Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, 19 February 2012

எதிரும் புதிரும்


"ம்.....பேஷண்ட் பேரு சொல்லுங்க" ரிசப்ஷனில் பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்ஸ், கம்ப்யூட்டர் மானிடரை பார்த்துக் கொண்டே ஹிந்தியில் கேட்டாள்.
ராஜாராமன் சொன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தார். பதில் வராமல் போகவே, திடீரென நிமிர்ந்தாள்.
நெற்றிக் கண் பார்வை.
"ம்.... அது வந்து.... பிரியம்வதா..... ராஜாராமன்......"
குனிந்தாள். நான்கு நொடிகள் கழித்து, மீண்டும் நிமிர்ந்தாள். இந்த முறை ஆங்கிலம். "ரூம் நம்பர் 302. மூனாவது மாடி. ..... ஒன் மினிட்... அவங்க பேரு பிரியம்வதா ராஜகோபால்.... நீங்க கேட்டது....."
ராஜாராமனுக்கு திடீரென உறைத்தது..... "ஆமாம்....அவங்களேதான்....."
அவளேதான் என்று நாக்கு வரை வந்ததை, கடைசி நொடியில் மாற்றிக் கொண்டார். "அவங்க பிரியம்வதா.... நான் ராஜாராமன் .... ரெண்டையும் சேர்த்து சொல்லிட்டேன். ஸாரி" சே! என்ன அசட்டுத்தனம்.
அவள் ராஜாராமனை கேள்வியாக பார்த்தாள். "நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?"
ராஜாராமனுக்கு என்ன சொல்வது? எப்படிச் சொல்வது என்று புரியவில்லை? திடீரென, இங்கு வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது. எல்லை தெய்வமே ஆயிரம் எதிர் கேள்வி கேட்கிறதே?
"... ம்.... அது வந்து..." தடுமாறினார்.அவளுக்கு பின்னால் கைகளை உயர்த்தி ஆசிர்வதிக்துக் கொண்டிருந்த ஏசுவின் மீது பார்வையை ஓட்டி 'ஏதாவது ஐடியா கொடேன்' என்பது மாதிரி மனதுக்குள் இறைஞ்சினார்.
"சொல்லுங்க சார்.... ப்ரெண்டா.? இல்லே, ரிலேட்டிவ்வா?"
"...மொதல்ல ப்ரெண்ட்... அப்பறமா.... ரிலேட்டிவ்.... இப்ப பிரெண்ட்..."
அவளுக்கு சுத்தமாக புரியவில்லை என்பதற்கு நெற்றியை சுருக்கினாள். அதற்குள் பின்னாலிருந்து 'வாங்கோ' என்ற சத்தம் கேட்டது. ராஜாரமன் சட்டென திரும்பவும்...
கல்யாணி மாமி! அப்பாடி!
"என்ன மாமி. எப்படி இருக்கேள்? சௌக்கியமா? ஹாஸ்பிடல்ல என்ன சௌக்கியமான்னு கேக்கறது தப்புதான். நீங்கதான் பேஷண்ட் இல்லையே. அதுனால பரவாயில்ல"
கல்யாணி மாமி சிரித்தாள். "இவாள்ட என்ன கேட்டுண்டு இருந்தேள்?"
"இவ நான் யாருன்னு கேக்கிறா? அப்படி சொன்னாத்தான் உள்ள விடுவா போலிருக்கு."
மாமி இரண்டடி முன்னே வந்தாள். "இங்க பாரும்மா. இவர் என்னோட மாப்ளே. போலாமில்லையா?"
"ஆண்டி. விசிட்டர் டைம் முடிஞ்சிருச்சு. பெரிய டாக்டர் வர்ற நேரம். சீக்கிரமா பார்த்துட்டு போகச் சொல்லுங்க. கூட்டமா இருந்தீங்கன்னா எனக்கு வேலை போயிடும்"
படபடவென எண்ணெயில் விழுந்த ஆப்பம் மாதிரி புரியாத ஹிந்தியில் பொறிந்தாள். மாமி அவளை நோக்கி ஒரு வெற்று பார்வையை உதிர்த்து மௌனமாக தலையாட்டிவிட்டு, லிஃடை நோக்கி நடந்தாள்.
"இந்த காலத்து பொண்னுகளெல்லாம் ராட்சசிகள்" மாமி கீழ் பார்வை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
ராஜாரமனுக்கு சிரிப்பு வந்தது. "மாமி. இதை உங்க பொண்ணுக்கு முன்னால சொல்லாதீங்கோ. உங்களை கீசகனை வதம் செஞ்ச மாதிரி ரெண்டா கிழிச்சு போட்டுவா. பொம்மனாடி ராட்சசிகள்னா, இந்த ஆம்பிள்ளைகளெல்லாம் அரக்கர்கள்னு சொல்லுவா"
