Friday 30 November, 2007

கமல் சொன்ன வேல் கதை


கல்கி - 02 டிசம்பர் 2007

குமுதம் பத்திரிகையில் துணை ஆசிரியராக நாற்பத்திரண்டு ஆண்டு காலம் பணிபுரிந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் எண்பதாவது பிறந்த நாளையொட்டி, ஆறு சிறுகதைத் தொகுப்புகள் சமீபத்தில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் வெளியிடப்பட்டன. நூற்றாண்டு விழா கண்டுள்ள அல்லயன்ஸ் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஏராளமான
அறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை உலகத்தினர் கலந்து கொண்டனர்.

சில தெறிப்புகள்

நடிகர் கமலஹாசன்:

'மகாநதி' படத்தில் ரா.கி.ர.வோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான் பல படங்களை உருவாக்க எனக்கு உதவின. அவர் பணிபுரிந்த குமுதத்தில என்னைப் பற்றிப் பல கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இவ்விழாவில் கலந்துகொண்ட பிறகே - பேசியவர்களின் பேச்சுக்களிலிருந்து குமுதத்தைப் பற்றிய பல கிசுகிசுக்கள் எனக்குத் தெரிய வருகின்றன, சந்தோஷம்! ரா.கி.ர. தம் சட்டைப் பையில் எப்போதும் ஒரு வேல் வைத்திருப்பார். அதைத்தான் நான் 'தெனாலி' படத்தில் பயன்படுத்தினேன்.

ஜ.ரா.சுந்தரேசன்:

'விகடன் ஆபீஸில் துணியாசிரியர்களுக்கு கார் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்த வசதி எங்களுக்கும் வேண்டும்' என்று ரா.கி.ர. ஒருமுறை குமுதம் எடிட்டர் எஸ்.ஏ.பி.யிடம் கேட்டார். அன்றிலிருந்து எடிட்டர் ஆபீஸ் வருவதை நிறுத்திவிட்டு,
கன்னிமரா நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு குமுதத்துக்குத் தேவையானதை எழுதிக் கொடுத்தார். இதை ரா.கி.ர.விடம் நான் தெரிவித்தபோது, பதறிப் போனவர், 'அந்த விஷயத்தை நான் வலியுறுத்தப் போவதில்லை. எடிட்டரை அலுவலகம் வரச் சொல்லுங்கள்' என்று என்னையே தூது அனுப்பினார். இப்படிப் பல முறை இருவருக்குமான தூதுவனாக நான் செயல்பட்டிருக்கிறேன்.

திலகவதி ஐ.பி.எஸ்:

ரா.கி.ர. எழுத எழுத, அவரது எழுத்துக்கள் மெருகேறிக்கொண்டே வருகின்றன. வெகுஜன இதழுக்கு எழுதுவதாலேயே அது இலக்கியம் இல்லை; ஆழமில்லை என்பதாக ஒரு கருத்து நிலவுவது சரியல்ல. ஏராளமாக எழுதித் தள்ளினாலும் வீரியம் குறையாத வித்து அவரது எழுத்துக்களில் உண்டு.

கிரேஸி மோகன் - எஸ்.வி.சேகர்:

ரா.கி.ர. மட்டும் இல்லையென்றால் எங்களது முதல் முயற்சியான 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' குமுதத்தில் தொடராக வந்திருக்காது. நாடகத் துறையில் நாங்கள் முத்திரை பதிக்க ரா.கி.ர.வே காரணம்.

சீதா ரவி:

நூறாண்டுகளுக்கு ஒரு பதிப்பகம் நல்ல நூல்களை மட்டுமே வெளியிடுவது தவம்; அதையே வெற்றிகரமாகச் செய்வது வரம். தவமும் செய்து வரமும் பெற்ற அல்லயன்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள்.

Thursday 29 November, 2007

இல்லையா? இருக்கா?


"இல்லே. இல்லே. எனக்கும் தன்யாவுக்கும் லவ் இல்லே. போதுமா? அம்மா, தன்யா என்னோட ப்ராஜெக்ட் அஸிஸ்டென்ட். ஜஸ்ட் ஒரு கலீக், அவ்வளவுதான்." ஆனந்த் வெடித்தான்.

அம்மாவும் பையனும் வாக்குவாதம் செய்வதை ராகவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று மாதங்களாகவே இந்த பிரச்சனை வருவதும் போவதுமாக இருக்கிறது.

"அதுக்கில்லைடா. நீ ஆபீஸ் வேலையோட நிறுத்திக்கிட்டா பரவாயில்லையே. நேத்து ஸ்பென்ஸர் பிளாசாவில அவளுக்கு டி-சர்ட் வாங்கிக் கொடுத்தையாமே. ஒரு பாட்டில் கோலா வாங்கி மாத்தி மாத்தி குடிச்சீங்களாமே. பைக்ல போகும் போது அவ உன் தோள பிடிச்சுக்கிட்டு போறாளாமே." அம்மாவின் சரமாரியான குக்ளியில் ஆனந்த் கொஞ்சம் தடுமாறினான்.

"மஞ்ச கண்ணாடி போட்டுப் பார்த்தா எல்லாமே மஞ்சளாதான் தெரியும். யாரோ எதையோ பார்த்துட்டு, உன்கிட்டே பெருசா கதை கட்டி விட்டிருக்காங்க. தன்யா என் லை·ப் பார்ட்னரா வர சான்ஸே இல்லை. எனக்கும் அவளுக்கும் அடிக்கடி முட்டிக்கும். என் டேஸ்ட் வேற. அவ டேஸ்ட் வேற. சொன்னா புரிஞ்சுக்கோம்மா."

"ஆனா உங்க மூவ்மெண்ட்ஸை பார்த்தா அப்படி தெரியலையே ஆனந்த். நான் சொல்லறதை கொஞ்சம் கேக்கறையா. தன்யாவோட மாமா எனக்கு போன் செஞ்சு காச் மூச்னு கத்தறாரு. எனக்கு இதெல்லாம் தேவையா? அவளைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு தீர்மானிச்சுட்டா தைரியமா சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கறேன்." ராகவன் இடையில் புகுந்தார்.

"அம்மா. அந்த தன்யா கீழ கார்லதான் இருக்கா. நீயே அவளை கூப்பிட்டு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா கேட்டுடேன்." தங்கை அர்ச்சனா திடீரென கொளுத்தி போடவும் சூடானான் ஆனந்த்.

"வேண்டாம். அசிங்கம் பண்ணாதீங்க. ரொம்ப அப்செட் ஆயிடுவா."

ஆனால் ஆனந்த் சொன்னதை யாரும் கேட்கவில்லை. அர்ச்சனா ஓடிப்போய் தன்யாவை அழைத்து வந்தாள்.

"அங்கிள். ஆனந்த் என் பிரெண்ட். அவ்வளவுதான்! உங்க ரெண்டு பேருக்கும் லவ்வாமேன்னு கிட்டதட்ட எல்லாரும் கேட்டாச்சு. எனக்கும் சொல்லி சொல்லி அலுத்து போச்சு. நீங்க தாராளமா ஆனந்துக்கு பொண்ணு பாருங்க. நான் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதிட்டு மூக்கு பிடிக்க சாப்பிட்டு போறேன். ஓகே. இந்த சேப்ட்டரை இதோட முடிச்சிக்குவோம்." என்று முடித்து வைத்தாள்.

வித்யா உடனடியாக நாலைந்து பெண் போட்டோக்களை தன்யாவிடம் காட்டினாள். அதிலிருந்து ஒன்றை தன்யாவையே செலக்ட் செய்யச் சொன்னாள். அடுத்த வாரம் பெண் பார்க்க போவதாக தீர்மானித்தார்கள்.

அன்று இரவே ஆனந்துக்கு தன்யாவிடமிருந்து போன் வந்தது. "ஆனந்த் நானும் ரொம்ப யோசிச்சு பார்த்தேன்டா. நாம எவ்வளவோ மறுத்தும் அவங்க விடாம அதையே சொல்றாங்கன்னா அதுல ஏதோ இருக்குன்னுதான் தோனுது. நமக்குள் அந்த கெமிஸ்ட்ரி இருக்குன்னுதான் நினைக்கிறேன். பேசாம அவங்க சொன்ன மாதிரியே லவ்விட்டா என்ன?"

"தன்யா! நம்ம ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஒத்துமை பார்த்தியா! நானும் உங்கிட்ட இதயேதான் சொல்லணும்னு இருந்தேன். இல்லே இல்லேன்னு சொன்னாலும் இருக்கு இருக்குன்னு சொன்னீங்களே. ஆமா, இருக்கு. இப்ப என்ன பண்ணுவீங்கன்னு அவங்க முகத்தில கரியை பூசணும். ஐ லவ் யூடா."

