Monday 20 December, 2010

தேவை ஒரு சர்ஜரி


தேவை ஒரு சர்ஜரி
ஷைலஜா பேருந்தைவிட்டு இறங்கியதுமே அவனை கவனித்துவிட்டாள். புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் மீது ஸ்டைலாக சரிந்து கொண்டு ஒரு ஹீரோ லுக் விட்டான்.

பொறுக்கி ராஸ்கல். தினமும் இவனுக்கு இந்த வேலை. நெருங்கிப் போய் நாலு அறை விடலாமா என்று தோன்றியது. அடிக்கப் போய், அது சினிமாத்தனமாக ஆகி..... வேண்டாம்.

அவனை தாண்டிச் செல்ல, முரட்டு பர்ஃயூம் நெடி அவனிடமிருந்து அலையடிப்பது மாதிரி வந்தது. அரைக் கண் பார்வையில் அவன் விரலசைத்து, 'ஹாய்' என்று இளிப்பது தெரிந்தது. பிறகு, அவன் தன் வழக்கமான வேலையை ஆரம்பித்தான். சற்று இடைவெளி விட்டு தன் பைக்கில் பின் தொடர்ந்தான்.

நடையை கூட்டினாள். பின்னால் திரும்பிப் பார்க்கவும் கஷ்டமாக இருந்தது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது? குழப்பமான எண்ணங்கள் அவள் மண்டைக்குள் முறுக்கிக் கொண்டிருந்தன.

ஒரு ஸ்கூடி அவள் அருகில் வந்து நின்றது. நீரஜா! அப்பாடி! பாய்ந்து அதன் பின்னால் ஏறிக் கொண்டாள்.

"தாங்க்ஸ்டி. சரியான சமயத்திலே வந்து காப்பாத்தினே"

"என்னாச்சு ஷைல்? ஏதாவது பிரச்சனையா?"

"நீ கொஞ்ச தூரம் போயேன். நானே சொல்றேன்."

சிக்னலை தாண்டி நீரஜா ஸ்கூட்டியை ஓரம் கட்டினாள். ஸ்விட்ச் போட்ட மாதிரி ஷைலஜா அழத் தொடங்கினாள். "ஷைல்! இது பொது இடம். எமோஷனல் ஆகாதே. விஷயத்தைச் சொல்லு"

ஷைலஜா ஒரு சில கேவல்களோடு எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். "இப்ப நான் என்ன செய்யணும், நீரஜ்? என் அப்பாகிட்டே சொல்லிடட்டுமா? ஆனா, அவர் இந்த பிரச்சனையை விட்டுட்டு என்னை ஆயிரம் கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு"

நீரஜா கொஞ்சம் யோசித்தாள். பிறகு சொன்னாள். "ஷைல், கவலைப்படாதே. நாளைக்கு உன்னோட பஸ்ல வரேன். நீ அவனைக் காட்டு. நான் அவனை டைரக்டா டீல் செய்யறேன்."

மறுநாள் அவன் வழக்கம்போல் பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். நீரஜாவை அவன் கண்டு கொள்ளவேயில்லை. "ஹாய் ஷைல்! உன்னோட பத்தே செகன்டுகள் பேச அனுமதி கிடைக்குமா?"

மிக அமைதியாக வந்து கொண்டிருந்த நீரஜா, திடீரென அவன் இடது கையை பிடித்து முதுகு பக்கம் முறுக்கினாள். கோழிக் குஞ்சு மாதிரி அவள் முன்னால் சரிந்தவனின் கழுத்தை ஒரு பதம் பார்த்தாள். அடுத்து அவள் கால் முட்டியை அவன் தொடையிடுக்கில் பிரயோகிக்க, கலைந்த சீட்டு கட்டு மாதிரி விழுந்தான். விழுந்த வேகத்தில், சுதாரித்து எழுந்து, அடிபட்ட தவளை மாதிரி தத்திக் கொண்டே ஓட்டமெடுத்தான்.

நீரஜா தூசு தட்டுவது மாதிரி தன் உள்ளங்கைகளை தட்டிக் கொண்டாள். "இனிமே அவன்கிட்டேயிருந்து பேச்சோ, பார்வையோ இருக்காது. இனிமே அமைதியோ அமைதி."

"என்னடி, இப்படி செஞ்சுட்ட? நாம போய் அடிதடில இறங்கறது....?"
"ஷைல், எல்லாத்தையும் பொறுத்துக்கணும்னு இருந்திட்டா அது ஏமாளித்தனத்துல முடிஞ்சிடும். ஒரு சில சமயத்தில அமைதி வரணும்னா, நாம ஆயுதங்களை பிரயோகிச்சே ஆகணும், டாக்டர்கள் சர்ஜரி செய்யற மாதிரி. இப்ப நான் இவனுக்கு ட்ரிட்மென்ட் கொடுத்திருக்கேன். மறுபடிம் தேவைப்பட்டா, இதைவிட இன்னும் பெருசா ஒரு சர்ஜரி செஞ்சுடலாம்."
"ரொம்ப தாங்க்ஸ்டி." வெகு நாட்கள் கழித்து ஷைலஜா புன்னகை பூத்தாள்.
(தினமலர் - பெண்கள் மலர் - 27 நவம்பர் 2010)

No comments: