Wednesday 27 August, 2008

எங்கே ஊனம்?


தேவி - 19 ஆகஸ்ட் 2008

"இப்போது உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சியை அளிக்க திரு ப்ரகாஷ் ஆனந்த் அவர்களை அழைக்கிறேன்"

மைக்காளர் அறிவிக்கவும், ஒரு ஒளிவட்டம் சுழன்று அந்தச் சிறுவன் மேல் விழுந்தது. எழுந்த அவன் மேடையை நோக்கி முன்னேறினான். அடுத்த சில நிமிடங்களுக்கு எதிர்பார்ப்புகளுடன் கூடிய அமைதி நிலவியது. அனைவரின் உள்ளத்திலும் இவனா இவ்வளவு பெரிய எலக்ட்ரானிக் கீபோர்டில் பாட்டிசைக்கப் போகிறான் என்ற கேள்வி இருந்தது. காரணம், அவன் ஒரு சிறப்பு குழந்தை. உருவம் பத்து வயதுக்கு உரியதாக இருந்தாலும் அவன் நடையும் செய்கையும் ஐந்து வயது குறைந்தே இருந்தன.

அப்படியும் இப்படியுமாக சரி பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷ், திருப்தி பட்டு, தலை நிமிர்த்தி, மைக்காளரை கேள்வியாக பார்த்தான். அவர் உடனே கட்டைவிரல் உயர்த்தி தலையசைத்தார்.

அவ்வளவுதான்!!! மடை திறந்த வெள்ளமாக ஒரு இனிய இசை கீபோர்டிலிருந்து வெளிப்பட்டது! அது மிக பிரபலமான திரைப்படப் பாடலின் தொடக்க இசை! அப்போது தொடங்கிய மக்களின் ஆச்சரியம் இதழ் விரிக்கும் மலர்களைப் போலே பன்மடங்காகிக் கொண்டே போனது. ப்ரகாஷ் துளிக்கூட தடுமாறவில்லை. பிய்த்து உதறினான். அந்த பிரபல பாடலில் என்னென்ன நெளிவுகள் குழைவுகள் உண்டோ அத்தனையும் 24 காரட்டுகளாக டாண் டாண் என்று வந்து விழுந்தன. மகுடி பாம்பாய் தாளக் கட்டுக்கு ஏற்ப மக்கள் கைதட்டினார்கள். உற்சாகம் பீறிட்டெழுந்தது. பாடல் முடிந்ததே தெரியவில்லை. கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடித்தது.

தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷின் அம்மா வித்யா கண்கலங்கினாள். அருகில் இருந்த கணவன் ஆனந்த் தோள்களில் சாய்ந்து விம்மினாள். பின்னந்தலை மயிர்க் கற்றையை வருடி சமாதனபடுத்திய ஆனந்த், ஆள்காட்டி விரலால் அவள் முகவாயை நிமிர்த்தினான்.

"வித்யா இப்ப நீ என்ன நெனைக்கற சொல்லட்டுமா?"

"ம்....."

"கடவுளே! எனக்கு இப்படி சாதனைகள் படைக்கிற குழந்தையை எதற்காகக் கொடுத்தாய்? சாதாரண குழந்தையை கொடுத்திருந்தாலே நான் திருப்தி பட்டிருப்பேனே! அப்பிடின்னுதானே?"

"ஆமாங்க. என்னால இதையெல்லாம் மகிழ்ச்சியா ஏத்துக்க முடியலைங்க. நான் யாருக்கும் எந்த கெடுதலும்...."

"புரியாம பேசாத. நாமதான் ரணப்பட்டு ஊனமா போயிட்டோம். ப்ரகாஷை பாரேன். எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கான். அவனொட தனி உலகத்தில ராஜா மாதிரி இருக்கான். அங்கே அவனுக்கு எந்த ஊனமும் இல்லை. எதையோ நெனைச்சுக்கிட்டு, இல்லாததுக்கு ஏங்கி வாழ்க்கையை சிக்கலாக்கிக்கிறோம். இதுவரை நாம நமக்காக வாழ்ந்தாச்சு. இனி அவனுக்காக வாழ்வோமே. எரியற தீபத்துக்கு இருக்கும் ரெண்டு பக்க தடுப்பு மாதிரி நாம இருப்போம். வா."

வித்யா ஓடிச் சென்று ப்ரகாஷ் கன்னத்தில் தொடர் முத்தமிட மக்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.