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு கௌசிக்)

சண்டைக் கோழி மாதிரி இருந்த என் தோழனும் தோழியும் திடீரென ஒரு நாள் இருவரும் சேர்ந்து வந்து 'எங்களுக்கு கல்யாணம்' என்றார்கள். ஆச்சர்யத்தில் என் நண்பனை பிடித்து உலுக்கி 'எப்படிடா?' என்று கேட்டதற்கு அவன் ஸ்டைலாக 'மாப்ளே! இதெல்லாம் லவ்ஸ்ல சகஜமப்பா!' என்றானே பார்க்கலாம்!

விகடன் தீபாவளி மலர் 2007)

Wednesday 28 November, 2007

கிரீடம்


"ஏங்க. வெயிட்டர் காத்துக்கிட்டு இருக்கான். பில்லை பார்த்து பணத்தை வைச்சோமா, போனோமான்னு இல்லாம... உங்க இன்ஸ்பெக்ஷன், வெரி·பிகேஷனையெல்லாம் ஆபீஸ்ல வைச்சுகுங்க".

என் மனைவி வார்த்தைகளை அம்புகளாய் பொழிந்தாள். சட்டென்று ஒரு ஐநூறு ரூபாய் தாளை உருவி அந்த அட்டைக்குள் சொருகினேன். வைத்த இரண்டாவது நொடியிலேயே அதை கொத்திக் கொண்டு போனான் வெயிட்டர்.

பொதுவாக பில்லுக்கு பணம் கொடுக்கும்போது என் முகம் விளக்கெண்ணை குடித்த மாதிரிதான் இருக்கும். ஆனால் அதற்கு மாறக என் முகத்தில் புன்சிரிப்பு தோன்றியதை என் மனைவி கவனித்துவிட்டாள். எங்களுக்குள் பல அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் என் மனதில் ஓடும் எண்ண அலைகளை எ·ப் எம் ரேடியோ மாதிரி கேட்க கூடியவள் என் மனைவி. கேட்டுவிட்டாள்!
"அது வந்து... பில்லுல ஸ்பெஷல் ரவா மசாலாவுக்கான அமௌண்ட் விட்டிருக்கு. முப்பது ரூபா லாபம். அடிக்கிற கொள்ளையில கொஞ்சம் கொறைஞ்சாதான் என்ன?"

"ஏங்க, சாப்ட பொருளுக்கு பணம் கொடுக்கலைன்னா தப்புங்க. பேதி வரும்". என் மனைவி எப்போதும் இப்படிதான்! ஒரு தத்துவம் சொல்லி கூடவே ஒரு சாபமும் கொடுத்து பயமுறுத்துவாள்.

"சரி.. சரி. இஷ்யூ பண்ணாத. போகும் போது கல்லாவுல எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துட்டு போகலாம்."

"சுத்தம். நீங்க மிஸ்டர் க்ளீன்னு பேரு வாங்கிக்கிட்டு போயிடுவீங்க. அந்த வெயிட்டருக்கு வேலை போயிடும். இருங்க, நான் டீல் பண்ணறேன்". அந்த வெயிட்டரை தேடிப்பிடித்து மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அதிர்ந்து போய் ஓட்டமாய் ஓடி கூடுதல் பில் வாங்கி வந்தான். என் முகத்தில் விளக்கெண்ணெய் வழிந்தது. நெஞ்செல்லாம் பூரிக்க எனக்கு கை கொடுத்துவிட்டு போனான் அந்த வெயிட்டர்.

என்னை பொறுத்த வரை நேர்மையாய் இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. நல்லவனுக்கு இது காலமில்லை. வல்லவனுக்குதான் காலம். ஏமாற்றுகிறவனுக்குதான் காலம்!

வெறுப்புடன் ஸ்கூட்டரை உதைத்தேன். "ஆஹா! சபாஷ் ! பலே ! நான்தான் இன்னிக்கு நேர்மைக்கு வாரிசு. என் தலையில கிரீடம் இருக்கா பாரு?" என்றேன் கேலியாக.

வித்யா ஏதோ சொல்ல வாயெடுக்கவும் அந்த வெயிட்டர் ஓடி வந்தான். "ஐயா! வாஷ் பேசின் கிட்டே இந்த செல்போன் இருந்துச்சு. உங்களுதா பாருங்க."

தூக்கிவாரி போட்டது! ஆமாம்! எட்டாயிரம் ரூபாயில் போன மாசம்தான் வாங்கினேன். "ரொம்ப தாங்க்ஸ்பா" என்றேன்.

"தலையில கிரீடம் இருக்குங்க!" என்றாள் வித்யா புன்சிரிப்பாக.

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு விஜய் ஆதிராஜ்)

ஒருமுறை கொட்டும் மழையில் சென்னை எக்மோரிலிருந்து அண்ணா நகருக்கு போக ஆட்டோ தேடினேன். மிகவும் ஆச்சர்யப்படும் விதத்தில் நியாயமான கட்டணத்தில் ஒரு ஆட்டோ கிடைத்தது. வீடு போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை மனதில் கொண்டு சற்று அதிகமாகவே கொடுக்க வந்தபோது 'உழைப்புக்கு மேல வாங்கற எந்த ஒரு காசும் உடம்புல ஒட்டாது சார்' என்று சொல்லி அவர் தன் கூலியை மட்டும் வாங்கிக் கொண்டு போய்விட்டார். அவரின் நேர்மையை கண்டு வியந்து போனேன்.

(விகடன் தீபாவளி மலர் 2007)

Tuesday 27 November, 2007

தேவை ஒரு குடும்பம்


"மேடம். கொஞ்சம் வித்தியாசமா முதல்ல உங்களை பத்தி எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டு அப்பறம் என்னை பத்தி சொல்லறேனே?"

என்ன தைரியம் இந்த பெண்ணுக்கு! 'நீ யாரம்மா? உனக்கு என்ன வேணும்?' என்று கேட்டதற்கு இப்படியா பதில் சொல்வாள் ஒருத்தி !

"சரிம்மா. உன் வழிக்கே வரேன். சொல்லு" என்றேன். ஏதோ பீடிகை போடுகிறாள். என்னவென்று பார்ப்போமே!

"உங்க பேரு விஜயலஷ்மி. நீங்க ரொம்ப துணிச்சலானவங்க. ஆசையான கணவன். அமைதியான வாழ்க்கை. ஆனா கல்யாணம் ஆன ஆறாவது வருஷத்திலேயே திடீர்னு கணவர் காலமாயிட்டாரு. மகன் போன சோகத்தை சொல்லியே எல்லா சொத்தையும் பிடுங்கிக்கிட்டு உங்க மாமனார் உங்களை வீட்டைவிட்டு தொரத்திட்டாரு. இப்ப நீங்க டீச்சர் வேலை பார்த்துக்கிட்டு, இந்த லேடீஸ் ஹாஸ்டல்ல தனியா இருக்கீங்க. என்ன சரியா?"

"சரிம்மா. எனக்கு தெரிஞ்ச விஷயத்தை எனக்கு ஏம்மா சொல்லற ? என்ன ஏதாவது ஜோஸ்யமா? எனக்கு அதில சுத்தமா நம்பிக்கையில்லை."

"இருங்க. உங்களுக்கு சோமசேகரை தெரியுமா? இந்த தெரு முனை பாங்கில காஷியரா இருக்காரே?"

"ம்.. தெரியும். அதுக்கென்ன இப்போ?"

"அவரோட கதையும் இதே மாதிரிதான். தன் மனைவியை உயிருக்கு உயிரா நேசிச்சாரு. அவரு கீழ் சாதி. அவங்க மேல் சாதி. விடுவாங்களா? ரெண்டு பக்க உறவுக்காரங்களும் சாதிப் பிரச்சனையை ஊதி ஊதி பெரிசாக்கினாங்க. அதிலேயே மனசு ஒடிஞ்சு நோவு வந்து அந்தம்மா செத்து போனாங்க. தன் மிச்ச வாழ்கையை குடும்பத்துக்காகவே அர்ப்பணிச்சுக்கிட்டு, மறு கல்யாணமே பண்ணிக்காம தனியா வாழ்ந்துக்கிட்டு இருக்காரு."

"நீ என்னம்மா சொல்லவர?"

"இருங்க. என் பேரு இந்திரா. போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு. அதுக்கு அப்பறம்தான் கணவன் மனைவி உறவோட முக்கியத்துவம் புரிஞ்சுது. ஒரு வயதான தம்பதியரை எதேச்சையா சந்திச்சேன். அப்ப அந்த தாத்தா சொன்ன வார்த்தைகள் என்னை புரட்டி போட்டிடுச்சு. 'கணவன், மனைவி, குழந்தைகள்ங்கிறது ஒரு முக்கோணம் மாதிரி. உன் பாதுகாப்புக்கு எப்படி வாழ்க்கைத் துனை தேவையோ அந்த மாதிரி குழந்தைகளுக்கும் அப்பா அம்மா அவசியம் வேணும். அதை யாரு ஈடு செஞ்சாலும் மனசுல அது ஒரு ஏக்கமாதான் இருக்கும்'ன்னாரு. எனக்கு இப்ப நாலு மாசம். இதுவரை எனக்கு வராத அம்மா ஏக்கம், கன்சீவ் ஆகியிருக்கிற இந்த நேரத்துல அதிகமா மனசை அழுத்துது. டெலிவரி சமயத்துல தோள் சாஞ்சுக்க எனக்கு ஒரு அம்மா வேணும். அதுனால...."

