Wednesday 26 December, 2007

டிசம்பர் சீசன் - கேள்வி இன்று.. பதில் நாளை

நேற்று டிசம்பர் இசை விழாவின் ஒரு அங்கமாக முத்ரா (சென்னை-தி.நகர்) ஒரு
வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தியது. இதில் கர்நாடக இசை, பரதநாட்டியம்,
நாடகம் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. திரு ஞானி
அவர்கள் நாடகம்-சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகளை தொடுத்தார்கள்.
பார்வையாளர்களிலிருந்து ஒரு சிலர் மேடைக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம்
ஒரு சில கேள்விகள் தொடுக்கப்பட்டது. அந்த வகையில் எனக்கு ஒரு குறுந்தகடு
பரிசு கிடைத்தது.

இனி கேள்விகள்


1. ஒரு நடிகர், தான் மிக பிரபலமாக தமிழ் திரைப்படங்களில் நடித்துக்
கொண்டிருந்தாலும், தனது நடிப்பை செம்மை படுத்துவதற்காக, ஒரு நாடக
குழுவினரை அனுகி, அதில் தன்னை இனைத்து கொண்ட்டார். அவர் யார்?


2. மலையாள இயக்குனர்கள் தமிழில் நேரடி படங்கள் எடுத்து (ரீ மேக் அல்ல)
தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் இருவரை குறிப்பிடுக.
அந்த படங்கள் எவை?


3. ஒரு தமிழ் திரைப்படத்திற்கான சென்ஸார் சாண்றிதழ் திரும்பப்
பெறப்பட்டது. அந்தப்படம் எது?


4. நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காலமான மிகப்பெரும் நாடக
நடிகர் யார்?


5. கபாலீஸ்வரர் கோயிலின் கடைசி தேவதாசி யார்?


6. நிறம் என்பதன் மொழியாக்க்த்தில் பரதநாட்டியத்தின் ஒரு பிரசித்தமான ஒரு
சொல் வெளிப்படும். அது என்ன?


7. ஒரு திரைப்படத்தில் மூன்று விதமான கதைகள் நாயகியால் சொல்லப்பட்டும்.
ஆனால், முடிவு வேறுவிதமாக இருக்கும். அந்த திரைப்படத்தின் பெயர் என்ன?


8.கால்பந்தை மையமாக வைத்து சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் எது?


9. ஓம் சாந்தி ஓம் என்ற ஹிந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு தமிழர்.
அவர் யார்?


10. நீராரும் கடலுடுத்த.. என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு
இசையமைத்தவர் யார்? அந்த பாடலை பாடியவர்கள் யார்?


உங்களுக்கு தெரிந்த பதில்களை பிண்ணுட்டமாக கொடுங்கள்.


எனது பதில்கள் நாளை வெளிவரும்.

Wednesday 12 December, 2007

உன் கண்ணில் நீர் வழிந்தால்....

நேற்று பாரதி பிறந்த நாள். நேற்றைய கனவில் பாரதியும், கண்ணதாசனும் வந்தார்கள். உடனே இந்த பதிவு. தமிழ்நாடுடாக் என்ற இனைய குழுமத்தில் நான் சில நாட்களுக்கு முன்னால் எழுதியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

பாரதி ஒரு பாடலில் (சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா...) ஒரு ஒற்றை வரியாக சொன்னதுதான் - 'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி'. இந்த வரி கண்ணதாசனை கவர்ந்துவிட்டது. எடுத்தார் பேனாவை. மேற் சொன்ன வரியையே முதல் வரியாக வைத்து அருமையான பாடல எழுதினார். பாடல் ஜிவ்வென்று உயரே பறக்கிறது.


எல்லோரும் ஆலமரத்தை அதன் விழுதுகளை சம்பந்தப்படுத்தி உயர்வாகச் சொல்வார்கள். அதாவது, மரம் இற்று போன பிறகும், விழுதுகள் தாங்கும் என்று சொல்லி விழுகளின் மேன்மையை சொல்வார்கள். இங்குதான் கண்ணதாசனின் மாற்று கோண பார்வை விழுகிறது.

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.

வேர்தான் முக்கியம். வாழ்வியலில் இருத்தல் முக்கியமில்லை. வாழ்தல்தான் முக்கியம். விழுதுகள் தாங்குவது வெற்று இருத்தல்.

கண்ணதாசனுக்கு உடனே மஹாபாரத போர் காட்சி ஞாபகம் வந்து விடுகிறது. பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடக்கிறார். அதுவும் ஒரு இருத்தலே. அவர் உத்ராயணம் வருவதற்காக காத்திருக்கிறார். அந்த அம்பு படுக்கையை போட்ட அர்ஜுனனை உலகம் பாராட்டியது. கண்ணதாசன் கொஞ்சம் மாற்று சிந்தனையை ஓட்டினார்.

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ பேதமை செய்ததடி

பாரதியின் இன்னொரு பாடல்...

காட்டினில் ஒரு அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்
அதை மரப் பொந்தினுள் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு

என்கிறார். இதில் காடு என்பது அறியாமையின் உருவகம். அக்னி குஞ்சு என்பது அறிவு. மரப் பொந்து என்பது உள்ளம். உள்ளத்தில் ஏற்றிய விளக்கு, காடு முழுவதையும் வெளிச்சமாக்கியது.

பாரதி ஒரு சாகரம். அதில் ஒரு சில முத்துக்களை பார்த்து நாம் அதிசயிக்கிறோம். நீங்கள் ரசித்த வரிகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்...

Monday 3 December, 2007

நதியின் குற்றமா?


காஸ்ட்லியான சில ஆம்ப்யூல்களை உடைத்து விட்டேன். எதையோ நினைத்துக் கொண்டு ·பிரிட்ஜிலிருந்த ஒரு ட்ரேயை நகர்த்தினேன். முந்திரிக் கொட்டை மாதிரி முன்னால் இருந்த அந்த கண்ணாடி குப்பிகள் பிதுங்கி தொப்பென விழுந்தன. கிழம் வந்தவுடன் அந்த ஸ்மெல்லை வைத்தே கண்டுபிடித்துவிடும். 'காள் காள்' என்று ஹை டெசிபலில் விடாமல் டாபமர்மன் மாதிரி கத்தும். 'தீர்ந்தது உன் கணக்கு' என்று சீட்டை கிழிக்கும். இதோடு ஆறே மாசத்தில் நான்கு இடங்களில் வேலை பார்த்தாகிவிட்டது. எல்லாம் இந்த மாதிரி சேல்ஸ்மேன் வேலைகள்தான். எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

நானும் இஞ்சினீயரிங் காலேஜில் படித்தவன்தான். படிக்கும் போது வருங்காலத்தில் பெரிய உச்சாணி கொம்பில் இருப்பது மாதிரி கனவுகளோடு இருந்தேன். த்ரிஷாவும் அசினும் என் கனவுகளில் அடிக்கடி வந்து 'என்னை கல்யாணம் செய்து கொள்ளேன்' என்று அடம் பிடித்திருக்கிறார்கள். படிப்பு முடியும் சமயத்தில்தான் நான் எதிர்பார்க்காத டிராஜிடி க்ளைமாக்ஸ் என் வாழ்வில் வந்தது. என்னோடு படித்தவர்களுக்கெல்லாம் காம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்து சென்னை, பெங்களூர், கொச்சின் என்று போய்விட்டார்கள். நான் இன்னும் தஞ்சாவூரின் சந்து பொந்துகளிலேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏன் நல்ல வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது? புரியவே இல்லை.

நான் படிப்பில் ஆவரேஜ்தான். ஆனால் என்னைவிட ஆவரேஜ்கள் நல்ல வேலையில் சேர்ந்திருக்கிறார்களே? அது எப்படி? அவர்களின் அப்பாக்கள் அங்கே இங்கே ஆள் பிடித்து, பணத்தால் அடித்து, இன்·புளுயன்ஸ் செய்து வேலை கிடைக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் என் அப்பா அப்படியெல்லாம் செய்யமாட்டாராம். அப்பா நிழலில் மகன் சுகம் காணக் கூடாதாம். தானும் ஒரு இன்·போசிஸ் நாராயண மூர்த்தி என்ற நினைப்பு அவருக்கு. போன வாரம் வீட்டில் ஏக ரகளை ஆனது. அம்மா ஓவென அழுதாள். என்னை இந்த உலகம் வஞ்சித்து விட்டது. கடவுள் கூட வேண்டியர், வேண்டாதவர் பார்க்க ஆரம்பித்துவிட்டார். நான் இனி எதற்கு வாழ வேண்டும் ? செத்துப் போய்விடலாம் என்று தீர்மானித்துவிட்டேன்.

கிழம் வந்து அதே மாதிரி கத்தியது. நானும் பதிலுக்கு கத்தினேன். கஸ்டமர்கள் வேடிக்கை பார்த்தார்கள். நிறைய அட்வைஸ் செய்தார்கள். 'நீயுமாச்சு உன் வேலையுமாச்சு' என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். சரி, எப்படி சாவது? நீண்ட யோசனைகளுக்கு பிறகு ரயில் முன் பாய்ந்து உயிரை விடுவது என்று தீர்மானித்தேன். ரெயில்வே டிராக்கை நோக்கி நடையை செலுத்தினேன்.

திடீரென எனக்கு முன்னே ஒரு சிறுவன் பொம்மை துப்பாக்கியை நீட்டினான்.

"அங்கிள் நீங்கள் ஜெயிச்சுட்டீங்களா? இல்லை, தோத்துடீங்களா?"

"நான் தோத்துட்டேன்ப்பா."

தோள்களை குறுக்கி கைகளை விரித்தேன், வேலு நாயக்கர் மாதிரி.

"அப்டீன்னா, நீங்க ஜெயிக்கப் போறீங்கன்னு அர்த்தம்." சிறுவன் கலகலவென சிரித்தான்.

"சரி. ஜெயிச்சுட்டேன்னா?"

"இன்னும் ஜெயிக்கப் போறிங்கன்னு அர்த்தம்" என்று சொல்லிக் கொண்டே ஓடிப் போய் விட்டான். என் பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது. 'தோல்வியைக் கூட பாசிடிவ்வாக யோசி' என்று சொல்லிவிட்டு போய்விட்டானே? 'டேய்! அந்த பையன் சொல்வது என்ன? நான் சொல்வதைக் கேள். முதலில் உன்னை சரி செய்து கொள். பிறகு மற்றவர்களில் குறை காணலாம்' என்று உள்மனது சொன்னது. ஆமாம்! என் படகில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள்! அதைவிட்டு விட்டு நதியை குறை சொன்னால் எப்படி?

இனி நான் புது மனிதன். ஜெயிக்கப் போகிறேன். இன்னும் ஜெயிக்கப் போகிறேன்.

என் நடையை கூட்டினேன், நம்பிக்கையோடு.

இந்த கதைக்கான தீப்பொறி.... (செல்வி ரம்யா)

விஸ்காம் எக்ஸாம், குறும்படம், எ·ப் எம் லைவ் ஷோ, தொகுப்பாளினி என மிகுந்த டென்ஷனோடு நான் அலைந்ததை என் அப்பா கவனித்து, 'நீ பின்னாளில் என்னவாக இருக்கப் போகிறாய் என்பதை தெளிவாக தீர்மானம் செய். செய்யும் வேலையை ரசித்து ரசித்து செய். உனக்கு இன்னும் பலம் சேருமே தவிர அலுப்பே தட்டாது" என்றார்.

(விகடன் தீபாவளி மலர் 2007)

Friday 30 November, 2007

கமல் சொன்ன வேல் கதை


கல்கி - 02 டிசம்பர் 2007

குமுதம் பத்திரிகையில் துணை ஆசிரியராக நாற்பத்திரண்டு ஆண்டு காலம் பணிபுரிந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் எண்பதாவது பிறந்த நாளையொட்டி, ஆறு சிறுகதைத் தொகுப்புகள் சமீபத்தில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் வெளியிடப்பட்டன. நூற்றாண்டு விழா கண்டுள்ள அல்லயன்ஸ் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஏராளமான
அறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை உலகத்தினர் கலந்து கொண்டனர்.

சில தெறிப்புகள்

நடிகர் கமலஹாசன்:

'மகாநதி' படத்தில் ரா.கி.ர.வோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான் பல படங்களை உருவாக்க எனக்கு உதவின. அவர் பணிபுரிந்த குமுதத்தில என்னைப் பற்றிப் பல கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இவ்விழாவில் கலந்துகொண்ட பிறகே - பேசியவர்களின் பேச்சுக்களிலிருந்து குமுதத்தைப் பற்றிய பல கிசுகிசுக்கள் எனக்குத் தெரிய வருகின்றன, சந்தோஷம்! ரா.கி.ர. தம் சட்டைப் பையில் எப்போதும் ஒரு வேல் வைத்திருப்பார். அதைத்தான் நான் 'தெனாலி' படத்தில் பயன்படுத்தினேன்.

ஜ.ரா.சுந்தரேசன்:

'விகடன் ஆபீஸில் துணியாசிரியர்களுக்கு கார் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்த வசதி எங்களுக்கும் வேண்டும்' என்று ரா.கி.ர. ஒருமுறை குமுதம் எடிட்டர் எஸ்.ஏ.பி.யிடம் கேட்டார். அன்றிலிருந்து எடிட்டர் ஆபீஸ் வருவதை நிறுத்திவிட்டு,
கன்னிமரா நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு குமுதத்துக்குத் தேவையானதை எழுதிக் கொடுத்தார். இதை ரா.கி.ர.விடம் நான் தெரிவித்தபோது, பதறிப் போனவர், 'அந்த விஷயத்தை நான் வலியுறுத்தப் போவதில்லை. எடிட்டரை அலுவலகம் வரச் சொல்லுங்கள்' என்று என்னையே தூது அனுப்பினார். இப்படிப் பல முறை இருவருக்குமான தூதுவனாக நான் செயல்பட்டிருக்கிறேன்.

திலகவதி ஐ.பி.எஸ்:

ரா.கி.ர. எழுத எழுத, அவரது எழுத்துக்கள் மெருகேறிக்கொண்டே வருகின்றன. வெகுஜன இதழுக்கு எழுதுவதாலேயே அது இலக்கியம் இல்லை; ஆழமில்லை என்பதாக ஒரு கருத்து நிலவுவது சரியல்ல. ஏராளமாக எழுதித் தள்ளினாலும் வீரியம் குறையாத வித்து அவரது எழுத்துக்களில் உண்டு.

கிரேஸி மோகன் - எஸ்.வி.சேகர்:

ரா.கி.ர. மட்டும் இல்லையென்றால் எங்களது முதல் முயற்சியான 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' குமுதத்தில் தொடராக வந்திருக்காது. நாடகத் துறையில் நாங்கள் முத்திரை பதிக்க ரா.கி.ர.வே காரணம்.

சீதா ரவி:

நூறாண்டுகளுக்கு ஒரு பதிப்பகம் நல்ல நூல்களை மட்டுமே வெளியிடுவது தவம்; அதையே வெற்றிகரமாகச் செய்வது வரம். தவமும் செய்து வரமும் பெற்ற அல்லயன்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள்.

Thursday 29 November, 2007

இல்லையா? இருக்கா?


"இல்லே. இல்லே. எனக்கும் தன்யாவுக்கும் லவ் இல்லே. போதுமா? அம்மா, தன்யா என்னோட ப்ராஜெக்ட் அஸிஸ்டென்ட். ஜஸ்ட் ஒரு கலீக், அவ்வளவுதான்." ஆனந்த் வெடித்தான்.

அம்மாவும் பையனும் வாக்குவாதம் செய்வதை ராகவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று மாதங்களாகவே இந்த பிரச்சனை வருவதும் போவதுமாக இருக்கிறது.

"அதுக்கில்லைடா. நீ ஆபீஸ் வேலையோட நிறுத்திக்கிட்டா பரவாயில்லையே. நேத்து ஸ்பென்ஸர் பிளாசாவில அவளுக்கு டி-சர்ட் வாங்கிக் கொடுத்தையாமே. ஒரு பாட்டில் கோலா வாங்கி மாத்தி மாத்தி குடிச்சீங்களாமே. பைக்ல போகும் போது அவ உன் தோள பிடிச்சுக்கிட்டு போறாளாமே." அம்மாவின் சரமாரியான குக்ளியில் ஆனந்த் கொஞ்சம் தடுமாறினான்.

"மஞ்ச கண்ணாடி போட்டுப் பார்த்தா எல்லாமே மஞ்சளாதான் தெரியும். யாரோ எதையோ பார்த்துட்டு, உன்கிட்டே பெருசா கதை கட்டி விட்டிருக்காங்க. தன்யா என் லை·ப் பார்ட்னரா வர சான்ஸே இல்லை. எனக்கும் அவளுக்கும் அடிக்கடி முட்டிக்கும். என் டேஸ்ட் வேற. அவ டேஸ்ட் வேற. சொன்னா புரிஞ்சுக்கோம்மா."

"ஆனா உங்க மூவ்மெண்ட்ஸை பார்த்தா அப்படி தெரியலையே ஆனந்த். நான் சொல்லறதை கொஞ்சம் கேக்கறையா. தன்யாவோட மாமா எனக்கு போன் செஞ்சு காச் மூச்னு கத்தறாரு. எனக்கு இதெல்லாம் தேவையா? அவளைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு தீர்மானிச்சுட்டா தைரியமா சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கறேன்." ராகவன் இடையில் புகுந்தார்.

"அம்மா. அந்த தன்யா கீழ கார்லதான் இருக்கா. நீயே அவளை கூப்பிட்டு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா கேட்டுடேன்." தங்கை அர்ச்சனா திடீரென கொளுத்தி போடவும் சூடானான் ஆனந்த்.

"வேண்டாம். அசிங்கம் பண்ணாதீங்க. ரொம்ப அப்செட் ஆயிடுவா."

ஆனால் ஆனந்த் சொன்னதை யாரும் கேட்கவில்லை. அர்ச்சனா ஓடிப்போய் தன்யாவை அழைத்து வந்தாள்.