அண்டங்காக்கை


கல்கி - 31 ஆகஸ்ட் 2008

முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ வரவில்லை. மற்ற காக்கைகள் 'கா..கா' என்று கத்தினால் இந்த கிழட்டு அண்டங்காக்கை மட்டும் ஒரு மாதிரி 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்று பால்கனி கட்டையில் உட்கார்ந்து கொண்டு அவனை பார்த்து கத்தும். அதன் நாலாவது ரவுண்டில் முருகு கிட்டத்தட்ட விழித்துக் கொள்வான். அரை தூக்கத்தில் அவன் தரையில் சிதறவிடும் மிக்சர் துகள்களையும், நேற்றைய உணவு மிச்சங்களையும் தத்தி தத்தி உள்ளே வந்து உரிமையோடு கொத்திக்கொண்டு போகும். இனி மீண்டும் மறுநாள் காலைதான்! அவனைப் போலவே அந்த காக்கையையும் அவனைத்தவிர யாரும் ரசிப்பாரில்லை, ரட்சிப்பாரில்லை.

விழிப்பு வந்தபோது, அவன் ஒரு சாக்கடைக்கு பக்கத்தில் உருண்டு கிடப்பது மாதிரி உணர்ந்தான். காரம் கலந்த கெட்ட வாடை அவனை சுற்றியிருந்தது. தலையை தூக்க முடியவில்லை. கைகளை அசைத்ததில் பிசுபிசுப்புடன் கம்பிகளாய் என்னவோ ஒட்டிக் கொண்டு வந்தது. ரிஃப்ளெக்ஸ் வேகத்தில் அடுத்த கையை சோர்வாக வீசியதில் 'சுரீரென' சுட்டது. மண்டைக்குள் தீப்பொறிகள் சிதற.... விழித்துக் கொண்டான். சுற்றியிருந்த பகுதிகள் 'அவுட் ஆஃப் போக்கஸில்' மங்கலாக தெரிந்தன. கண்ணுக்குள் ஒரு பிடி உப்பை கொட்டிய மாதிரி எரிச்சலாக இருந்தது.

'பிளாக்கவுட்' குழப்பங்கள் தீர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய இரவின் மன கசப்புகள் அறுபட்ட காட்சிகளாக வந்து போயின. நினைவுகளின் வேகம் கூட இன்னும் தலையை வலித்தது. பால்கனி கதவு திறந்திருக்க, அதன் வழியாக வந்த காலைச் சூரியகிரணங்கள் அவன் கால்களை சுட்டன. 'விசுக்கென' கால்களை உள்நோக்கி இழுத்ததில் நிலை தடுமாறி இடதுபக்கமாக சரிந்தான். வயிற்றில் இருந்த அமில மிச்சங்கள் அவன் குரல்வளைப்பகுதியை சங்கடப்படுத்தின.

கொரடாச்சேரி சண்முகநாதன் முருகேசன் என்ற பெயரைச் சொல்வதும், எங்கோ ஒரு புற்றில் போய் கொண்டிருக்கும் ஒரு எறும்பை கை காட்டி சொல்வதும் ஒன்றுதான். கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்வதென்றால் முருகேசன் என்ற பெயருக்கு முகமும் இல்லை, முகவரியும் இல்லை. ஆனால், அதே முருகேசன் என்ற நிழல் முகத்துக்கு வெளிச்சம் தந்த செந்தமிழ்ச்செல்வன் என்ற புனைப்பெயரை சொன்னதும் தமிழ் திரைப்படத்துறை வரலாறு சற்று பத்து வருடங்கள் பின்னோக்கி போய் பவ்யமாக தன் பக்கங்களை திறந்து காட்டும்.