"இப்ப அவதான் கிழிஞ்சு கெடக்கா. கர்பப்பையை எடுத்தாச்சு. பையாப்ஸிக்கு போயிருக்கு. கான்சரா, என்னேன்னு தெரியலை........எனக்கென்ன பயம்? தாராளமா அவகிட்டேயே சொல்லுவேன். சொல்லியிருக்கேன். இப்பல்லாம் முன்னமாதிரி நான் சும்மா இருக்கறதுல்லே. நான்னா ஒரு வாரத்துக்கு வலிக்கிறமாதிரி திருப்பி கேட்டுடறேன். தைரியம் வந்துடுத்து."
திடீரென ராஜாரமனுக்கு ஞாபகம் வந்தது. அட சட். ஒண்ணுமே வாங்கிக் கொண்டு வரவில்லையே! வழக்கமாக எல்லோரும் வாங்கிக் கொண்டு வரும் ஆரஞ்சு பழம், ஆப்பிள், ஹார்லிக்ஸ் பாட்டில்... குறைந்த பட்சம் அவளுக்கு பிடித்த பெர்க் சாக்லெட்.... நல்லவேளை இப்போதாவது ஞாபகம் வந்ததே. ஒரு வேளை நேரே போயிருந்தால்..... "அம்மா. உன்னோட அருமை மாப்பிள்ளை மாறவே இல்லை. கைய வீசிண்டு வந்துட்டு, நீ குடுத்த காப்பியை குடிச்சுட்டு போயிட்டேர். ரொம்ப பெருமையா இருக்கு. மெச்சிக்கோ"
லிஃட் தரைக்கு வந்து தன்னை இரண்டாக பிளந்து கொண்டது. ஒவ்வொருவராக வெளியேர தொடங்கினர். ராஜாராமனுக்கு பின்னால் இருந்தவர்கள் வெப்ப மூச்சுக் காற்றுடன் உள்ளே பாய்வதற்கு தயாராக இருந்தனர். ராஜாராமன் ஒரு அரை வட்டம் அடித்து, உடனடியாக க்யூவை விட்டு வெளியே வரவும், மாமி கலவரமானார்.
"மாமி. ஒரு நிமிஷம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்ரேன்......காரை சரியா லாக் பண்ணலேன்னு நெனைக்கறேன். சரியா தெரியலை. பார்த்துட்டு தோ வந்துடறேன்...... ஆமா நீங்க எதுக்கு கீழே வந்தேள்....."
"அதுவா. ஒண்ணுமில்லே. ப்ரியாவுக்கு மருந்து வாங்கனும். இங்கேயேதான் எதிர் பில்டிங்கல இருக்கு. நான் வாங்கிக்கறேன். நீங்க போயிட்டு நேர 302க்கு வந்துடுங்கோ"
மாமி கையில் ஒரு நீள சீட்டு இருப்பதை அப்போதுதான் கவனித்தார்.
"இல்லே. அந்த சீட்டை இப்படி கொடுங்கோ. நான் பேஸ்மெண்ட் போயிட்டு, மாத்திரை மருந்த வாங்கிண்டு வந்துடறேன். நீங்க ரூமுக்கு போங்கோ."
கடைசி ஆளாக மாமியை லிஃட்டுக்குள் திணித்தார். மாமி என்ன ஏது என்று முடிவு எடுப்பதற்குள் லிஃட் கதவுகள் மூடிக் கொண்டன.
ராஜாராமன் தரை தளத்தின் மைய பகுதி வரை வந்து அங்கேயே நின்று சிறிது நேரம் யோசிக்கலானார். நேற்று காலையில்தான் டெல்லி வந்தார். ஆபீஸ் விஷயமாக குர்கானில் நான்கு நாள் மீட்டிங். கனாட்பிளேசில் ரூம் போட்டிருந்தார்கள். ராத்திரி எட்டு மணிக்கு அப்பா போன் செய்தார்.
"ராமா, ப்ரியா ஹாஸ்பிடலைஸ்டு தெரியுமா?"
"தெரியாது. தெரிஞ்சுக்கணும்னு அவசியமும் இல்லே."
அப்பா சில நொடிகள் பதில் கொடுக்கவில்லை. "ஏன்டா. எவ்வளவு நாள் தனியா இருக்கப் போற? நான் போய்டேன்னா, சீர் பட்டு போகப்போறே."
"கமான்ப்பா. எத்தனையோ பேச்சலர்ஸ் தனியாதான் இருக்காங்க. அவங்க சீர் கெட்டா போயிட்டாங்க? அம்மா போனதுக்கு அப்பறம் நீங்க தனியாதானே இருக்கேள். கெட்டா போயிட்டேள். உங்களுக்கு ஏதோ ஒன்னு நடக்கனும். அத சுத்தி வளைச்சு பேசறேள். அதான் டைவர்ஸ் வரைக்கும் போயாச்சே. இனிமே என்ன இருக்கு?"
