Sunday 25 March, 2007

காக்க. காக்க. ரகசியம் காக்க


காக்க. காக்க. ரகசியம் காக்க

தேவி மார்ச் 28, 2007

பால் பாக்கெட்டாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாக கதவை திறந்த ஜெயாவுக்கு ஆச்சர்யம்.

ஆறு அடி உயரத்தில் ஜீன்சும் டி சர்ட்டுமாக ஆத்மா!!!

அந்த வீடு அடுத்த சில நொடிகளில் கலகலப்பானது. வாட்ச்மேன் இரண்டு ராட்சத பெட்டிகளை மூச்சிரைக்க கொண்டு வந்து வைத்துவிட்டு போனார்.

"அண்ணா. எனக்கு வாட்ச் வாங்கிருக்கியா" தங்கை ரம்யா கேட்டாள்.

"டேய். பெரிய அத்தான் கேட்ட டிஜிடல் காமிரா. அப்பறம் சின்ன அத்தானுக்கு டி.வி.டி பிளேயர் வாங்கிட்டயா." இது அப்பா.

ஆத்மா சொல்வதற்கு வாயெடுப்பதற்குள் ஜெயா இடைமறித்தாள். "அட. அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமே.” ஜெயா எல்லாரையும் விரட்டாத குறையாக அனுப்பி வைத்தாள்.

ஆத்மா ஜெயாவின் ஒரே செல்ல மகன். கம்ப்யூட்டரில் சூரப்புலி. மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். வேலையில் சோந்த இரண்டு வருடங்களில் இரண்டு அக்காக்களுக்கு திருமணம் முடித்து விட்டான். இன்னும் தங்கை ரம்யா திருமணத்திற்கு காத்திருக்கிறாள். வாங்கிய கடன்களுக்கு இன்னும் இ.எம்.ஐ. கட்டிக் கொண்டிருக்கிறான்.

எல்லோரும் போய்விட்டார்கள். ஜெயா யாரும் கவனிக்காத போது பூனை மாதிரி ஆத்மா ரூமுக்கு போனாள்.

"அம்மா. ராகவ் கொடுத்த பேக். ரகசியமா இருக்கா." ஆத்மா கீச்சு குரலில் கேட்டான்.

"பத்திரமா வச்சுருக்கேன். என்ன விசயம். எதுவும் தப்புதண்டா இல்லைதானே."

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எடு சொல்லறேன். "

எடுத்து பிரித்ததில்.... எல்லாம் ஃபாரின் சாமான்கள். ஜெயா குழம்பினாள்.

"அம்மா. எல்லாருக்கும் ஃபாரின் சாமான்கள் வாங்கிக்கொடுக்க எனக்கு ஆசைதான். ஆனா உண்மை என்னன்னா. எல்லாமே இந்தியாவுல சீப்பா நல்ல குவாலிடியில கெடைக்குதும்மா. கணக்கு போட்டு பார்த்தேன். ஐநூறு டாலர் மிச்சம் பிடிக்க முடியற மாதிரி ஐடியா வந்திச்சு. என் ப்ரெண்ட் ராகவ் டெல்லியில இருக்கான். அவன் பக்காவா எல்லாத்தையும் வாங்கி கொடுத்திட்டான். ரம்ஸ் கல்யாணம் நிச்சயம் கிற நேரத்தில எதுக்கு அனாவசிய ஆடம்பர செலவு. சொன்னா புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க விருப்பத்தை நிறைவேத்தறது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நாம நம்ம நெலமையும் பார்த்துக்கணும் இல்லையா. அதான். தப்பு இல்லே. அவங்க பார்க்கறதுக்கு முன்னால என் பொட்டியில வச்சுடலாம். சீக்கிரம். உஷ்... காக்க. காக்க. ரகசியம் காக்க."

'இவனல்லவோ பிள்ளை?' ஜெயா மெய்சிலிர்த்துப் போனாள்.

Friday 23 March, 2007

சூடு பிடிக்குது உ.பி. சட்ட மன்ற தேர்தல்

கல்கி 25 மார்ச் 2007

இந்த மாதம் 7ம் தேதி பட்ட பகல் வேளையில் லக்னோ நகரின் மைய்ய பகுதியான ஹஸ்ரத் கஞ்சில் வடகிழக்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்தின் நேரெதிரில் சமாஜ்வாடி கட்சியின் உள்ளாட்சி மன்ற உறுப்பினரான அஃப்சல் பைசல் என்பவர் அவரது எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளிகள் எந்தவித தடங்கலும் இன்றி தப்பித்து போயிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கணக்கான மக்கள் புழங்கிக் கொண்டிருக்கும் அந்த நெரிசலான பகுதியில் இந்த படுகொலை துணிகரமாக நடந்திருக்கிறது. இத்தனைக்கும் பத்தே தப்படியில் ஹஸ்ரத் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. லக்னோவில் இது போன்ற கொலை சம்பவங்கள் ஒன்றும் புதிதில்லை என்றாலும், இது நடக்கவிருக்கும் உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல் விக்கெட். இன்னும் இது போல பல விக்கெட்டுகள் விழலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தேர்தல் என்றாலே அடிதடி, குத்து, கொலை என்றிருக்கும் இன்னாளில் உ.பி. தேர்தல்தான் இன்னமும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கிரிமினல் பின்னனி கொண்ட அரசியல்வாதிகள். கிட்டதட்ட எல்லா கட்சிகளிலுமே அவர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இந்த பட்டியலை கொஞ்சம் பாருங்கள். தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியதும் உ.பி. மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் 1,176. அதனை உற்பத்தி செய்வதாக ரெயிட் செய்யப்பட்ட தொழிற்சாலைகள் 947. கிரிமினல் பின்னனி உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் 1.64 லட்சம் பேர். பெயிலில் விடமுடியாத அளவுக்கு அரெஸ்ட் செய்ய வேண்டியவர்கள் 3,240 பேர். தேர்தல் காரணமாக சரண்டர் செய்யப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகளின் எண்ணிக்கை 1.20 லட்சம். கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகள் 1,824. போதுமா !

ஏன் இந்த நிலமை ? இதற்கு யர் காரணம்? மக்கள் அரசியல் கட்சிகளை காட்டுகிறார்கள். அரசியல் கட்சிகள் மக்களை காட்டுகின்றன. உ.பி. அரசியலில் ஜனநாயகம் என்பது பெயரளவுக்குதான். தேசிய கட்சிகள் கூட உத்திர பிரதேசம் என்றால் தங்கள் அரசியல் அனுகுமுறைகளை தளர்த்திக் கொண்டு விடுகிறார்கள். என்ன செய்வது? காலத்தின் கட்டாயம் என்ற புளித்துப் போன பல்லவியையே பாடுகிறார்கள். ஒரு காலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்த காங்கிரஸ் இன்றைக்கு பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. முலாயம் என்றால் முஸ்லிம். மாயாவதி என்றால் தலித். கல்யாண் சிங் என்றால் ஓ.பி.சி என்ற அளவிற்க்கு உ.பி. அரசியல் சாதி சீழ் பிடித்து புரையோடி போயிருக்கிறது. இந்த அதிகார போட்டியில் ஆட்சி மன்றத்தை கைப்பற்ற எந்த அளவுக்கும் கீழெ இறங்கி வர தயாராக இருக்கிறார்கள் அரசியல்வாதிகள். பலன் ? குத்து, கொலை, ரத்த களறி.

கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் உ.பி.அரசியலில் உயர் சாதி வகுப்பினரும், அரச பின்னனி கொண்டவர்களூம்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.அதில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ்காரர்கள். இவர்கள் செய்த பெரும் தவறு, வேறு யாரையும் இவர்கள் வளர விடவில்லை. இவர்களை எதிர்த்து விழ்த்த ஒரு பலமான சக்தி தேவைப்பட்டது. அதுதான் சாதி அரசியல். அதற்கு பலம் சேர்க்க கிரிமினல் பின்னனி கொண்ட குண்டர்கள் தேவைப்பட்டார்கள். இருகரம் நீட்டி அந்த கட்சிகள் அவர்களை வரவேற்றார்கள். அந்த மாதிரி முன்னுக்கு வந்துவிட்ட ஒரு கிரிமினல் அரசியல்வாதியை வீழ்த்த அதன் எதிர் கட்சிக்கு இன்னொரு கிரிமினல் தேவைப்பட்டது. இதற்காகவே அந்த கிரிமினல் பேர்வழியிடம் பயிற்சி பெற்ற இரண்டாம் நிலை கிரிமினல்கள் கொம்பு வீசி விடப்பட்டு அவர்களுக்கு எதிராக களம் நிறுத்தப்பட்டர்கள். இப்படி ஒரு சங்கிலித் தொடராக நடந்த நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறிப் போய், அந்தந்த கட்சித் தலைவர்களே கிரிமினல் பேர்வழிகளுக்கு பயம்படும் அளவுக்கு போய்விட்டது. அளவுக்கு மீறிப் போனால் என்ன ஆகும் என்று பாடம் கற்றுக் கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு சரியான பள்ளிக் கூடம் உ.பி. மாநிலம்தான்.

பொது தேர்தலில் கூட இல்லாத அளவுக்கு ஏழு கட்ட தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது. அட்டவனை ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 8ம் தேதி வரை நீளுகிறது. மே 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. ஒரு வாரத்துக்கு முன்னால் தலைமை தேர்தல் கமிஷ்னர் வந்த போது காங்கிரஸ் தடலாடியாக தலைமை செயலாளரையும் மாநில டி.ஜி.பியையும் மாற்றுவதற்க்கு தேர்தல் கமிஷன் உத்தவிட வேண்டும் என்று கோரியிருக்கிறது. பி.ஜே.பி. தன் பங்குக்கு கடந்த நான்கு மாதங்களில் மாநில அரசு செய்த அனைத்து பனி மாற்றங்களும் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டிருக்கிறது. தனது சௌக்கர்யத்துக்காக முலாயம் அரசு செய்த பதவி மாற்றங்கள் எவ்வளவு தெரியுமா? நெஞ்சை பிடித்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட பதினோராயிரம்! அனைத்தையும் மறுபரிசிலனை செய்யப்போவதாக சொல்லியிருக்கிறது தேர்தல் கமிஷன்.

பிஹார் மற்றும் மேற்க்கு வங்காளத்திலேயே சிறந்த முறையில் தேர்தலை நடத்தி முடித்திட்ட தேர்தல் கமிஷனுக்கு உத்திர பிரதேச தேர்தல் சரியான சவால்தான். அதற்காக தேர்தல் கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கைகள் சபாஷ் போட வைக்கின்றன. சாம்பிளுக்கு சிலவற்றை பார்ப்போம். தேர்தல் கமிஷன் 403 சட்டமன்ற தொகுதிகளையுமே சென்ஸிடிவான தொகுதிகளாக அறிவித்திருக்கிறது. அது தவிர கடந்தகால தேர்தல்களை வைத்து தொகுதிவாரியாக விவிரமான ரிப்போர்ட் தயார் செய்து ஒரு மதிப்பீட்டு எண் வழங்கச்சொல்லியிருக்கிறது. அதை வைத்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது அவர்களையும் சேர்த்து ஐந்து பேர்களுக்கு மேல் இருக்க கூடாது. அந் நாளில் நடத்தும் ஊர்வலங்கள் மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திலிருந்து 100 அடிக்கு முன்னாலேயே நின்று விடவேண்டும். அந்த இடத்திலிருந்து அலுவலகம் வரை மூன்று கார்களையே பயன் படுத்தலாம். அனைத்து தேர்தல் பணியாளர்களும் கட்டாயமாக புகைப்படத்துடன் கூடிய அதிகாரபூர்வ அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும். மாநில போலீஸ் வாக்கு சாவடிக்கு வெளியில்தான் ட்யூட்டி. எக்காரணம் கொண்டும் அவர்கள் வாக்கு சாவடிக்குள் வரக் கூடாது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் உள்ள எந்த அரசியல்வாதியும் தேர்தல் ஏஜண்டாகவோ, தேர்தல் பணியை பார்வையிடுகிறேன் என்ற பேர்வழியில் வாக்குக் சாவடிக்கு வருவதோ குற்றம்.

முலாயமை எப்படியாவது டிஸ்மிஸ் செய்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர காங்கிரஸ் தலைகீழாக நின்ற போது, யாருமே எதிர்பார்காத சமயத்தில் ஹர்பஜன் சிங் சிக்ஸ் அடித்த மாதிரி தேர்தல் கமிஷன் உள்ளே நுழைந்து தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கிவிட எல்லா அரசியல் கணக்குகளும் தாறுமாறாய் போனது. தனது 42 மாத ஆட்சிகாலத்தில் 22வது முறையாக நம்பிக் கை வாக்கெடுப்பில் 'வெற்றி பெற்று' முலாயம் சிங் 'ஜம்மென்று' அரியாசனத்தில் இன்னமும் அமர்ந்து தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

கிரிமினல்கள் சூழ்ந்த அரசியலுக்கு மத்தியில் ஐ.ஐ.டி.யில் படித்த மாணவர்கள் சில தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த முறை கூட்டணி இல்லாமல் அரசியல் கட்சிகள் தனித்தனியாக நின்றால் தேர்தல் முடிவுகள் சிக்கலாகவே போகும் என்று தெரிகிறது. உலகக் கோப்பை ஒரு பக்கம். உ.பி. தேர்தல் ஒரு பக்கம். பரபரப்புக்கு பஞ்சமில்லை.

Saturday 10 March, 2007

கிராமத்து கவிதை

என் ஆசை மச்சானே !

ஜனமித்ரன் - 01-15 பிப்ரவரி 2007

வெள்ள வேட்டி கட்டி வீதியில போற மச்சான்
சொல்ல வேணுமின்னு சேதியொண்ணு வச்சிருக்கேன்
ஆத்தங்கர ஓரத்தில அரை இருட்டு நேரத்தில
கூடி நாம பேசியதும் குலாவி திரிஞ்சதுவும்
ஊரு சனம் மத்தியில ஒரு மாசமா இருக்குதைய்யா
பொல்லாப்பு வேணாமைய்யா புரிஞ்சுக்க என் மனச

அப்பனையும் ஆத்தாளையும் அளைச்சுக்கிட்டு நீ வரணும்
ஊரையெல்லாம் கூட்டி வச்சு தேதி ஒண்ணு குறிக்கோணும்
அறுப்பு ஆன பின்னே அம்மாசி போன பின்னே
மாரியாத்தா கோயிலிலே மால நாம மாத்திக்கணும்
கால நேரம் பாக்காம சீக்கிரமா செய்யு மச்சான்
காத்திருக்கா உம் மயிலு கன்னாலம் பண்ணிக்க.