அந்த காலம், முருகேசனின் வசந்த காலம். இரண்டே வருடங்களில் மூன்று மெகா ஹிட்டுகள். அதன் பிறகு ஒன்று சுமாராக ஓடி பெயரை காப்பாற்றியது. அதை தொடர்ந்து மீண்டும் இரண்டு ஹிட்டுகள். இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஒல்லிப்பிச்சான் ஹீரோவுக்கு செந்தமிழின் முதல் படத்தால்தான் பிரேக் கிடைத்தது. செந்தமிழ் அறிமுகப்படுத்திய எல்லா ஹீரோயின்களும் இன்றும் காசை அள்ளி ரியல் எஸ்டேட்டில் குவித்து வருகிறார்கள். எங்கும் எப்போதும் பேசப்பட்டவனை அடுத்தடுத்து மூன்றே முன்று படங்கள் ஒரேயடியாக கவிழ்த்து போட்டன. அதில் கடைசியாக அவனை ஒரே வாரத்தில் 'ஊத்தி மூடியது' அவனுடைய சொந்தப்படம். கார், வீடு எல்லாம் போனது. செக் மோசடி வழக்குகள் அவனை நிம்மதியற்று ஓடஓட விரட்டின. சுவரோரம் குவிக்கப்பட்ட குப்பை போல ஆனவனுக்கு குடி உற்ற துணை ஆனது.

சினிமா பார்த்து வெளியே வந்ததும், பிரக்ஞையின்றி நழுவவிடப்படும் சினிமா டிக்கெட்டாக செந்தமிழ்ச்செல்வன் பிடிகள் அற்று காலவெள்ளத்தில் காணாமல் போனான். எழுச்சியை தந்த அதே வேகத்தில், வீழ்ச்சியையும் கொடுத்தது தமிழ் திரைப்பட உலகம். 'நன்றி கெட்ட ....கள்' என்று செந்தமிழ் அடிக்கடி சொல்வது ஒரு ரசிக்கப்படாத காமெடி டிராக் மாதிரி ஆகிவிட்டது.

ஒன்பது மணிவாக்கில்தான் செந்தமிழால் இயல்பாக எழுந்து கொள்ள முடிந்தது. வயிறு முதுகோடு ஒட்டிக்கொண்ட மாதிரி வலித்தது. சட்டைப்பையில் இருக்கும் பனிரெண்டு ரூபாய் காலை நாஷ்டாவுக்கு போதும். அப்புறம்? யோசிக்க யோசிக்க வெறுமைதான் மிஞ்சியது. சம்பந்தமே இல்லாமல், இன்று வராமல் போய்விட்ட காக்கா என்ன ஆனது என்ற கவலையும் மனசை அப்பிக் கொண்டது.

அனிதா அவனைவிட்டு பிரிந்து போய் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவள் இருக்கும் வரை சில்லறை செலவுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. டான்ஸ் மாஸ்டர் செல்லாவின் குழுவில் பத்தோடு பதினொன்றாக ஆடிக் கொண்டிருந்தவள், தற்போது உதவி நடன இயக்குனராக உயர்ந்திருக்கிறாள். செல்லா அவள் மீது அதிக அக்கறை காட்டுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்றைக்கு செல்லாவை கைநீட்டி அடித்திருக்கக் கூடாது.

இரண்டு தெரு தாண்டிதான் அனிதாவின் அப்பா விடு இருக்கிறது. வீட்டை நெருங்கியபோது வாசலில் இரண்டு காகங்களை பார்த்தான். அதில் அவன் காகம் இல்லை. இரண்டும் அழகாய் இருந்தன. ஒன்று அனிதா என்றால் இன்னொன்று? வேண்டாம்.... செல்லா நினைவுகளை ஓரம் கட்டினான்.

அனிதாவின் அப்பா வீட்டுக்கு வெளியெ சேர் போட்டுக்கொண்டு ஒரு பீடியுடன் லொக் லொக்கிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து 'எதற்கு வந்தாய்?' என்பது மாதிரி பார்வையை வீசிவிட்டு, எதிர் பக்கம் திரும்பிக் கொண்டு, தோள் இடுக்குகளில் சொறிந்து கொண்டார். செந்தமிழுக்கு பட்டாசு திரியில் பற்ற வைத்த மாதிரி கோபம் கிளர்ந்தெழுந்தது. அடக்கிக் கொண்டான்.

அனிதா நைட்டியுடன் காலை நாளிதழின் சினிமா பக்கங்களில் மூழ்கியிருந்தாள். அவளும் அப்பனைப் போலவே நிமிர்ந்தாள். வெறுப்புடன் விடுவிடுவென போய், தன் கைப்பையை திறந்து நூறு ரூபாய் தாளை அருகில் இருந்த டேபிள் மீது வைத்தாள்.

"அனிதா. இதுக்கு பதிலா என் மேல காறி துப்பியிருக்கலாம்."

"மானம், மரியாதையெல்லாம் போன உனக்கு காசுதான முக்கியம். எடுத்துக்கிட்டு போ."