"அங்கிள். ஆனந்த் என் பிரெண்ட். அவ்வளவுதான்! உங்க ரெண்டு பேருக்கும் லவ்வாமேன்னு கிட்டதட்ட எல்லாரும் கேட்டாச்சு. எனக்கும் சொல்லி சொல்லி அலுத்து போச்சு. நீங்க தாராளமா ஆனந்துக்கு பொண்ணு பாருங்க. நான் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதிட்டு மூக்கு பிடிக்க சாப்பிட்டு போறேன். ஓகே. இந்த சேப்ட்டரை இதோட முடிச்சிக்குவோம்." என்று முடித்து வைத்தாள்.

வித்யா உடனடியாக நாலைந்து பெண் போட்டோக்களை தன்யாவிடம் காட்டினாள். அதிலிருந்து ஒன்றை தன்யாவையே செலக்ட் செய்யச் சொன்னாள். அடுத்த வாரம் பெண் பார்க்க போவதாக தீர்மானித்தார்கள்.

அன்று இரவே ஆனந்துக்கு தன்யாவிடமிருந்து போன் வந்தது. "ஆனந்த் நானும் ரொம்ப யோசிச்சு பார்த்தேன்டா. நாம எவ்வளவோ மறுத்தும் அவங்க விடாம அதையே சொல்றாங்கன்னா அதுல ஏதோ இருக்குன்னுதான் தோனுது. நமக்குள் அந்த கெமிஸ்ட்ரி இருக்குன்னுதான் நினைக்கிறேன். பேசாம அவங்க சொன்ன மாதிரியே லவ்விட்டா என்ன?"

"தன்யா! நம்ம ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஒத்துமை பார்த்தியா! நானும் உங்கிட்ட இதயேதான் சொல்லணும்னு இருந்தேன். இல்லே இல்லேன்னு சொன்னாலும் இருக்கு இருக்குன்னு சொன்னீங்களே. ஆமா, இருக்கு. இப்ப என்ன பண்ணுவீங்கன்னு அவங்க முகத்தில கரியை பூசணும். ஐ லவ் யூடா."

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு கௌசிக்)

சண்டைக் கோழி மாதிரி இருந்த என் தோழனும் தோழியும் திடீரென ஒரு நாள் இருவரும் சேர்ந்து வந்து 'எங்களுக்கு கல்யாணம்' என்றார்கள். ஆச்சர்யத்தில் என் நண்பனை பிடித்து உலுக்கி 'எப்படிடா?' என்று கேட்டதற்கு அவன் ஸ்டைலாக 'மாப்ளே! இதெல்லாம் லவ்ஸ்ல சகஜமப்பா!' என்றானே பார்க்கலாம்!

விகடன் தீபாவளி மலர் 2007)

Wednesday 28 November, 2007

கிரீடம்


"ஏங்க. வெயிட்டர் காத்துக்கிட்டு இருக்கான். பில்லை பார்த்து பணத்தை வைச்சோமா, போனோமான்னு இல்லாம... உங்க இன்ஸ்பெக்ஷன், வெரி·பிகேஷனையெல்லாம் ஆபீஸ்ல வைச்சுகுங்க".

என் மனைவி வார்த்தைகளை அம்புகளாய் பொழிந்தாள். சட்டென்று ஒரு ஐநூறு ரூபாய் தாளை உருவி அந்த அட்டைக்குள் சொருகினேன். வைத்த இரண்டாவது நொடியிலேயே அதை கொத்திக் கொண்டு போனான் வெயிட்டர்.

பொதுவாக பில்லுக்கு பணம் கொடுக்கும்போது என் முகம் விளக்கெண்ணை குடித்த மாதிரிதான் இருக்கும். ஆனால் அதற்கு மாறக என் முகத்தில் புன்சிரிப்பு தோன்றியதை என் மனைவி கவனித்துவிட்டாள். எங்களுக்குள் பல அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் என் மனதில் ஓடும் எண்ண அலைகளை எ·ப் எம் ரேடியோ மாதிரி கேட்க கூடியவள் என் மனைவி. கேட்டுவிட்டாள்!
"அது வந்து... பில்லுல ஸ்பெஷல் ரவா மசாலாவுக்கான அமௌண்ட் விட்டிருக்கு. முப்பது ரூபா லாபம். அடிக்கிற கொள்ளையில கொஞ்சம் கொறைஞ்சாதான் என்ன?"

"ஏங்க, சாப்ட பொருளுக்கு பணம் கொடுக்கலைன்னா தப்புங்க. பேதி வரும்". என் மனைவி எப்போதும் இப்படிதான்! ஒரு தத்துவம் சொல்லி கூடவே ஒரு சாபமும் கொடுத்து பயமுறுத்துவாள்.

"சரி.. சரி. இஷ்யூ பண்ணாத. போகும் போது கல்லாவுல எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துட்டு போகலாம்."

"சுத்தம். நீங்க மிஸ்டர் க்ளீன்னு பேரு வாங்கிக்கிட்டு போயிடுவீங்க. அந்த வெயிட்டருக்கு வேலை போயிடும். இருங்க, நான் டீல் பண்ணறேன்". அந்த வெயிட்டரை தேடிப்பிடித்து மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அதிர்ந்து போய் ஓட்டமாய் ஓடி கூடுதல் பில் வாங்கி வந்தான். என் முகத்தில் விளக்கெண்ணெய் வழிந்தது. நெஞ்செல்லாம் பூரிக்க எனக்கு கை கொடுத்துவிட்டு போனான் அந்த வெயிட்டர்.

என்னை பொறுத்த வரை நேர்மையாய் இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. நல்லவனுக்கு இது காலமில்லை. வல்லவனுக்குதான் காலம். ஏமாற்றுகிறவனுக்குதான் காலம்!

வெறுப்புடன் ஸ்கூட்டரை உதைத்தேன். "ஆஹா! சபாஷ் ! பலே ! நான்தான் இன்னிக்கு நேர்மைக்கு வாரிசு. என் தலையில கிரீடம் இருக்கா பாரு?" என்றேன் கேலியாக.

வித்யா ஏதோ சொல்ல வாயெடுக்கவும் அந்த வெயிட்டர் ஓடி வந்தான். "ஐயா! வாஷ் பேசின் கிட்டே இந்த செல்போன் இருந்துச்சு. உங்களுதா பாருங்க."

தூக்கிவாரி போட்டது! ஆமாம்! எட்டாயிரம் ரூபாயில் போன மாசம்தான் வாங்கினேன். "ரொம்ப தாங்க்ஸ்பா" என்றேன்.

"தலையில கிரீடம் இருக்குங்க!" என்றாள் வித்யா புன்சிரிப்பாக.

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு விஜய் ஆதிராஜ்)

ஒருமுறை கொட்டும் மழையில் சென்னை எக்மோரிலிருந்து அண்ணா நகருக்கு போக ஆட்டோ தேடினேன். மிகவும் ஆச்சர்யப்படும் விதத்தில் நியாயமான கட்டணத்தில் ஒரு ஆட்டோ கிடைத்தது. வீடு போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை மனதில் கொண்டு சற்று அதிகமாகவே கொடுக்க வந்தபோது 'உழைப்புக்கு மேல வாங்கற எந்த ஒரு காசும் உடம்புல ஒட்டாது சார்' என்று சொல்லி அவர் தன் கூலியை மட்டும் வாங்கிக் கொண்டு போய்விட்டார். அவரின் நேர்மையை கண்டு வியந்து போனேன்.

(விகடன் தீபாவளி மலர் 2007)

Tuesday 27 November, 2007

தேவை ஒரு குடும்பம்


"மேடம். கொஞ்சம் வித்தியாசமா முதல்ல உங்களை பத்தி எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டு அப்பறம் என்னை பத்தி சொல்லறேனே?"

என்ன தைரியம் இந்த பெண்ணுக்கு! 'நீ யாரம்மா? உனக்கு என்ன வேணும்?' என்று கேட்டதற்கு இப்படியா பதில் சொல்வாள் ஒருத்தி !

"சரிம்மா. உன் வழிக்கே வரேன். சொல்லு" என்றேன். ஏதோ பீடிகை போடுகிறாள். என்னவென்று பார்ப்போமே!

"உங்க பேரு விஜயலஷ்மி. நீங்க ரொம்ப துணிச்சலானவங்க. ஆசையான கணவன். அமைதியான வாழ்க்கை. ஆனா கல்யாணம் ஆன ஆறாவது வருஷத்திலேயே திடீர்னு கணவர் காலமாயிட்டாரு. மகன் போன சோகத்தை சொல்லியே எல்லா சொத்தையும் பிடுங்கிக்கிட்டு உங்க மாமனார் உங்களை வீட்டைவிட்டு தொரத்திட்டாரு. இப்ப நீங்க டீச்சர் வேலை பார்த்துக்கிட்டு, இந்த லேடீஸ் ஹாஸ்டல்ல தனியா இருக்கீங்க. என்ன சரியா?"

"சரிம்மா. எனக்கு தெரிஞ்ச விஷயத்தை எனக்கு ஏம்மா சொல்லற ? என்ன ஏதாவது ஜோஸ்யமா? எனக்கு அதில சுத்தமா நம்பிக்கையில்லை."

"இருங்க. உங்களுக்கு சோமசேகரை தெரியுமா? இந்த தெரு முனை பாங்கில காஷியரா இருக்காரே?"

"ம்.. தெரியும். அதுக்கென்ன இப்போ?"

"அவரோட கதையும் இதே மாதிரிதான். தன் மனைவியை உயிருக்கு உயிரா நேசிச்சாரு. அவரு கீழ் சாதி. அவங்க மேல் சாதி. விடுவாங்களா? ரெண்டு பக்க உறவுக்காரங்களும் சாதிப் பிரச்சனையை ஊதி ஊதி பெரிசாக்கினாங்க. அதிலேயே மனசு ஒடிஞ்சு நோவு வந்து அந்தம்மா செத்து போனாங்க. தன் மிச்ச வாழ்கையை குடும்பத்துக்காகவே அர்ப்பணிச்சுக்கிட்டு, மறு கல்யாணமே பண்ணிக்காம தனியா வாழ்ந்துக்கிட்டு இருக்காரு."

"நீ என்னம்மா சொல்லவர?"

"இருங்க. என் பேரு இந்திரா. போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு. அதுக்கு அப்பறம்தான் கணவன் மனைவி உறவோட முக்கியத்துவம் புரிஞ்சுது. ஒரு வயதான தம்பதியரை எதேச்சையா சந்திச்சேன். அப்ப அந்த தாத்தா சொன்ன வார்த்தைகள் என்னை புரட்டி போட்டிடுச்சு. 'கணவன், மனைவி, குழந்தைகள்ங்கிறது ஒரு முக்கோணம் மாதிரி. உன் பாதுகாப்புக்கு எப்படி வாழ்க்கைத் துனை தேவையோ அந்த மாதிரி குழந்தைகளுக்கும் அப்பா அம்மா அவசியம் வேணும். அதை யாரு ஈடு செஞ்சாலும் மனசுல அது ஒரு ஏக்கமாதான் இருக்கும்'ன்னாரு. எனக்கு இப்ப நாலு மாசம். இதுவரை எனக்கு வராத அம்மா ஏக்கம், கன்சீவ் ஆகியிருக்கிற இந்த நேரத்துல அதிகமா மனசை அழுத்துது. டெலிவரி சமயத்துல தோள் சாஞ்சுக்க எனக்கு ஒரு அம்மா வேணும். அதுனால...."

"அதுனால.... நான் என்னம்மா பண்ணனும்."

"நீங்க, நான், சோமசேகர் மூணு பேரும் ஒண்ணா இணையணும். இனி இருக்கும் காலத்தை நீங்க மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் வாழனும். தெனம் தெனம் தனிமையில புழுங்கிக்கிட்டு இருக்கிற சோமசேகர் ஒரு புது வாழ்வு வாழணும். எனக்கு அம்மா இல்லாத குறையை நீங்கதான் தீர்த்து வைக்கணும். அந்த சோமசேகர்தான் இந்த இந்திராவோட அப்பா. நீங்க வார்த்தைக்கு வார்த்தை அம்மான்னு சேர்த்து என்னை கூப்பிட்டீங்க. இப்ப நான் அப்படி கூப்பிடலாமா? அம்மா! எங்க அப்பாவை நீங்க கல்யாணம் செஞ்சுப்பீங்களா?"

இந்த கதைக்கான தீப்பொறி.... (செல்வி மமதி சாரி)

நன்கு வசதியாக வாழ்ந்து, அடுத்தடுத்து தந்தை தாயை இழந்து, உற்றார் உறவினர்களால் கசக்கி பிழியப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ஒரு பெண் எங்களிடம் வேலைக்கு சேர்ந்தாள். அவள் அடிக்கடி சோர்ந்த போதெல்லாம் அவளுக்கு தைரியம் ஊட்டி வசதிகளை கொடுத்து பாதுகாத்து வந்தோம். ஆனால் மீண்டும் மீண்டும் அவள் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டாள். திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டாள். ஏன் அப்படி செய்தாள்? புரியவில்லை. அவளுடைய உறுதியற்ற மனைநிலை காரணமா? அவளை சுற்றியிருந்த அழுக்கு சமூகத்தின் ஆக்கிரமிப்பா? ஒருவேளை தந்தை தாயின் அரவணைப்பில் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ? வெறும் கேள்விகளே மிஞ்சியிருக்கின்றன.

2007 விகடன் தீபாவளி மலர்

Friday 23 November, 2007

என்னைப் போல் ஒருத்தி


நத்தை மாதிரி ஊர்ந்து கொண்டிருக்கும் இந்த ரெயில் எத்தனை மணிக்கு சென்ட்ரலை அடையும் என்ற யோசனையிலேயே இருந்ததால் தனக்கு எதிரில் இருந்த அந்த பெண்ணை கவனிக்கவில்லை பத்மா.

அவளிடமிருந்து விசும்பல் சங்கிலியாக வர ஆரம்பித்ததும்தான் திடுக்கிட்டு பார்த்தாள். பெட்டியில் இருந்த முக்கால்வாசி பேரின் பார்வையும் அந்த பெண்ணின் மீது பதிந்திருப்பது தெரிந்தது. என்ன தோன்றியதோ சட்டென்று எதிர்பக்கம் இடம் மாறி, அவளை தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். அழுகை பீறிட்டு வந்தது. நிமிர்ந்தவளை 'ஒன்றும் பேச வேண்டாம்' என்று வாயடக்கினாள். இந்த பெண்ணை அடிக்கடி இதே ரெயிலில் பார்த்திருக்கிறாள். தினமும் ஆவடியில் ஏறுவாள். சென்ட்ரலில் இறங்கி கூட்டத்தில் கரைந்து போவாள்.

அதிர்ஷ்டவசமாக ரெயில் வேகம் பிடித்து சென்ட்ரலுக்குள் நுழைந்தது. கைத்தாங்கலாக அவளை இறக்கி ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தாள். பெயர் விசாரித்ததில் வித்யா என்றாள்.

"சொல்லு வித்யா. என்ன பிரச்சனை?"

"அக்கா. என் ஹஸ்பண்டால ரொம்ப கஷ்டப்படறேங்கா. நான் ரெயில்வேல வேலை பார்க்கறேன். அவருக்கு வேலையில்லை. எக்கசக்கமா குடிக்கிறாரு. எவன் இவருக்கு கிரெடிட் கார்டு கொடுத்தான்னு தெரியலை. ஏகப்பட்ட கடன் வைச்சிருக்காரு. தெனம் அடி உதைதான். தெரு சிரிக்க அசிங்கம் செய்யறாரு. அக்கம் பக்கத்தில யாராவது உதவிக்கு வந்தா அவங்களோட என்னை சேர்த்து வெச்சு பேசறாரு. போலீசை கூட வரவழைச்சு பார்த்தாச்சு. ஒண்ணும் பலன் இல்லே. எனக்கு வேலையை தவிர வேற எந்த சொத்தும் இல்லைக்கா. ஊரு முழுக்க கடன் இருக்கறதால ஒரு உறவுக்காரங்க கூட உதவிக்கு வரமாட்டேங்கறாங்க. பேசாம இவரு செத்து தொலைஞ்சா என்னன்னு ஒரு யோசனை மனசுல ஓடிச்சு. அதான், தாங்க முடியாம அழுதிட்டேன்."

அடாடா! இவளும் நம்ம கேசா?

"வித்யா. கிட்டதட்ட நானும் உன்னை மாதிரிதான். என் கனவரும் சரியில்லை. உன்னை மாதிரியே என் ஹஸ்பண்டு செத்தா என்னன்னு நினைச்சேன். அந்த மாதிரியே ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்ல செத்து ஒழிஞ்சான். நான் அழவே இல்லை. 'அப்பாடி தொந்திரவு விட்டுச்சு. இனி நிம்மதின்னு' நெனைச்சேன். ஆனா பிரச்சனை வேற ரூபத்தில வந்திச்சு. குடிகாரனோ கடன்காரனோ, புருஷன்னு ஒருத்தன் இருந்ததால மத்த ஓநாய்கள் என் வீட்டு பக்கம் நெருங்காம இருந்திச்சு. இப்ப அவன் போயிட்ட தைரியத்தில எனக்கு தெனம் தெனம் பிரச்சனை. நம்ம சமூகம் முழுக்க முழுக்க ஆண் சார்ந்தது வித்யா. என் அனுபவத்தில சொல்லறேன்... தயவு செய்து புருஷன் சாகணும்னு மட்டும் நினைக்காதே."

"அதுக்காக தெனம் தெனம் அடி உதை வாங்க சொல்றீங்களா?" போய்க் கொண்டே இருந்தவள் சட்டென திரும்பி பத்மாவை கோபமாக பார்த்தாள்.

"அப்படிச் சொல்ல வர்ல வித்யா. எனக்கு தெரிஞ்ச ஒரு தொண்டு நிறுவனம் இருக்கு. உன் அட்ரஸைக் கொடு. இன்னிக்கி சாயந்திரம் போகலாம். அவங்ககிட்ட உன்னை அறிமுகப் படுத்தி வைக்கிறேன். இப்படி எகிறி குதிக்கிற ஆம்பிள்ளைகளையெல்லாம் அடக்க, வழிக்கு கொண்டுவர அவங்ககிட்ட பல டெக்னிக்குகள் இருக்கு. தேவை கொஞ்சம் பொறுமையும் புத்திசாலித்தமும்தான். நீ கவலையே படாதே. தைரியமா இரு. பாரேன்! ஒரே மாசத்தில உன் புருஷன் லைனுக்கு வர்லைன்னா என் பேரு பத்மா இல்லை." வித்யா நம்பிக்கையோடு பத்மாவின் கைகளை பிடித்து அழுத்தவும் வித்யாவின் ஆபீஸ் வந்து விட்டிருந்தது.

இந்த கதைக்கான தீப்பொறி.... (திருமதி நித்யா ரவீந்தர்)

எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி அவள் கணவனோடு ஒத்து போக முடியாமல் மிகுந்த மன வேதனைகளுடன் இருந்தாள். ஓரளவுக்கு சமாளித்து அதிலிருந்து அவள் மீண்டு வந்த போது துரதிர்ஸ்டவசமாக அந்த கணவன் காலமாகிவிட்டார். சமீபத்தில் அவளை சந்தித்த போது, " எனக்கு பழைய வாழ்க்கை கூட கஷ்டமாக தெரியலைடி. கணவன் இல்லாமல் இந்த சமூகத்தில் தனியாக வாழ்வது அதைவிட கொடுமையாஇருக்கு." என்றாள்.

2007 விகடன் தீபாவளி மலர்

Thursday 22 November, 2007

நான் நானாக


நான் நானாக

"என்னங்க. கார்த்திக்கை பற்றி ரொம்ப கவலையா இருக்குங்க. இஞ்சினீயரிங் காலேஜுக்கு அப்ளிகேஷன் வாங்கி வச்சிருக்குன்னு சொன்னா, நான் கேட்டேனாங்கறாங்க. நீங்களாவது கேக்க மாட்டீங்களா?"

ஆமாம். கார்த்திக்கை புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது. ஒரே மகன். தாத்தா பாட்டி செல்லம் வேறு. சித்ரா அவனை பாட்டு கற்றுக் கொள் என்றாள். மாட்டானாம். ஆனால் பெயிண்டிங்காக வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறான். சித்ராவுக்கு பெயிண்ட் ஸ்மெல் என்றாலே அலர்ஜி. எனக்கும் தரையில் சிதறிக் கிடக்கும் பேப்பர் துண்டுகளையும் காலி பெயிண்ட் ட்யூபுகளையும் கண்டால் எரிச்சலாய் வரும்.

சரி, சின்ன வயசு. நாம்தான் திசை திருப்பி விட வேண்டும் என்று ரெண்டு பேரும் ஒரு நாள் முழுக்க யோசித்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் அவனோ, சாப்ட்வேர் பக்கம் தலைவைத்து படுக்காமல், கம்ப்யூட்டரை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து போட்டு ஏதாவது சேர்த்துக் கொண்டிருக்கிறான். ஆரகிள், ஜாவா மாதிரி டிரைனிங் கோர்ஸ் போயேன் என்றதற்கு, அதெல்லாம் வேஸ்ட் என்று சொல்லிவிட்டான். எப்படி வேஸ்ட் எங்களுக்கு புரியவில்லை.

என் ஆற்றாமையை ஒரு சேர திரட்டி என் நண்பர் அறந்தை மணியனிடம் கொட்டினேன். அவரும் அவனோடு பேசிப் பார்த்தார். என்னிடமும் சித்ராவிடமும் அளந்து பேசுகிறவன், அவரிடம் மணி கணக்கில் பேசினான். காரணம், அவர் உலக சினிமா பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்.

கடைசியில் அவரும் என் அப்பா, அம்மா கட்சியில் சேர்ந்து விட்டார். 'டேய்! உன் மகன் உன்னை மாதிரி இல்லைடா. படு புத்திசாலி.. அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று கேபிள் டிவி ஜோசியர் மாதிரி சொல்லி என் வாயை அடைத்துவிட்டார்.

ஒரு வாரம் கழித்து அவனாகவே வந்து. "லயோலாவில் விஸ்காம் சீட் கிடைசசிடுச்சுப்பா. ·பீஸ் கட்டிடுங்க" என்று சொன்னான். எனக்குள் ரொம்ப நாளாக அரித்துக் கொண்டிருந்ததை போட்டு உடைத்து விடுவது என்று தீர்மானித்தேன்.

"கார்த்திக்! நீ விஸ்காம் சேர்ந்ததுல எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனா அதையே நாங்க சொல்லியிருந்தா உனக்கு பிடிச்சிருக்காது. அப்படித்தானே?"
"அப்படியில்லையப்பா. எனக்கு சில விவரங்கள் தேவைப் பட்டுச்சு. அதை அறந்தை மணியன் சார் கிட்டேயிருந்து தெரிஞ்சுக்கிட்டேன். அவ்வளவுதான். உங்க நிறைவேறாத ஆசைகளுக்காகவோ, மத்தவங்க என்ன பண்ணறாங்களோ அதையே நானும் செய்யணும்கிறதுக்காகவோ நான் நிச்சயமா இல்லை. அதை புரிஞ்சுக்குங்க. நான் உங்க மகன்தான். ஆனா நான் நீங்க இல்லை. நான் நானாகவே இருக்க ஆசைப்படறேம்ப்பா. இது தப்பா, சொல்லுங்க?"

கார்த்திக்கின் நெத்தியடி தாக்குதலில் நான் நிலைகுலைந்து போனாலும் 'என் மகன் சிங்கம்டா' என்று மனசின் எங்கோ ஒரு மூலையில் சந்தோஷம் கொப்பளித்தது.

குங்குமம் - 22 நவம்பர் 2007

Wednesday 21 November, 2007

போராட்டம்


"ஐயா. என் பாட்டிக்காக உங்க குழு பிரார்த்தனை செய்யணும். முடியுங்களா?"

"நிச்சயமா முடியும். விவரங்களைச் சொல்லுங்க" வெள்ளை தாடியும் வெற்றிலை சிரிப்புமாக என்னை வரவேற்று தனக்கு முன் இருந்த நாற்காலியை காட்டினார் அந்த பிரார்த்தனை கிளப்பின் தலைவர். நான் யோசனையோடு மெதுவாக ஆரம்பித்தேன்.

"என் அம்மா வழி பாட்டி பேரு சித்ர பானுங்க. பேருக்கு ஏத்த மாதிரி எழுதி வெச்ச சித்திரம் மாதிரி இருப்பாங்க. யார் கொள்ளிக் கண் பட்டுச்சோ இருவது வயசுல அவங்க விதவையானது மகா கொடுமைங்க. நண்டும் சிண்டுமா ரெண்டு குழந்தைங்க. உறவுக்காரங்க ஒருத்தர் கூட உதவிக்கு வர்ல. ஆனா பாட்டி மொட்டையடிச்சுக்கிட்டு வெள்ளைப் புடவை கட்டிக்கணும்கிறதுல எல்லோரும் ஒத்துமையா இருந்தாங்க. பாட்டிக்கு நெஞ்சுரம் ஜாஸ்திங்க. எல்லா சடங்குகளும் முடிஞ்சதும் ரெண்டு குழந்தைகளோட தனியாக சென்னைக்கு வந்துட்டாங்க. திருவல்லிக்கேணி ஒரு ஒண்டு குடித்தனத்தில ரூம் புடிச்சாங்க. வீடுவீடா சமைக்கப் போனாங்க. தான் செஞ்ச பட்சணங்களையும் அப்பளங்களையும் எடுத்துக் கிட்டு கால் வலிக்க வலிக்க வீடு விடா போய் வித்தாங்க. எல்லா அவமானங்களையும் தனக்குள்ள மென்னு முழுங்கினாங்க."

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தேன்...

"கொஞ்சம் தலை நிமிர்ந்தவங்களுக்கு என் அம்மாவால கஷ்டம் வந்திச்சு. வரதட்சனை கொடுமையை எதிர்த்து போராடாம கோழைத்தனமா எங்க அம்மா தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க. அந்த கொடுமைகாரங்களை சும்மா விடக்கூடாதுன்னு பாட்டி வக்கீல் வீட்டுக்கும் கோர்டுக்கும் நாயா பேயா அலைஞ்சாங்க. இதுக்கு மத்தில என் மாமா, தானே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு 'இனிமே உனக்கும் எனக்கும் ஒட்டோ உறவோ இல்லை'ன்னு ஒதுங்கிக்கிட்டாரு. ஆனா பாட்டி அதுக்கும் அசரல. 'டேய் சங்கர். நீ ஜெயிக்கனும்டா! அதை நான் பார்க்கணும்டா!' ன்னு அடிக்கடி சொல்லுவாங்க. என்னை நல்லா படிக்க வைச்சாங்க. 'உன் தரித்திரம் உன் பேரனையும் பாதிக்கும்டி சனியனே' என்ற அக்கம் பக்க ஏச்சு பேச்சையெல்லாம் தூக்கி எறிஞ்சு என்னை ஆசை ஆசையா வளர்த்தாங்க. ஆனா விதிவசத்தால நானும் என் பாட்டிக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தேங்க. நானும் தற்கொலைக்கு முயற்சி பண்ணேங்க"

என் குரல் கம்மவும் அந்த பெரியவர் ரெடியாக இருந்த ஒரு க்ளாஸ் தண்ணீரை நீட்டினார். முழு கிளாஸையும் ஒரே மூச்சில் மடக் மடக்கென குடித்தேன். நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டு விட்டதில் தொடர்ந்தேன்.

"பருவ வயசு காதல் என்னை பாடாய் படுத்திச்சு. அது திடீர்னு தோத்துப் போனதுல எனக்கு உலகமே முடிஞ்ச மாதிரி தோணிச்சு. என் தற்கொலை முயற்சிய பாட்டி பார்த்துட்டாங்க. அவ்வளவுதான்! காளி அவதாரமே எடுத்தாங்க. என்னை நார்நாரா கிழிச்செறிஞ்சாங்க. அப்போதான் தன் முழு கதையையும் சொன்னாங்க. என் வெற்றிலதான் அவங்க வாழ்வோட அர்த்தம் இருக்குதுன்னு புரிய வைச்சாங்க. நான் அப்போ எழுந்தவன்தாங்க. படிச்சேன். பட்டம் வாங்கினேன். இன்னிக்கு ரொம்ப வசதியா இருக்கேன். அதுவும் தெய்வத்துக்கு பொறுக்கலங்க. பாட்டிக்கு கேன்சர் நோய் வந்திச்சு. முதலில் கர்பப் பையை எடுத்தாங்க. அப்பறம் மார்ல கத்தி வச்சாங்க. இப்ப எலும்புல இருக்குதாம். வலி வேதனையில அவங்க கத்தறத என்னால தாங்க முடியலங்க. நேத்து என் பாட்டி சொன்னதை கேட்டு துடிச்சு போயிட்டேங்க."

"டேய் சங்கர். போறும்டா. நான் பார்க்கவேண்டியதெல்லாம் பார்த்தாச்சு. இனிமே இந்த வலிய என்னால தாங்கமுடியாதுடா. ஒரு பாட்டில் விஷம் இருந்தா கொடு. பேயிடறேன்னாங்க. சாகறது கோழைத்தனம்னு சொன்னவங்களே செத்துப் போகணும்னு சொல்லறாங்கன்னா எவ்வளவு வேதனை அவங்களுகுள்ள இருக்கும்? அதுனால நான் உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன் அவங்க சீக்கிரம் செத்துப் போகணும்னு பிரார்த்தனை பண்ணுவீங்களா?"

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு மோகன் ராம்)

என் அம்மா வழி பாட்டிக்கு என் மேல் கொள்ளை ப்ரியம். கடைசி மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்து காலமானார்கள். ஒரு விடியற்காலையில் அவர்கள் வானுலகம் போய்க் கொண்டே எனக்கு டாடா காட்டுவது மாதிரி கனவு வந்தது. திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தால்.... பாட்டி போயிருந்தார்கள்.

2007 விகடன் தீபாவளி மலர்

Tuesday 20 November, 2007

நடு இரவில்


"சொல்லும்மா, என்ன ஆச்சு?" நூற்று பத்து என்று காட்டிய தெர்மா மீட்டரை உதறிக் கொண்டே கேட்டார் டாக்டர்.

"இவரு என் புருஷங்க. ஊரை விட்டு பத்து மைல் தள்ளியிருக்கிற கரும்பாலையில வேலை பார்க்கிறாரு. தெனமும் வீட்டுக்கு லேட்டாதான் வருவாரு. நேத்து ராவு ரெண்டு மணி ஆயிட்டு. இவர காணும். நான் பதறிப் போய் நாலு ஆளுகள கூட்டிக்கிட்டு ரோட்ல தேடிக் கிட்டே போனா நல்லூர் கேட்டாண்ட இவரு ரோட்டு மேல கெடக்காரு, சைக்கிளு வாய்கால்ல கவுந்து கெடக்குது. இவர பேயடிச்சிடுச்சுங்க"

"என்னது, பேயா ?" அதிர்ந்தார் டாக்டர்.

"ஆமாங்க மெய்யாலுமா! ஏங்க, நீங்களே சொல்லுங்களேன்."

மனைவி கொடுத்த தைரியத்தில் தலையை சுற்றி கட்டியிருந்த துண்டை சற்று தளர்த்திக் கொண்டு மெதுவாக பேச தொடங்கினான் முருகேசன். "நேத்து பாக்டரியை விட்டு கெளம்ப பத்து ஆயிருச்சுங்க. நாளைக்கு அம்மாசி வருதில்ல, வழியெல்லாம் கும்மிருட்டு! கக்கன் பாலத்துக்கிட்ட ஒரு தொண்டு கெளவி குந்திக்கினு உட்கார்ந்த வாக்கில ரெண்டு கையாலும் தள்ளிக்கிட்டே ரோட்டை கிராஸ் பண்ணிச்சு. காதுல பெருசு பெருசா பாம்படம். நெத்தில பட்டையா துண்ணூறு. வெத்தில போட்ட ஒண்ணு ரெண்டு காவிப் பல்லுன்னு பயங்கரமா இருந்திச்சு. சரி, ராத்திரில கிளவி போகுதுன்னு மனசை தேத்திக் கிட்டு சைக்கிளை வேகமா விட்டேன். மனசுல அந்த கிளவி வந்துகிட்டும் போய்கிட்டும் இருந்தா. நம்ம நல்லூர் ரெயில் கேட் தாண்டி கொஞ்ச தூரம் போயிருப்பேங்க... சொன்னா நம்ப மாட்டீங்க, அந்த கெளவி மறுபடியும் ரோட்டை க்ராஸ் பண்ணுது. ஆனா இந்த முறை இடது வலமா! அப்படி கிராஸ் பண்றப்ப, ஒரு தடவ என்னய பார்த்து சிரிச்சுது பாருங்க... யம்மாடி! என் ஈரக்கொலையே வெளியில வந்த மாதிரி ஆயிட்டு. அப்ப அலறிக்கிட்டு சைக்கிளோட விளுந்தவன்தான்...!"

டாக்டருக்கு புரிந்து விட்டது. இது மென்டல் ஹலூசினேஷன். அந்த கிழவியை பற்றியே ஓயாது நினைத்துக் கொண்டே வந்திருக்கிறான். பயத்தின் உச்சத்தில், அந்த கற்பனையே ஒரு முப்பரிமாண பிம்பமாக அவனுக்கு தோன்றியிருக்கிறது.

"முருகேசன்! பேய், பிசாசெல்லாம் ஒண்ணுமில்லே! நீங்க ரொம்ப பயந்ததினால, பிரமை ஏற்பட்டிருக்கு. பேயெல்லாம் சுத்த ரீல். நம்பாதீங்க. இந்த மாத்திரைகளை சாப்பிடுங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துக்குங்க. ரெண்டு நாள்ல சரியாயிடுவீங்க."

மறுநாளும் காய்ச்சல் தொடர்ந்தது. உடனடியாக பேயோட்டுவதற்கு பூசாரி வரவழைக்கப்பட்டார். முருகேசனுக்கு வேப்பிலையடிக்கப்பட்டு நாலா புறமும் எலுமிச்சைபழங்கள் நசுக்கி எறியப்பட்டன.

ஒரு வார லீவுக்கு பிறகு ட்யூட்டியில் சேர்ந்த முருகேசனின் நண்பன் சரவணனுக்கு விஷயம் தெரிந்து ஓடோடி வந்தான்.

"மடையா! அந்த கெளவி பேயுமில்லே. பிசாசுமில்லே! நல்லா ஜம்னு உசுரோடதான் இருக்குது. நீ ரெண்டு இடத்துல பார்த்ததும் ஒரே கெளவிதான். மொதல்ல பார்த்தது அது பஸ்ல ஏறத்துக்கு முன்னால. அடுத்தது, அது பஸ்ஸை விட்டு இறங்கிப் போகும் போது."

முருகேசனுக்கு உடனே காய்ச்சல் விட்டுவிட்டது.

இந்த கதைக்கான தீப்பொறி... (திரு டி.வி.வரதராஜன்)

நான் சிறு வயதில் வாழ்ந்த உரகடம் என்ற கிராமத்தில் ஒரு பாழடைந்த வீடு ஒன்று உண்டு. பேய் பிசாசு பற்றிய புரளியால் இரவில் அந்த பாழடைந்த வீட்டை கடக்கும் போது காதில் ஏதேதோ ஓசைகள் கேட்கும். ஒரு முறை அந்த வீட்டுக்கு அருகில் இருட்டில் ஒரு நெடிய உருவம் வந்து கொண்டிருந்தது. மல்லிகைப்பூ வாசம். கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தம். கால் கொலுசின் சலக் சலக் சத்தம். பளீரென வெள்ளை பற்கள் காட்டி சிரிக்கவும் அலறி விட்டேன். கடைசியில் அது எங்கள் வீட்டு வேலைக்காரி ! கோயிலுக்கு போனவனை எங்கே கானோம் என்று தேடி வர வீட்டில் அனுப்பியிருக்கிறார்கள். அன்று அலறியதை இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது.