"அதுனால.... நான் என்னம்மா பண்ணனும்."

"நீங்க, நான், சோமசேகர் மூணு பேரும் ஒண்ணா இணையணும். இனி இருக்கும் காலத்தை நீங்க மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் வாழனும். தெனம் தெனம் தனிமையில புழுங்கிக்கிட்டு இருக்கிற சோமசேகர் ஒரு புது வாழ்வு வாழணும். எனக்கு அம்மா இல்லாத குறையை நீங்கதான் தீர்த்து வைக்கணும். அந்த சோமசேகர்தான் இந்த இந்திராவோட அப்பா. நீங்க வார்த்தைக்கு வார்த்தை அம்மான்னு சேர்த்து என்னை கூப்பிட்டீங்க. இப்ப நான் அப்படி கூப்பிடலாமா? அம்மா! எங்க அப்பாவை நீங்க கல்யாணம் செஞ்சுப்பீங்களா?"

இந்த கதைக்கான தீப்பொறி.... (செல்வி மமதி சாரி)

நன்கு வசதியாக வாழ்ந்து, அடுத்தடுத்து தந்தை தாயை இழந்து, உற்றார் உறவினர்களால் கசக்கி பிழியப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ஒரு பெண் எங்களிடம் வேலைக்கு சேர்ந்தாள். அவள் அடிக்கடி சோர்ந்த போதெல்லாம் அவளுக்கு தைரியம் ஊட்டி வசதிகளை கொடுத்து பாதுகாத்து வந்தோம். ஆனால் மீண்டும் மீண்டும் அவள் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டாள். திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டாள். ஏன் அப்படி செய்தாள்? புரியவில்லை. அவளுடைய உறுதியற்ற மனைநிலை காரணமா? அவளை சுற்றியிருந்த அழுக்கு சமூகத்தின் ஆக்கிரமிப்பா? ஒருவேளை தந்தை தாயின் அரவணைப்பில் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ? வெறும் கேள்விகளே மிஞ்சியிருக்கின்றன.

2007 விகடன் தீபாவளி மலர்

Friday 23 November, 2007

என்னைப் போல் ஒருத்தி


நத்தை மாதிரி ஊர்ந்து கொண்டிருக்கும் இந்த ரெயில் எத்தனை மணிக்கு சென்ட்ரலை அடையும் என்ற யோசனையிலேயே இருந்ததால் தனக்கு எதிரில் இருந்த அந்த பெண்ணை கவனிக்கவில்லை பத்மா.

அவளிடமிருந்து விசும்பல் சங்கிலியாக வர ஆரம்பித்ததும்தான் திடுக்கிட்டு பார்த்தாள். பெட்டியில் இருந்த முக்கால்வாசி பேரின் பார்வையும் அந்த பெண்ணின் மீது பதிந்திருப்பது தெரிந்தது. என்ன தோன்றியதோ சட்டென்று எதிர்பக்கம் இடம் மாறி, அவளை தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். அழுகை பீறிட்டு வந்தது. நிமிர்ந்தவளை 'ஒன்றும் பேச வேண்டாம்' என்று வாயடக்கினாள். இந்த பெண்ணை அடிக்கடி இதே ரெயிலில் பார்த்திருக்கிறாள். தினமும் ஆவடியில் ஏறுவாள். சென்ட்ரலில் இறங்கி கூட்டத்தில் கரைந்து போவாள்.

அதிர்ஷ்டவசமாக ரெயில் வேகம் பிடித்து சென்ட்ரலுக்குள் நுழைந்தது. கைத்தாங்கலாக அவளை இறக்கி ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தாள். பெயர் விசாரித்ததில் வித்யா என்றாள்.

"சொல்லு வித்யா. என்ன பிரச்சனை?"

"அக்கா. என் ஹஸ்பண்டால ரொம்ப கஷ்டப்படறேங்கா. நான் ரெயில்வேல வேலை பார்க்கறேன். அவருக்கு வேலையில்லை. எக்கசக்கமா குடிக்கிறாரு. எவன் இவருக்கு கிரெடிட் கார்டு கொடுத்தான்னு தெரியலை. ஏகப்பட்ட கடன் வைச்சிருக்காரு. தெனம் அடி உதைதான். தெரு சிரிக்க அசிங்கம் செய்யறாரு. அக்கம் பக்கத்தில யாராவது உதவிக்கு வந்தா அவங்களோட என்னை சேர்த்து வெச்சு பேசறாரு. போலீசை கூட வரவழைச்சு பார்த்தாச்சு. ஒண்ணும் பலன் இல்லே. எனக்கு வேலையை தவிர வேற எந்த சொத்தும் இல்லைக்கா. ஊரு முழுக்க கடன் இருக்கறதால ஒரு உறவுக்காரங்க கூட உதவிக்கு வரமாட்டேங்கறாங்க. பேசாம இவரு செத்து தொலைஞ்சா என்னன்னு ஒரு யோசனை மனசுல ஓடிச்சு. அதான், தாங்க முடியாம அழுதிட்டேன்."

அடாடா! இவளும் நம்ம கேசா?

"வித்யா. கிட்டதட்ட நானும் உன்னை மாதிரிதான். என் கனவரும் சரியில்லை. உன்னை மாதிரியே என் ஹஸ்பண்டு செத்தா என்னன்னு நினைச்சேன். அந்த மாதிரியே ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்ல செத்து ஒழிஞ்சான். நான் அழவே இல்லை. 'அப்பாடி தொந்திரவு விட்டுச்சு. இனி நிம்மதின்னு' நெனைச்சேன். ஆனா பிரச்சனை வேற ரூபத்தில வந்திச்சு. குடிகாரனோ கடன்காரனோ, புருஷன்னு ஒருத்தன் இருந்ததால மத்த ஓநாய்கள் என் வீட்டு பக்கம் நெருங்காம இருந்திச்சு. இப்ப அவன் போயிட்ட தைரியத்தில எனக்கு தெனம் தெனம் பிரச்சனை. நம்ம சமூகம் முழுக்க முழுக்க ஆண் சார்ந்தது வித்யா. என் அனுபவத்தில சொல்லறேன்... தயவு செய்து புருஷன் சாகணும்னு மட்டும் நினைக்காதே."

"அதுக்காக தெனம் தெனம் அடி உதை வாங்க சொல்றீங்களா?" போய்க் கொண்டே இருந்தவள் சட்டென திரும்பி பத்மாவை கோபமாக பார்த்தாள்.

"அப்படிச் சொல்ல வர்ல வித்யா. எனக்கு தெரிஞ்ச ஒரு தொண்டு நிறுவனம் இருக்கு. உன் அட்ரஸைக் கொடு. இன்னிக்கி சாயந்திரம் போகலாம். அவங்ககிட்ட உன்னை அறிமுகப் படுத்தி வைக்கிறேன். இப்படி எகிறி குதிக்கிற ஆம்பிள்ளைகளையெல்லாம் அடக்க, வழிக்கு கொண்டுவர அவங்ககிட்ட பல டெக்னிக்குகள் இருக்கு. தேவை கொஞ்சம் பொறுமையும் புத்திசாலித்தமும்தான். நீ கவலையே படாதே. தைரியமா இரு. பாரேன்! ஒரே மாசத்தில உன் புருஷன் லைனுக்கு வர்லைன்னா என் பேரு பத்மா இல்லை." வித்யா நம்பிக்கையோடு பத்மாவின் கைகளை பிடித்து அழுத்தவும் வித்யாவின் ஆபீஸ் வந்து விட்டிருந்தது.

இந்த கதைக்கான தீப்பொறி.... (திருமதி நித்யா ரவீந்தர்)

எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி அவள் கணவனோடு ஒத்து போக முடியாமல் மிகுந்த மன வேதனைகளுடன் இருந்தாள். ஓரளவுக்கு சமாளித்து அதிலிருந்து அவள் மீண்டு வந்த போது துரதிர்ஸ்டவசமாக அந்த கணவன் காலமாகிவிட்டார். சமீபத்தில் அவளை சந்தித்த போது, " எனக்கு பழைய வாழ்க்கை கூட கஷ்டமாக தெரியலைடி. கணவன் இல்லாமல் இந்த சமூகத்தில் தனியாக வாழ்வது அதைவிட கொடுமையாஇருக்கு." என்றாள்.

