Tuesday 31 July, 2012

கனிம கூட்டுக் கொள்ளை

மதுரை மாவட்டத்தில் கனிம வளங்களை திருடியது 16000 கோடி என்று உத்தேசமாக சொல்லியிருக்கிறார்கள். இந்த திருட்டை செய்த கம்பனிகள், அவையோடு தொடர்ப்பு கொண்ட அரசு அலுவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக் கணக்கை பார்த்து, அவர்கள் வருமானத்து மேல் சேர்ந்திருந்தால் அதை பறிமுதல் செய்ய வேண்டும். என்னுடைய அனுமானப்படி அவர்கள் வருமான வரியே கட்டியிருக்க மாட்டார்கள். வெகு இலகுவாக உள்ளே பிடித்து போடமுடியும்.

இந்த அரசு செய்யுமா? அல்லது

ஸ்பெக்ட்ரம் கேஸை தன் நேரடி கவனிப்பில் வைத்துக் கொண்ட மாதிரி உயர் நீதி மன்றம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு சாட்டையை சுழற்றுமா?

இந்த கூட்டுக் கொள்ளையில் எவ்வனாவது ஒருவன் இன்னும் ஒரு மாசத்தில் ஜெயிலில் போய் களி சாப்பிட்டான் என்றால், ஜனநாயகம் வாழ்கிறது என்று மகிழ்ந்து, ஒரு பிடி சக்கரையை வாயில் போட்டுக் கொள்வேன்.

சொத்து சேர்க்கும் டிரஸ்டுகள்

டிரஸ்ட் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பல அமைப்புகளை கோடி கோடியாக சொத்துக்கள் வைத்திருக்கின்றன. எந்த உயரிய நோக்கத்துக்காக அந்த டிரஸ்ட் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் அடுத்த தலைமுறையில் கானாமல் போய்விடுகிறது. வாரிசு சண்டைகள் உருவாகின்றன. டிரஸ்ட் என்பதே ஒரு பொது நலனுக்கான பொது சொத்து. அதில் வாரிசு உரிமை என்பதே கேவலமாக படுகிறது.

இன்று பல டிரஸ்டுகள் ஒரு தனியார் நிறுவனம் போல செயல்படுகின்றன. தென் சென்னையில் முப்பாத்தம்மன் கோயில் அருகில் இருக்கும் ஒரு சபாவின் செயலாளர் காலமாகியதும் அதன் அடுத்த செயலாளராக அவர் மகன்தான் வந்தார். இது போல பல டிரஸ்டுகளில் வாரிசுரிமை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தான் சேர்த்து வைத்ததை தன் வாரிசுக்கு கொடுக்கும் குறுகிய எண்ணம் கொண்டவர்கள்தான் இந்த டிரஸ்டுகளின் முதலாளிகள் (!!!!!).

சொத்து சேர்த்து வைத்துவிட்டு அந்த தலைவர் போனதும், கீழ் மட்டத்தில் குடுமிபிடி சண்டைகள் வருகின்றன. சித்தாந்தத்தில் வேறுபாடுகள் வரலாம் என்ற கருத்துக்கு இடமே இல்லை. தலைவன் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாத போதுதான் சித்தாந்த புரிதலில் இரண்டை நிலை ஏற்படுகிறது. உண்மையில் அது நானா நீயா என்ற ஈகோ பிரச்சனைதான். அடுத்து சொத்து ஆளுமையில் சண்டை வருகிறது.

இப்படித்தான் பெரியார் மரித்ததும் அவர்களின் சீடர்களுக்குள் சண்டை வந்தது. இன்று பெரியார் சொத்து முழுவதும் ஒருவர் ஆளுமையில் வந்துவிட்டது. இனி அவர், தன் காலத்துக்கு பிறகு யாரிடம் ஒப்படைக்க போகிறார் என்பதை காலம் நிச்சயம் பதிவு செய்யும். அது அவர் வாரிசுக்கு போய்விட்டால், முன்னே சொன்ன சென்னை சபாவுக்கும் அதற்கும் வித்தியாசம் இருக்காது.

ஆழியார் வேதாத்ரி மகரிஷ் மரித்ததும் அவர்களின் சீடர்களுக்குள்ளும் சண்டை வந்தது. ராம்யோகி சுரத்குமார் மடத்தில் ஒரு சிலர் ஓரம் கட்டப்பட்டனர். ஏன், ஆரோவில்லில் கூட பெங்காலி கோஷ்டிகளுக்கும், தமிழ் கோஷ்டிகளுக்கும் மௌனயுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது.