Friday 9 March, 2007

எது நல்ல கதை ? - ஒரு நகைச்சுவை விருந்து


நிலாச்சாரல்.காம் - 01 ஜனவரி 2007

1. டாக்டர்

"கதையோட கரு கலையாம நிலைச்சு நின்னு முடியும்போது நறுக்னு மனசுல தச்ச மாதிரி இருக்கணும்."

2. லிஃப்ட் ஆப்பரேட்டர்

"கதை ஆரம்பிச்சதுலேர்ந்து முடியரவரைக்கும் ஜிவ்னு மேல மேல போய்கிட்டே இருக்கணும்."

3. குத்துச்சண்டை வீரர்

"விறுவிறுப்பா தொடங்கி படிக்கறவங்களை திக்குமுக்காட வைச்சு நெத்தியடியா முடிக்கணும்."

4. குடிகாரன்

"என்னதான் கதை அப்படி இப்படி போனாலும் அதன் மெயின் தீம் ஸ்டெடியா நிக்கணும்."

5. பாத்திர கடைக்காரர்

"கலகலன்னு கதை போய்கிட்டே இருந்து ஒவ்வொரு பாத்திரமும் பளிச் பளிச்னு இருக்கணும்."

6. ஓவியர்

"கதையோட நுனியும் முடிவும் என்னவென்றே தெரியாம வாசகர்களை குழப்பி அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப புரிஞ்சுக்க விட்டுடணும்."

7. லாரி டிரைவர்

"கதை ஸ்பீடா போய்கிட்டே இருந்தாலும் பல அதிரடி திருப்பங்கள் வந்துகிட்டே இருக்கணும்."

8. அரசியல்வாதி

"எடுத்தோம் கவிழ்த்தோம்னு இல்லாம படிப்படியா இதயத்தில இடம்பிடிச்சு மனசை கொள்ளை கொள்ளணும்."

Sunday 4 March, 2007

க்ருஹபிரவேசம்


க்ருஹபிரவேசம்

மங்கையர் மலர் - மார்ச் 2007

ராஜாராமன் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரம்தான் இருக்கிறது, க்ருஹபிரவேசத்திற்கு. இன்னும் பாதிக்கு மேல் வேலை பாக்கி இருப்பது மாதிரி தோன்றியது. ஆனால் எதிர் ஃப்ளாட்டோ 'இந்தா சாவியை பிடி' என்கிற மாதிரி பக்காவாக இருந்தது.

கதவுகள் வைக்கப்படாத ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததில் கான்ட்ராக்டர் செல்வம் மேலே வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

"என்னப்பா இருந்து இருந்து சக்திக்கும் மீறி ஒரு ஃப்ளாட்டை வாங்கறேன். ஐநூறு பத்திரிக்கைக்கும் மேல வச்சிருக்கேன். எனக்கு பிபி எகிறுது"

"ஸார் எல்லாம் ரெடியா இருக்கு. மூணே நாள்ல பக்காவா ரெடியாயிடும். உங்க கிட்ட ஒரு விசயம் பேசணும்."

"என்ன சீக்கிரம் சொல்லு. அது ஏறிடுச்சி இது ஏறிடுச்சுன்னு எக்ஸ்ட்ரா பணம் கேட்டே, தெரியும் சேதி. என்னால முடியாது. ஆமா, இப்பவே சொல்லிட்டேன்."

"கொஞ்சம் பொறுங்க. நான் சொல்ல வந்ததை மொதல்ல கேளுங்க. அம்மா நீங்களும் கேட்டுக்குங்க. அக்ரிமெண்டுபடி மொசைக் தரையும், ரெண்டு பாத்ரூம்களுக்கும் சிமெண்ட் டைல்ஸ¤தான் போட்டிருக்கு. மத்த ஃப்ளாட்காரங்கள்லாம் வழவழா பளபளான்னு ஸ்பார்டெக் டைல்ஸ் போட்டுகிட்டாங்க. ரொம்ப அதிகமில்லே, வித்தியாச பணத்தை மட்டும் நீங்க கொடுத்தா போதும். என்ன சொல்றீங்க?"

ராஜாராமன் கேள்வியாக இந்திராவை பார்த்தார். அதில் வேண்டாம் என்று சொல்லிவிடு என்ற மாதிரியே இருந்தது.

"நீங்க இப்ப ஒடனே சொல்லணும்னு அவசியமில்லே. நாளைக்கு காலைல பத்து மணிக்கு சொன்னா போதும். நான் வியாழக்கிழமை சாவி கொடுத்திடுவேன்."

"வேணாம்பா. நீ அக்ரிமெண்ட் படியே முடிச்சுக் கொடு. எந்த மாற்றமும் வேணாம். இப்பவே வேலைய ஆரம்பி. எனக்கு புதன் கிழமை ரெடியாகிடணும். என்ன சரியா?"

"சரி. உங்க இஷ்டம். மொசைக் போட்ட பிறகு கிரானைட்டுக்கும் மார்பிளுக்கும் ஆசை பட்டீங்கன்னா டபுள் செலவு. ஆமா, சொல்லிட்டேன். கொஞ்சம் யோசனை செஞ்சு சொல்லுங்க."

ராஜாராமனோ மறு யோசனைக்கே இடம் கொடுக்காமல் தீர்மானமாக சொல்லிவிட்டு கீழே இறங்கலானார். திரும்பிப் பார்த்ததில் இந்திரா பதிலேதும் பேசாமல் வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த முடிவில் இஷ்டமில்லை என்று வெளிப்படையாக தெரிந்தது.

மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது மெதுவாக ஆரம்பித்தாள். "ஏங்க. இவ்வளவு செலவு செஞ்சு வீடு வாங்கறோம். தளம் போடறதுல எதுக்குங்க கொறை வைக்கணும். சரி, வேண்டாம்ன்னே வச்சிக்கிட்டாலும் எவ்வளவு வித்தியாசம்ன்னு கேட்டிருக்கலாம் இல்லையா?"

ராஜாராமன் சிரித்துக் கொண்டார்." இந்திரா. நான் ஏதோ காசை மிச்சம் செய்யணும்னு சொன்னேன்னு நெனைக்கிறையா? இல்லம்மா. என்னோட அப்பா அம்மாவும் உன்னோட அப்பா அம்மாவும் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க. தங்குவாங்க. அவங்களுக்கு வழவழா தரையெல்லாம் ஒத்து வராதும்மா. நான் வேலை பார்க்கற நர்சிங் ஹோம்ல வர்ற வயசானவங்கள்ல நெறைய பேரு பாத்ரூம்ல வழுக்கி விழுந்து காலை ஒடைச்சிக்கிட்டவங்கதாம்மா. அதனாலதான் சொல்றேன்."

இந்திரா பைக்கில் உட்கார்ந்து கொண்டு வயதையும் மீறி ஒரு கையால் கணவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

Saturday 3 March, 2007

தருமி 2007


தருமி 2007

நிலாச்சாரல்.காம் - 26 பிப்ரவரி 2007

பேங்க் ஃஆப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாக படிக்கிறார். “நம் வங்கி அலுவலர்கோர் நற்செய்தி. நம் சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ் நோட் வாயிலாக தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும்.”