2007 விகடன் தீபாவளி மலர்

Thursday 22 November, 2007

நான் நானாக


நான் நானாக

"என்னங்க. கார்த்திக்கை பற்றி ரொம்ப கவலையா இருக்குங்க. இஞ்சினீயரிங் காலேஜுக்கு அப்ளிகேஷன் வாங்கி வச்சிருக்குன்னு சொன்னா, நான் கேட்டேனாங்கறாங்க. நீங்களாவது கேக்க மாட்டீங்களா?"

ஆமாம். கார்த்திக்கை புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது. ஒரே மகன். தாத்தா பாட்டி செல்லம் வேறு. சித்ரா அவனை பாட்டு கற்றுக் கொள் என்றாள். மாட்டானாம். ஆனால் பெயிண்டிங்காக வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறான். சித்ராவுக்கு பெயிண்ட் ஸ்மெல் என்றாலே அலர்ஜி. எனக்கும் தரையில் சிதறிக் கிடக்கும் பேப்பர் துண்டுகளையும் காலி பெயிண்ட் ட்யூபுகளையும் கண்டால் எரிச்சலாய் வரும்.

சரி, சின்ன வயசு. நாம்தான் திசை திருப்பி விட வேண்டும் என்று ரெண்டு பேரும் ஒரு நாள் முழுக்க யோசித்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் அவனோ, சாப்ட்வேர் பக்கம் தலைவைத்து படுக்காமல், கம்ப்யூட்டரை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து போட்டு ஏதாவது சேர்த்துக் கொண்டிருக்கிறான். ஆரகிள், ஜாவா மாதிரி டிரைனிங் கோர்ஸ் போயேன் என்றதற்கு, அதெல்லாம் வேஸ்ட் என்று சொல்லிவிட்டான். எப்படி வேஸ்ட் எங்களுக்கு புரியவில்லை.

என் ஆற்றாமையை ஒரு சேர திரட்டி என் நண்பர் அறந்தை மணியனிடம் கொட்டினேன். அவரும் அவனோடு பேசிப் பார்த்தார். என்னிடமும் சித்ராவிடமும் அளந்து பேசுகிறவன், அவரிடம் மணி கணக்கில் பேசினான். காரணம், அவர் உலக சினிமா பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்.

கடைசியில் அவரும் என் அப்பா, அம்மா கட்சியில் சேர்ந்து விட்டார். 'டேய்! உன் மகன் உன்னை மாதிரி இல்லைடா. படு புத்திசாலி.. அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று கேபிள் டிவி ஜோசியர் மாதிரி சொல்லி என் வாயை அடைத்துவிட்டார்.

ஒரு வாரம் கழித்து அவனாகவே வந்து. "லயோலாவில் விஸ்காம் சீட் கிடைசசிடுச்சுப்பா. ·பீஸ் கட்டிடுங்க" என்று சொன்னான். எனக்குள் ரொம்ப நாளாக அரித்துக் கொண்டிருந்ததை போட்டு உடைத்து விடுவது என்று தீர்மானித்தேன்.

"கார்த்திக்! நீ விஸ்காம் சேர்ந்ததுல எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனா அதையே நாங்க சொல்லியிருந்தா உனக்கு பிடிச்சிருக்காது. அப்படித்தானே?"
"அப்படியில்லையப்பா. எனக்கு சில விவரங்கள் தேவைப் பட்டுச்சு. அதை அறந்தை மணியன் சார் கிட்டேயிருந்து தெரிஞ்சுக்கிட்டேன். அவ்வளவுதான். உங்க நிறைவேறாத ஆசைகளுக்காகவோ, மத்தவங்க என்ன பண்ணறாங்களோ அதையே நானும் செய்யணும்கிறதுக்காகவோ நான் நிச்சயமா இல்லை. அதை புரிஞ்சுக்குங்க. நான் உங்க மகன்தான். ஆனா நான் நீங்க இல்லை. நான் நானாகவே இருக்க ஆசைப்படறேம்ப்பா. இது தப்பா, சொல்லுங்க?"

கார்த்திக்கின் நெத்தியடி தாக்குதலில் நான் நிலைகுலைந்து போனாலும் 'என் மகன் சிங்கம்டா' என்று மனசின் எங்கோ ஒரு மூலையில் சந்தோஷம் கொப்பளித்தது.

குங்குமம் - 22 நவம்பர் 2007

Wednesday 21 November, 2007

போராட்டம்


"ஐயா. என் பாட்டிக்காக உங்க குழு பிரார்த்தனை செய்யணும். முடியுங்களா?"

"நிச்சயமா முடியும். விவரங்களைச் சொல்லுங்க" வெள்ளை தாடியும் வெற்றிலை சிரிப்புமாக என்னை வரவேற்று தனக்கு முன் இருந்த நாற்காலியை காட்டினார் அந்த பிரார்த்தனை கிளப்பின் தலைவர். நான் யோசனையோடு மெதுவாக ஆரம்பித்தேன்.

"என் அம்மா வழி பாட்டி பேரு சித்ர பானுங்க. பேருக்கு ஏத்த மாதிரி எழுதி வெச்ச சித்திரம் மாதிரி இருப்பாங்க. யார் கொள்ளிக் கண் பட்டுச்சோ இருவது வயசுல அவங்க விதவையானது மகா கொடுமைங்க. நண்டும் சிண்டுமா ரெண்டு குழந்தைங்க. உறவுக்காரங்க ஒருத்தர் கூட உதவிக்கு வர்ல. ஆனா பாட்டி மொட்டையடிச்சுக்கிட்டு வெள்ளைப் புடவை கட்டிக்கணும்கிறதுல எல்லோரும் ஒத்துமையா இருந்தாங்க. பாட்டிக்கு நெஞ்சுரம் ஜாஸ்திங்க. எல்லா சடங்குகளும் முடிஞ்சதும் ரெண்டு குழந்தைகளோட தனியாக சென்னைக்கு வந்துட்டாங்க. திருவல்லிக்கேணி ஒரு ஒண்டு குடித்தனத்தில ரூம் புடிச்சாங்க. வீடுவீடா சமைக்கப் போனாங்க. தான் செஞ்ச பட்சணங்களையும் அப்பளங்களையும் எடுத்துக் கிட்டு கால் வலிக்க வலிக்க வீடு விடா போய் வித்தாங்க. எல்லா அவமானங்களையும் தனக்குள்ள மென்னு முழுங்கினாங்க."

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தேன்...

"கொஞ்சம் தலை நிமிர்ந்தவங்களுக்கு என் அம்மாவால கஷ்டம் வந்திச்சு. வரதட்சனை கொடுமையை எதிர்த்து போராடாம கோழைத்தனமா எங்க அம்மா தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க. அந்த கொடுமைகாரங்களை சும்மா விடக்கூடாதுன்னு பாட்டி வக்கீல் வீட்டுக்கும் கோர்டுக்கும் நாயா பேயா அலைஞ்சாங்க. இதுக்கு மத்தில என் மாமா, தானே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு 'இனிமே உனக்கும் எனக்கும் ஒட்டோ உறவோ இல்லை'ன்னு ஒதுங்கிக்கிட்டாரு. ஆனா பாட்டி அதுக்கும் அசரல. 'டேய் சங்கர். நீ ஜெயிக்கனும்டா! அதை நான் பார்க்கணும்டா!' ன்னு அடிக்கடி சொல்லுவாங்க. என்னை நல்லா படிக்க வைச்சாங்க. 'உன் தரித்திரம் உன் பேரனையும் பாதிக்கும்டி சனியனே' என்ற அக்கம் பக்க ஏச்சு பேச்சையெல்லாம் தூக்கி எறிஞ்சு என்னை ஆசை ஆசையா வளர்த்தாங்க. ஆனா விதிவசத்தால நானும் என் பாட்டிக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தேங்க. நானும் தற்கொலைக்கு முயற்சி பண்ணேங்க"

என் குரல் கம்மவும் அந்த பெரியவர் ரெடியாக இருந்த ஒரு க்ளாஸ் தண்ணீரை நீட்டினார். முழு கிளாஸையும் ஒரே மூச்சில் மடக் மடக்கென குடித்தேன். நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டு விட்டதில் தொடர்ந்தேன்.

"பருவ வயசு காதல் என்னை பாடாய் படுத்திச்சு. அது திடீர்னு தோத்துப் போனதுல எனக்கு உலகமே முடிஞ்ச மாதிரி தோணிச்சு. என் தற்கொலை முயற்சிய பாட்டி பார்த்துட்டாங்க. அவ்வளவுதான்! காளி அவதாரமே எடுத்தாங்க. என்னை நார்நாரா கிழிச்செறிஞ்சாங்க. அப்போதான் தன் முழு கதையையும் சொன்னாங்க. என் வெற்றிலதான் அவங்க வாழ்வோட அர்த்தம் இருக்குதுன்னு புரிய வைச்சாங்க. நான் அப்போ எழுந்தவன்தாங்க. படிச்சேன். பட்டம் வாங்கினேன். இன்னிக்கு ரொம்ப வசதியா இருக்கேன். அதுவும் தெய்வத்துக்கு பொறுக்கலங்க. பாட்டிக்கு கேன்சர் நோய் வந்திச்சு. முதலில் கர்பப் பையை எடுத்தாங்க. அப்பறம் மார்ல கத்தி வச்சாங்க. இப்ப எலும்புல இருக்குதாம். வலி வேதனையில அவங்க கத்தறத என்னால தாங்க முடியலங்க. நேத்து என் பாட்டி சொன்னதை கேட்டு துடிச்சு போயிட்டேங்க."