"ஏய். கோர்ட்டுல தீர்ப்பாகற வரைக்கும் அவ ஒன்னோட பொண்டாட்டிதான். அது கெடக்கட்டும். கல்யாணத்துக்கு முன்னால நாலு வருஷம் பிரண்ட்ஸா இருந்திருக்கே. என்னமா வழிஞ்சுருக்கே. அதுக்காவாவது.... அது சரி... அவ என்னடா பெரிய தப்பு பண்ணிட்டா? அவளுக்கு ஒரு தனி ஐடெண்ட்டிடி வேணும்னு எதிர்பார்த்தா. அது தப்பா?"
"அப்பா, நான்தான் லீட் கிடார். நான் என்ன வாசிக்கறேனோ அதுக்கு ஒத்த மாதிரி அவ வாசிக்கனும். அவ தனியா இன்னொரு ஆர்கெஸ்ட்ரா நடத்தக்கூடாது. உனக்கு இதெல்லாம் புரியாது. வீட்ல ரெண்டு ஹஸ்பெண்டா இருந்தோம். தேர் வாஸ் நோ வைஃப். வேற ஏதாவது பேசு."
"சரி. பேசறேன்..... ம்.... மன்மோகன் சிங் சௌக்கியமா?"
அப்பா ரொம்பவும் விட்டி காரெக்ட்டர். "இந்த கிண்டல்தானே, வேண்டாங்கிறது."
"நீ வைஃபா இருந்திருக்க வேண்டியதுதானே. அதை விடு......நான் சொல்லறது கொஞ்சம் கேளு. யு கோ வித் ஓப்பன் மைன்ட். ஒரு பொக்கே வாங்கிக்கோ. கெட் வெல். வித் ரிகார்ட்ஸ். சந்திரமௌலின்னு கார்டு போட்டு அவ கிட்டே கொடு. அவ நல்ல பொண்ணுடா. என்ன மக நட்சத்திரம்? அப்படிதான் கொஞ்சம் அப்பர் ஹாண்டா இருப்பா..."
அப்பா சீரியஸ்ஸாக பேசினால் இங்கிலீஷ் புகுந்து விளையாடும். "அப்பா. யூ ஆர் சைல்டிஷ்."
"இப்பவும் ஒண்ணும் குடிமுழுகிப் போகலை. வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்ல ஈஷோ ஈஷிண்டு நீங்கதான் காதல் செஞ்சிங்க. வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்ல சண்டை போட்டீங்க. டைவர்ஸ் நோட்டீஸ் கொடுக்கறதுக்கு முன்னால என்னை ஒரு வார்த்தை கேட்டியா? நீங்கதான் ஃபூல்ஸ். முட்டாள்கள் ரெகன்ஸைல் பண்ணிகறதுல தப்பே இல்லே."
"அப்பாவா இருக்கறதுனால யு கெ நாட் டிக்டேட் டர்ம்ஸ் ஆன் மி."
"டூ வாட் ஐ சே மை சன்." அப்பாவின் குரல் உயர்ந்தது. கொஞ்சம் மௌனம் நீடித்தது.
"ஓகே. ஓகே. நானா எதுவும் ஆரம்பிக்க மாட்டேன். அவளா ஏதாவது சொன்னா, ஐ மே..... ஐ மே..."
"ஐ ஜூன்.... ஐ ஜூலை... போடா. போய் பாரு. கிழிச்ச நாரா கெடக்காளாம். கோ வித் பொக்கே அன்ட் ஃப்ரீ மைண்ட், மை டியர் டர்டி கூஸ்."
அப்பாவுக்கும் மகம் நட்சத்திரமாக இருந்திருக்குமோ என்று ராஜாராமனுக்கு அப்போது சந்தேகம் வந்தது.
ராஜாராமன் ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்து ஒரு பெரிய கூடை பொக்கே ஒன்றை வாங்கி, கார்டில் அப்பா பெயரை போட்டார். ஏ4 சைசில் ஒரு காட்பெரி கிஃட் பேக் ஒன்றை வாங்கிக் கொண்டார். அதில் பெர்க் இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டார்.
அதே நேரத்தில் கல்யாணி மாமி 302ஐ அடைந்திருந்தாள்.
"ப்ரியா. மாப்பிள்ளை வந்திருக்கார். ரிஷப்ஷன்லே பார்த்தேன். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவார்."
ப்ரியா முகம் சுருக்கினாள். "மாப்பிளையாவது மண்ணாங்கட்டியாவது? வொய் த ஹெல் ஹி இஸ் கமிங். எல்லாம் முடிஞ்சு போச்சே."
"இங்க பாரு. தஸ் புஸ்னு எங்கிட்ட இங்லீஷ்ல பேசாத. நான் மடச்சியாகவே இருந்துட்டு போறேன். வரவர்கிட்டே இந்த மாதிரி எரிஞ்சு விழாத."
"எனக்கு யாரையும் பார்க்க இஷ்டமில்லே. நீ வேனா கீழே போய் பார்த்து அப்படியே அனுப்பிடு."
அதற்குள் கதவு திறக்க, ஒரு நர்ஸ் கைகளில் ஒரு ட்ரேயுடன் உள்ளே வந்தாள். வந்தவள் அங்கிருந்த அசாதாரண சூழ்நிலையை குறிப்பறிந்து கொண்டாள்.
"மேடம். மார்னிங்தான் ஆபரேஷன் ஆயிருக்கு. ஸ்டிச்சஸ் டிஸ்டர்ப் ஆகக் கூடாது. இரைஞ்சு சத்தம் போட்டு பேசக் கூடாது. அவாய்ட் பண்ணுங்க. டாக்டர் சொல்லிருக்காருல்ல."
"சிஸ்டர். நீங்க சிஸ்டர் லேலையை மட்டும் பாருங்க. நான் ஒன்னும் அடி முட்டாள் இல்லே. புரிஞ்சுதா. கீப் யுவர் லிமிட்ஸ் ப்ளீஸ்." ப்ரியா சுளீரென திருப்பி கொடுத்தாள்.
நர்ஸ் அந்த சாட்டையடியை எதிர்பார்க்க வில்லை. எக்கேடு கெட்டுப் போ என்கிறது மாதிரி ரியாக்ஷன் செய்த்து விட்டு மாத்திரைகளை சரமாரியாக டப்பாக்களில் அடைத்து விட்டு போனாள். அவள் போன இரண்டாவது நொடியில் கதவு மீண்டும் தட்டப்பட்டது.
இந்த முறை ராஜாராமன்.
கல்யாணி மாமி மீண்டும் 'வாங்கோ' என்றாள். ப்ரியா கொஞ்சம் கூட சலனமில்லாமல் தன் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டாள். ராஜாராமன் அப்பா கொடுக்கச் சொன்ன பொக்கேயை அவளை நோக்கி நீட்டினார். ப்ரியா அம்மாவை நோக்கி கைகாட்டினாள். கல்யாணி மாமி ப்வயமாக வாங்கி, ப்ரியாவிடம் காட்டிவிட்டு அருகிலிருந்த டேபிள் மீது வைத்தாள். ராஜாராமன் கேள்வியே கேட்காமல் கிஃட் பாக்கெட்டையும் மாமியிடமே கொடுத்தார். அதுவும் இயந்திர கதியாக டேபிளுக்கு போனது.
"ஹவ் ஆர் யூ?"
"ம். இருக்கேன்."
'கொஞ்சம் ஒடம்புக்கு ஏத்த வேலை செய்யறது."
"நீங்க அட்வைஸ் செய்யுற காலமெல்லாம் போயிடுத்து."
கல்யாணி மாமி கலவரமாக ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தாள்.
"அப்பா அவசியம் போய் பார்த்துட்டு வான்னு சொன்னார். அதான்....."
"அப்ப நீங்களா வர்லே.. இல்லியா."
ப்ரியா கொஞ்சம் வாலி டைப். எதிராளியின் பலத்தை சரி பாதி வாங்கிவிடுவாள். அந்த நிமிடமே ராஜாராமன் பிடி அற்று போனது.
"ஓகே. ஓகே. கெட் வெல். கீப் குட் ஹெல்த்." ஒரு மாதிரி சமாளித்து, மாமி பக்கம் திரும்பி, "என்ன மாமி? எப்படி இருக்கேள்?"
மாமி ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு, "ம்.. ஏதோ இருக்கேன்பா. இந்த ஊர் ஹிந்தி ஒரு எழவும் புரியலை. ஏதோ பாம்பே ஹிந்தியை வைச்சுண்டு சமாளிக்கறேன். இவ என்னடான்னா விக்கிரமாதித்தன் மாதிரி காடாறு மாசம், நாடாறு மாசம்னு தேசாந்திரம் போயிடறா. பெரிய வீட்டுல, தன்னந்தனியா....."
"அம்மா போறும். ஐ ஆம் சிக் ஆஃப் யுவர் கம்ப்ளெயிண்ட்ஸ்."
'இந்த மாதிரிதான் இங்கிலீஷ்ல பேசி வாயை அடைச்சுடுவா. அவர் கூடவே நானும் மேல போய்டா நல்லது. நாளை எண்ணிண்டு இருக்கேன்."
அதற்கு மேல் ராஜாராமன் அங்கிருக்க ப்ரியப்படவில்லை. போய்விட்டார். கல்யாணி மாமியும் கூடவே போனாள்.
கால் மணி கழித்து திரும்பி வந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது.
"இருந்தாலும், ஒனக்கு இவ்வளவு துராங்காரம் கூடாது."
"இப்ப என்னதான் சொல்லவர்ற. பழங்காலத்து தமிழ் சினிமாவுல கெடுத்த வில்லனை திருத்தனும். அப்பறம் அவனுக்கே அவளை கட்டி வைக்கனும்கிற மாதிரி நான் அவரோட எகெயின் குடும்பம் நடத்தனுமா?. அம்மா, ஒனக்கு என்ன மூளை மழுங்கிடுத்தா?"
"சரிடி. நீ இப்படியே இரு. இன்னிக்கு வயத்தை கிழிச்சாச்சு. நாளைக்கு என்ன நடக்கப் போறதோ. ஈஸ்வரா!"
"இங்க பாரு. உன்னால முடியலைன்னா சொல்லு. நாளைக்கே டிரெயின் ஏத்திவிடறேன். உங்க அண்ணாவாத்துக்கு போ."
"ஏன் மாமான்னு சொல்ல முடியாதோ?"
"எனக்கு யாரும் வேண்டாம். எல்லாரும் போய் தொலைங்கோ."
கல்யாணி மாமி பதில் பேசாமல் அழுதாள்.
"அம்மா. உனக்கு உன் மாப்ளை அப்படியே சத்யசீலர்ன்னு நினைப்பு. ஆனா அந்த ஆள் மாதிரி மேல் சாவனிஸ்ட் வேற எங்கையும் பார்க்க முடியாது. உள்ளுக்குள்ள உளுத்து போன பிலாசபி. வெளியிலே பெரிய இன்ட்டெலிக்சுவல்னு பந்தா. எல்லாம் வேஷம். ரெண்டு மூனு தடவை என்னை அடிச்சிருக்கான். கடைசியா அடிக்க வந்த போது கையை புடிச்சு ஒரு முறுக்கு முறுக்கினேன். கை ப்ராக்சர் ஆகி, இரண்டும் வாரம் ஆபீஸ் போகல ஒரு மாசம் இடது கையால லாப் டாப்ல டைப் அடிச்சான். உன் மாப்ளே சரியான க்ராக்."
"ஆமா. நீ அப்படியே புடம் போட்ட தங்கம் பாரு. எல்லாம் என் தப்பு."
"என்ன தப்பு?"
"ஒன்னை பெத்ததே தப்பு."
"அதை ஒன் புருஷன்கிட்டே செல்லியிருக்கனும்."
கல்யாணி மாமி ஒன்றும் பேசவில்ல. ஒரு வெற்று பார்வை பார்த்தாள். "நல்ல வேளைடி. உங்களுக்கு கொழந்தைகள் பொறக்கலை. இல்லேன்னா அதுக படற பாட்டை கண்ணு கொண்டு பார்க்க முடியாது."
"அம்மா. இனிமே இந்த டாப்பிக்கை எடுக்காதே"
"ஏண்டி, நீ கொஞ்சம் இறங்கி வரப்படாதா?"
"வரலாம். என்னை மாதிரி அட்ஜெஸ்ட் செஞ்சுண்டு போற ஆள் வேறு யாரும் கிடையாதுன்னு எனக்கு ஆபீஸ்ல பேரு. ஆனா, உன் மாப்ளை கொஞ்சாமாவது லீட் கொடுத்தாரோ? வந்தவுடனேயே அட்வைஸ் செய்ய ஆரம்பிச்சாச்சு. அப்பறம் எப்ப மெட்றாஸ் வரப்போறன்னு அடுத்த கேள்வி வரும். எனக்கு டெல்லிய விட்டு போக முடியாது."
"ஆபீஸ்ல... அதென்ன... ஆங்... அட்ஜெஸ்ட் பண்ணிப்ப. வீட்ல அதை பண்ண மாட்டே. நான்னாருக்கு உன் நியாயம். என்னையும்தான் உங்க அப்பா அடிச்சிருக்கார். ஒரு தடவை காலால மிதிச்சே இருக்கார். அப்பறந்தான் நான் அவர் கோபத்தை கிளர்ற மாதிரி பேசிருக்கேன் தெரிஞ்சது. அப்பறம் எப்படி கேட்டா, பதில் பாந்தமா வரும்னு புரிஞ்சுண்டேன். சாகற சமயத்திலே, நான் போய்டா, நீ என்னடீ பண்ணுவே? என்னடீ பண்ணுவேன்னு கண்ணீர் விட்டு கதறினார்....."
"அம்மா. போதும்மா. உன் அடிமை புராணம். இப்பெல்லாம் ஆணும் பெண்னும் ஒண்னு."
"ஒண்ணு, ஒண்ணு இல்லேடி. ஒண்ணுக்காக இன்னொண்ணு."
"சரி, என்ன எழவோ விடு. இந்த ராஜாராமருக்கு நீயே இன்னொரு சீதையை, ஒரு அடிமை சீதையை கல்யாணம் பண்ணி வை. என்னை இழுக்காதே. எனக்கு தூக்கம் வர்றது."
அதன் பிறகு கல்யாணி மாமி எதுவும் பேசவில்லை.
ராஜாராமன் சென்னை வந்த ஒரு மாதம் கழித்து, ஈ.சி.ஆர்.ரோட்டில் அவர் காரை ஒரு கன்ட்டெயினர் லாரி பதம் பார்த்தது. உடனடியாக அப்போலோ ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ப்ரியம்வதா தன் கம்பனி விஷயமாக சென்னை வந்திருந்தாள். கூடவே அவள் அம்மாவும் வந்திருந்தாள். தகவல் கிடைத்ததும், அம்மாவின் பிடுங்கலின்படி ப்ரியம்வதா சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹாஸ்பிடல் வர ஒத்துக் கொண்டாள்.
இருவரும் கால் டாக்ஸி பிடித்து ஹாஸ்பிடலை அடைந்தனர். ரிஷப்ஷனில் இருந்த ஒல்லியான சின்ன உடம்புக்காரி ப்ரியம்வதாவை பார்த்து கேட்டாள். "ம்.... பேஷண்ட் பேரு சொல்லுங்கம்மா?"
கல்யாணி மாமி கவலை அப்பிய முகத்தோடு ப்ரியம்வதாவை பார்த்தாள்

Monday, 20 December 2010

தேவை ஒரு சர்ஜரி


தேவை ஒரு சர்ஜரி
ஷைலஜா பேருந்தைவிட்டு இறங்கியதுமே அவனை கவனித்துவிட்டாள். புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் மீது ஸ்டைலாக சரிந்து கொண்டு ஒரு ஹீரோ லுக் விட்டான்.

பொறுக்கி ராஸ்கல். தினமும் இவனுக்கு இந்த வேலை. நெருங்கிப் போய் நாலு அறை விடலாமா என்று தோன்றியது. அடிக்கப் போய், அது சினிமாத்தனமாக ஆகி..... வேண்டாம்.

அவனை தாண்டிச் செல்ல, முரட்டு பர்ஃயூம் நெடி அவனிடமிருந்து அலையடிப்பது மாதிரி வந்தது. அரைக் கண் பார்வையில் அவன் விரலசைத்து, 'ஹாய்' என்று இளிப்பது தெரிந்தது. பிறகு, அவன் தன் வழக்கமான வேலையை ஆரம்பித்தான். சற்று இடைவெளி விட்டு தன் பைக்கில் பின் தொடர்ந்தான்.

நடையை கூட்டினாள். பின்னால் திரும்பிப் பார்க்கவும் கஷ்டமாக இருந்தது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது? குழப்பமான எண்ணங்கள் அவள் மண்டைக்குள் முறுக்கிக் கொண்டிருந்தன.

ஒரு ஸ்கூடி அவள் அருகில் வந்து நின்றது. நீரஜா! அப்பாடி! பாய்ந்து அதன் பின்னால் ஏறிக் கொண்டாள்.

"தாங்க்ஸ்டி. சரியான சமயத்திலே வந்து காப்பாத்தினே"

"என்னாச்சு ஷைல்? ஏதாவது பிரச்சனையா?"

"நீ கொஞ்ச தூரம் போயேன். நானே சொல்றேன்."

சிக்னலை தாண்டி நீரஜா ஸ்கூட்டியை ஓரம் கட்டினாள். ஸ்விட்ச் போட்ட மாதிரி ஷைலஜா அழத் தொடங்கினாள். "ஷைல்! இது பொது இடம். எமோஷனல் ஆகாதே. விஷயத்தைச் சொல்லு"

ஷைலஜா ஒரு சில கேவல்களோடு எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். "இப்ப நான் என்ன செய்யணும், நீரஜ்? என் அப்பாகிட்டே சொல்லிடட்டுமா? ஆனா, அவர் இந்த பிரச்சனையை விட்டுட்டு என்னை ஆயிரம் கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு"

நீரஜா கொஞ்சம் யோசித்தாள். பிறகு சொன்னாள். "ஷைல், கவலைப்படாதே. நாளைக்கு உன்னோட பஸ்ல வரேன். நீ அவனைக் காட்டு. நான் அவனை டைரக்டா டீல் செய்யறேன்."

மறுநாள் அவன் வழக்கம்போல் பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். நீரஜாவை அவன் கண்டு கொள்ளவேயில்லை. "ஹாய் ஷைல்! உன்னோட பத்தே செகன்டுகள் பேச அனுமதி கிடைக்குமா?"

மிக அமைதியாக வந்து கொண்டிருந்த நீரஜா, திடீரென அவன் இடது கையை பிடித்து முதுகு பக்கம் முறுக்கினாள். கோழிக் குஞ்சு மாதிரி அவள் முன்னால் சரிந்தவனின் கழுத்தை ஒரு பதம் பார்த்தாள். அடுத்து அவள் கால் முட்டியை அவன் தொடையிடுக்கில் பிரயோகிக்க, கலைந்த சீட்டு கட்டு மாதிரி விழுந்தான். விழுந்த வேகத்தில், சுதாரித்து எழுந்து, அடிபட்ட தவளை மாதிரி தத்திக் கொண்டே ஓட்டமெடுத்தான்.

நீரஜா தூசு தட்டுவது மாதிரி தன் உள்ளங்கைகளை தட்டிக் கொண்டாள். "இனிமே அவன்கிட்டேயிருந்து பேச்சோ, பார்வையோ இருக்காது. இனிமே அமைதியோ அமைதி."

"என்னடி, இப்படி செஞ்சுட்ட? நாம போய் அடிதடில இறங்கறது....?"
"ஷைல், எல்லாத்தையும் பொறுத்துக்கணும்னு இருந்திட்டா அது ஏமாளித்தனத்துல முடிஞ்சிடும். ஒரு சில சமயத்தில அமைதி வரணும்னா, நாம ஆயுதங்களை பிரயோகிச்சே ஆகணும், டாக்டர்கள் சர்ஜரி செய்யற மாதிரி. இப்ப நான் இவனுக்கு ட்ரிட்மென்ட் கொடுத்திருக்கேன். மறுபடிம் தேவைப்பட்டா, இதைவிட இன்னும் பெருசா ஒரு சர்ஜரி செஞ்சுடலாம்."
"ரொம்ப தாங்க்ஸ்டி." வெகு நாட்கள் கழித்து ஷைலஜா புன்னகை பூத்தாள்.
(தினமலர் - பெண்கள் மலர் - 27 நவம்பர் 2010)

Sunday, 12 December 2010

கொல்வதற்கு வருகிறேன்


முப்பது டிகிரி கோணத்தில் திறந்திருந்த அந்தக் கதவு எனக்கு போதுமானதாக
இருந்தது. ஆனால் ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது. 'க்ளக்' என்ற ஓசையுடன்
கதவு சாத்திக் கொண்டது!! குளிரூட்டப் பட்ட மிகப் பெரிய அறை. சிறிய ஓசை
கூட மிகத் துல்லியமாக உள்ளே கேட்டது. முக்கியமாக அஜய் சிங்குக்கு!

நான் யாரைக் கொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேனோ, அவனுக்குக் கேட்டு
விட்டது! மிக அருகிலேயே, அரை இருட்டில், நெளியும் பாம்பு மாதிரியான
இரானியத் தட்டிகள் இருந்தன. அதன் பின்னால் போய், அதன் இடுக்குகள் வழியாக
அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

லார்ஜில் சரி பாதியை உள்ளே தள்ளியிருந்த அஜய் சிங் எழுந்ததில்
தள்ளாடினான். திரண்டிருந்த தன் தொந்திக்குக் கீழே கவ்வியிருந்த பைஜாமாவை
மேலே தூக்கி விட்டுக் கொண்டான். 'முட்டாளே! காற்றடித்து கூட கதவு
சாத்திக் கொள்ளலாம். அப்படி யோசியேன்?'. இல்லை! இல்லை! அவனுடைய பார்வை
'யாரோ உள்ளே நுழைந்திருக்கிறார்கள்' என்பதாகச் சொன்னது.

அவன் நேராக நான் இருக்கும் இடத்திற்கு வந்தான். அடடா! எல்லாம் தப்பாகவே
போகிறதே!!

வந்தவன், ஐந்தடி தூரத்திலேயே நின்று கொண்டான். நல்ல வேளை!! முகம்
சுருக்கி அவன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

"கோன் ஹை தும்? சாம்னே ஆஜாவ். நஹி தோ....." (டேய்! யார் நீ? நீயா வரயா...
இல்லே...).

கையில் ஒரு பிஸ்டல் துருத்திக் கொண்டிருந்தது. காக்காய் மாதிரி தலையை
அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டு ஏதாவது அசைவுகள் தென்படுகிறதா என்று
ஆராய்ந்து கொண்டிருந்தான்.