தருமி அங்கு வருகிறான். “ஏம்பா. பரிசுத் தொகை எவ்வளவு?”

“ஆயிரம் டாலர்.”

தருமி தனிமையில் புலம்புகிறான். “ஐய்யோ ஆயிரம் டாலராச்சே. ஆயிரம் டாலராச்சே. எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ஃபீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாடி நான் போடனுமே... இந்த சமயம் பார்த்து நோட்டு போட ஒரு ஐடியாவும் வரமாட்டேங்கிறதே. என்ன செய்வேன்? யாரை போய் கேப்பேன்?”

சொக்கன் ஞாபகம் வருகிறது. “சொக்கா.. உன்னை விட்டா வேறு யாரு இருக்கா, ப்ளீஸ் ஹெல்ப் மீ.”

சொக்கன் வருகிறார். “வங்கி அதிகாரியே”

“யாருய்யா நீ”

“நான் யார் என்பது இருக்கட்டும். உமக்கு மட்டும் அந்த நோட் கிடைத்துவிட்டால்...”

“ஆஹா அது மட்டும் கிடைச்சிடுச்சுன்னா என்னோட முக்கியமான பிரச்சனை ஒன்னு தீர்ந்துடும். அட நீயும் அறிவிப்பை கேட்டாச்சா. போச்சு. எல்லாம் போயே போச்சு. போயிந்தே. ஹோ கயா. இட்ஸ் கான்.”

“எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்.”

“என்னது. உன் நோட்டை நான்.. நான்.. எடுத்துகறதா. இங்கப்பாரு நான் பார்க்கறதுக்கு சாதாரணமாக இருக்கலாம். அஞ்சு வருஷத்துல ரெண்டு பிரமோஷன் வாங்கிருக்கேன்.”

“எங்கே. என் திறமையின் மீது உமக்கு சந்தேகம் இருந்தால் சோதித்து பாரேன், உமக்கு திறமையிருந்தால். கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை, நான் கேட்கட்டுமா?”

“ம்ஹூம். எனக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம். தட்ஸ் ஆல்.”

“எங்கே கேள்விகளை தொடங்கு”

பிரிக்க முடியாதது என்னவோ?
நாமும் நம் கோரிக்கைகளும்

பிரிந்தே இருப்பது?
யூனியனும் மேனேஜ்மென்டும்

சேரக்கூடாதது ?
பிரமோஷனும் டிரான்ஸ்வரும்

சேர்ந்தே இருப்பது ?
ஏடிஎம்மும் டெபிட்கார்டும்

சொல்லக்கூடாதது?
டேக் ஹோம் பே

சொல்லக்கூடியது?
டெல்லர் டோக்கன் நம்பர்

பார்க்க முடியாதது ?
சர்வீஸ் ஃபைல்

பார்த்து ரசிப்பது ?
சம்பள பில்

சம்பளம் என்பது ?
மாதம் ஒரு முறை வருவது

டூர் என்பது ?
அடிக்கடி வருவது

அதிரடி சர்வீசுக்கு ?
சானியா மிர்சா

அபார சிக்ஸ¤க்கு ?
மஹேந்திர டோனி

சூப்பர் ஜோடிக்கு ?
சூர்யா - ஜோதிகா

சண்டை பார்ட்டிக்கு ?
சாப்பல் - கங்கூலி

லோக்கல் டூருக்கு ?
நீ

ஃபாரின் டூருக்கு ?
நான்

“அப்பா ஆள விடு. எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதான். நீர் தான் சகலகலாவல்லவர். நீங்கள் எழுதிய நோட்டை கொடுங்கள். அதை அப்படியே ஃபார்வேர்ட் செய்கிறேன். “

கொஞ்ச தூரம் சென்றுவிட்டு திரும்பி வந்து. “அது சரி.. பரிசு கொடுத்தால் வாங்கிக்கறேன். மெமோ, சஸ்பென்டு மாதிரி வேறு எதாவது கொடுத்தால்... “

“என்னிடம் வா. நான் பார்த்துக் கொள்கிறேன். “

“என்ன? சஸ்பென்ஷன் ஆர்டரை படிச்சு காட்டவா?”

சொக்கன் சிரிக்கிறான். “கவலைப்படாதே சகோதரா. யூ வில் கெட் த ரிவார்ட்டு. வெற்றி நிச்சயம்.“

“என்ன சிரிப்பைய்யா. உன் சிரிப்பு. சூர்யா மாதிரி சிரிப்பு.”

சேர்மன் செயலகத்தில் உள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில் தருமி. சேர்மன் கையில் தருமி எழுதிய நோட் இருக்கிறது. “மிஸ்டர் தர்மராஜன் அலியாஸ் தருமி அவர்களே. நீங்கள்தானே இந்த நோட்டை ஃபார்வேர்ட் செய்தது.”

“ஆமாம். உங்கள் ஐயப்பாட்டை நீக்கும் அந்த அற்புத நோட்டை நானேதான் எழுதினேன். “

“எங்கே! நீரே படித்துக் காட்டும்.“

தருமி படிக்க படிக்க சேர்மன் முகம் பிரகாசம் அடைகிறது. “ஆஹா. அம்சமான ஆபீஸ் நோட்டு. ஆழமான கருத்துக்கள். என் டவுட்டை க்ளியர் செய்துவிட்ட சூப்பர் நோட்டு.”

தன் செகரெட்ரியை அழைத்து பரிசை கொண்டுவரச் சொல்லுகிறார். அப்போது ஜி.எம். என். கீரன் எழுந்திருக்கிறார். “சேர்மன் அவர்களே. ப்ளீஸ் வெயிட். அந்த நோட்டில் பிழை உள்ளது.”

“யூ மீன் மிஸ்டேக்.” சேர்மன் திடுக்கிடுகிறார். ஆனால் தருமியோ....

“பிழை இருந்தாலென்ன? எவ்வளவு பிழையோ அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக் கொடுங்களேன்.”

ஆனால் அதற்கு என். கீரன் “மிஸ்டர் தர்மராஜன். நீர்தானே இந்த நோட்டை எழுதியது?“

“எஸ். நானேதான் எழுதினேன். பின்னே ஆபீஸ் கான்டீன்ல யாராவது எழுதிக் கொடுத்ததை கொண்டு வந்து கொடுப்பேனா? நானே... நானேதான் எழுதினேன்.”

“அப்படியானால் அந்த நோட்டில் எழுதியுள்ளதை விளக்கி விட்டு பரிசை பெற்றுச் செல்லுங்களேன்.”

“சேர்மனுக்கே விளங்கி விட்டது. நீங்க யாரு குறுக்கே.”

“நான் இந்த டூபாகூர் வங்கியின் தணிக்கை பிரிவின் தலைவர். என். கீரன். ஜெனரல் மேனேஜர். எமது சேர்மன் மிக சரியான ஆபீஸ் நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதை பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான். அதே நேரத்தில் பிழையுள்ள நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதற்கு வருத்தப்படுபவனும் நான்தான்”

“ஒஹோ. இங்க எல்லாமே நீங்கதானா. ஒரு சில பேர் ஏகப்பட்ட ஃபைல்களை பார்த்து அதையெல்லாம் ரெஃபர் செஞ்சு நோட்டு போட்டு பேர் வாங்குவாங்க. ஒரு சில பேர் போட்ட நோட்டுல எங்கடா குற்றம் இருக்குன்ணு தேடி கண்டு பிடிச்சு பேர் வாங்கிட்டு போவாங்க. இதுல நீங்க எந்த வகையை சார்ந்தவர் என்று உங்களுக்கே புரியும். ஒண்ணு மட்டும் நிச்சயமைய்யா. உங்கள மாதிரி ரெண்டு பேர்.. இல்லை நீங்க ஒருத்தரே போதும். இந்த பேங்க் உருப்பட்டாப்பலத்தான். சேர்மனிடம் சொல்லிவிடுங்கள். எனக்கு பரிசு வேண்டாம். நான் வருகிறேன்.”