"அனிதா. அன்னிக்கி நான் செஞ்சது தப்புதான். எல்லாரும் கைவிட்டுட்டாங்க. நீயும் அப்படி செஞ்சா எப்படி?" வாசல் கதவு அருகில் லொக்லொக் கேட்டது.

"மொதல்ல உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு. இன்னமும் உன்னோட பழசை புடிச்சுக்கிட்டு தொங்கிக்கிட்டு இருக்கே. விழுந்தவன் வெறியோடு எழுந்திருக்கணும். அடுத்து அடுத்துன்னு அலை பாயணும். புதுசு புதுசா கத்துக்கணும். முதல்ல, தோத்தவன் குடிக்கக் கூடாது. குடிய விடு. எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி ஒரு ஸ்டோரி டிஸ்கஷனுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தேனே? என்ன செஞ்சே? என் மானம் போச்சு"

"நீ நெனைக்கற மாதிரி அவங்கள்லாம் நல்லவங்க இல்லே. என்னை ஏதோ வேண்டா வெறுப்பா சேர்த்துக்கிட்ட மாதிரி, பிச்சை போடற கணக்கா என்கிட்ட நடந்துக்கிட்டாங்க. நான் சொன்ன ஐடியாவையெல்லாம் நேத்து முளைச்ச அசிஸ்டண்ட் டைரக்டர் பசங்க அவங்களுக்குள்ள சிரிச்சு கேவலப்படுத்தினாங்க. குப்பையா படம் எடுக்கிறாங்க."

"காந்தக்ட் சர்டிஃபிகேட் கொடுக்க உன்னை அனுப்பல. சொல்ல சொல்ல கேட்காம ஆடினதோட பலனை இப்ப அனுபவிக்கிற. இன்னிக்கி சினிமா எவ்வளவோ மாறிடுச்சு. உன்னோட ஆகாசத்தில பறக்கறத விட்டுட்டு, தரையில நடக்க பாரு. இப்ப இங்கிருந்து போ." அதற்குள் அவன் அப்பா செந்தமிழை தரதரவென கையைபிடித்து வெளியே இழுத்தார். பீடி நாற்றம் குடலை பிடுங்கியது. நூறு ரூபாய் தாளை சட்டைப்பையில் வலுக்கட்டாயமாகச் சொருகினார்.

"இதான் கடைசி. இனிமே இந்த பக்கம் வராத. நீ வர்றதை பார்த்தா உன் கடன்காரங்க என் வீட்டு சாமான் செட்டை தூக்கிக்கிட்டு போயிடுவானுங்க. எங்களையாவது நிம்மதியா இருக்கவுடு"

கிழவனை எதிர்த்து மல்லுக்கு நிற்க செந்தமிழிடம் மனசிலும், உடம்பிலும் வலுவில்லை. சிற்றுண்டிக்கும், ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கும் சேர்த்து நாற்பது ரூபாய் ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன்னாலேயே, காசு கொடுத்தால்தான் சாப்பாடு என்று தெளிவாக சொல்லிவிட்டார் ஹோட்டல் முதலாளி.

"அண்ணெ, மீதி காசு கொடுங்க" அனிதா கொடுத்த நூறை நீட்டினான்.

"அதெப்படி? உன்னோட பழைய கணக்கெல்லாம் எவன் தருவான். போவயா?" முதலாளி செந்தமிழை ஒரு செத்த எலி மாதிரி பார்த்தார்.

"அண்ணே, ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்ணே. ஒருத்தன் கீழே விழுந்தா ஒரேயடியா போயிடணும். இல்லேன்னா இரக்கமே இல்லாம கல்லால அடிச்சே கொன்னுடுவீங்க"

"முருகு. உன்னோட எனக்கு மல்லுகட்டி பேச நேரமில்லே. வியாபாரம் ஆகணும். இடத்தை காலி பண்ணு"

வெளியே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபோது, காக்கைகளின் பேரிசைச்சல் கேட்டது. காக்கை ஏதாவது இறந்து போனால் மற்ற காக்கைகள் இதே மாதிரிதான் கத்தும். கரையும் காகங்களுக்கு மத்தியில் தன்னுடைய காகம் இருக்கிறதா என்று தேடினான். எதுவுமே அவன் வீட்டுக்கு வரும் அண்டங்காக்கையை போலில்லை.