2007 விகடன் தீபாவளி மலர்

Monday 19 November, 2007

ஓடாதே.. யோசி


முதலில் பயங்கர வெடிச் சத்தம் மாதிரி கேட்டது. அதை தொடர்ந்து கட்டிடமே குலுங்கியது. பிறகு தொடர்ச்சியாக எதோ முறிந்து உடைந்து படபடவென சரிவதும் கண்ணாடிகள் நொறுங்கும் சத்தம் கேட்டது.

"சில்வியா! நம்ம ஆபீஸ் பில்டிங் கொஞ்சம் கொஞ்சமாக இடிஞ்சு விழுந்திட்டிருக்குன்னு நினைக்கிறேன். தப்பிச்சு ஓடு" என்று சொல்லிக் கொண்டே அரை இருட்டில் தட்டு தடுமாறி வந்த லதாவின் மேலேயே சில்வியா மோதினாள். ஊனமுற்ற கால்களுக்காக லதா உபயோகிக்கும் கிரெச்சஸ் இரண்டும் மூலைக்கு ஒன்றாக போயின. இருவரும் தலை குப்புற விழுந்தனர். யார் யாரோ அவர்களை மிதித்தும் தடுக்கி விழுந்து கொண்டும் ஓடினார்கள்.

கொஞ்சம் சுதாரித்து எழுந்த சில்வியா வாசலை நோக்கி ஓடினாள். லதா எங்கே போனாள் தெரியவில்லை. பொடி மணலாக தூசு மழை பொழிந்து கொண்டிருக்க மூச்சு திணறியது. நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தாள். திடீரென காலுக்கடியில் தரை சரிய நிலைதடுமாறி விழுந்து சுவரோம் உருண்டாள். ஒட்டு மொத்த மின்சாரமும் துண்டித்துப் போக இருள் சூழ்ந்தது. ஏதேதோ அவள் மேல் வந்து விழுந்தன. சரிவதும் விழுவதுமாக சில்வியா அடித்து செல்லப்பட்டாள். "யாராவது காப்பாற்றுங்களேன்?" என்று தொண்டை கிழிய கத்தினாள்.

கட்டிடம் ஆடுவது கொஞ்சம் நின்றது. எங்கும் கும்மிருட்டு. திசை தெரியவில்லை. உயிர் பிழைப்போமா என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தபோது, வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆறு மாத குழந்தை கண் முன்னால் வந்து போனது. சில்வியா தன் முழு பலத்தையும் திரட்டி, கைகளை தரையில் அழுத்தி எழ முயன்றாள். மீண்டும் காலுக்கடியில் கான்க்ரீட் தரைதளம் சரியத் தொடங்க 'செத்தேன் நான்' என்றிருக்கும் போது யாரோ கையை பிடித்து மேலே இழுத்தார்கள். சில்வியாவை நாலைந்து பேர் கைத்தாங்கலாக வெளியே கொண்டு வந்தார்கள்.

அரை மயக்கத்திலிருந்த சில்வியா திடீரென கத்தினாள். " போங்கள். லதாவை தேடுங்கள். நாலாவது மாடியில் இருக்கிறாள்"

"லதாவா! சரியா போச்சு. ஹேய் லதா... இந்தா உன் பிரெண்டை பார்த்துக்கொள்" என்று துளி கூட காயம் இல்லாத லதாவிடம் சில்வியாவை ஒப்படைத்துவிட்டு இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்ற ஓடினார்கள்.

"லதா, என்னால் நம்பவே முடியவில்லை! நீ எப்படி தப்பித்தாய்? உன்னிடம் ஸ்டிக்ஸ் வேறு இல்லையே?"

"அதனாலென்ன? நான் லேசில் நம்பிக்கை இழக்க மாட்டேன். இருப்பது போனால் கூட அது கூட ஒரு விதத்தில் நன்மைக்கே என்று நினைப்பேன். உன் மீது மோதி விழுந்த எனக்கு வசதியாக ஒரு பெரிய மேஜை கிடைத்தது. அதன் அடியில் தவழ்ந்து, நுழைந்து, அதன் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டேன். உயர் கட்டிடங்கள் இடிந்து விழும்போது தரைதளங்கள் பிளந்து உள்ளுக்குள் நொறுங்கி விழும். அந்த சமயத்தில் டிராப், ஹைடு, ஹோல்டு (படு, பதுங்கு, பற்று) என்பவை உயிர் காக்கும் மந்திர வார்த்தைகள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நான் மேல்தளத்தில் இருந்தது கூட நல்லதாகப் போயிற்று. ஆட்டம் நின்றதும் நானே தவழ்ந்து மேலே வந்து விட்டேன். ஓடுவதற்கு உனக்கு வலுவை கொடுத்த அதே ஆண்டவன் எனக்கு யோசிக்க புத்தியையும் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கொடுத்திருக்கிறான். அவ்வளவே !"

இந்த கதைக்கான தீப்பொறி.... (திருமதி ப்ரியதர்ஷிணி)

சென்னையில் நிலநடுக்கம் வந்தபோது நான் டி.வி. நியூஸ் ரூமில்தான் இருந்தேன். நாங்கள் எல்லோரும் உயிரை பிடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தோம். வெளியே வருவதற்கு சில நிமிடங்களே ஆன போதும் வீட்டிலிருக்கும் குழந்தை, அம்மா, அப்பா அனைவரும் கண்முன் வந்து போனார்கள். ஒரே தள்ளு முள்ளு. இக்கட்டான நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் நிறைய பேருக்கு தெரியவில்லை, என்னையும் சேர்த்து.

2007 விகடன் தீபாவளி மலர்

Friday 16 November, 2007

தனியே.. தன்னந்தனியே


"ஒன். டு. த்ரீ. ·போர்..... ஹாப்பி பர்த் டே டு யூ. ஹாப்பி பர்த் டே டு அனிதா. ஹாப்பி பர்த் டே டு யூ."

கண் விழித்த அனிதா, மிரண்டு போய் விலுக்கென எழுந்து உட்கார்ந்தாள். மாமனாரில் ஆரம்பித்து நாத்தனார் வரை அவள் படுக்கையை சுற்றி நின்று கொண்டு டாப் ஆ·ப் த வாய்ஸில் பாடினால், யார்தான் அரண்டு போகாமல் இருப்பார்கள்? ஆனால் சீக்கிரமே, 'இன்று உனக்கு பிறந்த நாள்டீ !' என்று புத்தி எடுத்துரைக்க, அனிதா மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள்.

"அனிதா! இந்தா... என் பிறந்த நாள் கி·ப்ட்!" நாத்தனார் ரம்யா மெகா சைஸ் டெடி பியரை நீட்டினாள். அதை தொடர்ந்து மச்சினன் பிரசன்னாவிடமிருந்து ஒரு ஆப்பிள் ஐபாடும் மாமியாரிடமிருந்து ஒரு சுடிதார் செட்டும் பிறந்த நாள் பரிசாக கிடைத்தன.

"என்னடா விக்னேஷ்! எங்கடா உன் கி·ப்ட்?" மாமனார் சந்தானம் அதட்டி கேட்டார்.

"அவர் ராத்திரி பன்னிரெண்டு மணிக்கே கொடுத்துட்டார், மாமா!" என்று வெட்கத்தோடு, தன் விரலில் இருந்த வைர மோதிரத்தை காண்பித்தாள் அனிதா.

"திருட்டுப் பயலே" என்று செல்லமாக சந்தானம் விக்னேஷ் முதுகில் செல்லமாக குத்த, வீடே கலகலப்பானது. அனிதா கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்ததும் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் அதை வித்தியாசமாக அவள் அசந்து போகும் படி செய்ய வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்டிருந்தார் சந்தானம். அது சரியாக ஒர்க் அவுட் ஆனதில் அவருக்கு ரொம்ப திருப்தி.

"சரி, எல்லாரும் பரிசு கொடுத்தாச்சு, மாமா, உங்க பரிசு எங்கே?" என்று உரிமையாக கேட்டாள் அனிதா.

"என் பரிசுதானே... வெயிட்! எல்லாரும் ப்ரேக் ·பாஸ்ட் சாப்டுட்டு ரெடியாகுங்க." என்று சொல்லி, சஸ்பென்ஸ் வைத்தார். டிபன் முடிந்ததும், ஆவலாய் 'எங்கே மாமா அந்த கி·ப்ட்' என்று மீண்டும் கேட்க, சந்தானம் சிரித்துக் கொண்டே அனைவரையும் வாசலுக்கு அழைத்து வந்து காரில் ஏற்றினார்.

கார் பெசண்ட் நகரை நோக்கி விரைந்தது. ஒரு புதிய அபார்ட்மெண்ட் முன்னால் நின்றது. லி·ப்டில் ஏறி, இரண்டாவது மாடியில் ஒரு ப்ளாட் கதவை திறந்து காட்ட அனைவரும் அசந்து போயினர்! அனைத்து வசதிகளும் கொண்ட அற்புதமான ·ப்ளாட்!

"அனிதா! இதுதான் உன் பிறந்த நாளுக்கு நான் தர்ற கி·ப்ட்! இனிமே இதுதான் உன் வீடு. நம்ப தி.நகர் ப்ளாட் ரொம்ப சின்னதும்மா. நீங்க இங்க கொஞ்சம் ·ப்ரீயா இருக்கலாம். வீக் எண்டுக்கு தி.நகர் வாங்க. நாங்களும் அப்பப்ப இங்க வர்றோம். என்ன, சந்தோஷமா? எப்படி என் கி·ப்ட்? பிடிச்சிருக்கா?"

அனிதா திடீரென மௌனமானாள். கொஞ்ச யோசனைகளுக்கு பிறகு மெதுவாக,

"மாமா நான் ஒண்ணு சொல்லட்டுமா. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா நான் தனியாதான் வளர்ந்திருக்கேன். அக்கா, தங்கை, அண்ணா, தம்பி உறவு பற்றியெல்லாம் கேள்விதான் பட்டிருக்கேனே தவிர அந்த சுகத்தை அனுபவிச்சதில்லை. விக்னேஷ்தான் என் ஹஸ்பண்டுன்னு நிச்சயமான உடனே நான் ரொம்ப மகிழ்ந்த ஒரு விஷயம், இனிமே தனிமையில போரடிச்சுக்கிட்டு இருக்காம, வீட்டோட இருக்கற அம்மா, நாத்தனார், தம்பின்னு ஜாலியா இருக்கலாம்கிறதுதான். நீங்க என்னடான்னா, இப்படி தனியா இருக்க வைச்சிட்டீங்களே! வேண்டாம் மாமா. இவர் ஒன்பது மணிக்கு ஆபீஸ் போனா ராத்திரி எட்டு மணிக்குதான் திரும்பி வராரு. அது வரைக்கும் டி.வியும் பால்கனி காத்துமாக இருக்கறதுக்கு எனக்கு போரடிக்கும். ஒரு மியூசியம் மாதிரி அமைதியா இருக்கற வீடு எனக்கு அலுத்துப் போச்சு. சென்டரல் ஸ்டேஷன் மாதிரி கலகலப்பா இருக்கிற உண்மையான வீடுதான் மாமா எனக்கு வேணும். அது தி.நகர் வீடுதான். வாங்க போகலாம். சனி, ஞாயிறுகள்ல வேனா எல்லாருமா இங்க வரலாம்!" என்றாள்.

இந்த கதைக்கான தீப்பொறி..... (திருமதி தேவதர்ஷிணி)

ஒரு பெண் என்னிடம் வந்து, "டி.வி. தொடரில் நடிக்க சான்ஸ் வாங்கித்தர முடியுமா?" என்று கேட்டாள். வீட்டில் போரடிக்கிறது என்பதற்காக நடிக்க வேண்டுமாம். 'ஏன் இதே ஊரில் இருக்கும் உன் மாமனார் மாமியாரோடு தங்கி இருக்கலாமே?' என்று கேட்டதற்கு 'ப்ச்' என்று உதட்டை பிதுக்கினாள்.

2007 விகடன் தீபாவளி மலர்

Monday 12 November, 2007

சின்ன விஷயம்



லூவர் மியூசியத்தை நெருங்கி விட்டோம். திடீரென எங்கள் காமிரா மேன் தினேஷ் பரபரப்பானான். ஏர் பேக்கின் ·ஸிப்புகளை இழுத்தும் பிரித்தும் தேட ஆரம்பித்தான்.

"விஜய். என் மெடிகல் கிட்டை ஹோட்டல்லையே விட்டுட்டு வந்திட்டேன். இப்ப பிரஷர் மாத்திரை சாப்பிடணும். மதியம் லஞ்சுக்கு முன்னால சுகருக்கு இன்ஜெக்ஷன் போட்டுக்கணும்."

எனக்கு சொரேல் என்றது. ஹோட்டல் இங்கிருந்து குறைந்த பட்சமாக பத்து கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். இரை தின்ற மலைப் பாம்பு மாதிரி, டிராபிக் அரை கிலோ மீட்டருக்கு அசையாமல் நீண்டு கிடக்கிறது. மீண்டும் ஹோட்டலுக்கு போவதென்று முடிவு செய்தால் இன்றைய ஷெட்யூல் ·பனால். ஆனால், தினேஷ் இல்லாமல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

முன் சீட்டில் இருந்த திலீபனிடம் நாங்கள் தயக்கத்தோடு சொல்ல, அவரோ கொஞ்சமும் பதட்டப்படாமல் "இவ்வளவுதானே? இது சின்ன விஷயங்க. அந்த மாத்திரை பேரை எழுதிக் கொடுங்க" என்றவர், உடனே ஹோட்டலுக்கு போனில் பேசினார். பிறகு, சரேலென முன் கதவை திறந்து கொண்டு இறங்கி, டிராபிக்கில் கலந்து, காணாமல் போனார்.

நாங்கள் லூவரை நெருங்குவதற்குள்ளேயே மாத்திரையோடு வந்தார். லஞ்சுக்கு முன்னாலேயே மருந்து பெட்டியும் வந்து சேர்ந்தது. நாங்கள் பாரிஸில் காலை வைத்ததிலிருந்து திலீபன் எங்களுக்கு செய்யும் சேவைகள் கண்டு பிரமித்து போனோம். இத்தனைக்கும் நாங்கள் அனைவருமே அவருக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எங்கள் தயாரிப்பாளருக்கு தெரிந்தவர். அவ்வளவுதான்!

நேற்று அது போலத்தான், பாரிஸ் ஏர்போர்ட்டில் ஏக அமர்க்களம் ஆனது. எங்கள் டைரக்டரின் லக்கேஜ்களில் ஒன்று லண்டன் ஏர்போர்ட்டிலேயே தங்கி விட்டதாகச் சொல்ல, அவர் ஏகத்துக்கும் டென்ஷனாகி விட்டார். ஆனால் தீலீபனோ 'இது சின்ன விஷயங்க' என்று சொல்லி விட்டு எங்களை ஹோட்டலுக்கு பேக்கப் செய்து விட்டு ஏர்போர்ட் அதிகாரிகளுடன் போராடி, இரண்டே மணி நேரங்களில் அந்த சூட்கேசுடன் எங்கள் ஹோட்டல் ரூம் கதவை தட்டினார்.

இது மாதிரி எத்தனையோ கஷ்டங்கள்... குழப்பங்கள். எல்லாவற்றுக்கும் தீலீபனிடமிருந்து ஒரே பதில்தான்..... 'இது சின்ன விஷயங்க!'.

ஒரு முறை, தாங்க முடியாமல் அவரிடம், "அதெப்படி எதையும் நீங்க சின்ன விஷயமாகவே எடுத்துக்கிறீங்க?" என்று கேட்டு விட்டேன்.

தீலீபன் கொஞ்சம் தயக்கத்தோடு ஆரம்பித்தார். "இலங்கையிலே போர் தொடங்கியதும் நாங்க குடும்பத்தோட தமிழ் நாட்டுக்கு புலம் பெயர்ந்தோம். சின்ன படகுல அஞ்சு நாள் கரை தெரியாம நடு கடல்ல சோறு தண்ணியில்லாம தத்தளிச்சோம். இனி பொணமாதான் கரை ஒதுங்கப் போகிறோம்னு நெனைச்சுக்கிட்டு இருந்த போது, கடவுள் ரூபத்தில ஒரு ஏழை தமிழ்நாட்டு மீனவர் எங்கள் அத்தனை பேரையும் காப்பாத்தி, உயிரோட கரை சேர்த்தார். ஒரு தனி ஆளா அவர் எப்படி சங்கடங்களை சமாளிச்சார் என்பதை நேர்ல பார்த்து பிரமிச்சவன் நான். எல்லா கஷ்டங்களையும் தன் உள்ளுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு, எங்களுக்கு நம்பிக்கையா சிரிச்ச முகத்தோட உதவினாரு பாருங்க... அதுதாங்க பெருசு! மத்ததெல்லாம் சின்ன விஷயங்க!"

நான் ஆடிப் போனேன்.

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு விஜய் சாரதி)

நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சிக்காக நான் வெளிநாடு போயிருந்த போது, ஒருவர், நாங்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எல்லா உதவிகளை செய்ததுடன் பிரச்சனைகளையும் சமாளித்து உதவினார். புன்முறுவலோடு எங்களுக்காக அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்

2007 விகடன் தீபாவளி மலர்

Friday 9 November, 2007

புதுசா ஒரு கடை


"வாங்க சார். என்ன ரொம்ப நாளா காணம்?" முகம் மலர்ந்த சிரிப்புடன் ராமநாதனை வரவேற்றார் பொன்னம்பல நாடார்.

ராமநாதன் அனிச்சையாக அவருக்கு பக்கத்தில், ஆனால் கடைக்கு வெளியே உப்பு மூட்டைக்கு பக்கத்திலிருந்த சிறிய ஸ்டூலில் உட்கார்ந்தார். மளிகைக் கடையிலிருந்து எல்லாம் கலந்து கட்டி வரும் கார வாசனை ராமநாதனுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஊரில் இருந்தால் தினமும் மாலை வேளையில் அரை மணியாவது பொன்னம்பல நாடார் கடையில் உட்கார்ந்து ஊர் உலக கதைகளை பேசா விட்டால் ராமநாதனுக்கு தலை வெடித்துவிடும்.

"ஒரு வாரத்துக்கு ஊருக்கு போயிருந்தேன் பொன்னம்பலம்" என்று பதில் சொல்லிவிட்டு கடையை நோட்டம் விட்டார். என்னவோ கஸ்டமர்கள் குறைந்து விட்டதாக அவருக்கு தோன்றியது.

அதற்கு காரணம் இருந்தது. நாலு கடை தள்ளி திடீரென புதிதாக ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் முளைத்திருந்தது. மூவாயிரம் சதுர அடியில் முழுவதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு அனைத்து மளிகை சாமான்களும் கையெட்டும் தூரத்தில் இருந்தன.

"பொன்னம்பலம். இன்னிக்கு வந்ததும் முதல் வேலையா அந்த டிபார்மென்ட்டல் ஸ்டோர்ஸ் போயிருந்தேன்."

"எப்படி இருந்திச்சு. ஏ.சி. சுகம் கண்டீங்களாக்கும்." பொன்னம்பலம் வெள்ளந்தியாக சிரித்தார்.

"ஏசியெல்லாம் இருக்குது. ஆனா கண்ணை கட்டி காட்ல விட்டாப்ல இருக்குது. எது எங்க இருக்குதுன்னு சொல்ல ஆளு இல்லை. தேடித் தேடியே கால் வலிகண்டு போவுது. கைல பிளாஸ்டிக் தொட்டியை வைச்சிக்கிட்டு அலைய வேண்டியிருக்குது. இந்த சின்ன புள்ளைங்க வேற... ஜகடை வச்ச தள்ளு வண்டிய அங்கியும் இங்கியும் உருட்டிக்கிட்டு தொந்திரவு செய்யுதுங்க. இந்த மாதிரி கடையெல்லாம் வர விடக் கூடாதுங்க. நீங்களெல்லாம் ஒண்ணு சேர்ந்து எதிர்த்திருக்கணும். முதல்ல விலை குறைச்சு காட்டுவாங்க. இருநூறு சதுர அடில இருக்க வேண்டிய கடையை ஏகத்துக்கும் பரப்பி அதுக்கு ஏ.சி.யும் போட்டு பிளாஸ்டிக் தொட்டி, ஜகடை வண்டிக்கெல்லாம் செலவு செஞ்சு கடைசில அந்த செலவை நம்ம தலைலதான் கட்டுவாங்க."

"அது வந்துங்க...."

"இருங்க....இதுல இன்னொரு விஷயம் பாருங்க. எல்லா பொருட்களையும் கவர்ச்சியா அடுக்கி வைச்சிருக்காங்களா? தேவையா இல்லையா என்பதை யோசிக்காம நாம பாட்டுக்கு கூடையில அள்ளிப் போட்டுகிட்டு வந்திடறோம். பில்லு போடும் போதுதான் கொஞ்சம் உறைக்குது. திரும்பி கொடுக்க வறட்டு கௌரவம் இடம் கொடுக்குமா? சரி, பரவாயில்லை போன்னு மனசை சமாதானம் செஞ்சு, வாங்கிக்கிட்டு வந்திடறோம். இது தேவையா, சொல்லுங்க. எனக்கு தெரிஞ்ச வக்கீல் இருக்காரு. நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. கேசு போட்டு, நாலே நாள்ல கடையை இழுத்து மூட நானாச்சு!"
"அப்படீங்களா? உங்கள மாதிரி ஆசாமிங்க இங்க வாங்க. அந்த மாதிரி ஸ்டைலு விரும்பறவங்க அங்க போகட்டும்."

"அதுக்கில்லை பொன்னம்பலம். நீங்க இப்ப சும்மா இருந்தீங்க, நாளைக்கு உங்க கடையையே ஸ்வாகா பண்ணிடுவாங்க, ஆமா!."

"அப்படியெல்லாம் ஆகாதுங்க! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன். அது தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க. அந்தக் கடை போட்டிருக்கிறது வேற யாருமில்ல... நம்ம மருமக பையன்தான். ஆங்.. கஸ்டமர்களை கவனிக்க ஆளு இல்லேன்னு சொன்னீங்களே, அதை சரி செய்யச் சொல்லறேன். சரீங்களா?"

ராமநாதன் அசடு வழிந்தார்.

இந்த கதைக்கான தீப்பொறி.... (செல்வி தீபா வெங்கட்)

ஒரு ஷ¥ட்டிங் ஸ்பாட்டில், பிரேக்கின்போது சக ஆர்டிஸ்டுகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒருத்தி கொஞ்சம் நிறம் கம்மி. அதற்கானகழிவிரக்கமும் அவளுக்கு உண்டு. என் போதாத காலம் ஒரு மேக்கப் மேனைப் பற்றி குறிப்பிடும் போது நான் வாய் தவறி 'அவர் கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பார்' என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்! அவள் அந்த 'லும்' என்பதை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுவிட்டாள். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நான் படாத பாடு பட்டேன்.

2007 விகடன் தீபாவளி மலர்

Wednesday 7 November, 2007

தங்கக்கூரை


தங்கக் கூரை

கிருஷ்ணய்யாப் பிள்ளையின் வரவுக்காக காத்திருந்த ஊர் மக்கள், அவர் வந்ததும் மரியாதைக்கு எழுந்து, அமர்ந்தனர்.

"என்னப்பா, எல்லாரும் வந்தாச்சா? கூட்டத்தை ஆரம்பிக்கலாமா?" கணீர் குரலில், தனது வெள்ளை மீசையை உள்ளங்கையால் நீவிவிட்டபடியே மிடுக்கோடு கூட்டத்தினரை இடமிருந்து வலமாக பார்த்தார் கிருஷ்ணய்யாப் பிள்ளை. கூட்டத்தினரின் தலையசைப்பில் சம்மதம் கிடைக்க, தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

"எல்லோரும் கவனமா கேட்டுக்குங்க. பட்டணம் போய் தேவ பிரசனம் பார்த்து, நம்ம ஊரு பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேதி குறிச்சிருக்கு. வர்ற தை மாசம் 12ம் தேதி. இன்னும் மூணு மாசம்தான் இருக்கு. செஞ்சுடலாம் இல்லையா?"

"ஐயா, நீங்க நல்லது கெட்டதுல்லாம் பார்த்துதான் தேதி குறிச்சிருப்பீங்க. உங்க சம்மதம்தான் எங்க சம்மதம். நாங்க என்ன செய்யணும். அதைச் சொல்லுங்க. செய்ய காத்துக்கிட்டு இருக்கோம்" என்றார் ரிடயர்ட் ஹெட்மாஸ்டர் சிவசங்கரன் எழுந்து.

"அப்ப சரி. திருப்பணி பற்றி பேச ஆரம்பிக்கலாமா?"

"ஐயா, தேர் மராமத்து செலவு முழுசையும் நான் ஏத்துக்கறேங்க"

"கோயில் முழுவதும் கிரானைட் தளம் போடும் செலவு என்னுது"

"பெங்களூருல என் பையன் நல்ல பொசிஷன்ல இருக்கான். அஞ்சு லட்சம் வரையில வசூல் செஞ்சு கொடுக்க நானாச்சு."

இதே போல் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை உற்சாகமாக எடுத்து வைக்க, கிருஷ்ணய்யாப் பிள்ளை மகிழ்ச்சியடைந்தார். "பலே. நீங்க இப்படி செய்யும் போது நானும் என் பங்குக்கு ஏதாவது பெருசா செய்ய வேண்டாமா? அதுனால நம்ம கோயில் மூலஸ்தான வெளிக் கோபுரத்துக்கு தங்கக் கூரை போடும் செலவை நான் ஏத்துக்கறேன்."

கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பஞ்சாட்சர முதலியார் எழுந்தார்.

"ஐயா! நீங்க நம்ம கோயிலுக்காக ஒத்துமையா உற்சாகமா திருப்பணி செய்யறது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, கோயில் புனரமைப்பை மட்டுமே பார்க்கிற நீங்க, நாம கோயில் பட்டாசாரியார் குடியிருக்கிற வீட்டையும் கொஞ்சம் பார்த்தா நல்லது. வீட்டை மராமத்து செஞ்சுக்கிற நிலைமைல அவர் இல்லே. சமையல் அறை இடிஞ்சு போனதால, இப்ப கூடத்திலேதான் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காரு. ஐயாவோட பெரிய மனசுல பெருமாளுக்கு தங்க கூரை வருது. அதுனால, என் பங்குக்கு பட்டாசாரியார் வீட்டு சமையல் அறை மாராமத்தை நான் ஏத்துக்கறேன். என்னை பொறுத்த வரைக்கும் இது கூட சாமி காரியம்தான்."

கோபால பட்டாசாரியார் கண்ணீர் மல்க எழுந்து, நன்றியுணர்வோடு பஞ்சாட்சர முதலியாரைக் கையெடுத்து கும்பிட்டார்.

இந்த கதைக்கான தீப்பொறி...... (திருமதி உமா பத்மநாபன்)



சமீபத்தில், ஒரு கிராமத்து கோயிலுக்கு போயிருந்தேன். கோயில் பளபளவென பொலிவோடு இருந்தது. ஆனால் அந்த கோயில் குருக்களின் வறுமை அப்பிய ஒல்லியான தேகத்தையும் பழுப்படைந்த உடைகளையும் பார்த்த போது மனசு சங்கடப்பட்டது.

2007 விகடன் தீபாவளி மலர்

Monday 24 September, 2007

இனி எல்லாம் நீயாக


இனி எல்லாம் நீயாக

தினமலர் - வாரமலர் - 23 செப்டம்பர் 2007

சிவகாமி தனக்கு முன்னால் செத்து போய் விடுவாள், தான் தனிமை பட்டு போய்விடுவோம் என்பதை பரசுராம் கனவிலும் நினைத்துப் பார்த்ததேயில்லை. அவருக்குத்தான் கர்ணனின் கவச குண்டலங்கள் மாதிரி ஆஸ்துமாவும் இருதய நோயும் உடம்பின் ஒட்டுண்ணிகளாக ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. சிவகாமி லேசாக தலைவலி என்று ஒரு நாள் கூட படுத்துக் கொண்டதில்லை. ஆனால் விதி யாரை விட்டது? எதிர்பாராத நேரத்தில் முதுக்குக்கு பின்னால் தடதடவென எருமை மாடு ஓடி வந்து முட்டி தள்ளிவிட்டு போய்விட்ட மாதிரி இன்று காலையில் அது நடந்தே விட்டது.

வழக்கம் போல காலை வாக்கிங் போய்விட்டு வந்து, ஹிண்டுவில் முதல் பக்கத்தையும், புரட்டிப்போட்டு ஸ்போர்ட்ஸ் பக்கத்தையும் மேய்ந்துவிட்டு இடது பக்க முக்காலியை பார்த்தபோது.... அங்கு காப்பி இல்லை. அப்போதே எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. ஒரு வேளை உடம்பு சரியில்லாமல் இருக்கலாம். என்ன ஏது விசாரித்தால் போயிற்று? என்று மனசை திடப்படுத்திக் கொண்டு குரல் விட்டு பார்த்தார். அதற்கும் பதிலில்லை. பயம் நெஞ்சுகூட்டுக்குள் சுறுசுறுவென மெல்லிய புகையாக பரவ, ரத்த அழுத்தம் சூடேறியது. மூச்சிறைத்தது. தட்டு தடுமாறி எழுந்ததில் டைனிங் டேபிள் முனையில் இடித்துக் கொண்டார். படுக்கையறைக்கு போனதில்.... அங்கு இல்லை. கிச்சனில் எட்டிப் பார்த்தபோது, கடவுளே.....

சிவகாமி சுவரோரமாக பிரிந்த தவிடு மூட்டை மாதிரி உட்கார்ந்திருந்த வாக்கில் சரிந்திருந்தாள். மூத்திரம் சற்று தூரம் ஓடி குளம் கட்டியிருந்தது. 35 வருட போலீஸ் அனுபவம் உண்மையை புத்திக்கு உடனடியாக தெரிவித்துவிட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளாத பரசுராம் கன்னங்களை தட்டினார். கீழே படுக்க வைத்து நெஞ்சை பிசைந்து பார்த்தார். ம்..ஹ¥ம்... உயிர் போய் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும்.

சிவகாமி அசைவற்று படுத்திருந்தாள். மளமளவென கண்கள் இருட்டிக்கொண்டன. தொண்டை வறட்சியில் பேச்சு வரவில்லை. துக்கமும் பயமும் ஒன்று சேர, இருக்கும் ஆற்றலையெல்லாம் ஒன்று திரட்டி நெஞ்சை பிடித்துக்கொண்டு பரசுராம் சங்கிலித் தொடராய் அலறியதில்....

'டொம்' என சத்தத்துடன் மடியிலிருந்த பிளாஸ்க் கீழே விழுந்து உடைந்தது. பரசுராம் சுதாரித்து எழுவதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. வார்டு பாய் ஓடி வந்து அவரை தூக்கி நிறுத்தினான். கூட்டத்தை விலக்கி சிதறிய கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்த ஆட்களை அழைத்தான்.

பரசுமாம் பிளாக் அவுட் குழப்பத்தில் தடுமாறினார். முதுகில் வெயில் சுட்டது. மதிய வேளை. நர்சிங் ஹோம். ஆமாம்! ஞாபகம் வந்துவிட்டது. நேற்று விடியக்காலையில்தான் சிவகாமியை இந்த நர்சிங் ஹோமில் சேர்த்தார். இரண்டு நாள் இடைவிடாத அலைச்சலில் சற்று கண் அயர்ந்துவிட.... தேங்க் காட்! சிவகாமி இருக்கிறாள். கால்கள் சிக்க வேகத்தை கூட்டி ஸ்பெஷல் வார்டு அறை 18ல் எட்டிப் பார்த்ததில்...

சிவகாமி இருந்தாள். உயிரோடு... பரசுராமின் பதட்டத்தை கண்டு கொஞ்சம் மிரட்சியோடு எழுந்து உட்கார முயற்சித்தாள்.

டி.ஜி.பி பரசுராம் ரிடயர் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் இன்றைக்கும் கூட அவர் பட்டி தொட்டிகளில் பிரபலம். அவர் அதிகாரத்தின் கீழ் அந்தியூர் காட்டு வீரப்பன் முதல் அயோத்தியா குப்பம் வீரமணி வரை அடங்கி போயிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளே அவரின் கத்திமுனை பார்வைக்கு எதிரில் இயல்பான பேச்சுக்கு திணறுவார்கள். எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். அதில் ஒழுங்கு இருக்க வேண்டும். பேச்சிலும் செயலிலும் ஒரு மிடுக்கு இருக்கும். போலீஸ் உடுப்பில் கேடிகளுக்கு எந்த அளவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாரோ அதே அளவுக்கு வீட்டிலும் கெடுபிடிகள்தான்.

டாக்டரின் கையெழுத்து கம்பெளண்டருக்கு அத்துபடி என்பது மாதிரி சிவகாமிக்கு அவர் கண் அசைவிலேயே அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து விடும். பத்து வேலையாட்கள் இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் சிவகாமிதான் செய்ய வேண்டும். அதில் கண்டிப்பாய் இருப்பார். தெருவில் நடந்து போகும் போது கூட மிடுக்காக நாலு அடி அவர் முன்னே நடக்க, சிவகாமி அவர் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சிறைக்க பின்னால் வந்து கொண்டிருப்பாள். சிரிப்பென்றால் பிறை சந்திரன் மாதிரி துளியூண்டு வந்து போகும். கேலியோ கிண்டலோ அவர் அறிந்திராதது. பேச்சு மிகவும் குறைவு. வீட்டில் கிச்சன் எங்கே இருக்கும் என்று கூட தெரியாது. தனக்கு என்ன உடுப்பு எப்போது வேண்டும்? குளிக்கும் வெந்நீர் எவ்வளவு வெதுவெதுப்பில் வேண்டும்? சிவகாமிக்குதான் தெரியும். எல்லா வசதிகளுக்கும் உடனுக்குடன் ஏற்பாடு செய்தார். ஒரு குறையும் வைத்தில்லை. குழந்தை பாக்கியத்தை தவிர.

"அம்மா. நீங்க இங்க வந்ததிலேர்ந்து அய்யா ஒன்னும் சரியா சாப்பிடலங்க. வெறும் டீயா குடிச்சி பொளுத ஓட்டறாரு. பசி மயக்கத்துல பிளாஸ்க்கை வேற உடைச்சிட்டாரு."

பரசுராமின் பின்னாலிருந்து முளைத்த வார்டு பாய் சொல்லிக் கொண்டே போனான். சிவகாமி கேள்வியாக பரசுராமை பார்த்தாள்.

"என்னங்க? போய் சாப்பிட்டு வாங்க. பார்த்தா உங்களுக்குத்தான் நோவு வந்த மாதிரி இருக்கு. போங்க. எனக்கு சரியாயிட்டு." ஈனஸ்வரத்தில் கண்களில் கவலை கொப்பளிக்க அவரை விரட்டினாள்.

பரசுராம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிவகாமியின் கைகளை இறுகி பற்றியபடி இருந்தார். நிமிர்ந்த போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. "நான் எப்ப சாப்பிடணும்? என்ன சாப்பிடணும்? எவ்வளவு சாப்பிடணும்னு எனக்கு தெரியாதே செல்லம். நீ சட்டுனு கால் நீட்டி படுத்ததும் எனக்கு ஒண்ணும் விளங்கல. அதான்."