இஸ்கானில் சண்டை. செங்கல்வராயன் டிரஸ்டில் சண்டை. இது போல சொத்துக்கள் சேர சேர சிக்கல்கள் அதிகமாகி கொண்டே போகிறது. சொத்துக்கள் இல்லையென்றால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த சித்தாந்தத்துக்கே மூடுவிழா.

ஒரு முறை காஞ்சி மஹா பெரியவரை ஒருவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பழங்கள் வாங்கிக் கொண்டும் போயிருந்தார். பெரியவர் அந்த பழங்களை அங்கிருப்பவர்களிடம் பிரசாதமாக ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டார். வந்தவர், "இந்த மடத்துக்கு எதாவது செய்யட்டுமா?" என்று கேட்டாராம். உடனே பெரியவர், "ஆபீஸில் ஏதோ தேவை என்று சொன்னார்கள்.போய் பாருங்கள்" என்றாராம். ஆபீஸில் விசாரித்தால் அவர்கள் சில கடிதங்களுக்கு ஸ்டாம்ப் வாங்க வேண்டும் என்றார்களாம். அதை வாங்கிக் கொடுத்துவிட்டு, திருப்தியடையாமல் மீண்டும் பெரியவரிடம் வந்து இன்னும் பெரிசாக ஏதாவது செய்யட்டுமா? என்று கேட்டாராம். "இல்லை. இது போதும். எப்ப வேனுமோ, அப்ப யாராவது வருவா. அவா கொடுப்பா. நீங்க ஏதாவது செய்ணும்னா நீங்களே நேரடியாக மக்களுக்கு செஞ்சுடுங்கோ" என்றாராம்.

இந்த உண்மையான ஜகத்குருவுக்கு இருந்த சிந்தனை இன்று பெரும்பாலான கார்பரேட் சாமியார்களிடம் இல்லை. இதில் காஞ்சி மடமும் விதிவிலகல்ல.

Monday 30 July, 2012

மது விலக்கு - அம்மாவுக்கு என் ஆலோசனைகள்

1. மஹாராஷ்ட்டிராவில் ஒரு மது கொள்கை இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மதுக் கடை இருப்பது மக்களுக்கு இடைஞ்சலாக, சமூக சிக்கல்களை உருவாக்கக் கூடிய வகையில் இருந்தால், அதை அரசு ஆராய்ந்து அந்த மது கடைகளை மூடிவிடுகிறது. அந்த நடைமுறையை ஆகஸ்ட் - 15ம் தேதியிலிருந்து துவக்கலாம். காலாண்டுக்கு (குவாட்டருக்கு!!!) 10% மது கடைகளுக்கு உச்ச வரம்பு வைத்து குறைத்துக் கொண்டே வரலாம்.

2. பீர்/விஸ்கிக்கு மாற்றாக அரசே மதுக் கடைகள் மூலமாக கள் வியாபாரம் சில காலங்களுக்கு செய்யலாம். இது கள்ள சாராயத்தை பெருமளவு குறைக்க உதவும்.

3. கேரளாவில் மதுக் கடைகளில் பார் இனைப்பு இல்லை. எனவே, பார்களை ஒட்டு மொத்தமாக மூடிவிட வேண்டும். இந்த கரை வேட்டிகள் இங்குதான் கொள்ளையடிக்கிறார்கள்.

4. பொது இடங்களில் மது அருந்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். இதில் பல நண்மைகள் இருக்கின்றன. வீட்டில் போய் குடிக்க பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். இரண்டாவது, குடித்துவிட்டு வண்டி ஓட்டும் கூட்டம் குறையும். விபத்துகள் தவிர்க்கப் படும்.

5. கண்கானிக்கக் கூடிய காவலர்கள் ஏதாவது கையூட்டு பெற்று, புதிய திட்டத்தை குளறுபடி செய்தால் அவர்களும் குண்டர் சட்டத்தில் போடப்படுவார்கள் என்ற உத்திரவு வர வேண்டும்.

6. மிடா குடியர்களை குடியிலிருந்து மீட்க மாவட்டம் தோறும் மருத்துவ முகாம்கள் உருவாககப் பட வேண்டும்.

இதை அத்தனையையும் அம்மா செய்தால், நான் நிச்சயமாக, பகிரங்கமாக அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவேன். அதை பெருமையா நினைப்பேன்.