இன்று மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? ஒரு டி.வி. சீரியலுக்கு இருபது எபிசோடுகள் அவன் இயக்கியிருந்ததற்கு இன்னும் பணம் தரவில்லை. அதில் கொஞ்சம் கேட்டு வாங்கினால் என்ன?

அந்த டி.வி. சீரியல் தயாரிப்பு அலுவலகம் வெறிச்சோடியிருந்தது. வாட்ச்மேன் கூட செந்தமிழை மதிக்கவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து வரச்சொன்னான். அது மாதிரி நான்கு முறை ஆனது. மாலை ஆறு மணிக்குதான் சீரியல் தயாரிப்பாளர் வந்தார். ஒரு மணி நேரம் கழித்துதான் அவனை உள்ளே அழைத்தார்.

"என்னைய்யா வேணும்? ஏன் தொந்திரவு பண்ணறே?" எடுத்த எடுப்பிலேயே எரிந்து விழுந்தார்.

"சார். என் கணக்கை செட்டில் பண்ணுங்க"

"சரி. நான் செட்டில் பண்ணிடறேன். நீ மத்தவனுக்கெல்லாம் போட்டிருக்கியே பட்டை நாமம், அதை யார் செட்டில் பண்ணறது? அவங்க நோட்டீஸ் கொடுத்திருக்காங்கய்யா."

"சார். வெக்கத்தை விட்டு கேக்கறேன். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கேன். ஏதாவது கொஞ்சமாவது கொடுங்க" இருக்கும் சேரையெல்லாம் விலக்கிவிட்டு குறுக்குவாட்டில் அப்படியே அவர் கால்களில் கீழே விழுந்தான்.

"யோவ். எழுந்திருய்யா. செத்து கித்து போய்டப்போறே. இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு, நீ வேற வில்லங்கம் எதுவும் செஞ்சிடாதே"

திடீரென மனசு மாறி இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அவன் சட்டைப்பையில் திணித்தார். 'இனி மேல் காசு கேட்டு இந்த பக்கம் வரக்கூடாது' என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்.

செந்தமிழ் வெளியே வந்தபோது இருட்டிவிட்டது. மதியம் சாப்பிடாதது வயிற்றை சுண்டி இழுத்தது. ஒரு ஹோட்டலை தேடிய அவன் கண்களில் டாஸ்மாக் கடை கண்களில் பட்டது. மனசு அலைபாய்ந்தது. குவாட்டரை பேண்ட் பாக்கெட்டுக்குள் சொருகிக் கொண்டு, ஆம்லெட்டுக்கு ஆர்டர் கொடுத்தபோது அவன் தோள்களின் மீது இரண்டு கைகள் விழுந்தன. திரும்பியதில்...

"என்ன முருகு. ஆயிரம் ரூபாயை அப்படியே வலிச்சுக்கினு போயிடாலாம்னு பார்க்கிறயா? எங்களுக்கு அதிலே பங்கு வேணாம்?"

"வேணாம் சேகரு. நான் ரொம்ப நொந்திருக்கேன். உன் கணக்கை சீக்கிரம் செட்டில் பண்ணிடறேன்."

செந்தமிழ் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், சேகர் என்பவன் செந்தமிழை இறுக்கி பிடித்துக் கொள்ள அவன் கூட வந்தவன், சட்டை பையிலிருந்த அத்தனை பணத்தையும் காலி செய்தான். திமிறிய செந்தமிழை கீழே தள்ளிவிட்டான். சுதாரித்து எழுந்த செந்தமிழ் காசு போன விரக்த்தியில் அவர்களை நோக்கி ஓடினான். ஏதோ ஒரு யோசனையில் அவர்களை நோக்கி குவார்டரை வீசியடித்தான். அது குறி தப்பி ரோட்டில் விழுந்து உடைந்தது. திரும்பிய அவர்கள் ஒரு வேகத்துடன் வந்து, செந்தமிழை சரமாரியாக தாக்கினார்கள்.

கோடிக்கணக்கான பட்ஜெட்டில் படங்களை இயக்கிய செந்தமிழ்ச்செல்வன் ஒரு சாலையோர சாக்கடைக்கு பக்கத்தில் இரண்டு மணி நேரம் அப்படியே கிடந்திருந்தான். மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவனிடம் எல்லாம் போய்விட்டிருந்தது. அழ எத்தனித்தான். அது கூட வரவில்லை. 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்ற ஓசையே வெளிப்பட்டது.