அவசர கதியில் பைபாஸ் சர்ஜரிக்கு ஆயத்தங்கள் செய்தபோது கூட கலங்காத பரசுராம் தற்போது உடைந்து போன கண்ணாடி சில்லுகளாக இருப்பதை பார்ப்பதில் சிவகாமிக்கு நெஞ்சு கனத்தது.

"நீ பொழைச்சு வந்தா சாப்பிடலாம். இல்லேன்னா, அப்படியே போயிடலாம்னு இருந்தேன்."

பதறிப் போனாள் சிவகாமி. "என்னங்க. முதல்ல இந்த பேச்சை விடுங்க. எனக்கு ஒண்ணுமில்லே... ஒரு டிஜிபி பேசுற பேச்சா இது?"

முகம் பார்ப்பதை தவிர்த்து வெறுமையாக வெளி வாசலையே பார்த்துக் கொண்டே இருந்தவர், ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு திடீரென நினைவுக்கு வந்தவராய் "அடப்போ செல்லம். டிஎஸ்பி, ஐஜி, டிஜிபின்னு, போலீஸ் உடுப்பை கழட்டின பிறகும் கூட வித்தியாசமே இல்லாமல் இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு காலம் தப்பி இப்ப புரியுது. உனக்கு நல்ல கணவனா எதுவுமே செய்யலையேன்னு என்னை ரெண்டு நாளா மார்ல ரம்பம் வச்சி அறுக்கிற மாதிரி வலிக்குது. எவ்வளவு சீப்பா சுயநலமா நடந்துக்கிட்டிருக்கேன்கிற உணர்வு என்னை ஊசியா குத்துது."

சிவகாமி மிகுந்த முயற்சிகள் செய்து கொஞ்சமாக ஒருக்களித்து வலக்கையை ஊன்றி இடது கையை தூக்க எத்தனித்தாள். அவரை கொஞ்சம் நெருங்கலாம் என்றால், முடியவில்லை. அப்படியே சரிந்தவள் கண்களை மூடி நெஞ்சுக்குள் விசும்பினாள்.

"அழறையா. வேணாம். என்னோட துக்கத்தை உங்கிட்ட சொல்லி இன்னும் உன்னை கஷ்டப்படுத்த விரும்பல"

பரசுராம் தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டு கஷ்டப்பட்டு இயல்புக்கு வர முயற்சித்தார். மீண்டும் அந்த மௌனம் அவரை கொன்று தீர்த்தது. "நான் ஒன்னே ஒன்னு கேட்கட்டுமா? நீ ஏன் எதுவுமே கேக்கல?"

சிவகாமிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. "அட போங்க. வேற பேச்சு ஏதாவது பேசுங்க." வெட்கமாக இருந்தது.

"இல்ல சொல்லு. எனக்கு தெரிஞ்சுக்கணும். வீட்ல ஒரு பொருளை எடுத்துக் வச்சதில்லே. பிறந்த நாள் திருமண நாள்ன்ணு ஒரு தடவை கூட துணிமணி எடுத்துக் கொடுத்ததில்லே. பூ கூட நீயேதான் வாங்கி வச்சிப்பே. அதக் கூட நான் வாங்கித் தரணும்ணு எனக்கு இப்ப வரைக்கும் மனசுல வர்லே."

சிவகாமி அவரையே கண்கொட்டாமல் பார்த்தாள். விழியோரங்களில் கண்ணீர் முட்டி நின்றது. நீண்ட பெருமூச்சுக்கு பிறகு நிதானமாக ஆரம்பித்தாள். "நீங்க என்னை கல்யாணம் செஞ்சுக்க முடிவு செஞ்சீங்களே, அப்பவே தீர்மானம் செஞ்சிட்டேங்க. என் அம்மாவுக்கு லுக்கோர்டமா இருந்ததை காரணம் காட்டி உங்க வீட்ல கல்யாணத்தை நிறுத்த பல பேர் குறுக்க நின்னாங்களாம். ஆனா நீங்கதான் தனி ஆளா போராடி என்னை கட்டிக்கிட்டீங்களாம். இது ஒன்னே போறுங்க, உங்க மனச தெரிஞ்சிக்க. நீங்க போலீஸ் வேலைய ஒரு தவம் மாதிரி செஞ்சிங்க. அதுக்கு எந்த பங்கமும் வந்திடக் கூடாதுன்னு என்னை நானே குறுக்கிக் கிட்டேங்க. உங்ககிட்ட இருக்கிற சமூக அக்கறை, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு இவைகளையெல்லாம் பார்த்து பிரமிச்சிருக்கேங்க. என்ன, மத்த ஆம்பிள்ளைக மாதிரி பொளுதன்னிக்கும் கட்டிபுடிச்சு கிட்டு ஆட்டுக்குட்டி மாதிரி நீங்க இல்லை. அது உங்க சுபாவம் இப்படித்தான்னு புரிஞ்சிக்கிட்டேங்க. உங்க மனசு என்ன சொல்லுதுன்னு எனக்கு புரியுங்க. அப்ப அப்ப செல்லம்ன்ணு கூப்பிடுவீங்களே, அது ஆயிரம் பட்டுப் புடவைகளுக்கு சமானங்க."

"யு ஆர் க்ரேட் செல்லம். ஒரு துடிப்பான ஏஎஸ்பி டிஜிபியா உயர்ந்தேன்னா அது உன்னாலத்தான். இன்னும் ஒண்ணே ஒண்ணு கேட்கட்டுமா? இதிலும் சுயநலமிருக்கு. என்ன செய்ய?"

"சொல்லுங்க."

"கலியுகத்தில சொர்க்கம், நரகமெல்லாம் இங்கெயேத்தான் சொல்லுவாங்க. அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யவும் வாய்ப்புகள் வரும் போலிருக்கு. இவ்வளவு காலம் பளபளப்போட உயரத்துல பறக்குற பட்டமா நான் இருந்தேன். நீ எனக்கு எல்லாமா இருந்தே. உன்னை இப்படி திடீர்ன்னு படுக்கைல போட்டு ஆண்டவன் என் கண்ணை திறந்திட்டான். இனி உன்னை உட்கார வச்சி, வாழ்நாள் முழுக்க நான் உனக்கு எல்லாமா இருக்கப் போறேன். அதனால....."

"என்னங்க? என்ன தயக்கம்? சொல்லுங்க."

"எனக்கு முன்னாடி நீ போயிடாதே செல்லம்.. உனக்கு என்ன வேணுமின்னாலும் நானே செய்யறேன். நீ இரு. என்ன பார்த்துக்கிட்டே இரு. அது போதும்."

சிவகாமி பதிலேதும் சொல்லவில்லை. கொஞ்சம் அவஸ்தையாக நெளிந்தாள். "ஏங்க நர்ஸை கூப்பிடுறீங்களா. பாத்ரூம் போனுங்க."

டக்கென்று எழுந்து கதவு வரை போனவர், புன்னகையோடு திரும்பி வந்து, "செல்லம், வா. நான் கூட்டிக்கிட்டு போறேன்."

சிவகாமி திடுக்கிட்டவளாய், வெட்கத்துடன், "நீங்களா? அடச் சீ. விளையாடாதீங்க. போய் நர்ஸை கூப்பிடுங்க"

"ஏன். என்னால முடியாதா? நான் உன் ஹஸ்பண்டுதானே இதிலென்ன வெட்கம்?"

"இல்லங்க. எனக்கு இடது பக்கம் மூவ்மெண்ட் கொஞ்சம் சிரமப்படுங்க. ரொம்ப கவனமா அழைச்சுகிட்டு போவணும். உங்களுக்கு பழக்கமிருக்காது. அதுக்குத்தான் சொல்லறேங்க."

"அடப்போ. பழகினாப் போச்சு. நீ வா". பரசுரமுக்கு எங்கிருந்து வலு வந்தது என்று தெரியவில்லை. சிவகாமிக்கு வசதியாக அவளை தன் இடது தோள்களில் அணைத்தவாறு பாத்ரூமை நோக்கி நடக்கலானார்.

எதேச்சையாக வார்டு 18க்குள் எட்டிப் பார்த்த நர்ஸ், "பார்த்து டிஜிபி சார். மேடமை கெட்டியா பிடிச்சுக்குங்க. விடாதீங்க. அப்படியே ஒரு பாதி எடுத்துகுங்க" என்று சொல்லி சிரிக்கவும்...

சிவகாமிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. நெஞ்செல்லாம் பூரித்து கண்களிலும் கன்னங்களிலும் ஆனந்த கீற்று வழிந்தோடியது. ஆனால் மெல்லியதாக அழுகையும் கூடவே வந்தது.

Friday 7 September, 2007

மெலட்டூர்-ஒரு அறிமுகம்

அமுதசுரபி - செப்டம்பர் 2007

திருப்பதியில் போய் மொட்டைத் தலையனைத் தேடு என்றால் எந்த அளவுக்கு சிரமமோ அந்த அளவுக்கு கடினமானது தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் அச்சுதபுரம் என்ற புராண பெயர் கொண்ட கிராமங்களை கணக்கிடுவது. கிருஷ்ண தேவராயர் வழி வந்த தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் பெயரில் அங்கு உருவான கிராமங்கள் எண்ணிலடங்கா. அவைகளில் தஞ்சையிலிருந்து 20 கி.மி. தூரத்தில் உள்ள மெலட்டூர் என்ற கிராமம் மிக முக்கியமானது. தெலுங்கு பிராமணர்களுக்காக அச்சுதப்ப மன்னரால் தானமாக கொடுக்கப் பட்டதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பெரு மெலட்டூர் என்ற ஒரு பெயரும் முன்பு இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

நவீன காலத்திற்கு ஏற்ப எப்படி சண்டிகர் நகர் உருவாக்கப் பட்டதோ அந்த மாதிரி அந்த காலத்தில் ஒரு முழுமையான கிராமமாக மெலட்டூர் உருவாகியிருக்கிறது. ராமபிரான் அனிலின் முதுகில் முன்று கோடுகள் போட்ட மாதிரி மூன்று அழகான அக்கிரஹாரத் தெருக்கள். ஊரின் கிழக்கே சிவன் கோயில், மேற்கே பெருமாள் கோயில், தெற்கே பிள்ளையார் கோயில். ஊர் எல்லை தாண்டி அய்யனார் மற்றும் திரௌபதியம்மன் கோயில்கள். ஊருக்கு வெளியே அரை கிலோ மிட்டர் தூரத்தில் காவிரியின் கிளை நதியான வெட்டாறு. ஊரை சுற்றி திசைக்கு ஒன்றாக குளங்கள். நான்கு திசைகளிலும் வயல் வெளிகள். அவைகளுக்கு நீர்பாசனம் அளிக்க வெற்றிலை நரம்புகளாய் பரந்து விரியும் வாய்கால்கள். கேட்கும் போதே ஜில்லென்ற பசுமையான கிராமம் உங்கள் மனதில் வந்து போகும்.

ஊரின் மிக புராதன கோயிலாக உன்னதபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. காவிரியின் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுக்கி மண்ணில் பாதி புதையுண்டு கிடந்த லிங்கம்தான் மூலவர். ஆற்றில் மிதந்து வந்ததால் முதந்தீஸ்வரர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. ஆலயம் எழுப்பும் போது லிங்க்கத்துக்கு ஆவுடையார் சேர்த்திருக்கிறார்கள். ஆனலும் லிங்கம் நேராக இல்லாமல் சற்று கோனலாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அம்பாளின் பெயர் சிவப்ரியை. சித்திரை மாதத்தில் பிரம்மோத்சவம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. கோயில் நிர்வாகம் பிராமணர்களால் நடத்தப்பட்டாலும் மற்ற வர்கத்தினர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. ஒற்றுமையாக ஊர் கூடி தேர் இழுக்கிறார்கள்.

மேற்கே வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சியளிக்கிறார். லஷ்மி நரசிம்மரின் சன்னதியும் இருக்கிறது. சன்னதிக்கு சற்று மேலே ஒரு கண்ணரடி பெட்டியில் நரசிம்மரின் திருஉருவம் கொண்ட முகமூடி ஒண்று இருக்கிறது. இந்த முகமூடியைதான் ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தியன்று நடைபெறும் பாகவத மேளா ப்ரஹல்லாத நாடகத்தின் கிளைமாக்ஸில் உபயோகப்படுத்துகிறார்கள். பாகவத மேளா என்பது தியாகராஜ ஸ்வாமிகள் காலத்தில் வாழ்ந்த வெங்கட்ராம சாஸ்திரிகள் என்பவரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட நாட்டிய நாடக விழாவாகும். அதில் முக்கியமானது ப்ரஹல்லாத சரித்திரம். பாகவத மேளாவில் மேடையேற பெண்களுக்கு தடா. பெண் வேடங்களை ஆண்களே ஏற்று நடிக்கிறார்கள். நாடகம் இரவு பத்து மணிக்கு ஆரம்பித்தால் விடிகாலை பிரம்ம மூஹ¥ர்த்தத்தில் முடிகிறது. கிளைமாக்ஸில் ஆக்ரோஷமாக நரசிம்மர் தூன் பிளந்து வந்தாலும் அவர் ஹிரண்யனை கொல்வதில்லை. என்னதான் நாடகம் என்றாலும் தன்நிலை அறியாத 'சாமி' வந்திருக்கும் நரசிம்மர் ஹிரண்யன் வேடம் தரித்தவரை நிஜமாகவே காயப்படுத்திவிடக் கூடாது என்பதால் பஜனைகள் பாடி நரசிம்மரை சமாதானப் படுத்தி நாடகத்தை முடித்து விடுகிறார்கள். நாடக விழா ஒரு வாரம் நடக்கிறது. ஹரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, உஷா பரிணியம், ருக்மணி கல்யாணம் போன்ற நாடகள் நடக்கின்றன. பாகவத மேளாவில் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கடைசி நாளன்று வள்ளித் திருமணம் என்ற நாடகம் நடக்கிறது. பாகவத மேளா நடைபெறும் நாட்களில் நிறைய வெளிநாட்டினர் வருக்கின்றனர். புரியாத தெலுங்கு நாடகம் என்பதாலும் வருடாவருடம் நடப்பதாலும் உள்ளுர் மக்களின் ஆதரவு மிகக் குறைவு.

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து என்பார்கள். அதனால்தான் என்னவோ கலை என்றாலே கட்சிகள் உண்டு. மெலட்டூரில் இரண்டு பாகவத மேளா கோஷ்டிகள் இருக்கின்றன. ஒரு நரசிம்மரின் முகமூடி இரண்டு பேருக்குமே வேண்டுமென்பதால் நரசிம்ம ஜெயந்தியன்று ஒரு கோஷ்டியும் அதே மாதத்தில் நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரத்திரமான ஸ்வாதியன்று இன்னொரு கோஷ்டியும் நாடக விழா நடத்துகிறார்கள். மெலட்டுரை போலவே சாலியமங்கலம், தேப்பெருமாநல்லூர் கிராமங்களில் பாகவத மேளா நாட்டிய நாடகங்கள் நடக்கின்றன.

பாகவத மேளா எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு சற்றும் குறையாதது அரவான் களபலி என்ற தெருக் கூத்து நாடகம். இந்த நாடகம் தஞ்சை மாவட்ட கிராமங்களில் உள்ள திரௌபதியம்மன் கோயில்களில் தீமிதிக்கு முதல் நாள் விடிய விடியவும் தீமிதி தினத்தற்று தீமிதிக்கு தொடங்குவதற்கு சற்று முன்னால் வரை நடக்கிறது. திருவண்ணாமலை பகுதி கிராமங்களில் நடைபெறும் படுகளம் மாதிரியே இந்த தெருக் கூத்தும் நடக்கிறது. மஹாபாரத் போர் துவங்குவதற்கு முன்னால் நரபலி கொடுக்க பாண்டவர்கள் அரவாணை தீர்மாணிக்கின்றனர். அதை ஏற்றுக் கொள்ளாத திரௌபதி பாண்டவர்களிடமும், கிருஷ்ணனிடமும் மன்றாடுகிறாள். திரௌபதியை தேவி என்று அழைக்கிறார்கள். இதிலும் கிளாமாக்ஸில் தேவியின் சாமியாட்டம் இருக்கிறது.

கர்பஸ்திரிகளுக்கு அபயம் அளிக்கும் கர்பஹரக்ஷ¡ம்பிகை கோயில் உள்ள திருக்கருக்காவுர் மெலட்டூரிலிருந்து ஐந்து கி.மி. தொலைவில் இருக்கிறது. அதே மாதிரி தஞ்சைக்கு போகும் வழியில் குருஸ்தலமான தென்குடி திட்டை கோயில் இருக்கிறது. கலையும் ஆன்மிகமும் கலந்த ஒரு உன்னதபுரியாய் இன்றும் திகழ்கிறது மெலட்டூர். விடுமுறை நாட்களில் வேன் எடுத்துக் கொண்டு ஊர் ஊராய் கோயில்களுக்கு விஜயம் செய்பவர்கள் இனிமேல் மெலட்டூரை சேர்த்துக் கொள்ளலாம்.

Monday 3 September, 2007

ஒரு பொண்ணு ஒரு பையன்


ஒரு பொண்ணு ஒரு பையன்

ஆனந்த விகடன் - 5 செப்டம்பர் 2007

போர்டு ஐகான் அதற்குறிய நான்கு மூலை மஞ்சள் கோட்டு எல்லைக்குள் இல்லாமல் கோணலாக நிறுத்தியதிலிருந்தே மாயாவின் மூடு சரியில்லை என்று தெரிந்து விட்டது. காலையில் படு பிரகாசமாக ஆபீஸ் போனவளுக்கு இப்போது என்ன வந்தது? யோசித்துக் கொண்டே லி·ப்டு வரை போன ஸ்ரீநிவாசன் திரும்பி வந்தார். திகம்பர் சென்குப்தாவின் காரை கிட்டத்தட்ட முத்தமிட்டுக் கொண்டிருந்தது ஐகான். அந்த தடியன் முதலில் ரிவர்ஸ் எடுத்து அப்புறம்தான் திருப்ப முடியும். சென்டிமெண்டலாக அதற்கு அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். நாலு பேரை கூட்டி அமர்க்களம் செய்வான்.