தருமி வேகமாக போக என். கீரன் அழைக்கிறார். அழைப்பை நிராகரித்து தருமி இன்னும் வேகமாக ஓட கான்ஃபரன்ஸ் ஹாலில் சிரிப்பலை.

சேர்மன் மிகுந்த சோகத்துடன் அமர்கிறார். “நல்லவேளை. என்னை காப்பாற்றினீர்கள். ஜி.எம். அவர்களே. இல்லையென்றால் என் மீது விஜிலென்ஸ் என்கொயரி வந்திருக்கும். தாங்க்ஸ்.”

அங்கே தருமி புலம்பிக் கொண்டிருக்கிறான். “எனக்கு வேணும். இன்னமும் வேணும். ஐயையோ யாரோ இன்னமும் தொரத்தர மாதிரியே இருக்கே. இனிமே நான் எந்த நோட் போட்டாலும் ஏம்பா இது உன் நோட்டா இல்லே ஆபீஸ் கான்டீனுக்கு வந்த யாராவது எழுதி கொடுத்ததான்னு கேப்பாங்களே. இதுக்குத்தான்... இதுக்குத்தான் கண்டவனை நம்பி காரியத்துல எறங்கப்படாதுங்கறது. மாட்டிக்கிடல்ல. நல்லா அவஸ்த படு. ஏன்டா... ஏன்டா... ஏன்? ஐயோ இப்படி தனியா பொலம்பற அளவுக்கு கொண்டுவிட்டானே. சொக்கா. அவனை எதுக்கு கூப்பிடனும்?. அவனை நம்பாதே. அவன் வரமாட்டான். அவன் இல்லை.”

சொக்கன் வருகிறார். “தருமி. பரிசு கிடைத்ததா?”

“வாய்யா. எல்லாம் கிடைச்சுது. நல்லவேளை டிஸ்மிஸ் செய்யல. நான் உனக்கு என்னையா துரோகம் செஞ்சேன்.”

“வங்கி அதிகாரியே கான்ஃபரன்ஸ் ஹாலில் என்ன நடந்தது?”

“ம்... இதெல்லாம் நல்லா ஏத்த எறக்காமா பேசு. நோட் போடும் போது கோட்டை விட்டுடு.”

“என்ன நடந்தது?”

“உன் நோட்டில் குற்றம் என்று சொல்லிட்டாங்கையா.”

“என் நோட்டில் குற்றமா. சொன்னவன் எவன்?”

“உன் பாட்டன். அங்க ஒருத்தன் இருக்கான். எல்லா சர்குலரும் அவருக்கு அத்துபுடியாம்.”

கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் தருமியும் சொக்கனும் வேகமாய் வருகிறார்கள். சொக்கன் நெருப்பாய் கக்குகிறார். “இச்சபையில் என் நோட்டை குற்றம் சொன்னவன் எவன்?”

சேர்மன் எழுந்து நின்று, “அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம். ஹவ் சம் டீசன்ஸ்சி. மரியாதையோடு கேள்வி கேட்டால் தக்க பதில் கிடைக்கும்.”

“யார் இந்த கிழவன்?”

“பேங்க் ஃஆப் டுபாகூரின் தலைமை தணிக்கையாளர். என்.கீரன். ஜி.எம். மிகுந்த அனுபவம் உள்ளவர்.”

“அதிகம் அனுபவம் இருந்துவிட்டால் அனைத்தும் அறிவோம் என்ற அகம்பாவமோ.”

கீரன் எழுந்து, “முதலில் நீங்கள் எழுதிய நோட்டை இன்னொருவர் மூலமாக அனுப்பியதின் காரணம்?”

“அது நடந்து முடிந்த கதை. தொடங்கிய பிரச்சனைக்கு வாரும். எங்கு குற்றம் கண்டீர்? ஸ்பெல்லிங்கிலா? அல்லது ஃப்பார்மெட்டிலா?”

“ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் அவை மன்னிக்கப்படலாம். காரணம் எங்களிடம் எம்.எஸ். வெர்ட் இருக்கிறது. ஸ்பெல் செக் போட்டுக் கொள்வோம். ஆனால் பொருளில்தான் குற்றம் இருக்கிறது.”

“கூறும். கூறிப் பாரும்.”

“எங்கே நீங்கள் எழுதிய நோட்டை சொல்லும்.”

நோட்டைப் படிக்கிறார். “போதும். போர் அடிக்கிறது. சுருக்கமாக சொல்லும். இதனால் தாங்கள் சொல்லவரும் கருத்து...”

“புரியவில்லை? இந்தியாவில் உள்ள மற்ற வங்கிகளில் என்ன Work Culture இருக்கிறதோ அதேதான் நம் வங்கி கிளைகளிலும் உள்ளது என்பதுதான் என் வாதம்.”

“ஒருக்காலும் கிடையாது. இதோ. எங்கள் வங்கி சர்குலர்களின் தொகுப்பு சி.டி இருக்கிறது. இதில் எங்குமே நீங்கள் சொன்ன கல்சர் குறிப்பிடப்படவில்லை. சர்குலர்களில் சொல்லப்படாத எந்த விஷயத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.”

“நிச்சயமாக?”

“சத்தியமாக.”

“நீர் தினம் தினம் பார்க்கும் இன்ஸ்பெக்ஷன் மான்யுவல் மீது ஆணையாக..”

“அதென்ன. ஜுஜுபி மேட்டர். நம் எல்லோரும் மறை பொருளாக மதிக்கும் பேங்கிங் ரெகுலேஷன் ஆக்ட் மீது ஆணைனயாக சொல்கிறேன். அக்ரிகல்சர். ஹார்ட்டிகல்சர்.. இது மாதிரி சில கல்சர்கள் இருக்கிறதே தவிர நீ சொன்ன கல்சர் ஒருக்காலும் இங்கு இருக்க முடியாது என்பதே என் கருத்து.”

“மிஸ்டர் என்.கீரன். நன்றாக என்னை பாரும். நான் யார் தெரிகிறதா?"

சொக்கன் மெதுவாக எம்.ஜி.ஆர். ஸ்டைலில் மீசையை பிய்கிறார். என்.கீரன் திடுக்கிடுகிறார். “. நீங்களே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகுக. உங்கள் அதிகாரத்தினால் எனது வேலை போனாலும், பென்ஷன் கொடுக்காமல் போனாலும் குற்றம் குற்றமே. குற்றம் குற்றமே.”

“கீரா. தும் ஹோ கயா.”

கீரன் கைகளை உயரே தூக்கி, கண்கள் மூடி....

“நான் வாங்கும் சம்பளம் நாலு நாளைக்குத்தான் போதும்
நாய் பாடு படுவேனே தவிர உம்மைப் போல்
காண்டினில் நோட் டிராஃட் எழுத மாட்டேன்."

சொக்கன் என். கீரனை எரித்துவிடுகிறான்.

சேர்மன் கூவம் நதிக்கரையோரம் ஓடிவருகிறார். “கவர்னர் அவர்களே! என்ன செய்துவிட்டீர்கள்? நீங்கள் போட்ட நோட் என்பது என் புத்திக்கு எட்டாமல் போனது தவறுதான். அவரை மன்னித்துவிடுங்கள்.”

அப்போது சொக்கன் குரல் கேட்கிறது. “சேர்மன் அவர்களே! கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் ஒரு உயர்மட்ட சர்ப்ரைஸ் டெஸ்ட் செய்யவே யாம் நடத்திய நாடகம் இது. மிஸ்டர் என். கீரரை கூவத்தில் போட்டால், என்னால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு நாறிப் போய்விடுவார் என்பதால் அவரை கரையிலேயே விட்டிருக்கிறேன். இன்றைக்கு சனிக்கிழமை. ஆபீஸ் டைம் முடிந்துவிட்டது. நாளை ஹாலிடே. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. திங்கட்கிழமை வழக்கம் போல் என். கீரன் ஆபீஸ் வருவார். அவருக்கு ஒன்னரை நாள் டூர் பேட்டா கொடுத்துவிடு. நான் வரட்டா.”

Thursday 1 March, 2007

நீயும் பார்ட்டி கொடு


நீயும் பார்ட்டி கொடு

2007 பிப்ரவரி 11 குங்குமம்

முட்டை முழி சாரங்கனை ஒரு பேக்குடு என்று நினைத்தது தவறு. சரோஜாவோடு சண்டை போட்டு அவளை ஊருக்கு அனுப்பு என்ற இந்த ஒன் லைனை அவன் ஆரம்பித்ததே செல்வராகவன் படத்தின் முதல் ஸீன் மாதிரி இருந்தது. "ஆத்மா, பொண்டாட்டின்னா சண்டை போடணும்டா. சண்டையே வர்லேன்னா, மேட்டரே வேற" என்றான். என்ன அமர்க்களமான ஓப்பனிங்! அவனுக்கு இல்வாழ்க்கையில் கரைகண்ட வித்தகன் என்ற பட்டத்தை தரலாம். சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

சாதாரணமாக ஆபீஸ் விட்டதும் எங்களை மாதிரியான சம்சாரிகள் சாரை பாம்பு மாதிரி ஒவ்வொருவராக வீட்டுக்கு ஓடுவதுதான் வழக்கம். ஆனால் சில மாதங்களாகவே கொஞ்ச மாறியிருக்கிறது. என்னை விட்டுவிட்டு மற்றவர்களெல்லாம் ரகசியமாய் பேசிக்கொள்கிறார்கள். ஐந்து மணிக்கு அப்புறம் ஆர்கேயையும் ஜேபியையும் ஆபீஸில் பார்ப்பது என்பது நூறு எபிசோடுகளிலேயே முடிந்துவிட்ட சீரியல் மாதிரி. போன வாரம் அவர்களோடு டேனியல் ராஜும் கூட்டணி. திருட்டுப் பயல்கள். உலகத்திலெயே மிக கொடுமையான விஷயம், நண்பர்கள் கூட்டத்தில் காரணம் சொல்லாமல் நம்மை ஒதுக்கி வைப்பதுதான்.

நேற்று என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மழைக்கு முன்னால் அங்கும் இங்கும் பறக்கும் கரப்பான் பூச்சிகளாக மூணு மணியிலிருந்தே மூர்த்தியும் ப்ரகாஷ¤ம் பிஸியோ பிஸி. இவ்வளவிலும் சாரங்கனிடம் கலக்ஷனுக்கு வந்து, அவன் ஸ்டைலாக பர்ஸை பிரித்து ஜொள் ஒழுக கொடுத்த நூறு ரூபாயை கொத்திக் கொண்டு ஓடினார்களே தவிர என்னை கண்டு கொள்ளவேயில்லை. அவர்கள் போனதும், சாரங்கனை பிறாண்டியதில்... மூர்த்தி வொய்ப் டெலிவரிக்கு நேற்று ஊருக்கு போயிருக்கிறாளாம். இன்று அவன் வீட்டில் பார்ட்டியாம். எல்லாம் உண்டாம். ஏன் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டதற்க்கு, அளித்த விவரங்களில் சாரங்கன் எனக்கு கிருஷ்ணனாகவே தெரிந்தான். சில துளிகளை இங்கே கொஞ்சம் சிந்தியிருக்கிறேன். நீங்களும் ஞானம் பெறுவீர்களாக.

ஒரே மனம் இரு உயிர் என்பதெல்லாம் சுத்த பேத்தல். வெறும் இனிப்பே வாழ்க்கை அல்ல. நடுநடுவே காரம் வேண்டும். பொண்டாட்டி ஊர்ல இல்லையென்றால் பல சௌகர்யங்கள். கல்யாணத்துக்கு முன்னால் சுதந்திரமாக சுத்தி திரிந்த ஹாஸ்டல் வாழ்க்கையை மீண்டும் ரீப்ளே செய்யமுடியும். காலையில் இஷ்டம் போல் எழுந்திருக்கலாம். ஷேவிங் பிரஷை உடனே அலம்பி வை என்று யாரும் கண்டிக்கமாட்டார்கள். சத்தமாய் பாட்டு கேக்கலாம். அபஸ்வரமாக பாடலாம். ராத்திரிக்கு எப்போது வேணும்னாலும் வீட்டுக்கு போகலாம். நோ வெஜிடபிள் பர்ச்சேஸ். நோ அழுகாச்சி ஸீரியல்ஸ். இது மாதிரி எவ்வளவோ. அதுவும் சண்டை போட்டுட்டு போவது என்பது பூர்வ ஜன்ம பூஜா பலன். போன பிறவியில் பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிட்டும். சமாதானம் ஆன பிறகு கிடைக்கும் இன்பத்தை எழுத்தில் தேடுபவர்கள் படு அசடுகள். அவர்களுக்காக சொல்லி தொலைக்க வேண்டுமென்றால் தகதக தங்க வேட்டை சட்டியில் உள்ள அனைத்து தங்கக் காசுகளும் அவர்களுக்கே கிடைத்த மாதிரி.

