Showing posts with label 12வசந்தம்-தினகரன். Show all posts
Showing posts with label 12வசந்தம்-தினகரன். Show all posts

Wednesday, 7 February 2007

அப்பா


அப்பா

1997 மே 18 வசந்தம் (தினகரன்) ஞாயிறு மலர்

"ஏங்க அப்பாகிட்டே சொல்லச் சொன்னேனே சொன்னீங்களா? நீங்களா சொல்றீங்களா? இல்லை, நானே நேரடியா கேட்டுவிடட்டுமா? இன்னிக்கு தேதி என்ன தெரியுமா? ஜூலை 19. ஞாபகம் வச்சுக்குங்க."

"ஏய் கொஞ்சம் மெதுவா பேசேன்."

"என்ன... என்ன... சொன்னாத்தான் என்ன? நீங்களாகவும் சொல்லமாட்டீங்க. என்னையும் சொல்லவிடமாட்டீங்க"

விஜயா இப்படி திடீரென போட்டு உடைப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பக்கத்து ஹாலில்தான் அப்பா ஈசி சேரில் சாய்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார்.

"என்னடா விஷயம்?" எதிர்பார்த்தபடியே அப்பா கூப்பிட்டார்.

"அப்பா... அது வந்து... நாளைக்கு ஜூலை 20-ம் தேதி. அம்மா இறந்து போன நாள். திடீரென விஜயாவோட காலேஜ் பிரண்ட் அவங்க ஃபேமிலியோட இங்கே வர்றா. இந்த வீடு சின்னது.. அதனால... அன்னிக்கு... இல்லை நாளைக்கு..."

கோர்வையாய் வரவில்லை. உளறிக் கொட்டினேன். ஆனாலும் அப்பாவுக்கு சொல்ல வந்த விஷயம் புரிந்துவிட்டது. கண்களை மூடி 'ஈஸ்வரா' என்று சொல்லிக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்து விட்டார்.

"அப்பா"

அப்பாவுக்கு அம்மா மீது அளவில்லாத ப்ரியம். அந்த காலத்திலேயே ஊரையே எதிர்த்துக் கொண்டு காதல் கல்யாணம் செய்து கொண்டவர். அப்பாவுக்கு எல்லாமே அம்மாதான். அப்போதெல்லாம் அம்மா இல்லாத அப்பாவை யோசித்தே பார்க்க முடியாது. ஆனால் ஒரு கான்ஸரில் சோதனையாக அம்மா போய்விட்டாள். நான் அப்போதுதான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்திருந்தேன். அப்பாவுக்கு பெரிய ஷாக்தான். அப்பா அழவில்லை. ஆர்பாட்டம் பண்ணவில்லை.

ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து ஜூலை 20-ம் தேதி செய்து விடுவார். அதிகாலையிலேயே எழுந்து குளித்து, பட்டு வேஷ்டி பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு கருப்பு சால்வையை போர்த்திக் கொள்வார். அம்மா அந்த சால்வையைத்தான் தனது கடைசி காலங்களில் உபயோகப்படுத்தினாள். சுமார் மூன்று மணி நேரம் பூஜை செய்வார். கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டும். அன்று முழுவதும் எதுவும் சாப்பிடமாட்டார். பேசமாட்டார். பார்ப்பவர் மனதைப் பிழியும். கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்ப்பார். பூஜை முடிந்ததும் பாராயணம் செய்வார்.

சாயந்திரமாய் ஸ்நேகாலயா என்கிற அனாதை ஸ்ரமத்துக்குப் போய் குழந்தைகளுக்கு புதுத் துணிகள் கொடுத்துவிட்டு வருவார். இரவு எட்டு மணிக்கெல்லாம் தூங்கிவிடுவார்.

மறுநாள் சர்வ சாதாரணம். மறுபடி அடுத்த ஜூலை 20-ம் தேதிதான். விஜயாவுக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லை. வெறும் கூத்து, ஷோ, சுய பச்சாதாபம் தேடுதல் என்று என்னவோ சொல்லுவாள். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்டாளில்லை.

"அவ பிரண்ட் ஏழு, ஏழரைக்கெல்லாம் வந்து விடுவாளாம். வேணுமின்னா நான் பக்கத்து வீட்டு சாவி வாங்கித்தரேன். அது காலியாத்தான் இருக்கு. உங்களுக்கு சகல வசதிகளையும் அங்கே பண்ணிடறேன். இந்த வீடு ரொம்ப சின்னது... அதான்... அதைத் தவிர அவர்களெல்லாம்..."

அப்பாவின் மெளனத்தை என்னால் தாங்கமுடியவில்லை. எல்லாம் இந்த விஜயாவால்தான். என்ன செய்ய? பிடிவாதக்காரி.