முதல் முறையாக அவன் தேடிவந்த அந்த அண்டங்காக்கை அவனுக்குள்ளே இருப்பதை உணர்ந்தான்.

Monday 11 August, 2008

பூமராங்



மாதம் - 1

எம்.டி. பிரகாஷ் அதிரிச்சியுடன் கேட்டார். "என்ன ரமேஷ் இது! 150 பேரை வேலையை விட்டு தூக்கணும்னு எழுதியிருக்கீங்க"

ஜி.எம். ரமேஷ் நிதானமாகச் சொன்னார்... "ஆமாம் சார். நம்ம பொருட்கள் மார்கெட்ல நிக்கணும்னா, அதிரடியா விலைகளை கொறைச்சே ஆகணும். இல்லேன்னா, போட்டி கம்பனிகள் நம்மள சாப்பிட்டுட்டுடும். நம்ப தொழில்சாலையிலும், ஆபீஸ்லயும் ஒரு ரகசிய சர்வே செஞ்சேன். அதன்படி 150 பேர் அதிகப்படியா இருக்காங்க. இவங்களை தூக்கிட்டா உற்பத்தி செலவுகள் கணிசமா குறையும்."

"திடீர்னு வேலையை விட்டு எப்படி அனுப்ப முடியும்? எல்லாரும் பல வருஷம் சர்வீஸ் போட்டவங்க. பிரச்சனையாகிடாதா?"

"சார். பிசினெஸ்னு வந்துட்டா நோ சென்ட்டிமென்ட்ஸ். தீ பிடிச்சு குடிசைங்க எரியும்போது, அந்த தீயிலேர்ந்து காப்பாத்த, நல்ல குடிசை கூரைகளை பிரிச்சு எறியறோம் இல்லையா? அந்த மாதிரி மொத்த கம்பனியும் நஷ்டமாகி எல்லோர் வயத்திலேயும் ஈரத்துணி போடறதுக்கு பதிலா ஒரு சிலரை வீட்டு அனுப்பறதுதான் புத்திசாலித்தனம்."

மாதம் - 2

பல தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யபட்டனர். முரண்டு பிடித்த சிலர் மீது பொய் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் மனம் வெறுத்து அவர்களாகவே விலகினர். ரமேஷ் ஒரே தீர்மானமாக இருந்தான். அதன் பலனும் உடனே கிடைத்தது. அதிரடி விலை குறைப்பில், கம்பனியின் லாபம் கிடுகிடுவென உயர்ந்தது.

மாதம் - 3

பிரகாஷ் அவசரம் அவசரமாக ரமேஷை வரவழைத்தார்.

"ரமேஷ்! நம்ம அக்ரிமெண்ட்படி ஒரு மாச நோட்டீஸ் கொடுக்கணும் இல்லையா? அதன்படி இந்த மாசம்தான் உங்களுக்கு கடைசி மாசம்."

"சார்ர்....." அதிர்ந்தான் ரமேஷ்.

"ஆமாம்பா. என் மகன் எம்.பி.ஏ படிப்பை முடிச்சிட்டு அடுத்த மாசம் வர்றான். யோசிச்சு பார்த்தேன். அவன் இருக்கிற பட்சத்திலே உன் வேலை உபரியா பட்டுது. அதனால நீ விலகிடு. எனக்கும் உற்பத்தி செலவுகளை கொறைச்ச மாதிரி ஆகும். சரிதானே?"

(குங்குமம் - 14 ஆகஸ்ட் 2008)

Wednesday 6 August, 2008

பாகவதர்களுக்கு ஒரு நம்பிக்கை விளக்கு




அமுதசுரபி - ஆகஸ்ட் 2008

பக்தி மார்க்கத்தில் நாம சங்கீர்த்தனம்தான் பிரதானம். ஜோதி வடிவான இறைவனை இனிய இசையால் மனமுருகி பாடி அவன் அருளை பெறுவதற்காக எண்ணற்ற பஜனை பாடல்களை அரிய பொக்கிஷங்களாக வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள் பாகவதர்கள் என்றழைக்கப்படும் இசை கலைஞர்கள்.

மனசுக்குள் இறைவனை நிலை நிறுத்திக் கொண்டால் அது ஜபம். அதையே கொஞ்சம் இசை சேர்த்து வார்த்தைகளால் அர்ச்சித்தால் அது நாம சங்கீர்த்தனம். "ஒவ்வொரு ன்மீகவாதிக்கும் நாம சங்கீர்த்தனம் என்பது அவன் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் மூச்சாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பஜனை பாடல்கள் என்றால் ஒரு மனம் மகிழ் கலை நிகழ்சியாகவோ அல்லது ஒரு பொழுது போக்கு அம்சமாகவோ எண்ண வேண்டாம்" என்கிறார் உடையாளூர் கல்யாணராமன்.

"எப்படி காலையில் எழுந்தால் பல் தேய்ப்பது, புத்தகம் படிப்பது, பிழைப்புக்காக வேலைக்கு போவது என்று லௌகீக அனுஷ்டானங்கள்¢ல் ஈடுபடுகிறோமோ, அதே போல தினமும் கொஞ்ச நேரமாவது அந்த நாதஸ்வரூபனுக்கு ஒன்றிரெண்டு நாமவளிகள் சொல்வது நமக்கு நல்லது. சிக்கல்கள் நிறைந்த இன்றைய வாழ்க்கையில், நற்சிந்தனைகள் நல்ல செயல்களுக்கு நம்மை இழுத்துச் சென்று நல்ல வினைகளை உண்டாக்கும்" என்கிறார் அவர்.

சபா மேடைகளில் நாம சங்கீர்த்தனம் என்ற புதிய அணுகுமுறையை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் திரு கல்யாணராமன். இது எப்படி சாத்தியமாயிற்று?

"நாங்கள் ஒன்றும் புதிதாக செய்துவிடவில்லை. பஜனை என்றாலே காட்டு கத்தாலாக ஒரு பெரிய கோஷ்டி, சகல வாத்தியங்களுடன் உச்ச ஸ்தாயில் எம்பி எம்பி குதிப்பார்கள். மக்களும் மகுடி பாம்பாக உணர்சிவசப்பட்டு சேர்ந்திசைப்பார்கள் என்ற மனோபாவம் இன்று பல பேர்களுக்கு இருக்கிறது. உண்மை அதுவல்ல. நம் பாகவதர்கள் மிகப் பெரிய இசை பண்டிதர்கள். எல்லா மொழிகளிலும் எல்லா தெய்வங்களையும் மிக அழகாக பாடி வைத்திருக்கிறார்கள். அவைகளை நாங்கள் மாலை தொடுப்பது மாதிரி இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு துல்லிய உச்சரிப்பு, சுத்தமான ஸ்வரராக கர்நாடக சங்கீதம், அளவான பக்கவாத்தியம், எல்லோரும் பங்கேற்கும் எளிமையான பாடல்கள் என்று ரசிகர்களுக்கு தருகிறோம். நல்ல சங்கீதம் வேண்டுபவர்களும் திருப்தியடைகிறார்கள். பக்தி மார்கத்தினர்களும் பரவசமடைகிறார்கள். வயது, மொழி, ஜாதி வித்தியாசமில்லாமல் அனைத்து மக்களுக்கும் எளிதில் சென்றடைகிறது. நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவமும் புரிந்து விடுகிறது. அதுதான் நாங்கள் விரும்புவது. எங்களுக்கு கிடைத்த பக்கவாத்திய கலைஞர்கள் எங்களது பொக்கிஷம். அவர்களால் எங்களது எண்ணம் எளிதாகிவிட்டது. அதை விட முக்கியமானது, அவன் ட்டுவிக்கிறான். நாங்கள் (பா)டுகிறோம்." என்கிறார் அவையடக்கத்துடன்.

நாம சங்கீர்த்தனத்தின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்து செ(¡)ல்லுவது மட்டுமில்லாமல் அடுத்த உயரத்திற்கு சென்றிருக்கிறார் உடையாளுர். "ஒரு முறை தூத்துக்குடியில் நாம சங்கீர்த்தனதிற்காக போயிருந்தோம். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு யாதவர் ஹார்மோனியம் வாசிக்க வாய்ப்பு கேட்டார். எங்கள் மனசை சங்கடப்படுத்தியது. பாகவதர்கள் பாடிய பாடல்களை பாடி நாம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோமே, ஏன் வசதியற்ற பாகவதர்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்கக் கூடாது என்று தோன்றியது. அதற்கு காஞ்சி பெரியவரின் சியும் கிடைத்தது. உடனே ‘பாகவதா சேவா டிரஸ்ட்’ என்ற அமைப்பை உருவாக்கி விட்டோம். நாங்கள் கச்சேரிக்காக போகும் இடங்களில்லாம் இன்றைய பாகவதர்களின் நிலமையை எடுத்துச் சொல்லுவோம். சொன்ன மாத்திரத்தில் பொருளுதவி குவிகிறது. இன்று 30 பாகவதர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை அளிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. நாம சங்கீர்த்தனத்தில் என்றுமே சாதி வித்தியசம் இருந்ததில்லை. எனவே சேவா டிரஸ்டில் தற்போது நலிவடைந்த ஓதுவார்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் உடையாளுர்.