"டேய் சங்கர். போறும்டா. நான் பார்க்கவேண்டியதெல்லாம் பார்த்தாச்சு. இனிமே இந்த வலிய என்னால தாங்கமுடியாதுடா. ஒரு பாட்டில் விஷம் இருந்தா கொடு. பேயிடறேன்னாங்க. சாகறது கோழைத்தனம்னு சொன்னவங்களே செத்துப் போகணும்னு சொல்லறாங்கன்னா எவ்வளவு வேதனை அவங்களுகுள்ள இருக்கும்? அதுனால நான் உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன் அவங்க சீக்கிரம் செத்துப் போகணும்னு பிரார்த்தனை பண்ணுவீங்களா?"

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு மோகன் ராம்)

என் அம்மா வழி பாட்டிக்கு என் மேல் கொள்ளை ப்ரியம். கடைசி மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்து காலமானார்கள். ஒரு விடியற்காலையில் அவர்கள் வானுலகம் போய்க் கொண்டே எனக்கு டாடா காட்டுவது மாதிரி கனவு வந்தது. திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தால்.... பாட்டி போயிருந்தார்கள்.

2007 விகடன் தீபாவளி மலர்

Tuesday 20 November, 2007

நடு இரவில்


"சொல்லும்மா, என்ன ஆச்சு?" நூற்று பத்து என்று காட்டிய தெர்மா மீட்டரை உதறிக் கொண்டே கேட்டார் டாக்டர்.

"இவரு என் புருஷங்க. ஊரை விட்டு பத்து மைல் தள்ளியிருக்கிற கரும்பாலையில வேலை பார்க்கிறாரு. தெனமும் வீட்டுக்கு லேட்டாதான் வருவாரு. நேத்து ராவு ரெண்டு மணி ஆயிட்டு. இவர காணும். நான் பதறிப் போய் நாலு ஆளுகள கூட்டிக்கிட்டு ரோட்ல தேடிக் கிட்டே போனா நல்லூர் கேட்டாண்ட இவரு ரோட்டு மேல கெடக்காரு, சைக்கிளு வாய்கால்ல கவுந்து கெடக்குது. இவர பேயடிச்சிடுச்சுங்க"

"என்னது, பேயா ?" அதிர்ந்தார் டாக்டர்.

"ஆமாங்க மெய்யாலுமா! ஏங்க, நீங்களே சொல்லுங்களேன்."

மனைவி கொடுத்த தைரியத்தில் தலையை சுற்றி கட்டியிருந்த துண்டை சற்று தளர்த்திக் கொண்டு மெதுவாக பேச தொடங்கினான் முருகேசன். "நேத்து பாக்டரியை விட்டு கெளம்ப பத்து ஆயிருச்சுங்க. நாளைக்கு அம்மாசி வருதில்ல, வழியெல்லாம் கும்மிருட்டு! கக்கன் பாலத்துக்கிட்ட ஒரு தொண்டு கெளவி குந்திக்கினு உட்கார்ந்த வாக்கில ரெண்டு கையாலும் தள்ளிக்கிட்டே ரோட்டை கிராஸ் பண்ணிச்சு. காதுல பெருசு பெருசா பாம்படம். நெத்தில பட்டையா துண்ணூறு. வெத்தில போட்ட ஒண்ணு ரெண்டு காவிப் பல்லுன்னு பயங்கரமா இருந்திச்சு. சரி, ராத்திரில கிளவி போகுதுன்னு மனசை தேத்திக் கிட்டு சைக்கிளை வேகமா விட்டேன். மனசுல அந்த கிளவி வந்துகிட்டும் போய்கிட்டும் இருந்தா. நம்ம நல்லூர் ரெயில் கேட் தாண்டி கொஞ்ச தூரம் போயிருப்பேங்க... சொன்னா நம்ப மாட்டீங்க, அந்த கெளவி மறுபடியும் ரோட்டை க்ராஸ் பண்ணுது. ஆனா இந்த முறை இடது வலமா! அப்படி கிராஸ் பண்றப்ப, ஒரு தடவ என்னய பார்த்து சிரிச்சுது பாருங்க... யம்மாடி! என் ஈரக்கொலையே வெளியில வந்த மாதிரி ஆயிட்டு. அப்ப அலறிக்கிட்டு சைக்கிளோட விளுந்தவன்தான்...!"

டாக்டருக்கு புரிந்து விட்டது. இது மென்டல் ஹலூசினேஷன். அந்த கிழவியை பற்றியே ஓயாது நினைத்துக் கொண்டே வந்திருக்கிறான். பயத்தின் உச்சத்தில், அந்த கற்பனையே ஒரு முப்பரிமாண பிம்பமாக அவனுக்கு தோன்றியிருக்கிறது.

"முருகேசன்! பேய், பிசாசெல்லாம் ஒண்ணுமில்லே! நீங்க ரொம்ப பயந்ததினால, பிரமை ஏற்பட்டிருக்கு. பேயெல்லாம் சுத்த ரீல். நம்பாதீங்க. இந்த மாத்திரைகளை சாப்பிடுங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துக்குங்க. ரெண்டு நாள்ல சரியாயிடுவீங்க."

மறுநாளும் காய்ச்சல் தொடர்ந்தது. உடனடியாக பேயோட்டுவதற்கு பூசாரி வரவழைக்கப்பட்டார். முருகேசனுக்கு வேப்பிலையடிக்கப்பட்டு நாலா புறமும் எலுமிச்சைபழங்கள் நசுக்கி எறியப்பட்டன.

ஒரு வார லீவுக்கு பிறகு ட்யூட்டியில் சேர்ந்த முருகேசனின் நண்பன் சரவணனுக்கு விஷயம் தெரிந்து ஓடோடி வந்தான்.

"மடையா! அந்த கெளவி பேயுமில்லே. பிசாசுமில்லே! நல்லா ஜம்னு உசுரோடதான் இருக்குது. நீ ரெண்டு இடத்துல பார்த்ததும் ஒரே கெளவிதான். மொதல்ல பார்த்தது அது பஸ்ல ஏறத்துக்கு முன்னால. அடுத்தது, அது பஸ்ஸை விட்டு இறங்கிப் போகும் போது."

முருகேசனுக்கு உடனே காய்ச்சல் விட்டுவிட்டது.

இந்த கதைக்கான தீப்பொறி... (திரு டி.வி.வரதராஜன்)

நான் சிறு வயதில் வாழ்ந்த உரகடம் என்ற கிராமத்தில் ஒரு பாழடைந்த வீடு ஒன்று உண்டு. பேய் பிசாசு பற்றிய புரளியால் இரவில் அந்த பாழடைந்த வீட்டை கடக்கும் போது காதில் ஏதேதோ ஓசைகள் கேட்கும். ஒரு முறை அந்த வீட்டுக்கு அருகில் இருட்டில் ஒரு நெடிய உருவம் வந்து கொண்டிருந்தது. மல்லிகைப்பூ வாசம். கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தம். கால் கொலுசின் சலக் சலக் சத்தம். பளீரென வெள்ளை பற்கள் காட்டி சிரிக்கவும் அலறி விட்டேன். கடைசியில் அது எங்கள் வீட்டு வேலைக்காரி ! கோயிலுக்கு போனவனை எங்கே கானோம் என்று தேடி வர வீட்டில் அனுப்பியிருக்கிறார்கள். அன்று அலறியதை இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது.

2007 விகடன் தீபாவளி மலர்

Monday 19 November, 2007

ஓடாதே.. யோசி


முதலில் பயங்கர வெடிச் சத்தம் மாதிரி கேட்டது. அதை தொடர்ந்து கட்டிடமே குலுங்கியது. பிறகு தொடர்ச்சியாக எதோ முறிந்து உடைந்து படபடவென சரிவதும் கண்ணாடிகள் நொறுங்கும் சத்தம் கேட்டது.

"சில்வியா! நம்ம ஆபீஸ் பில்டிங் கொஞ்சம் கொஞ்சமாக இடிஞ்சு விழுந்திட்டிருக்குன்னு நினைக்கிறேன். தப்பிச்சு ஓடு" என்று சொல்லிக் கொண்டே அரை இருட்டில் தட்டு தடுமாறி வந்த லதாவின் மேலேயே சில்வியா மோதினாள். ஊனமுற்ற கால்களுக்காக லதா உபயோகிக்கும் கிரெச்சஸ் இரண்டும் மூலைக்கு ஒன்றாக போயின. இருவரும் தலை குப்புற விழுந்தனர். யார் யாரோ அவர்களை மிதித்தும் தடுக்கி விழுந்து கொண்டும் ஓடினார்கள்.

கொஞ்சம் சுதாரித்து எழுந்த சில்வியா வாசலை நோக்கி ஓடினாள். லதா எங்கே போனாள் தெரியவில்லை. பொடி மணலாக தூசு மழை பொழிந்து கொண்டிருக்க மூச்சு திணறியது. நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தாள். திடீரென காலுக்கடியில் தரை சரிய நிலைதடுமாறி விழுந்து சுவரோம் உருண்டாள். ஒட்டு மொத்த மின்சாரமும் துண்டித்துப் போக இருள் சூழ்ந்தது. ஏதேதோ அவள் மேல் வந்து விழுந்தன. சரிவதும் விழுவதுமாக சில்வியா அடித்து செல்லப்பட்டாள். "யாராவது காப்பாற்றுங்களேன்?" என்று தொண்டை கிழிய கத்தினாள்.

கட்டிடம் ஆடுவது கொஞ்சம் நின்றது. எங்கும் கும்மிருட்டு. திசை தெரியவில்லை. உயிர் பிழைப்போமா என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தபோது, வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆறு மாத குழந்தை கண் முன்னால் வந்து போனது. சில்வியா தன் முழு பலத்தையும் திரட்டி, கைகளை தரையில் அழுத்தி எழ முயன்றாள். மீண்டும் காலுக்கடியில் கான்க்ரீட் தரைதளம் சரியத் தொடங்க 'செத்தேன் நான்' என்றிருக்கும் போது யாரோ கையை பிடித்து மேலே இழுத்தார்கள். சில்வியாவை நாலைந்து பேர் கைத்தாங்கலாக வெளியே கொண்டு வந்தார்கள்.

அரை மயக்கத்திலிருந்த சில்வியா திடீரென கத்தினாள். " போங்கள். லதாவை தேடுங்கள். நாலாவது மாடியில் இருக்கிறாள்"

"லதாவா! சரியா போச்சு. ஹேய் லதா... இந்தா உன் பிரெண்டை பார்த்துக்கொள்" என்று துளி கூட காயம் இல்லாத லதாவிடம் சில்வியாவை ஒப்படைத்துவிட்டு இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்ற ஓடினார்கள்.

"லதா, என்னால் நம்பவே முடியவில்லை! நீ எப்படி தப்பித்தாய்? உன்னிடம் ஸ்டிக்ஸ் வேறு இல்லையே?"

"அதனாலென்ன? நான் லேசில் நம்பிக்கை இழக்க மாட்டேன். இருப்பது போனால் கூட அது கூட ஒரு விதத்தில் நன்மைக்கே என்று நினைப்பேன். உன் மீது மோதி விழுந்த எனக்கு வசதியாக ஒரு பெரிய மேஜை கிடைத்தது. அதன் அடியில் தவழ்ந்து, நுழைந்து, அதன் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டேன். உயர் கட்டிடங்கள் இடிந்து விழும்போது தரைதளங்கள் பிளந்து உள்ளுக்குள் நொறுங்கி விழும். அந்த சமயத்தில் டிராப், ஹைடு, ஹோல்டு (படு, பதுங்கு, பற்று) என்பவை உயிர் காக்கும் மந்திர வார்த்தைகள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நான் மேல்தளத்தில் இருந்தது கூட நல்லதாகப் போயிற்று. ஆட்டம் நின்றதும் நானே தவழ்ந்து மேலே வந்து விட்டேன். ஓடுவதற்கு உனக்கு வலுவை கொடுத்த அதே ஆண்டவன் எனக்கு யோசிக்க புத்தியையும் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கொடுத்திருக்கிறான். அவ்வளவே !"

இந்த கதைக்கான தீப்பொறி.... (திருமதி ப்ரியதர்ஷிணி)

சென்னையில் நிலநடுக்கம் வந்தபோது நான் டி.வி. நியூஸ் ரூமில்தான் இருந்தேன். நாங்கள் எல்லோரும் உயிரை பிடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தோம். வெளியே வருவதற்கு சில நிமிடங்களே ஆன போதும் வீட்டிலிருக்கும் குழந்தை, அம்மா, அப்பா அனைவரும் கண்முன் வந்து போனார்கள். ஒரே தள்ளு முள்ளு. இக்கட்டான நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் நிறைய பேருக்கு தெரியவில்லை, என்னையும் சேர்த்து.

2007 விகடன் தீபாவளி மலர்

Friday 16 November, 2007

தனியே.. தன்னந்தனியே


"ஒன். டு. த்ரீ. ·போர்..... ஹாப்பி பர்த் டே டு யூ. ஹாப்பி பர்த் டே டு அனிதா. ஹாப்பி பர்த் டே டு யூ."

கண் விழித்த அனிதா, மிரண்டு போய் விலுக்கென எழுந்து உட்கார்ந்தாள். மாமனாரில் ஆரம்பித்து நாத்தனார் வரை அவள் படுக்கையை சுற்றி நின்று கொண்டு டாப் ஆ·ப் த வாய்ஸில் பாடினால், யார்தான் அரண்டு போகாமல் இருப்பார்கள்? ஆனால் சீக்கிரமே, 'இன்று உனக்கு பிறந்த நாள்டீ !' என்று புத்தி எடுத்துரைக்க, அனிதா மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள்.

"அனிதா! இந்தா... என் பிறந்த நாள் கி·ப்ட்!" நாத்தனார் ரம்யா மெகா சைஸ் டெடி பியரை நீட்டினாள். அதை தொடர்ந்து மச்சினன் பிரசன்னாவிடமிருந்து ஒரு ஆப்பிள் ஐபாடும் மாமியாரிடமிருந்து ஒரு சுடிதார் செட்டும் பிறந்த நாள் பரிசாக கிடைத்தன.

"என்னடா விக்னேஷ்! எங்கடா உன் கி·ப்ட்?" மாமனார் சந்தானம் அதட்டி கேட்டார்.

"அவர் ராத்திரி பன்னிரெண்டு மணிக்கே கொடுத்துட்டார், மாமா!" என்று வெட்கத்தோடு, தன் விரலில் இருந்த வைர மோதிரத்தை காண்பித்தாள் அனிதா.

"திருட்டுப் பயலே" என்று செல்லமாக சந்தானம் விக்னேஷ் முதுகில் செல்லமாக குத்த, வீடே கலகலப்பானது. அனிதா கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்ததும் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் அதை வித்தியாசமாக அவள் அசந்து போகும் படி செய்ய வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்டிருந்தார் சந்தானம். அது சரியாக ஒர்க் அவுட் ஆனதில் அவருக்கு ரொம்ப திருப்தி.

"சரி, எல்லாரும் பரிசு கொடுத்தாச்சு, மாமா, உங்க பரிசு எங்கே?" என்று உரிமையாக கேட்டாள் அனிதா.

"என் பரிசுதானே... வெயிட்! எல்லாரும் ப்ரேக் ·பாஸ்ட் சாப்டுட்டு ரெடியாகுங்க." என்று சொல்லி, சஸ்பென்ஸ் வைத்தார். டிபன் முடிந்ததும், ஆவலாய் 'எங்கே மாமா அந்த கி·ப்ட்' என்று மீண்டும் கேட்க, சந்தானம் சிரித்துக் கொண்டே அனைவரையும் வாசலுக்கு அழைத்து வந்து காரில் ஏற்றினார்.

கார் பெசண்ட் நகரை நோக்கி விரைந்தது. ஒரு புதிய அபார்ட்மெண்ட் முன்னால் நின்றது. லி·ப்டில் ஏறி, இரண்டாவது மாடியில் ஒரு ப்ளாட் கதவை திறந்து காட்ட அனைவரும் அசந்து போயினர்! அனைத்து வசதிகளும் கொண்ட அற்புதமான ·ப்ளாட்!

"அனிதா! இதுதான் உன் பிறந்த நாளுக்கு நான் தர்ற கி·ப்ட்! இனிமே இதுதான் உன் வீடு. நம்ப தி.நகர் ப்ளாட் ரொம்ப சின்னதும்மா. நீங்க இங்க கொஞ்சம் ·ப்ரீயா இருக்கலாம். வீக் எண்டுக்கு தி.நகர் வாங்க. நாங்களும் அப்பப்ப இங்க வர்றோம். என்ன, சந்தோஷமா? எப்படி என் கி·ப்ட்? பிடிச்சிருக்கா?"