அப்பா சட்டென்று எழுந்தார். உள்ளே சென்றவர் பெரிய பை ஒன்றைக் கொண்டு வந்தார். "சிவா நீ நாளைக்கு ஒரு காரியம் செய்யணும். காலைலே ஆபீஸ் போகும் போது இந்த பையை ஸ்நேகாலயாவிலே நான் சொன்னேன்னு கொடுத்துடு. எனக்கு ரொம்ப தள்ளாமை வந்துடுத்து. முன்ன மாதிரி இப்ப முடியலை. என்னவோ ஜூலை 20-ம் தேதி அவ நினைவு வந்து என்னை ஆட்டறது. ஆகட்டும். மத்தவாளுக்கு அது ஷோவாப் படலாம். போனவ போயாச்சு. புலம்பி என்ன பிரயோஜனம்? நான் என்னவோ முட்டாப் பய மாதிரி ஷோ பண்ணிண்டு..."

"உங்களை ஸ்நேகாலயா போக வேண்டாம்ன்னு யார் தடுத்தா? சால்வைய போர்த்திண்டு, கண்ணீர் விட்டுண்டு, எல்லோரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னுதானே சொல்ல வந்தது. நாம் என்ன செய்யறோம்கிறதவிட அடுத்தவா அதை எப்படி பார்க்கிறாங்கிறதுதான் முக்கியம்." விஜயா உள்ளே இருந்து கொண்டே பேசினாள்.

"தோ பாரும்மா. நீ குஷாலா உன் பிரெண்டை கூட்டிண்டு வா. தோ பாருடா... நீ பக்கத்து வீட்டுச் சாவியெல்லாம் வாங்க வேண்டியதில்லை. நான் எல்லாத்தையும் விட்டுடப் போறேன். ஆச்சு... அறுபத்தியெட்டு வயசு ஆயிடுத்து. அவ போயே ஒரு மாமாங்கம் ஆயாச்சு. இன்னும் சொச்ச காலத்தை இப்படியே ஓட்டிடுவேன்." அப்பாவுக்கு மூச்சிரைத்தது.

திடீரென தள்ளாடியவாறே வேகமாக எழுந்து டக்கென்று இரு கைககளையும் கூப்பியவாறே, "நாளைக்கு என் கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது. போதுமா? போய்த் தூங்கு. நாளைக்கும் ஜூலை 19 தான். ஜூலை 20தாவது மண்ணாங்கட்டியாவது?" கடகடவென்று பாயை விரித்தார். போர்த்திக் கொண்டு படுத்துவிட்டார். எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. விஜயாவின் மீது கோபம் கோபமாக வந்தது. பதில் பேசினால், இன்னும் ஓங்காரமாய் நாலு வார்த்தைகள் பேசுவாள்.

கனத்த மனத்தோடு வந்து படுத்துக் கொண்டேன். தூக்கம் சரியாய் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தும் நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. தாகம் எடுக்கவே, தண்ணீர் குடிக்க கிச்சனுக்குப் போனேன். ஹாலில் எட்டிப் பார்த்தேன்.

அப்பா தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவால் எப்படி தீர்மானிக்க முடிந்தது? ஆங்காரமா? எனக்குள் குற்ற உணர்ச்சி மேலிட்டது. அப்பா மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? வந்து படுத்தேன். கண்ணைச் சொருகியது.

விஜயா என்னை எழுப்பினாள். காலை ஆகிவிட்டிருந்தது. "என்னங்க... கொஞ்சம் எழுந்து வாங்களேன். "

"என்ன ஆச்சு விஜயா? அப்பா குளிச்சுட்டு உட்கார்ந்திருக்கறாரா?"

"இல்லீங்க... அப்பா போயிட்டாருங்க"

மை காட்! ஓடிப் போய் பார்த்தேன். நெடுசாண் கட்டையாய் கிடந்தார். உடம்பு சில்லிட்டிருந்தது. ராத்திரியே உயிர் பிரிந்திருக்க வேண்டும்.

என் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வராது என்று அப்பா சொன்னது காதில் ஒலித்தது. அவர் கண்களில் கண்ணீர் இல்லை. எங்கள் கண்களில்தான் கண்ணீர் நிரம்பியிருந்தது, விஜயா உள்பட.

Monday, 5 February 2007

முற்பகல் செய்யின்


முற்பகல் செய்யின்

1997 மார்ச் 02 வசந்தம் (தினகரன்) ஞாயிறு மலர்

சின்னதுரை பஸ்சுக்காக காத்திருந்தார். பஸ் வரவில்லையே என்ற கவலையை விட பணப் பிரச்னைதான் பெரிய கவலை. அவருக்கு ஒரு தனியார் கம்பெனியில் பியூன் வேலை. சொற்ப சம்பளம். ஆனால் குடும்பம் பெரிசு. மூத்த மகள் பிரசவத்துக்கு வந்திருக்கிறாள். தீபாவளி, பொங்கல் கடன்களே கழுத்து வரை இருக்கின்றன.