தேவை ஒரு வடிகட்டி

ஒரு முறை காஞ்சி மஹா பெரியவருக்கு கண்புரை நீக்கம் செய்யப்பட்டதாம். அதை முடித்து வைத்தவுடன் அந்த மருத்துவர், "இனி நான் என்ன செய்யட்டும்" என்று கேட்ட்டாராம். எனக்கு கெடைச்ச இந்த மாதிரி மருத்துவப் பணி காசு இல்லாம இருக்கிற பல ஏழைகளுக்கு கிடைக்கனும். உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பண்ணு என்று சொன்னாராம். 
அவர் ஜகத்குரு. அவர் ஒன்று என்றால் இப்போது இருப்பதெல்லாம் பூஜ்ஜியங்கள்.  கண்தானம் செய்தால் மோட்சம் கிடைக்காது என்பது போன்ற உளரல்கள் வருகின்றன.
 இது போல பழமைவாத குணங்கள் பல போப்புகளிடமும்/முல்லாக்களிடமும் இருக்கின்றன. நாம்தான் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

Sunday 29 July, 2012

தமிழக அரசின் பார்வையில் ஒரு மாற்றம் தேவை


முதலாவது குடியர்களை ஒரு வாடிக்கையாளர் என்று பார்ப்பது தவறு. அரசு லாபம் சாம்பாதிக்க டாஸ்மாக் கடைகளை திறக்கவில்லை. எனவே சமூக அக்கறை கொண்ட எந்த ஒரு அரசும், இந்த மாதிரியான ஒரு கூட்டம் குறைய வேண்டும் என்பதாகதான் இருக்க வேண்டும்.

இரண்டாவது, அதிகமாக குடித்து தெருவில் மட்டையாகி கிடக்கும் குடியர்களை இந்த சமூகம் வெறுக்க கூடாது. அரசு அவர்களை நோயாளிகளாக பாவித்து அவர்களை குடியின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

ஒரு பெண்னை தலைமை பொறுப்பில் கொண்ட இந்த அரசு செய்யுமா?

Saturday 28 July, 2012

தேவை ஒரு ரண சிகிச்சை

தாம்பரம் முடிச்சூர் சியோன் பள்ளி துயர சம்பவத்திற்கு பிறகு, எல்லா தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதை ஒரு பக்கம் பார்த்தால் சரி என்றே படும். ஆனால் நிர்வகிக்க லாயக்கில்லாத கல்வி துறையால் ஒட்டுமொத்த சீரழிவே ஏற்படும். மக்களே விரும்ப மாட்டார்கள்.

தனியார் கல்வி நிலையங்கள் மலைமுழுங்கிகளாக இருந்தாலும் மக்கள் அதை நோக்கி இன்னமும் போகிறார்கள் என்றால் அதில் காரணம் இருக்கிறது. அரசு பள்ளிகளில் உள்கடமைப்பு குறைபாடுகள் இருக்கின்றன. ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்படியென்றால் என்னதான் தீர்வு? எனக்கு தோன்றிய சில கருத்துக்களை தெரிவிக்கிறேன். அரசு இதை அறிமுகப்படுத்தலாம்.

1. முதலில் கல்வி நிலையங்களில் அனைத்து நிதி நடவடிக்கைகளும் காசோலை மூல்மாதான் நடக்க வேண்டும். உள்ளே வரும் பணம், வெளியே போகும் பணம் அனைத்தும் வங்கி கணக்குகள் மூலமாகத்தான் போக வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியும் கண்கானிக்கப்பட வேண்டும்.

2. பள்ளிகளின் அனைத்து சொத்து வளர்ச்சிகளும் இந்த வங்கி கணக்கோடு இனைத்து பார்க்க வேண்டும். கணக்குகளில் வராத எந்த புதிய சொத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் இரண்டாம் கணக்கு (இரண்டாம் பில் புக்) வைத்து பணம் வாங்கும் வழக்கம் அடியோடு ஓய்ந்து போகும்.

3. பள்ளிகள் அனைத்தும் டிரஸ்ட் சட்டத்தில் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சதவிகதத்திற்கு மேல் இலாபம் வந்தால் அது முதலமைச்சர் பொது நிதிக்கு மாற்றப்படும் என்ற அதிரடி உத்திரவை அரசு போட வேண்டும்.