கனவன் மனைவி சண்டையில் ஒருவரை ஒருவர் மொத்திக் கொண்டே பலர் வேடிக்கை பார்க்கச் செய்வது வல்லினம். 'காச்' 'மூச்' என்று கத்திக் கொண்டு ப்ளட் பிரஷர் எகிற கோபாவதாரம் எடுத்து தங்களையும் குழந்தைகளையும் ஏக டென்ஷனுக்கு உள்ளாக்குவது இடையினம். இங்கிலீஷ் சினிமா பாணியில் டைட்டோ டைட் க்ளோசப்பில் மூஞ்சிக்கு முன்னால் லிமிட்டாக சுள்ளென இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு, அதன் பாதிப்பிலேயே விறைத்துக் கொண்டு விலகி போய்விடுவது மெல்லினம். முதல் இரண்டும் அணுகுண்டு, சர வெடிகளாக உள்ளும் வெளியிலும் பாதிப்பு இருக்கும். மூன்றாவதில் போலீஸ் அடிப்பது மாதிரி. வெளிக்காயங்களே இருக்காது. மனசுக்குள் பூகம்பமும் சுனாமியும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

"நான் மூன்றாவதை டிக் செஞ்சுக்கறேன்" என்றேன், அவசரமாக. சாரங்கன் சங்கு, சக்கரத்தை இன்னும் விடவில்லை. "ஆத்மா, இதெல்லாம் ஒரு ஜாலிக்குடா. ஆபீஸ்ல, வீட்ல, வெளில எவ்வளவு டென்ஷன் இருக்கு. அதையெல்லாம் கொறைக்க வேண்டாமா. அவங்களோட கும்மாளம் போடும் போது பத்து வயசு சல்லுன்னு கொறையுது. குஜால்தான். வர்ற சனிக்கிழமை உன் வீட்டில் பார்ட்டி. போ, சண்டை போடு. ஆல் த பெஸ்ட்." ப்ளூடோவிடம் மாட்டிக் கொண்ட டாம் மாதிரி மேலும் கீழுமாக தலையாட்டினேன்.

சரோஜா என் மாமா பெண்தான். நான் இவ்வளவுதான் என்று அவளுக்கு முன்னமேயே தெரியும் என்பதால், எங்களுக்குள் இதுவரை சண்டையே வந்ததில்லை. தவிர, அவளை பொறுத்தவரை கணவர் பரமசிவனுக்கு சமானம். அவருக்கு எல்லா சௌகர்யங்களையும் செய்வதுதான் ஒரு பதிவிரதையின் தலையாய கடமை என்பதை ஒரு வேத வாக்கியமாக எடுத்துக் கொண்டவள்.

சரோஜாவிடம் எப்படி சண்டை போடுவது? கருமமே கண்ணாயினாக இரவு முழுவதும் கண்துஞ்சாமல் ரிஹர்சல்கள் செய்து, வீராவேசத்தோடு 'டாய்' என்று போர்வீரன் மாதிரி கத்தியை சுழற்றிக்கொண்டு களத்தில் குதித்தால், அதை கொஞ்சம் கூட அன்கண்டுகபிளாக இருந்து, என்ன சின்னப் புள்ளத்தனமாக இருக்குன்னு ஒரு ப்ளெயின் லுக் விட்டால் என்ன ஆவது? இம்சை அரசன் 23ம் புலிகேசி லெவலுக்கு நான் ஆனதுதான் செம காமெடி.

ஒவ்வொன்றாய் வருகிறேன். பல கல்யாணங்களில் காப்பியில்தான் சண்டை ஆரம்பிக்கும். அதை நம்பி, "தூ... காப்பியா இது ? இல்லே, காப்பி பாத்திரம் அலம்பின தண்ணியா?" என்று கத்தி விட்டு பார்த்தால், ஏதோ இமாலய தவறு செய்துவிட்டவளாக கைகள் நடுங்க, "அப்படியா. கொஞ்சம் பொறுங்க. நல்ல காப்பி கொண்டு வர்றேன்." என்று சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் ஓட, டெண்டுல்கர் முதல் பந்தில் அவுட்.

அதனால் என்ன? உடனே அடுத்த அஸ்திரம். "ஆமா, என்னிக்கி காப்பி நல்லா போட்டிருக்கே. உன் மூஞ்சி." இதற்கு நிச்சயம் கோபம் வரப் போகிறது.

பாதி தூரம் போனவள், திரும்பிப் பார்த்து, " ஏங்க? என்ன ஆச்சு? ராத்திரி சரியா தூங்கலையா? யார் மேலயோ இருக்கும் கோவத்த என்கிட்டே ஏங்க காட்டுறீங்க." போய்விட்டாள். இங்கே ரன் அவுட்.

'உன் மேலத்தாண்டீ' என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் அது மெல்லினமாக இருக்காது. கிச்சனுக்குள் துரத்திக் கொண்டு போய் அடுத்தடுத்த சீண்டல்களில்... ம்ஹ¤ம்.. அசரவில்லை. ஒரு கட்டத்தில் என் பிடுங்கல்கள் அதிகமாகிப் போய் அழ ஆரம்பிக்க, எனக்குள்ளும் அழுகை வர, இண்டர்வல் விட்டுவிட்டேன். 'டேய் ஆத்மா. ரூட்டை மாத்து.' ஐடியா வறட்சியில் தடுமாறினேன். எது எதற்கோ புத்தகம் எழுதுகிறார்கள். இதற்கு எழுதியிருந்தால் டா வின்சி கோட் தோற்று போயிருக்கும்.

ஒன்பது மணிக்கெல்லாம் என் அழகான ராட்க்ஷசி சுடச் சுட மொறு மொறு தோசையை அதன் பக்க வாத்தியங்களோடு கொண்டு வந்து நீட்டினாள். ஐடியா! அம்மா வந்தாள். என்னதான் சொந்த அத்தை என்றாலும் மாமியார் அல்லவா?

"என்ன செய்யி. என் அம்மா சுடற தோசை மாதிரி செய்ய உனக்கு வராது" எப்படி கும்ளே கூக்ளி !

"ஆமாங்க. நானே உங்க கிட்டே சொல்லணும்னு இருந்தேன். ஒடனே ·போன் போட்டு அத்தைய வரச் சொல்லுங்க. ரொம்ப நாளாச்சு. எனக்கும் தோசை, அடையெல்லாம் சுட கத்துகிட்ட மாதிரி ஆச்சு".

போச்சு. எனக்குள் கண்ணாடிக் கோட்டை தடதடவென சரிந்தது. கிரேசி மோஹன் பாணியில் 'என்ன எழவுடா இது' என்று சொல்லத் தோன்றியது. அம்மா செண்டிமெண்டே எடுபடாத போது நாத்தனார் செண்டிமெண்ட் எப்படி எடுபடும்? அடுத்த வாரம் வரப்போகிற அவள் பிறந்த நாளுக்காக ரகசியமாக வாங்கி வைத்திருந்த காஸ்ட்லியான ஜோதிகா புடவையை என் தங்கை கல்யாணிக்கு கொடுக்கப் போகிறேன் என்று அரை மனசோடுதான் சொன்னேன். அதுவும் சானியா எதிர் கொண்ட செரீனா மாதிரி ஆகிவிட்டது.

விட்டால் போதும் என்று ஆபீஸ் வந்துவிட்டேன். கிருஷ்ண பரமாத்மா சாரங்கன் விஸ்வரூபம் எடுத்தான். "நீ சுத்த பேக்குடு. (தேவையா?) டேய். சண்டைக்கான நுணி லேசுல கிடைக்காது. தேடணும்டா. நூல் கண்டு நுணியத் தேடாம உன் இஷ்டத்துக்கு கட் பண்ணி இழுக்கக் கூடாது. போ. நல்லா ஹோம் வொர்க் செய். வெய்·புக்கு எந்த விஷயம் ரொம்ப பிடிக்கும்னு பார்த்து, அதுல சீண்டுடா, மடையா (போதும்டா, சாமி!)."

முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலென்ன? இரண்டாவது இன்னிங்ஸில் சென்சுரிதான். மூஞ்சியில் மூட் அவுட்டை தக்க வைத்துக் கொண்டே ஐடியாவுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி அலைந்தேன். பேப்பரை புரட்டி... மேஜை டிராயரில் தேடி... ·ப்ரிட்ஜை திறந்து பார்த்து.. டிவி....