சின்னதுரைக்கு சம்பளத்தை தவிர கிடைக்கக்கூடிய ஒரே வருமானம் பயணப்படி. வாரத்தில் மூன்று நான்கு முறை தொலைவில் இருக்கும் பாக்டரிக்கு சில காகிதங்களை எடுத்துச் செல்ல பயணப்படி கிடைக்கும். இப்போது அந்த விஷயமாகத்தான் பஸ்சுக்கு காத்திருக்கிறார்.

அப்போதுதான் அதை கவனித்தார். எழுபது வயசான கிழவர் பிளாஸ்டிக் கூடையிலிருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்துப் பார்த்தார். நூறு ரூபாய் தாள்கள்! கிழவர் மறுபடியும் பையை சுருட்டி கூடைக்குள் வைத்து விட்டார். சரியான முட்டாள்! இவ்வளவு பணத்தை யாராவது கூடையில் வைப்பார்களா?

பணம்! ஆமாம்! உடனடியாகத் தேவை. கடனுக்குக்கூட யாரும் இப்போது தர மாட்டார்கள். யாரும் கவனிக்காதபோது எடுத்து விட்டால் என்ன? சே...சே... திருடுவது தப்பு. கொஞ்சம் தள்ளிப்போய் நின்று கொண்டார். மீண்டும் அந்த ரூபாய் கண் முன்னால் விரிந்தது. இதை விட்டால் வேறு வழியே இல்லை என்று பிசாசு மனசு கூச்சலிட்டது.

பஸ் வந்து விட்டது. நல்ல கூட்டம். பாய்ச்சலாய் பாய்ந்து பஸ்சில் ஏறினார். படிக்கட்டின் பின் சீட்டில் உட்காந்தவரிடம் தனது தோல் பையைக் கொடுத்தார். ஃபுட்போர்டில் தொங்கும் காலேஜ் பையன்கள் உள்ளே அழுத்த பஸ்சுக்கு மத்தியில் தள்ளப்பட்டார். நிமிர்ந்து பார்த்ததும் ஆச்சர்யம்!

அந்த கிழவர் அவருக்கு முன்னால்! அந்த பிளாஸ்டிக் கூடை வாய் பிளந்து மஞ்சள் பை எடுக்கும் வகையில்... பிசாசு மனசு எடு... எடு... என்றது. பஸ் நிற்காமல் போய்க் கொண்டிருந்தது. பஸ் பாக்டரியை அடைய அரை மணியாவது ஆகும். முன்னும் பின்னுமாக பயங்கரமாக குலுங்கியது. எடுக்கலாமா? இல்லை... இப்போது வேண்டாம். சிறிது நேரம் கழித்து...

அப்படியே பலமுறை யோசித்து கடைசியில் ஒரு குலுக்கலில் பையை எடுத்து விட்டார்! வியர்வை வெள்ளம். கை, கால்கள் லேசாக நடுங்கின. நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. யாராவது பார்த்திருப்பார்களோ?

பஸ் குலுக்கலுடன் நிற்கவும், நிறைய பேர் இறங்க ஆரம்பித்தனர். மாட்டிக் கொண்டு விட்டால்? சட்டென்று இறங்கி எதிர்பக்கம் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தார். பஸ் போய் விட்டது. அப்பாடி! சின்னதுரைக்கு உடம்பு முழுவதும் உஷ்ணம். ஒருவித திருப்தி.

திடீரென ஞாபகம் வந்தது. அந்த தோல் பை! ஆபீஸ் பேப்பர்கள் அடங்கிய தோல்பை! ஐயோ! பின் சீட்டில் கொடுத்ததை இறங்கும்போது இருந்த அவசரத்தில் வாங்க மறந்து விட்டேனே! ஷாக் அடிக்காத குறை. முகம் வெளிறிப் போயிற்று. செய்வதறியாமல் பேந்த பேந்த முழித்தார். திரும்பி பஸ் ஸ்டாப்புக்கு ஓடி வந்தார். வாய் விட்டு அலறினார். பஸ் ஸ்டாப்பில் இருந்தவர்கள் விசாரித்தார்கள். அழுகையூடே விவரங்கள் சொன்னார்.

"சார் அதில் பணம் வச்சிருந்தீர்களா?"

"இல்லையே! ஆபீஸ் பேப்பருங்க. முக்கியமான பேப்பருங்க. இது கிடைக்கலைன்னா வேலை போயிடுங்க."