"எனது சங்கீதப் பயணம் இத்தோடு முடிவடைந்துவிடவில்லை. இறைவனின் சந்நிதானத்தில் இருந்த நாம சங்கீர்த்தனத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சபா மேடைகளை ஒரு ஊடகமாகத்தான் பயண்படுத்தி வருகிறேன். இதை மக்கள் இல்லங்களில் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியமென கருதுகிறேன். இன்றைக்கு பாகவதர்கள் பாடிக் கொண்டிருக்கும் தக்ஷிண ப்ராச்சின பஜனை சம்ப்ரதாயத்தை வகுத்து கொடுத்தவர் மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள். அந்த பாதையில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி இளைஞர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த நாம சங்கீர்த்தனத்தை ஒரு அகாடமி வாயிலாக முழுமையாக தருவதற்கு முயற்சித்து வருகிறேன். அதன் பூர்வாங்க வேலைகள் முடிந்து விட்டன. இரண்டு செமஸ்டர்கள் கொண்ட ஒரு வருட பட்டைய படிப்பாக கொண்டு வர உத்தேசித்திருக்கிறோம். இன்னும் ஒரு சில மாதங்களில் அகாடமி அதன் பணியை துவங்கும்" என்று முடித்தார் திரு உடையாளூர் கல்யாண ராமன். நாம சங்கீர்த்தனத்தில் பகாவன் நாமைவைச் சொல்லி 'ஜே' போடுவோம். இங்கே உடையாளூரின் முயற்சி வெற்றியடைய நாமும் ஒரு 'ஜே' போடுவோம்.

பெட்டி செய்தி

பாகவதர்களும் பகவத் ஸ்வரூபங்களே - ஒரு புராணக் கதை

ஒரு முறை நாரதர் வைகுண்டத்தின் வாசலை அடைந்த போது, அதன் வாயிற்காப்போர்களான ஜெயன் விஜயன் கிய இருவரும் அவரை தடுத்தனராம். 'நாராயணனை பார்ப்பதற்கு நீங்கள் தடா போடமுடியாது.' என்று அடம் பிடித்தாராம் நாரதர். அதற்கு வாயிற்காப்போர்கள், 'எம்பெருமான் பூஜை செய்து கொண்டிருக்கிறார். யாரும் தொந்திரவு செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்' என்றனராம். இருந்தாலும் நாரதர் தான் பிடித்தபிடியிலேயே இருக்க, ஒரு வாயிற்காப்போன் உள்ளே போய் நாரதர் வருவதற்கு உத்திரவு கேட்டாராம். அனந்த சயனனும் 'உள்ளே வரச் சொல்' என்றாராம். வந்து பார்த்த நாரதருக்கு சிரிப்பாக வந்ததாம். 'எம் பெருமானே, நாங்கள் உங்களை பூஜித்து மகிழ்கிறோம். நீங்களோ ஒரு பிடி மண்ணை வைத்துக் கொண்டு பூஜை செய்கிறீர்களே. என்ன விந்தை இது? உங்களுக்கு மஹாபாரதப் போர் முடிந்தும் இன்னும் அந்த மண்ணின் மீது இருக்கும் பிரேமை போகவில்லையா?' என்றாராம். அதற்கு அந்த பவளவாய் கமலச் செங்கண் அச்சுதன், ' இதோ நீ பார்க்கிறாயே, இது சாதாரண மண் அல்ல. இது என் பாகவதர்கள் காலடி பட்ட மண். அவர்கள் ஒரு முறை கோவிந்தா என்று அழைத்தற்கே, பிரதியுபகாரமாக என்ன கைங்கர்யம் செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. எனவேதான் என்னால் முடிந்த இந்த பூஜை' என்றாராம்.