4. கல்வித் துறையிலிருந்து ஒரு நபர், பெற்றோர் குழுமத்திலிருந்து ஒரு நபர், ஆசிரியர்களிருந்து ஒரு நபர், ஒரு சமூக ஆர்வலர் என்ற தொடர் கண்கானிப்பு குழுவை அமர்த்தலாம்.

4. கடுமையான தணிக்கை, கடுமையான கண்கானிப்பு இருந்தால் கல்வி கொள்ளையர்கள், போதும்டா சாமி, இனிமேல் இதில் சம்பாதிக்க முடியாது என்று கஞ்சா காய்ச போய்விடுவார்கள். கல்வித்துறை பிழைக்கும்.

Friday 27 July, 2012

கல்வியும் சாராயமும்

ஒரு டி.வி. நிகழ்ச்சியில் ஒருவர் சொன்னது.

முன்பெல்லாம் அரசாங்கம் கல்வியை கொடுத்தது. ரௌடிகள் சாராயம் விற்றார்கள். தற்போது அந்த ரௌடிகள் கல்வித் தந்தைகளாகிவிட்டார்கள். அரசாங்கம் சாராயம் விற்கிறது.

தமிழக அரசுக்கு வெட்கம்/மானம்/சூடு/சொரனை எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

இதில் தாத்தாவும், அம்மாவும் ஒரே கட்சி.

களவானிகள் ஜாக்கிரதை

சமீபத்தில் சென்னை சென்றிருந்தேன். ஒரு அரசியல் நண்பரை சந்தித்தேன். முதலமைச்சர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை கடிந்து கொண்டது பற்றி பேச்சு திரும்பியது. ஒரு கவுன்சிலர் இப்படி சொன்னாராம். " நாங்கெல்லாம் என்ன சமூக சேவை செய்யவா அரசியலுக்கு வந்திருக்கோம். முப்பது லட்டச ரூபா முதல் போட்டு இந்த சீட் போட்டு இன்னும் அது மாதிரி ரெண்டு பங்கு செலவழிச்சு வந்திருக்கேன். போட்ட காசுக்கும் மேல ரெண்டு மடங்கு எடுத்தாத்தானே அடுத்த எலக்‌ஷனுக்கு தேவையா இருக்கும். இந்த கணக்கு அம்மாவுக்கு புரியாம என்னவோ பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்க அரசியல் அப்படி. என் அரசியல் இப்படி"

இது எப்படி இருக்கு. தி.மு.க போய் அ.தி.மு.க. வந்தாலும் அல்லது இரண்டுக்கும் மாற்றாக தே.மு.தி.க. அல்லது பா.ம.க. அல்லது ம.தி.மு.க என்று யோசித்தாலும் களவானிகள் எப்படியும் எங்கும் இருப்பார்கள்.

ஆண்டவா. என்ன இது நம் நாட்டுக்கு வந்த சோதனை.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் கவனத்திற்கு


வணக்கம். இந்த கடிதம் எழுதும் சமயத்தில் மனசு கனத்துப் போயிருக்கிறது. உணர்ச்சி கொந்தளிப்பை கொஞ்சம் அடக்கி அறிவு பூர்வமாக ஒரு சில கருத்துக்களை சொல்ல விழைகிறேன்.

தமிழக அரசு அதிகார வர்கத்தில் லஞ்சம் என்பது இரண்டற கலந்து விட்ட ஒரு விஷம் என்பது ஒரு ஊரரிந்த ரகசியம். அதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நேற்று தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு சின்னஞ்சிறு மழலை பலியாக யார் காரணம்? ஒரு குழந்தை உள்ள விழும் அளவுக்கு ஓட்டை உள்ள ஒரு வண்டிக்கு தகுதி சான்று கொடுக்கும் தைரியம் எப்படி ஒரு போக்குவரத்து ஆய்வாளருக்கு வந்தது? குழந்தை உயிர் பறிபோனது தெரிந்தும் கூட எங்களுக்கு அந்த துயர சம்பவத்தில் நேரடி பொறுப்பில்லை என்று சொல்ல சொல்ல ஒரு தாளாளருக்கு எப்படி ஒரு தைரியம் வருகிறது? மக்கள் இப்படி கொஞ்ச நாட்கள் கத்தி கதறுவார்கள், அதன் பிறகு நாம் மீண்டும் கூட்டுக் கொள்ளையை தொடரலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் மீண்டும் அளிக்கும் அந்த அதிகார சக்தியின் வீர்யம் எங்கிருக்கிறது?