கொஞ்சம் யோசனையோடு ஐகான் கதவில் கை வைக்க அது திறந்து கொண்டது. ஸ்டியரிங் கழுத்தில் சாவி! முன் ஸீட்டில் ஹேண்ட் பேக்! சே! என்ன பெண் இவள்! உள்ளே உட்கார்ந்து நிதானமாக ஸ்டார்ட் செய்து, கொஞ்சம் முன்னே போய் வலது பக்கமாக ஒடித்து திரும்பி வந்தார். குதிரையை அதன் லாயத்தில் சரியாக கட்டிவிட்ட திருப்தியில், காரை பூட்டி நிமிர வாட்ச்மேன் ராஜு நின்று கொண்டிருந்தான். கைகளில் சில கடிதங்கள்.

"ஐயா! இந்தாங்க."

"ரொம்ப நன்றிப்பா. ஆமா, உன் பேத்தி உடம்பு இப்ப எப்படி இருக்கு? வயித்துப்போக்கு நின்னிடுச்சா ?"

"முன்னைக்கு பரவாயில்லைங்க. முழுக்க குணமாக இன்னும் ரெண்டு நாள் ஆகுமுங்க. சமயத்தில நீங்க பணம் கொடுத்து உதவலைன்னா என் பேத்தி என்னிக்கோ போயிருக்குங்க. ரொம்ப நன்றிங்க."

"சரிப்பா. பார்த்துக்க." நகர்ந்தவருக்கு, அவன் ஏதோ செல்ல தயங்குவதாகப் பட்டது.

"என்னப்பா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?

"ஒண்ணுமில்லீங்க. அது வந்துங்க. இந்த கடுதாசுகள உங்க பொண்ணு வந்தப்ப அவங்ககிட்டே கொடுக்கலாம்னு போனேன். என்னவோ ரெண்டு வார்த்தை இங்கிலீசுல திட்டிபுட்டு போயிடுச்சுங்க. ரொம்ப கோவமா இருக்காங்க போல. வந்து அரை மணி ஆவுது. போய் சமாதானம் செய்யுங்க."

ஸ்ரீநிவாசன் கொஞ்சம் கவலையுடன் லிப்ட் கதவை சாத்தி நாலாவது மாடி பட்டனை அழுத்தினார். எதிர்ப்பார்த்த மாதிரியே வாசல் கதவு 30 டிகிரி கோணத்தில் திறந்திருந்தது. உள்ளே வெளிச்சமில்லை. ஹால் விளக்கை போட்டார். அமைதியோ அமைதி. பிரம்பு கூடை ஊஞ்சலில் செல் குப்புற கிடந்தது. எடுத்துப் பார்த்ததில் உயிரற்று இருந்தது. வேறென்ன ? தீபக்கோடு சண்டை போட்டிருப்பாள். அவன் போன் வரக்கூடாது என்று ஸ்விட்ச் ஆ·ப் செய்து வைத்திருக்கிறாள். காதலிக்கும் போதே இவ்வளவு சண்டை என்றால் ஜனவரிக்கு அப்புறம் எப்படி இருக்கப் போகிறதோ? பாவம் தீபக். கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் அது சரியா என்ற கேள்வி உள்ளே எழுந்தது.

சிவப்பு புள்ளியோடு மௌனமாக இருந்த டி.வியின் ஸ்விட்சை ஆ·ப் செய்தார். இறைந்திருந்த சி.டிக்களை ஒரளவுக்கு அடுக்கி வைத்தார். மாயாவுக்கு ஜக்ஜித் சிங்/சித்ரா சிங் கஸல் பிடிக்கும். அவர் தேடிய சி.டி. எளிதாக கிடைத்தது. டி.வி.டியின் ரிமோட்டை அமுத்த டி.வி.டி. தன் தவளை நாக்கை நீட்டி, ஜக்ஜித் சிங்கின் கஸலை உள் வாங்கிக் கொண்டது. 'சிட்டி ந கொயி சந்தேஸ்' என்று தொடங்கும் பாடல். ஒரு கடிதமோ எந்த தகவலோ இல்லாமல் நீ எங்கே போய்விட்டாய் என்று ஜக்ஜித் சிங் உயிரின் உயிராக மெல்லிய குரலில் உருக ஆரம்பித்தார். காலில் இடறிய மஞ்சள் நிற மூடியை எடுத்து நோட்டம் விட்டதில் டைனிங் டேபிள் மேல் திறந்து கிடந்த டொமேட்டோ கெச்சப் பாட்டில் நீ தேடும் வஸ்து நான்தான் என்றது. மூடியை திருகி ·ப்ரிட்ஜில் வைத்தார். சுருட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பாதி பீட்ஸா இருந்தது. அதைத்தவிர சாப்பிட எதுவும் இல்லை. பசிக்கு எதையாவது சாப்பிட்டு வைக்க வேண்டும்.

மாயா எழுந்து வருவதாக தெரியவில்லை. ரூம் கதவை லேசாக தள்ளியதில் ஜில்லென்ற ஏ.சி.காற்று தாக்கியது. மரவட்டை மாதிரி உடம்பை குறுக்கி சுருண்டிருந்தாள். சண்டை போட்டுவிட்ட களைப்பில் தூங்கி போயிருக்கலாம். கதவை திறந்து தெரியாமல் மெதுவாக சாத்தினார். இன்றைய பிரச்னையை சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. நாலு வயசில் இவளை கையில் ஒப்படைத்து விட்டு போய் சேர்ந்துவிட்ட உஷாவை அப்படியே ஞாபகப்படுத்துகிறாள். அவளும் அப்படித்தான். பழியாய் சண்டை போடுவாள். ஆனால் அடுத்த கணமே இரண்டு மடங்கு அன்பை பொழிவாள். எல்லா சண்டையிலும் கணவனை ஜெயித்தவள், கடைசியில் ஒரு கான்சர் நோயிடம் போராடி தோற்றுப் போனாள்.

சமையல் அறைக்கு வந்து எதேச்சையாக குப்பை கூடையை எட்டிப் பார்த்ததில் அதில் சோனு நிகம் இசைக்கச்சேரியின் டிக்கெட்டுகள் நாலாக கிழிந்து கிடந்தன. இன்று மாலைக்கான நிகழ்ச்சி ! புரிந்து விட்டது. ஒரு வாரமாக இந்த நிகழ்ச்சியை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். கடைசி நிமிஷத்தில் தீபக் வரமுடியாமல் போயிருக்கலாம். உடனே இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்திருக்கும்.

தீபக் எதிர் பிளாக்கில் இருக்கிறான். சட்டையை போட்டுக் கொண்டு யோசித்தவாறே படியிறங்கினார்.

கதவை திறந்த தீபக் முகத்தில் இருந்த இறுக்கம் பிரச்சனையின் தீவிரத்தை சொல்லியது. எதுவும் பேசாமல் முன்னால் நடந்து போய் தான் ஒரு கூடை சேரில் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீநிவாசனுக்கு எதிர் இருக்கையை காட்டினான். அவஸ்தையான அரை நிமிட மௌனத்தை அவனே பிறகு உடைத்தான்.

"அங்கிள். நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு புரியுது. பட், இட் ஈஸ் எ க்ளோஸ்டு சாப்டர்"

"தீபக். எனக்கு எதுவும் தெரியாது. ஆனா எதுவோ பெரிசா ஆகியிருக்குன்னு தோணுது. நீயே சொல்லு."

"அங்கிள். என்னோட ஜாப் நேச்சர் உங்களுக்கே தெரியும். 600 கோடி ரூபாய் இன்டர்நேஷனல் ப்ராஜக்ட் ·பைனல் ஸ்டேஜ்ல இருக்கு. ஒரு வாரமா ராத்திரி பகல் தெரியாம உழைச்சிக்கிட்டு இருக்கோம். அதை புரிஞ்சுக்காம இப்பவே சோனு நிகம் ப்ரோகிராமுக்கு வந்தாதான் ஆச்சுன்னு அடம் பிடிச்சா எப்படி? உனக்கு என்னை விட அந்த வெள்ளக்காரிகளோட டிபன் சாப்பிடறதுதான் முக்கியமான்னு ... ஷி க்ரியேடட் எ சீன். ஐ ஆல்ஸோ லாஸ்ட் மை கூல். எக்கச்சக்கமா ஆயிடுச்சு."

"ஐயாம் சாரி. தீபக். அவ இன்னும் சைல்டாதான் இருக்கா. ஷி நீட்ஸ்.."

"நோ. அங்கிள். எனக்கு பயமாயிருக்கு. மூச்சு திணறுது. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டு ஹாப்பியா இருக்கமுடியாதுன்னு இப்பவே தோணுது. அவளே நீ வேண்டாம் போன்னு சொல்லிட்டா. ஐயாம் சாரி. உங்க பொண்ணு பத்தி உங்க கிட்டயே கம்ப்ளெயிண்ட் சொல்ல வேண்டியதாயிடுச்சு. பட், வேற வழியில்லை. உங்ககிட்ட என் முடிவையும் சொல்லிட்டு அம்மாவுக்கு போன் செய்யலாம்னு இருக்கேன். அம்மா இப்ப நீயூஜெர்ஸில இருக்காங்க. நாளைக்கு காலைலதான் ஹ¥ஸ்டன் திரும்பறாங்க.... அப்பறம்... நாளைக்கே இந்த ·ப்ளாட்டை காலி செய்யலாம்னு இருக்கேன்."

ஸ்ரீநிவாசன் பதில் பேசாமல் தீபக்கையே உற்று பார்த்தார். அந்த பார்வையும் மௌனமும் அவனை கொஞ்சம் சங்கடப்படுத்தியது. அது அவசியம் என்றே அவருக்கு பட்டது. பிறகு நிதானமாக ஆரம்பித்தார்.

"தீபக். உன்னோட முடிவு உன்னோடது. அதை நான் இன்·ப்ளுயன்ஸ் செய்ய முடியாது. பட், நீ பிரச்சனைகளை சமாளிக்காம ஓடி ஒளியறதை பார்த்தா வருத்தமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும்தான் வந்து லவ் பண்ணறோம்ன்னு சொன்னீங்க. நான் ஜாப்ல நல்ல ஒரு பொஷிஷன் வந்த பிறகு மாயாவை கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு நீதான் சொன்னே. அந்த மாதிரியே ஜனவரில தேதியும் குறிச்சாச்சு. இப்ப நீங்க ரெண்டு பேருமே வேண்டாம்னு முடிவு செஞ்சுருக்கீங்க. சரி. இதையும் ஏத்துக்கிறேன். ஆனா ப்ளாட்டை காலி செஞ்சுகிட்டு ஓடி போயிடறேன்னு சொல்லறயே, அப்ப என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா ?"

"இல்லை அங்கிள். நான் உங்களை ரொம்பவும் மதிக்கிறேன். நீங்க இல்லைன்னா நான் லை·ப்ல இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. உங்களுக்கும் மாயாவுக்கும் தர்மசங்கடத்தை கொடுக்க வேண்டாம்னுதான் நான் ஒதுங்கிக்கப் பார்த்தேன். நீங்கதான் அங்கிள் எனக்கு எப்பவும் குரு"

அப்பாடி. ஸ்ரீநிவாசனுக்கு சிக்கலை எடுப்பதற்கான முதல் நுனி கிடைத்து விட்டது.

"ஒகே தீபக். ஐயாம் ப்ரௌட் ஆ·ப் யூ. நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்பறேன். என் கண்ணை பார்த்து தயக்கமில்லாம உடனடியா எனக்கு பதில் சொல்லணும். அது உன் அடிமனசிலேர்ந்து வரணும்..... டு யூ லைக் ஹர் ?"

தீபக் இந்த அதிரடி தாக்குதலை எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் தடுமாறினான். ஸ்ரீநிவாசன் தீவிரமாக அவனை உற்று நோக்கினார்.

"யெஸ் அங்கிள். ஐ லைக் ஹர். பட்..."

அதன் பிறகு ஸ்ரீநிவாசனுக்கு எல்லாம் இலகுவாக போயிற்று. பத்தே நிமிடங்களில் அவனை சகஜ நிலைக்கு கொண்டு வந்து விட்டார். சிறு பையன். அப்பா இல்லாதவன். ஐந்து வயது சிறுவனாக அறிமுகம் ஆகி இன்றைக்கு தன் தோளுக்கும் தாண்டி வளர்ந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப் பட்டவனை எழுந்து அரவணைத்துக் கொண்டார். அடுத்து மாயாவின் ஞாபகம் வந்தது.

"தீபக். நான் வரேன். மாயாவை சரி செய்துட்டு உன்னை கூப்பிடறேன். அப்ப வா". ஸ்ரீநிவாசனை வாசல் வரை வந்து வழியனுப்பினான் தீபக்.

மாயாவை சமாளிப்பதில் ஸ்ரீநிவாசனுக்கு அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை. 'உன்னோடு பொம்மைகள் வைத்துக் கொண்டு விளையாடிய தீபக்கை இன்னமும் அப்படியே மனதில் வைத்துக் கொண்டிருக்காதே. அவன் உன் பொம்மையில்லை. உனக்கு கணவனாக வரப் போகிறவன்' என்று மென்மையாக புரியவைத்தார். மாயாவையும் நார்மலுக்கு கொண்டு வந்த பிறகு தீபக்கையும் வரவழைத்து இருவரையும் வலுக்கட்டாயமாக ஐஸ்க்ரீம் பார்லருக்கு அனுப்பி வைத்தார்.

அரை மணியில் மாயா ஆர்பாட்டமாக வந்தாள். "யூ ஆர் க்ரேட்! எப்படிப்பா? சைக்காலஜி படிச்சிருக்கியா? பேசாம நீ வி.ஆர்.எஸ். வாங்கிக்கிட்டு கவுன்சலிங் செய்யலாம். தாங்க்யூப்பா"

மாயா ஸ்ரீநிவாசனின் கைகளை பிடித்து குலுக்கினாள். இரண்டு கைகளாலும் மாலையாக ஸ்ரீநிவாசனின் கழுத்தை கட்டி கொண்டாள். ஸ்ரீநிவாசன் அவள் தலையை அன்புடன் கலைத்தார்.

"மை டியர் ·பூலிஷ் கேர்ள். முன்ன ஜாயிண்ட் ·பாமிலி சிஸ்டம் இருந்துது. சித்தப்பா, பெரியப்பா, அத்தைன்னு பெரிய கூட்டமே இருக்கும். வீட்டில எந்த ஜோடியாவது முறுக்கிக்கிட்டு இருந்தாக்க அவங்களோட ரியாக்ஷனை வைச்சே ஏதோ ப்ராப்ளம்ன்னு அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. சரியான நேரத்துல உள்ள நுழைஞ்சு சரி செய்வாங்க. இப்ப அதெல்லாம் போச்சு. எல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. அதுக்கும் வழி தெரியாம எத்தனையோ விவாகரத்துக்கள் நடக்குது. அப்பறம்... "

ஏதோ சொல்ல வந்ததை மென்று முழுங்கியதை மாயா கவனித்துவிட்டாள். "டாடி. ஏதோ சொல்ல வந்தீங்க. என்ன? சொல்லுங்க."

"அது வந்தும்மா... முன்னைக்கும் இப்பைக்கும் ஒரு சின்ன வித்தியாசம். அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் கவுன்சலிங் தேவையா இருந்துது. இப்ப கல்யாணத்துக்கு முன்னயே கவுன்சிலிங் செய்ய வேண்டியிருக்கு. அவ்வளவுதான்."

"போ. டாடி. யூ த ·பூலிஷ் ·பாதர்." ஸ்ரீநிவாசனின் நெஞ்சில் மாயா செல்லமாக குத்தினாள். அந்த இறுக்கத்தில் கண்களில் கண்ணீர் கொப்பளிக்க அதில் உஷா தெரிந்தாள்.

Monday 27 August, 2007

கல்வெட்டு


கல்வெட்டு

'டும்,' 'டமால்', 'டுப்', 'டம்', 'டம்', 'டும்,' 'டமால்'. பாறைகள் வெடித்து சிதறின. திடீரென ஒரு தொழிலாளி கத்தினான்.

குரல் வந்த திசையை நோக்கி சுந்தர் ஓடினான். முதலாளி செல்லமுத்துவும் பதட்டத்துடன் பின் தொடர்ந்தார்.

"ஐயா. இங்க பாருங்க. பாறையில என்னென்னவோ எளுதியிருக்குது."

சுந்தருக்கு பார்த்ததுமே புரிந்துவிட்டது! சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள்! சிதறியிருந்த மற்ற பாறைகளிலும் கல்வெட்டுக்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினான்.

"அப்பாடி. நம்ம ஆள்படைகளுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே? இவன் சவுண்டு வுட்டதும் பயந்திட்டேன். போடா, போய் மத்த வேலையப் பாரு. என்ன சுந்தரு? ஏதாவது புதையல் மாதிரியா? "

"கிட்டத்தட்ட புதையல் மாதிரித்தான் சார். இவைகளெல்லாம் நம்ம ராஜா காலத்து கல்வெட்டுக்கள். தொல்பொருள் இலாக்காகிட்ட சொன்னோம்னா அவங்க நம்மள பாராட்டுவாங்க. டி.வி.காரங்க பத்திரிக்கைகாரங்க வந்து போட்டோ புடிப்பாங்க. ஒங்கள பேட்டி எடுப்பாங்க."

சுந்தர் மகிழ்ச்சியில் அடுக்கிக் கொண்டே போனான். அவனுக்கு கால்கள் பரபரத்தன.

நீண்ட யோசனைகளுக்கு பிறகு செல்லமுத்து கேட்டார். "சுந்தரு. பாராட்டு, பேட்டியல்லாம் இருக்கட்டும்யா. பணம் எவ்வளவு தருவாங்க?"

அதிர்ந்து போனான் சுந்தர். "நஷ்ட ஈடு நிச்சயம் தருவாங்க சார். தவிர, இவைகள்..."