யெஸ். கிடைத்து விட்டது. சப்பை மேட்டர்தான். ஆனால் ஒர்க்கௌட் ஆகும். சரியாக ஆறரை மணியானதும் சரோ டிவியை போட, விடு ஜூட். "இனிமே இந்த வீட்ல சீரியலே கிடையாது" ரிமோட்டை பிடுங்கி, சிவப்பு பட்டனை அழுத்தினேன். அது 'க்யிக்' என்ற சத்தத்தோடு மௌனமானது.

தீபாவளி பட்டாசில் சுறுசுறுவென தீப்பிடித்து கொண்டே வந்து கடைசியில் பாரம் தாங்காத வண்டி மாடுடாக உம்ம கொட்டானாகி எரிச்சலைத் தருவது ஒரு வகை. இரண்டாவது, 'பிசற்ட்' 'பிசற்ட்' என்று அடிபட்ட கரப்பான் பூச்சி மாதிரி ஆறஅமர இழுத்துக் கொண்டே போய், இது தேறாது என்று நினைக்கும் போது காதை பிளக்கும் ஓசையில் வெடித்து தூள் கிளப்பும். சரோ இரண்டாவது வகையில் வந்தாள். ஆனந்தத்தை அரை மனசோடு விட்டுக் கொடுத்து விட்டு சட்டி மாதிரி மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு பால்கனிக்கும் கிச்சனுக்கும் அலைந்தாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து முஹூர்த்தம் டைட்டில் சாங்க் அலைஅலையாய் வர, முணுமுணுக்கத் தொடங்கினாள். கொஞ்சம் கெஞ்சிப் பார்த்தாள். ம்.. ஹ¥ம். இது தேறாது என்று இருந்த போது, வந்ததே பாருங்கள் கோபம்...

ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மாதிரிதான் எங்கள் சண்டை ஆரம்பித்தது. "எனக்கு ரோஜா பார்க்கணும். உங்களுக்கு பிடிக்கலைன்னா பெட் ரூமுக்கு போய் கதவை சாத்திக்குங்க. நான் பார்க்கத்தான் போறேன்."

"கூடாது" டிவிக்கு குறுக்கே எக்ஸ் மாதிரி நின்று கொண்டேன். 'பார்ப்பேன்' 'கூடாது' என்பதை அடுத்தடுத்து ஐந்து முறை கூட்டிக் கொள்ளுங்கள்.

"இது எங்கப்பா வாங்கிக் கொடுத்தது. நான் பார்ப்பேன்" என்னை தள்ளி விட்டு தீர்மானமாக டிவியை போட எத்தனித்தாள்.

"அப்படியா? உங்க அப்பாவோட ஓட்டை டிவிய எடுத்துக்கிட்டு அங்கயே போய் பாரு. இப்ப இங்க டிவிய போட்ட ஒரு கொலை விழும். ஆமா. தெரிஞ்சுக்க."

சிவப்பு துணியை கண்ட ஸ்பெயின் காளையாக ஆனாள் சரோ. புழுதி பறக்க மகா யுத்தம் தொடங்கி விட்டது. பற்றி எரியும் வைக்கோல் போர் அளவுக்கு கோபம் கொப்பளிக்க திகட்ட திகட்ட சண்டையோ சண்டை. ஏ ஒன் சண்டை.

"உங்களுக்கு எல்லாம் செஞ்சு செஞ்சு கொழுப்பு அதிகமாயிடுச்சு. அதான் துள்ளறீங்க. நான் இல்லாம ஒரு மாசம் இருந்து பாருங்க. அப்ப என் அருமை தெரியும்." விறுக் விறுக்கென்று ·போனை எடுத்து பட்டன்களை தட்டினாள். தம்பியை வரச் சொன்னாள். "டேய்! வர்றதுதான் வர்ற. கோலங்கள் ஸ்டார்ட் ஆகறத்துக்கு முன்னால வா. சீக்கிரம். இன்னிக்கு அபிக்கு என்ன ஆச்சோ தெரியலையே?"

மச்சினன் சேது வந்தான். என்னை அலட்சியமாக பார்த்தான். அக்காவை அழைத்துக் கொண்டு போய்விட்டான். போகும் போது அவன் அப்பா என்கிற என் மாமாவை ஞாபகப் படுத்திவிட்டுப் போனான். ஜெயித்து விட்டோம் என்று துள்ளி குதித்த குத்துச் சண்டைக்காரன் கயிறு தடுக்கி கீழே விழுந்த மாதிரி ஆனேன். எனக்கு மாமா என்றால் இன்றைக்கும் பயம். கலாபவன் மணி மாதிரி முக பாவனைகளிலேயே மிரட்டுவார். மாப்பிள்ளையாயிற்றே மரியாதை துளியும் கிடையாது. கீழே நெருப்பை மூட்டி அதற்கு மேல் நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க கலாபவன் மணி மாமா கெக்க பிக்கெ சிரிப்புடன் குட்டிக்கரணம் அடித்து சுற்றி சுற்றி வருவது போல இருந்தது. சரோவை அனுப்பியாயிற்று. மாமாவை எப்படி சமாளிப்பது? இருக்கவே இருக்கிறான் சாரங்கன்.

ஆபீஸ் வந்ததும் விஷயத்தை சொன்னால் சாரங்கன் முதற்கொண்டு எல்லோரும் பார்ட்டியில் குறியாய் இருந்தார்களே தவிர மணி மாமா மேட்டருக்கு யாரும் ஐடியா தரவில்லை. மனசளவில் நொந்து நூலாகி ஏழு மணிவாக்கில் வீடு திரும்பிய எனக்கு ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி. வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது! சரோ வந்துவிட்டாளா? பீர் பாட்டில்களும் ஆம்லெட் தட்டுகளும் என் கண் முன்னே வந்து மோதி விலக பேக்கிரவுண்டில் சரோ பத்திரகாளியாய் தெரிந்தாள். பின்னங்கால் பிடறி பட இரண்டாவது மாடிக்கு இரண்டே செகண்டில் ஓடி மூச்சிறைக்க நின்றால்...

மச்சினன் சேது வரவேற்றான். "எனக்கு இங்க இருக்க இஷ்டமேயில்ல. அக்காதான் சொல்லிச்சு. அத்தான் மனசு சரியாற வரைக்கும் நீ அங்கன இருந்து ஹெல்ப் பண்ணுன்னு. உங்களுக்கு சமைக்க தெரியாதாம். அப்படியே செஞ்சாலும் சரியா சாப்பிட மாட்டீங்களாம். அதனால என்னை செய்ய சொல்லியிருக்காங்க. எவ்வளவு நல்ல அக்கா. நீங்களும் இருக்கீங்களே..."

இன்னும் அரை மணியில் பார்ட்டி கோஷ்டிகள் வந்துவிடும். முதலில் அவர்களை வந்துவிடாமல் தடுப்பதா இல்லை இவனிடமும் சண்டை போட்டு துரத்தியடிப்பதா என்ற மாறுபட்ட சிந்தனைகள் இரண்டு ஜப்பானிய சுமோக்களாக என் தலைக்குள் நெருங்கி வந்து தொந்தியால் அழுத்த, மயங்கி சரியும் வேளையில் கலாபவன் மணி மாமாவின் பிரும்மாண்ட உருவம் கண்ணுக்குள் தெரிந்தது.