நான் உங்களை ஒரு மக்களின் காப்பாளராக பார்க்கிறேன். புரையோடி போயிருக்கும் இந்த மலினங்களை எப்படி கவனிக்காமல் இருந்து விட முடியும்?

இந்த வார விகடனில் போலீஸ் துறையை பற்றிய விரிவான அலசல் வந்திருக்கிறது. மக்களை காக்க வேண்டிய போலீஸ் துறை எப்படி மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள் என்பதை தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது. உண்மையான திருடர்கள் போலீஸ் அல்லவா? போலீஸ் அதிகாரிகளுக்குள் லஞ்சம் பிரிப்பதில் தகராறு வந்து கட்டிபுரண்டு சண்டையிட்டார்கள் என்ற செய்தி சில நாட்கள் முன்னால் செய்திதாள்களில் வந்தது. இதுவும் ஒரு சோறு பதம்தான். இதை வேறோடு பிடுங்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

உங்கள் உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையான ஒரு சிலரை வைத்து நான் தரும் இந்த துறைகளில் ஒரு சர்வே எடுங்கள். உங்களுக்கு சீழ் பிடித்து போன அதிகாரத் துறையின் லட்ச்சனம் புரியும்:

1. பத்திர பதிவு துறை

2. பொது பணித்துறை

3. வட்டார போக்குவரத்து துறை

4. வருவாய் துறை

5. அரசு பொது மருத்துவ மனைகள்

இந்த பட்டியல் ஏதோ ஒரு எடுத்துக் காட்டுக்குதான். கான்சர் உடம்பு முழுவது பரவிட்ட மாதிரி அனைத்து துறைகளிலும் லஞ்சம் பரவியிருக்கிறது. இது இந்த ஆட்சி அந்த ஆட்சி என்று இல்லாமல் எல்லா ஆட்சியிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

இங்கு மக்கள் படும் பாட்டை விட அரசுக்கு வரவேண்டிய வருமானம் பெருமளவு அரசு அதிகார வர்கத்து பாக்கெட்டுகளில் போய்விடுகிறது என்ற உண்மையும் புரியும்.

எனக்கு தெரிந்த எளிய சிறு வழி முறைகளை சொல்ல விரும்புகிறேன்.

1. நீங்கள் சட்ட சபையில் நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடவேண்டும். லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை என்று தெள்ள தெளிவாக ஆனித்தரமாக தெரிவிக்க வேண்டும்.

2. அரசு அலுவலங்களில் அரசு அதிகாரிகளை தவிர அங்கும் இங்கும் அலையும் புரோக்கர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

3. ஒரு துறையிலும் நுழைவாயிலில் ஒரு வரவேறபறை உருவாக்கி வரும் பொதுமக்களுக்கு லஞ்சமில்லா உதவிகள் செய்ய வேண்டும்.

4. லஞ்சம் வாங்குவோரை கையும் களவமாக பிடிக்க சிறப்பு படைகளை உருவாக்க வேண்டும். மக்கள் வந்து புகார் கொடுத்தால்தான் என்று இல்லாமல் சந்தேகப்படும் நபர்களை பொறிவைத்து பிடிக்கும் தனிப்படைகளை உருவாக்க வேண்டும்.

5. அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு, அதை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்ய வேண்டும்.

6. பொது மக்களுக்கு லஞ்சம் பற்றிய தகவல்களை ரகசியமாக தெரிவிக்க 'தபால் தலை இல்லா - அனுப்புனர் முகவரி இல்லா' கடிதங்களை வரவேற்க வேண்டும். தகுந்த தபால் தலை செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

7. மக்கள் தைரியமாக லஞ்ச தகவல்களை தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் ஒரு பெட்டி வைக்க வேண்டும்.

8. 100, 108 மாதிரி மிக எளிதாக மனதில் வைக்கும் படியாக ஒரு தொலைபேசி எண்ணை லஞ்ச ஒழிப்புக்காக உருவாக்கி அதை செய்தி தாள்களில் அறிவிக்க வேண்டும்.

இது மாதிரி ஒரு போரை துவங்குங்கள். மக்கள் நிச்சயம் உங்கள் பக்கம் இருப்பார்கள்.


Wednesday 25 July, 2012

ஜீவ - மரணம்

இசை

நீர் மேலாண்மை

தஞ்சை நினைவுகள் - 2