"யப்பா. இப்பத்தான் கஷ்டப்பட்டு அவனை இவனை புடிச்சி கான்ட்ராக்ட் எடுத்திருக்கேன். நஷ்ட ஈட வாங்கிக்கிட்டு நாக்கு வளிக்கறதா? இத மாதிரி நூத்துக் கணக்கில நாட்ல இருக்குதுப்பா. என் கொளுந்தியா கிராமத்து வீட்டாண்ட கொல்ல கக்கூசுக்கு பக்கத்தில ஒரு இருட்டு மண்டபம் இருக்குது. அங்க இத மாதிரி ஏகத்துக்கும் எளுதியிருக்குது. வௌவ்வா புளுக்க வீச்சம் அடிக்கும். அத வுடு. நீ சொன்ன மாரியே நான் போய் சொன்னா என்ன ஆகும் தெரியுமா? வேலை நின்னிடும். போட்டோ புடிப்பானுவ. ஆளாளுக்கு வருவானுவ. இன்னொரு கான்ட்ராக்ட் கெலிக்கற வரைக்கும் மிசினு வாடகை, ஆள் கூலி, உன் சம்பளம், என்னோட வருமானத்துக்கு என்ன வளி?"

செல்லமுத்து கிடுகிடுவென அடுத்த பெரு வெடிக்கு கட்டளையிட்டார்.

"சுந்தரு. நல்லா கேட்டுக்க. நாலு மணிக்குள்ளார எளுத்து இருக்கிற எல்லா கல்லும் தூளாகி லாரில ஏறிடணும். புரிஞ்சிச்சா. துடிப்பான பையனா இருக்காங்காட்டி ஒன்னிய வேலைக்கு வைச்சிருக்கேன். அதிகமா ரோசனை செய்யாம வேலையப் பாரு."

எந்த சிக்கலும் இல்லாமல் மாலைக்குள் வேலை முடிந்த திருப்தியில் வீட்டுக்கு போனார் செல்லமுத்து.

அவர் பேரன் சந்தீப் எதிர் கொண்டு வரவேற்றான்.

"தாத்தா. இந்த ஹிஸ்ட்டரி ரொம்ப போரு தாத்தா. அக்பர் குளம் வெட்டினாராம். சாலைகள் ஓரத்தில மரம் நட்டாராம். இப்ப இருக்கிற கம்ப்யூட்டர் வேர்ல்டுல இதுக்கு என்ன தாத்தா அவசியம்?"

தாத்தாவுக்கு ஏற்ற பேரன்!

Thursday 23 August, 2007

எது வாழ்க்கை?


எது வாழ்க்கை?


அழுகையும் பயமுமாக ஓடிவந்து அம்மாவின் கால்களை கட்டிக் கொண்டாள் நீரஜா. கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பேச்சு உடனடியாக வராததால் வார்த்தைகள் சிக்கின.

"அம்மா. சின்னசாமி தாத்தா செத்துப் போயிட்டாங்களாம். அவங்க வீட்ல எல்லாரும் அழறாங்க. ஏம்மா. செத்துப் போறதுன்னா என்னம்மா ?"

சின்னப் பெண் திக்கித் திணறி கேட்டாள். மரணம் என்றால் என்ன என்பதை அறியாத வயதில் அதை பார்த்திருக்கிறாள்! தாங்கமுடியாத பேரதிர்ச்சிதான். எப்படி இந்த சின்னஞ்சிறு தளிருக்கு இதை புரியவைப்பது? அம்மா கொஞ்சம் குழம்பிப் போனாள். சட்டென ஒரு ஐடியா வந்தது

"நீரஜ். உன்னோட பொம்மைக்கு சாவி கொடுத்தா ஓடறது இல்லையா? ஆனா, கொஞ்ச நேரம் ஓடின பிறகு நின்னுடுதுதானே. அதே மாதிரிதாம்மா செத்துப் போறதும். சாவி கொடுத்த மாதிரி நமக்குள்ள உயிர் ஓடிக்கிட்டு இருக்கு. முறுக்கி விட்டது தீர்ந்து போனது மாதிரி நாம ஒரு நாளைக்கு செத்து போயிடுவோம். ஆனா அது எப்பன்ணு நமக்கு தெரியாதும்மா?"

ஏதோ ஒரளவுக்கு புரிந்த மாதிரி தலையை ஆட்டியது. இன்னும் சில கேள்விகள் கேட்டது. அம்மா அகல் விளக்கை காட்டி ஏதோ சொன்னாள். பிறகு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பேச்சை மாற்றியதில் குழந்தை சகஜ நிலைக்கு வந்தது. அம்மா நிம்மதியானாள்.

ஆனால் மறுநாளே நீரஜா மீண்டும் அம்மாவை நோக்கி ஓடி வந்தாள்.

"அம்மா. நேத்திக்கு அந்த தாத்தா வீட்டில அவ்வளவு அழுதாங்களே. அதெல்லாம் சும்மா. அவங்க வீட்டு டி.வி.ல வடிவேலு காமெடி பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஹோட்டல்லேர்ந்து டி·பன் வாங்கி சாப்பிட்டுகிட்டிருக்காங்க. அய்ய..."

இரு வேறு நிலைகளை கண்டு குழந்தை குழம்பி போயிருக்கிறது. என்ன சொல்லி விளக்கினால் புரிந்து கொள்வாள்? அம்மா யோசித்ததில் பளீரென மனதில் மின்னலடித்தது. நீரஜாவை வாரியள்ளி கைகளில் ஏந்திக் கொண்டாள்.

"நீரஜ். நீ ஒரு பாதையில முக்கியமான வேலைக்காக போயிகிட்டு இருக்கே. திடீர்னு உன் காலுல ஒரு முள்ளு குத்திடுது. 'ஆ'ன்னு கத்துவ. முள்ள எடுத்து எறிவ. ஆனா அதுக்காக நீ போக வேண்டிய பயணத்தை நிறுத்திடுவியா என்ன? கொஞ்ச நேரம் விந்தி விந்தி நடந்திட்டு வலிய மறந்து நடக்க ஆரம்பிச்சிடுவே இல்லையா? அந்த மாதிரிதான் நாம வாழறதும். ஒரு மரணத்துக்காக நாம எல்லாத்தையும் நிறுத்திட்டு அதையே நினைச்சுக்கிட்டு இருக்க முடியாது. புரிஞ்சுதா?"

சிறுமி இந்த முறை விழிகள் விரித்து இரட்டை பின்னல்கள் அசைய தலையை ஆட்டினாள்.v

Wednesday 1 August, 2007

வந்தார் வென்றார் சென்றார்

அமுதசுரபி - ஆகஸ்ட் 2007

"கல்யானமா? நோ சான்ஸ்! என்றுதான் நான் இருந்தேன் என் இளம் வயதில், திரு விஸ்வேஸ்வரனை சந்திக்கும் வரை. 1972ல் அவர் கரம் பிடித்தேன். ஆண்டுகள் பல போயின. இனி விஸ்வேஸ்வரன் இல்லாமல் என் நாட்டிய நாடகங்கள் இல்லை, நானும் இல்லை என்ற நிலைக்கு வந்தேன். இப்படி ஒரு தென்றலாக போய் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை எனக்கு அளித்தாயே ஆண்டவா உனக்கு நன்றி என்று திருப்தி பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் புயலாக வந்தான் காலன். அவரை தட்டிப் பறித்து சென்றுவிட்டான்" என்று கண் கலங்கினார் திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன். சென்ற மாதம் காலமான தன் கனவர் திரு விஸ்வேஸ்வரனின் நினைவுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் அவர்.

என்னைப் பற்றியே அதிகமாக ஊடகங்களில் செய்திகள் அதிகம் வந்ததாலோ என்னவோ என் கனவரின் பல சாதனைகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. அதற்காக அவர் வருத்தப்பட்டதும் இல்லை. க்ளாசிகல் கிடாரிலும் ஆப்ரிக்க ஜிப்ஸிகள் வாசிக்கும் ப்ளமிங்கோ கிடாரிலும் அவர் நிபுணர். லஷ்மிகாந்-பியாரேலால், ஆர்.டி,பர்மன் ஆகியோர் இசையமைத்த பல ஹிந்திப் பாடல்களில் அவரது இசை பங்களிப்பு இருந்திருக்கிறது. நான் நாட்டிய நாடகங்களுக்கு அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருந்த போது, அவர் சென்னைக்கும் மும்பைக்கும் போய் வந்து கொண்டிருந்தார். இங்கு தமிழில் எம்,எஸ்.விஸ்வநாதனில் தொடங்கி இளையராஜா ரஹமான் வரைக்கும் இசையமைத்த பின்னனி பாடல்களுக்கு இசைகருவிகள் வாசித்திருக்கிறார். என்னுடைய பல நாட்டிய நாடகங்கள் வெற்றி பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரனம் இவர் வடிவமைத்த இசைதான்.

பண்டிட் சிவகுமார் சர்மாவிடம் குறுகிய காலத்தில் சந்தூர் இசை கற்றார். அவரே மெச்சும் அளவுக்கு சந்தூரில் கர்நாடக சங்கீதம் வாசிக்கும் திறமை பெற்றார். திடீரென்று வீனை கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார். ஜாஸ் இசையை பற்றியும், சிம்போனி பற்றிய தகவல்களை திரட்டி வைத்துக் கொண்டு ஆராய்ந்து கொண்டிருப்பார்.

அவர் மனசு போன வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. 84ல் அவருக்கு ஒரு அட்டாக் வந்தது. இனி அவர் மும்பையில் ஒரு காலும் சென்னையில் ஒரு காலுமாக இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். அபோதுதான் எனக்கு தோன்றியது! ஏன் இவரை எனது நாட்டிய நாடகங்களுக்கு பாட வைத்துக் கொள்ளக் கூடாது என்று.

அப்போது தொடங்கி அவரது அந்திம காலம் வரை எனக்கு அவர் ஒரு உமையொரு பாகனாகதான் இருந்தார். நாட்டியம் சம்பந்தமாக எந்த ஊர் போனாலும் அந்த ஊரின் சங்கீதம், இசை கருவிகள் பற்றி தேடுதல் வேட்டையை ஆரம்பித்து விடுவார்.

புதுமைகள் செய்ய வேண்டுமென்றால் அவருக்கு பசி தூக்கம் இருக்காது. தென்னகத்து ஆண்டாளயும், வடநாட்டு மீராவையும் இனைத்து அருமையான கர்நாடக இந்துஸ்தானி ·ப்யூஷன் வழங்கியிருக்கிறார். சீதாவையும், சாவித்ரியையும், பாஞ்சாலியையும், ஜான்ஸி ராணியையும் இணைத்து ஒரு நாட்டிய நாடகம் உருவாக்கினார். யாருமே அதிகம் கேட்டிராத குலசேகராழ்வார் எழுதிய தேவகியின் புலம்பலை நாடகமாக்கினார்.

கர்நாடக சங்கீதத்திற்கு கமகம்தான் பிரதானம். ஆனால் சந்தூரில் கமகமே கிடையாது. ஆனாலும் அவர் விட்டாரில்லை. சமீபத்தில் திறுவையாற்றில் சந்தூரில் கர்நாடக இசை கச்சேரி செய்தார். ஆனால் எந்த ஒரு பத்திரிகையும் அதை பதிவு செய்யவே இல்லை. தான் வாசித்தோம் என்பதை விட இந்த புது முயற்சி ஏன் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்தது. என் மரணத்திற்கு பிறகுதான் அதை பற்றி எழுத நேரம் வரும் போலிருக்கிறது என்று சொன்ன போது அதிர்ச்சியடைந்தேன். அப்படிதான் ஆகிவிட்டது" என்று கண்கலங்க சொல்லி முடித்தார் சித்ரா விஸ்வேஸ்வரன்.

Thursday 19 July, 2007

பார்க்காமலே


பார்க்காமலே

குங்குமம் - 26 ஜூலை 2007

சென்னையில் இருக்கும் என் நண்பன் சரவணனின் மகன் திவாகர் இங்கே ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். என்னை ஒரு முறை போய் பார்த்துவிட்டு கடிதம் எழுது என்று சொல்லியிருந்தான். எங்கே நான் வேவு பார்க்க வந்திருக்கிறேனோ என்று அவன் நினைத்துவிடக் கூடாதே என்று எனக்குள் உதறல் இருந்தது.

"சார் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் இப்பதான் வந்தேன். திவாகர் எங்க போயிருக்கான்னு விசாரிச்சுக்கிட்டு வரேன்." அவன் ரூம்மேட் என் கையில் அன்றைய ஹிண்டுவை திணித்து விட்டு போனான்.

நான் என் பார்வையை ஓட்டினேன். ரூம் சுத்தமோ சுத்தம். டேபிளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் முதுகுகளை ஆராய்ந்தேன். பெரும்பாலும் பாட புத்தகங்கள். விவேகானந்தரின் 'கர்மயோகா'! தி.ஜானகிராமனின் 'உயிர்த்தேன்'! சபாஷ். அதனையொட்டி உள்ளங்கை அளவுக்கு செந்திலாண்டவர். அதன் முன் சிறிய வீபூதி டப்பா. டேபிள் லாம்ப்பின் ஸ்விட்சுக்கு அருகில் வட்ட வடிவ ஸ்டிக்கரில் சச்சின் சிரித்துக் கொண்டிருந்தார். அதனை உறுதிப் படுத்துவது மாதிரி சுவரோரத்தில் ஒரு கிரிக்கெட் மட்டையும் ஒரு ஜோடி பேடும் இருந்தன.

ஆர்வ மிகுதியில் உயிர்த்தேனை உருவினேன். 46ம் பக்கம் திறந்து கொண்டது. முக்கியமான பகுதிகளை அடிக் கோடிட்டு அசிங்கப்படுத்தாமல் பென்சிலால் மார்ஜின் பகுதியில் ஒரு சிறிய டிக் செய்திருந்த பாங்கு ரசிக்க வைத்தது. புக் மார்க்குக்கு அவன் பயன்படுத்தியிருந்தது அவன் தங்கையின் போட்டோ!

வாசலில் அரவம் கேட்க புத்தகத்தை அதன் இடத்தில் சரியாக வைத்தேன்.

"திவாகர் வர லேட்டாகும் சார். இங்க பக்கத்துல ஒரு பிளைன்ட் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. அங்க ரீடிங்குக்காக போயிருக்கான். அதான்."

"ஓஹோ. சரிப்பா. நான் வரேன். அவன் வந்தா இந்த கார்டை கொடுத்துடு". என் விசிட்டிங் கார்டை நீட்டினேன். அப்போது அந்த உண்டியல் கண்ணில் பட்டது.

"அது என்னப்பா?"

"இதுவா சார். இதுவும் திவாகரின் ஏற்பாடு சார். எங்களோட டெய்லி செலவுல ஒரு ரூபா மிச்சம் பிடிச்சு இதுல போடணும். இது மாதிரி எல்லா ரூம்லேயும் வைச்சுருக்கோம். மாசாமாசம் ஒரு பிளாக்ல சேரும் பணத்தை கலெக்ட் செஞ்சு ஏதாவது சோஷியல் வொர்க் செய்வோம் சார்."

எனக்கு திவாகரைப் பார்த்துத்தான் என் நண்பனுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் போயிற்று.

Tuesday 10 July, 2007

பூக்களின் மொழி

ஜூன் - 14ம் தேதி சென்னை நாரதகான சாபா மினி ஹாலில் சுபா கிரியேஷனின் 'பூக்களின் மொழி' என்ற ஆடியோ சி.டிக்கான வெளியீட்டு விழா நடந்தது. பிரபல தொழிலதிபர் திரு நாக் ரவி வெளியிட முதல் பிரதியை திரு கிரேஸி மோகன் பெற்றுக் கொண்டார்.

பாண்டிச்சேரி அரவிந்த அன்னை நாம் பூஜைக்கு பயன்படுத்தும் மலர்களை பற்றி பல அரிய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். மலர்களின் அழகைப் போலவே அதன் பெருமைகளையும் எளிய வார்த்தைகளில் விளக்கியுள்ளார்.

பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு தூதுவனாக செயல்படுகிறதாம் மலர்கள். இந்த பூக்களின் மொழி, வார்த்தைகள் இல்லாத பிராத்தனைகள் என்கிறார் அன்னை. அவை நமக்கு பலவிதமான பலன்களை நமக்கு பெற்றுத் தருமாம்.

பூக்களுக்கு அழகும் மணமும் உண்டு என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அது இறைவனுக்கு அர்பணிக்கும் போது பலனும் உண்டு என்கிறார் அன்னை. நாகலிங்கப் பூவை வைத்து நாம் இறைவனை வழிபட்டால் செல்வளம் பெருகும். செந்தாமரை மன அமைதியைத் தரும். ரோஜா தெய்வீக அருளைத் தரும். கனகாம்பரம் விழிப்புணர்வு மற்றும் கல்வியை தரும். நித்ய கல்யாணி முன்னேற்றத்தை அளிக்கும். அன்னை ஏராளமான மலர்களைப் பற்றி இவ்விதம் பல அருள் உரைகளைச் சொல்லியிருக்கிறார். மலர்கள் அனைத்திலும் பலன்கள்!

அவைகளிலிருந்து எட்டு மலர்களைப் பற்றிய தகவல்களை எடுத்து ஒவ்வொண்றுக்கும் பாடல் எழுதி அதற்கு கொஞ்சமும் மெருகு குலையாமல் கர்நாடக இசை பின்னனியில் மெட்டமைத்து ஒரு இசை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார் திரு பம்பே கண்ணன். திரு டி,கே.ஜெயராமன் இசையமைத்திருக்கிறார்.

அன்றைய விழாவில் ஐந்து பாடல்கள் பரத கலைஞர்களால் நாட்டியமாக வழங்கப்பட்டதன. அன்னையின் திரு உருவமும் அவரது அருளுரையும் எந்த அளவுக்கு அவர் வழி செல்லும் பக்தர்களை கவர்கிறதோ அந்த அளவுக்கு இந்த இசை தொகுப்பும் மனதுக்கு இனிமை சேர்க்கும்.