ச காசு பணம் சேர்த்துக்கிட்டு ஊருக்கு திரும்பி வந்திருக்கிறாராம். சொல்லிக்கிற மாதிரி இல்லையாம். ஒரு வாடகை வீட்டிலே இருக்காராம். இதெல்லாம் நம்ப அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சிருக்குடா. நம்ம கிட்டே சொல்லவே இல்லை. எனக்கு போன வாரம்தான் தெரிஞ்சுது. ஆடி போய்டேன்டா."

மாலு அழ ஆரம்பித்தாள். டிரைவர் திரும்பி பார்க்கவும் கொஞ்சம் நாசூக்காக குறைத்துக் கொண்டாள். ஒரு தலைகாணியை எடுத்து வயிற்றில் கட்டிக் கொண்டு, பொட்டலம் கட்டுவது போல பேப்பரை கூம்பு மாதிரி சுருட்டி தலையில் குல்லாவாக வைத்துக் கொண்டு, 'ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி, சிரிக்கும் பச்சைகிளி' என்று ப·பூன் மாதிரி ஆட்டம் ஆடின சேதுதான் மனதில் வந்து போனார். அவருக்கு இப்படி ஒரு நிலைமையா?

திருப்பனந்தாள் வந்ததும் மாமாவை இதுதான் அந்த சேது என்று அடையாளம் காண வெகு நேரம் ஆயிற்று. அதை வீடு என்று கூட சொல்ல முடியாது. பத்துக்கு பத்து ஒரு ஷெட் என்றுதான் சொல்ல வேண்டும். சுத்தமாக ஓட்டையாண்டி. எங்களுக்கு டீ வாங்கிக் குடுக்க காசுக்கு தடுமாறினார். கூடு விழுந்த கண்கள். அழுக்கான தாடி. இரும ஆரம்பித்தால் சங்கிலியாக ஐந்து நிமிடங்களுக்கு குறைவில்லாமல் இருமினார். கைகள் நடுங்கின.

எங்களை பார்த்ததும் கூட்டம் கூடி விட்டது. எல்லோரும் கோரஸாக 'நீங்கள் கூட்டிக் கொண்டு போய்விடுங்கள்' என்று சொன்னார்கள். மாமா ரொம்பவும் முரண்டு பிடித்தார்.

அதிர்ச்சியில் உறைந்து போய் பேச்சற்று போன நான் ஏதோ ஒரு வேகத்தில் மாமாவை தரதரவென காரை நோக்கி இழுத்து வந்தேன். பின் கதவை திறந்து நின்ற டிரைவர் கூட அசூயையாக பார்த்தான். மாமாவை உள்ளே தள்ளி 'வண்டியை எடு' என்று சத்தம் போட்டேன். அடுத்த சில நிமிடங்களில் மாலு அங்கு உள்ள எல்லா கணக்குகளையும் செட்டில் செய்தாள்.

வண்டி அணைக்கரையை தாண்டும் வரை நாங்கள் இருவரும் பேச்சற்று இருந்தோம். பிறகு எனக்குதான் பேச தைரியம் வந்தது. "என்ன ஆச்சு மாமா? ஏன் இப்படி? எங்ககிட்ட சொல்லியிருக்கலாம் இல்லையா ? "

மாமா கண்ணை மூடிக் கொண்டார். "சங்கர், சில விஷயங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டுமே. விட்டுடேன்" மாமாவின் மூடிய கண்களிலிருந்து நீர் கோடாக இறங்கிக் கொண்டிருந்தது.