"யார்கிட்டே கொடுத்தீங்கன்னு ஞாபகம் இருக்கா?"

"இல்லையே" கேட்டவர்கள் விவரங்கள் அறிவதில்தான் மும்முரமாக இருந்தார்கள். உதவுகிறவர்கள் யாருமில்லை.

"இதுக்குத்தான் முன்னே பின்னே தெரியாதவங்ககிட்டே பையை கொடுக்கக் கூடாது. இப்படித்தான் நான் ஒருமுறை நாகர்கோவில் பஸ்சுலே..."

"கூட்டம் ஜாஸ்தியா இருந்தா அடுத்த பஸ்சுலே போறதுதானே பெரியவரே?"

"ஆபீஸ்லே ஆட்டோல போறதுக்கு பைசா தரப்படாதோ? இவ்வளோ வயசானவரை பஸ்சுலே அனுப்ப எப்படி மனசு வந்ததோ தெரியலே"

"தோல் பைன்னு சொன்னாரு. தோல் பையே இருநூறு ரூபா தேறும். கிடைச்சவன் விடுவானா? பேப்பர்களை கடாசிட்டு பையை சுட்டுடுவான்."

"ஆமாம். போனது போனதுதான்."

ஆளுக்கு ஆள் கமெண்ட் அடித்தார்கள். யாரோ ஒருவர் "சார் நீங்க உடனே பஸ் புடிச்சு டெப்போவுக்கு போங்க. பஸ் நம்பரைச் சொல்லி டிக்கெட்டை காட்டுங்க. அந்த ஆள் கண்டக்டரிடம் கொடுத்தாலும் கொடுத்திருப்பான்."

எதிர்பக்க பஸ் பிடித்து டிப்போ போய் அலையோ அலையென்று அலைந்தார். அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்தார்கள். விவரங்கள் கேட்டு வெறுப்பேத்தினார்கள். கடைசியில் யாரோ ஒருவர் இரக்கப்பட்டு விவரங்கள் குறித்துக் கொண்டு மறுநாள் காலையில் பத்து மணிக்கு வரச் சொன்னார்.

வெளியே வந்தார். மண்டை கனத்தது. வேலை நிச்சயம் போகப் போகிறது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. மஞ்சள் பை கையில் லேசாக இருந்தாலும் கனத்தது. முள்ளாய் குத்தியது. பிரித்து, எண்ணியதில்... இரண்டாயிரத்து ஐநூறு!

உள்ளேயிருந்து ஒரு கடிதம் கீழே விழுந்தது. எடுத்துப் பிரித்தார். ஒரு அம்மா தன் பையனுக்குப் பாசத்துடன் லெட்டர் எழுதியிருந்தாள். பையன் அருகில் உள்ள காலேஜில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். வறுமைப்பட்ட குடும்பம். நிலத்தை ஒத்தி வைத்து காலேஜ் ஃபீஸ் கட்ட அனுப்பியிருக்கிறாள்.

சின்னதுரைக்கு தன்னை அடிக்காத குறை. என்ன காரியம் செய்து விட்டேன். இப்போது என் குடும்பமும் குட்டிசுவராகப் போகிறது. பணம் தொலைந்ததில் அந்த குடும்பமும் தள்ளாடப் போகிறது. என்ன ஆனாலும் பரவாயில்லை. பணத்தை அந்த பையனிடம் சேர்ப்பித்து விட வேண்டும்.

அங்கே இங்கே விசாரித்து காலேஜ் போய் ஹாஸ்டலில் அந்த பையன் ரூமை கண்டுபிடித்து விட்டார். பையை தவறவிட்ட அந்த பெரியவர் தலையில் கை வைத்தவாறு உட்காந்திருந்தார். பணத்தை கொடுத்ததும் கிழவர் வயதையும் மீறி சின்னதுரையின் கையை பிடித்துக்கொண்டு கதறி அழுதார். உடனிருந்த காலேஜ் நண்பர்கள் சின்னதுரையின் நேர்மையை வாயாரப் புகழ்ந்தனர். பஸ்சில் கீழே கிடந்ததாக சொல்லியிருந்தார். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு பாராட்டும் முள்ளாய் குத்தியது.

வீடு திரும்பினார். யாரிடமும் எதுவும் பேசவில்லை. நாளை காலையில் ஆபீஸ் போய் முதலாளி காலில் விழுந்து எப்படியாவது சமாளிக்க வேண்டும்.

காலையில் வழக்கம்போல் ஆபீஸ்னுள்ளே நுழைந்ததும் அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. ரிசப்ஷனில் ஒருவர் சோபாவில் உட்காந்திருந்தார். அவர் மடியில் அதே தோல் பை! சின்னதுரை 'முருகா' என்று உரக்கச் சொன்னார்.