அனிதா திடீரென மௌனமானாள். கொஞ்ச யோசனைகளுக்கு பிறகு மெதுவாக,

"மாமா நான் ஒண்ணு சொல்லட்டுமா. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா நான் தனியாதான் வளர்ந்திருக்கேன். அக்கா, தங்கை, அண்ணா, தம்பி உறவு பற்றியெல்லாம் கேள்விதான் பட்டிருக்கேனே தவிர அந்த சுகத்தை அனுபவிச்சதில்லை. விக்னேஷ்தான் என் ஹஸ்பண்டுன்னு நிச்சயமான உடனே நான் ரொம்ப மகிழ்ந்த ஒரு விஷயம், இனிமே தனிமையில போரடிச்சுக்கிட்டு இருக்காம, வீட்டோட இருக்கற அம்மா, நாத்தனார், தம்பின்னு ஜாலியா இருக்கலாம்கிறதுதான். நீங்க என்னடான்னா, இப்படி தனியா இருக்க வைச்சிட்டீங்களே! வேண்டாம் மாமா. இவர் ஒன்பது மணிக்கு ஆபீஸ் போனா ராத்திரி எட்டு மணிக்குதான் திரும்பி வராரு. அது வரைக்கும் டி.வியும் பால்கனி காத்துமாக இருக்கறதுக்கு எனக்கு போரடிக்கும். ஒரு மியூசியம் மாதிரி அமைதியா இருக்கற வீடு எனக்கு அலுத்துப் போச்சு. சென்டரல் ஸ்டேஷன் மாதிரி கலகலப்பா இருக்கிற உண்மையான வீடுதான் மாமா எனக்கு வேணும். அது தி.நகர் வீடுதான். வாங்க போகலாம். சனி, ஞாயிறுகள்ல வேனா எல்லாருமா இங்க வரலாம்!" என்றாள்.

இந்த கதைக்கான தீப்பொறி..... (திருமதி தேவதர்ஷிணி)

ஒரு பெண் என்னிடம் வந்து, "டி.வி. தொடரில் நடிக்க சான்ஸ் வாங்கித்தர முடியுமா?" என்று கேட்டாள். வீட்டில் போரடிக்கிறது என்பதற்காக நடிக்க வேண்டுமாம். 'ஏன் இதே ஊரில் இருக்கும் உன் மாமனார் மாமியாரோடு தங்கி இருக்கலாமே?' என்று கேட்டதற்கு 'ப்ச்' என்று உதட்டை பிதுக்கினாள்.

2007 விகடன் தீபாவளி மலர்

Monday 12 November, 2007

சின்ன விஷயம்



லூவர் மியூசியத்தை நெருங்கி விட்டோம். திடீரென எங்கள் காமிரா மேன் தினேஷ் பரபரப்பானான். ஏர் பேக்கின் ·ஸிப்புகளை இழுத்தும் பிரித்தும் தேட ஆரம்பித்தான்.

"விஜய். என் மெடிகல் கிட்டை ஹோட்டல்லையே விட்டுட்டு வந்திட்டேன். இப்ப பிரஷர் மாத்திரை சாப்பிடணும். மதியம் லஞ்சுக்கு முன்னால சுகருக்கு இன்ஜெக்ஷன் போட்டுக்கணும்."

எனக்கு சொரேல் என்றது. ஹோட்டல் இங்கிருந்து குறைந்த பட்சமாக பத்து கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். இரை தின்ற மலைப் பாம்பு மாதிரி, டிராபிக் அரை கிலோ மீட்டருக்கு அசையாமல் நீண்டு கிடக்கிறது. மீண்டும் ஹோட்டலுக்கு போவதென்று முடிவு செய்தால் இன்றைய ஷெட்யூல் ·பனால். ஆனால், தினேஷ் இல்லாமல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

முன் சீட்டில் இருந்த திலீபனிடம் நாங்கள் தயக்கத்தோடு சொல்ல, அவரோ கொஞ்சமும் பதட்டப்படாமல் "இவ்வளவுதானே? இது சின்ன விஷயங்க. அந்த மாத்திரை பேரை எழுதிக் கொடுங்க" என்றவர், உடனே ஹோட்டலுக்கு போனில் பேசினார். பிறகு, சரேலென முன் கதவை திறந்து கொண்டு இறங்கி, டிராபிக்கில் கலந்து, காணாமல் போனார்.

நாங்கள் லூவரை நெருங்குவதற்குள்ளேயே மாத்திரையோடு வந்தார். லஞ்சுக்கு முன்னாலேயே மருந்து பெட்டியும் வந்து சேர்ந்தது. நாங்கள் பாரிஸில் காலை வைத்ததிலிருந்து திலீபன் எங்களுக்கு செய்யும் சேவைகள் கண்டு பிரமித்து போனோம். இத்தனைக்கும் நாங்கள் அனைவருமே அவருக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எங்கள் தயாரிப்பாளருக்கு தெரிந்தவர். அவ்வளவுதான்!

நேற்று அது போலத்தான், பாரிஸ் ஏர்போர்ட்டில் ஏக அமர்க்களம் ஆனது. எங்கள் டைரக்டரின் லக்கேஜ்களில் ஒன்று லண்டன் ஏர்போர்ட்டிலேயே தங்கி விட்டதாகச் சொல்ல, அவர் ஏகத்துக்கும் டென்ஷனாகி விட்டார். ஆனால் தீலீபனோ 'இது சின்ன விஷயங்க' என்று சொல்லி விட்டு எங்களை ஹோட்டலுக்கு பேக்கப் செய்து விட்டு ஏர்போர்ட் அதிகாரிகளுடன் போராடி, இரண்டே மணி நேரங்களில் அந்த சூட்கேசுடன் எங்கள் ஹோட்டல் ரூம் கதவை தட்டினார்.

இது மாதிரி எத்தனையோ கஷ்டங்கள்... குழப்பங்கள். எல்லாவற்றுக்கும் தீலீபனிடமிருந்து ஒரே பதில்தான்..... 'இது சின்ன விஷயங்க!'.

ஒரு முறை, தாங்க முடியாமல் அவரிடம், "அதெப்படி எதையும் நீங்க சின்ன விஷயமாகவே எடுத்துக்கிறீங்க?" என்று கேட்டு விட்டேன்.

தீலீபன் கொஞ்சம் தயக்கத்தோடு ஆரம்பித்தார். "இலங்கையிலே போர் தொடங்கியதும் நாங்க குடும்பத்தோட தமிழ் நாட்டுக்கு புலம் பெயர்ந்தோம். சின்ன படகுல அஞ்சு நாள் கரை தெரியாம நடு கடல்ல சோறு தண்ணியில்லாம தத்தளிச்சோம். இனி பொணமாதான் கரை ஒதுங்கப் போகிறோம்னு நெனைச்சுக்கிட்டு இருந்த போது, கடவுள் ரூபத்தில ஒரு ஏழை தமிழ்நாட்டு மீனவர் எங்கள் அத்தனை பேரையும் காப்பாத்தி, உயிரோட கரை சேர்த்தார். ஒரு தனி ஆளா அவர் எப்படி சங்கடங்களை சமாளிச்சார் என்பதை நேர்ல பார்த்து பிரமிச்சவன் நான். எல்லா கஷ்டங்களையும் தன் உள்ளுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு, எங்களுக்கு நம்பிக்கையா சிரிச்ச முகத்தோட உதவினாரு பாருங்க... அதுதாங்க பெருசு! மத்ததெல்லாம் சின்ன விஷயங்க!"

நான் ஆடிப் போனேன்.

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு விஜய் சாரதி)

நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சிக்காக நான் வெளிநாடு போயிருந்த போது, ஒருவர், நாங்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எல்லா உதவிகளை செய்ததுடன் பிரச்சனைகளையும் சமாளித்து உதவினார். புன்முறுவலோடு எங்களுக்காக அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்

2007 விகடன் தீபாவளி மலர்

Friday 9 November, 2007

புதுசா ஒரு கடை


"வாங்க சார். என்ன ரொம்ப நாளா காணம்?" முகம் மலர்ந்த சிரிப்புடன் ராமநாதனை வரவேற்றார் பொன்னம்பல நாடார்.

ராமநாதன் அனிச்சையாக அவருக்கு பக்கத்தில், ஆனால் கடைக்கு வெளியே உப்பு மூட்டைக்கு பக்கத்திலிருந்த சிறிய ஸ்டூலில் உட்கார்ந்தார். மளிகைக் கடையிலிருந்து எல்லாம் கலந்து கட்டி வரும் கார வாசனை ராமநாதனுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஊரில் இருந்தால் தினமும் மாலை வேளையில் அரை மணியாவது பொன்னம்பல நாடார் கடையில் உட்கார்ந்து ஊர் உலக கதைகளை பேசா விட்டால் ராமநாதனுக்கு தலை வெடித்துவிடும்.

"ஒரு வாரத்துக்கு ஊருக்கு போயிருந்தேன் பொன்னம்பலம்" என்று பதில் சொல்லிவிட்டு கடையை நோட்டம் விட்டார். என்னவோ கஸ்டமர்கள் குறைந்து விட்டதாக அவருக்கு தோன்றியது.

அதற்கு காரணம் இருந்தது. நாலு கடை தள்ளி திடீரென புதிதாக ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் முளைத்திருந்தது. மூவாயிரம் சதுர அடியில் முழுவதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு அனைத்து மளிகை சாமான்களும் கையெட்டும் தூரத்தில் இருந்தன.

"பொன்னம்பலம். இன்னிக்கு வந்ததும் முதல் வேலையா அந்த டிபார்மென்ட்டல் ஸ்டோர்ஸ் போயிருந்தேன்."

"எப்படி இருந்திச்சு. ஏ.சி. சுகம் கண்டீங்களாக்கும்." பொன்னம்பலம் வெள்ளந்தியாக சிரித்தார்.

"ஏசியெல்லாம் இருக்குது. ஆனா கண்ணை கட்டி காட்ல விட்டாப்ல இருக்குது. எது எங்க இருக்குதுன்னு சொல்ல ஆளு இல்லை. தேடித் தேடியே கால் வலிகண்டு போவுது. கைல பிளாஸ்டிக் தொட்டியை வைச்சிக்கிட்டு அலைய வேண்டியிருக்குது. இந்த சின்ன புள்ளைங்க வேற... ஜகடை வச்ச தள்ளு வண்டிய அங்கியும் இங்கியும் உருட்டிக்கிட்டு தொந்திரவு செய்யுதுங்க. இந்த மாதிரி கடையெல்லாம் வர விடக் கூடாதுங்க. நீங்களெல்லாம் ஒண்ணு சேர்ந்து எதிர்த்திருக்கணும். முதல்ல விலை குறைச்சு காட்டுவாங்க. இருநூறு சதுர அடில இருக்க வேண்டிய கடையை ஏகத்துக்கும் பரப்பி அதுக்கு ஏ.சி.யும் போட்டு பிளாஸ்டிக் தொட்டி, ஜகடை வண்டிக்கெல்லாம் செலவு செஞ்சு கடைசில அந்த செலவை நம்ம தலைலதான் கட்டுவாங்க."

"அது வந்துங்க...."

"இருங்க....இதுல இன்னொரு விஷயம் பாருங்க. எல்லா பொருட்களையும் கவர்ச்சியா அடுக்கி வைச்சிருக்காங்களா? தேவையா இல்லையா என்பதை யோசிக்காம நாம பாட்டுக்கு கூடையில அள்ளிப் போட்டுகிட்டு வந்திடறோம். பில்லு போடும் போதுதான் கொஞ்சம் உறைக்குது. திரும்பி கொடுக்க வறட்டு கௌரவம் இடம் கொடுக்குமா? சரி, பரவாயில்லை போன்னு மனசை சமாதானம் செஞ்சு, வாங்கிக்கிட்டு வந்திடறோம். இது தேவையா, சொல்லுங்க. எனக்கு தெரிஞ்ச வக்கீல் இருக்காரு. நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. கேசு போட்டு, நாலே நாள்ல கடையை இழுத்து மூட நானாச்சு!"
"அப்படீங்களா? உங்கள மாதிரி ஆசாமிங்க இங்க வாங்க. அந்த மாதிரி ஸ்டைலு விரும்பறவங்க அங்க போகட்டும்."

"அதுக்கில்லை பொன்னம்பலம். நீங்க இப்ப சும்மா இருந்தீங்க, நாளைக்கு உங்க கடையையே ஸ்வாகா பண்ணிடுவாங்க, ஆமா!."

"அப்படியெல்லாம் ஆகாதுங்க! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன். அது தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க. அந்தக் கடை போட்டிருக்கிறது வேற யாருமில்ல... நம்ம மருமக பையன்தான். ஆங்.. கஸ்டமர்களை கவனிக்க ஆளு இல்லேன்னு சொன்னீங்களே, அதை சரி செய்யச் சொல்லறேன். சரீங்களா?"

ராமநாதன் அசடு வழிந்தார்.

இந்த கதைக்கான தீப்பொறி.... (செல்வி தீபா வெங்கட்)

ஒரு ஷ¥ட்டிங் ஸ்பாட்டில், பிரேக்கின்போது சக ஆர்டிஸ்டுகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒருத்தி கொஞ்சம் நிறம் கம்மி. அதற்கானகழிவிரக்கமும் அவளுக்கு உண்டு. என் போதாத காலம் ஒரு மேக்கப் மேனைப் பற்றி குறிப்பிடும் போது நான் வாய் தவறி 'அவர் கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பார்' என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்! அவள் அந்த 'லும்' என்பதை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுவிட்டாள். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நான் படாத பாடு பட்டேன்.

2007 விகடன் தீபாவளி மலர்

Wednesday 7 November, 2007

தங்கக்கூரை


தங்கக் கூரை

கிருஷ்ணய்யாப் பிள்ளையின் வரவுக்காக காத்திருந்த ஊர் மக்கள், அவர் வந்ததும் மரியாதைக்கு எழுந்து, அமர்ந்தனர்.

"என்னப்பா, எல்லாரும் வந்தாச்சா? கூட்டத்தை ஆரம்பிக்கலாமா?" கணீர் குரலில், தனது வெள்ளை மீசையை உள்ளங்கையால் நீவிவிட்டபடியே மிடுக்கோடு கூட்டத்தினரை இடமிருந்து வலமாக பார்த்தார் கிருஷ்ணய்யாப் பிள்ளை. கூட்டத்தினரின் தலையசைப்பில் சம்மதம் கிடைக்க, தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

"எல்லோரும் கவனமா கேட்டுக்குங்க. பட்டணம் போய் தேவ பிரசனம் பார்த்து, நம்ம ஊரு பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேதி குறிச்சிருக்கு. வர்ற தை மாசம் 12ம் தேதி. இன்னும் மூணு மாசம்தான் இருக்கு. செஞ்சுடலாம் இல்லையா?"

"ஐயா, நீங்க நல்லது கெட்டதுல்லாம் பார்த்துதான் தேதி குறிச்சிருப்பீங்க. உங்க சம்மதம்தான் எங்க சம்மதம். நாங்க என்ன செய்யணும். அதைச் சொல்லுங்க. செய்ய காத்துக்கிட்டு இருக்கோம்" என்றார் ரிடயர்ட் ஹெட்மாஸ்டர் சிவசங்கரன் எழுந்து.

"அப்ப சரி. திருப்பணி பற்றி பேச ஆரம்பிக்கலாமா?"

"ஐயா, தேர் மராமத்து செலவு முழுசையும் நான் ஏத்துக்கறேங்க"

"கோயில் முழுவதும் கிரானைட் தளம் போடும் செலவு என்னுது"

"பெங்களூருல என் பையன் நல்ல பொசிஷன்ல இருக்கான். அஞ்சு லட்சம் வரையில வசூல் செஞ்சு கொடுக்க நானாச்சு."

இதே போல் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை உற்சாகமாக எடுத்து வைக்க, கிருஷ்ணய்யாப் பிள்ளை மகிழ்ச்சியடைந்தார். "பலே. நீங்க இப்படி செய்யும் போது நானும் என் பங்குக்கு ஏதாவது பெருசா செய்ய வேண்டாமா? அதுனால நம்ம கோயில் மூலஸ்தான வெளிக் கோபுரத்துக்கு தங்கக் கூரை போடும் செலவை நான் ஏத்துக்கறேன்."

கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பஞ்சாட்சர முதலியார் எழுந்தார்.

"ஐயா! நீங்க நம்ம கோயிலுக்காக ஒத்துமையா உற்சாகமா திருப்பணி செய்யறது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, கோயில் புனரமைப்பை மட்டுமே பார்க்கிற நீங்க, நாம கோயில் பட்டாசாரியார் குடியிருக்கிற வீட்டையும் கொஞ்சம் பார்த்தா நல்லது. வீட்டை மராமத்து செஞ்சுக்கிற நிலைமைல அவர் இல்லே. சமையல் அறை இடிஞ்சு போனதால, இப்ப கூடத்திலேதான் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காரு. ஐயாவோட பெரிய மனசுல பெருமாளுக்கு தங்க கூரை வருது. அதுனால, என் பங்குக்கு பட்டாசாரியார் வீட்டு சமையல் அறை மாராமத்தை நான் ஏத்துக்கறேன். என்னை பொறுத்த வரைக்கும் இது கூட சாமி காரியம்தான்."

கோபால பட்டாசாரியார் கண்ணீர் மல்க எழுந்து, நன்றியுணர்வோடு பஞ்சாட்சர முதலியாரைக் கையெடுத்து கும்பிட்டார்.

இந்த கதைக்கான தீப்பொறி...... (திருமதி உமா பத்மநாபன்)



சமீபத்தில், ஒரு கிராமத்து கோயிலுக்கு போயிருந்தேன். கோயில் பளபளவென பொலிவோடு இருந்தது. ஆனால் அந்த கோயில் குருக்களின் வறுமை அப்பிய ஒல்லியான தேகத்தையும் பழுப்படைந்த உடைகளையும் பார்த்த போது மனசு சங்கடப்பட்டது.

2007 விகடன் தீபாவளி மலர்