திரைச்சீலைகள் கொஞ்சமாக அலையடிப்பது மாதிரி அசைந்தன. அதற்கு நான்
காரணமில்லை. மீண்டும் ஒரு காட்டுக் கத்தல் கத்தினான். அவன்
புர்புர்ரென்று மூச்சுவிடுவது எனக்கு நன்றாகக் கேட்டது. எனக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது. 'உன்னை சட்டென கொல்ல இஷ்டமில்லையடா. சாவு பயத்தை
உன்னுடைய ஒவ்வொரு செல்லும் உணர வேண்டும். அனுபவி. நன்றாக அனுபவி.'

சுட்டு விட்டான்!!

திரைச்சீலைகளை கிழித்துக் கொண்டு, பைபர் கிளாஸ் ஷட்டரை துளைத்துக் கொண்டு
சென்றது புல்லட். பிறகு எல்லாமே கோமாளித்தனம்! சுட்டுக் கொண்டே
இருந்தான். ஈரானிய தட்டியை உரசிக் கொண்டு போனது ஒரு புல்லட்.

சரமாரியான புல்லட்டுகளின் சத்தம் கேட்டு, தடதடவென நாலைந்து தடியர்கள்
ஓடிவந்தார்கள்.

"க்யா சாப்?" (என்ன ஆயிற்று ஐயா?) இனி அவர்கள் ஹிந்தியில் பேசுவதை தமிழ்
படுத்திச் சொல்கிறேன்.

"அவன்... அவன் வந்திருக்கான்னு நெனைக்கிறேன்."

"அவன்னா?"

"அதான்.. கோவிந்த் தவே. என்னைக் கொல்ல வந்திருக்கான். அந்த கர்ட்டனுக்கு
பின்னாடி மறைஞ்சிருக்கான். க்விக். அவனை பிடியுங்க."

"கவலையே படாதீங்க. நீங்க கீழே பாதுகாப்பா போங்க. நாங்க அவனை உயிரோடோ
அல்லது பொணமாவோ கொண்டுவரோம்."

நானாவது உங்களிடம் மாட்டிக் கொள்வதாவது. கிடைத்த ஒரு சில வினாடிகளில்,
சிறிதளவே திறந்திருந்த ஷட்டர் வழியாக வெளியேறினேன். வெளிச்சம் இல்லாத
ஸ்ப்ளிட் ஏசியின் அவுட்டர் பின்னால் மறைந்து கொண்டேன்.

எலி பிடிப்பவர்கள் மாதிரி முன்னால் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நான்
இல்லாத இடத்தில் அந்த தடியர்கள் தேடிக் கொண்டிருக்க, நான் அஜய் சிங்கின்
அடுத்தடுத்த இயங்கங்களை கவனிக்கலானேன். 'போடா! போ! எங்கு வேண்டுமானாலும்
போ! யாரை வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு வா! இன்று நான் உன்னைக் கொல்வது
நிச்சயம்.'

அவனை நான் ஏன் கொல்ல வேண்டும்? அதற்கு, இந்த மூன்று பத்திரிக்கை
செய்திகளை நீங்கள் படிக்க வேண்டியது மிக அவசியம். இந்தக் கதையின் பின்
புலத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த இளம் அரசு அதிகாரி
கொலை!!!

ராஞ்சி. ஜனவரி 4. நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகுந்த்
தவே என்ற 27 வயது இளம் அரசு அதிகாரி உருட்டு கட்டைகளால் அடித்துக்
கொல்லப்பட்டார். ஐ.ஐ.டி. கான்பூர், பி.டெக் பட்டதாரியான இவர், தங்க
நாற்கர தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்த
முயற்சித்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது.

விசில் ஊதினால் கொலை!
முகுந்த் தவே கொலையின் அதிர்ச்சிகர பின்னனி!!

ராஞ்சி. பிப்ரவரி 28. ஊழல்வாதிகளின் கைக்கூலிகளால் கொல்லப்பட்ட முகுந்த்
தவே, தன் மீது உள்ள அச்சுறுத்தலை தகுந்த ஆதாரங்களுடன் தனது உயர்
அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார். கடைசி முயற்சியாக, டெல்லியின்
உட்ச பட்ச அரசியல் மையத்துக்கு ரகசிய கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கு
'விசில் ஊதுதல்' என்று பெயர். யாரிடம் பாதுகாப்பை எதிரிபார்த்தாரோ,
அவர்களே ஊழல்வாதிகளுக்கு துணை போயிருக்கிறார்கள். முகுந்த் தவே கொடுத்த
ரகசிய ஆவணங்கள் சிதைக்கப்பட்டு, அவரும் கொலையாகியிருக்கிறார்.

அண்ணனை கொன்றவர்களை நான் கொல்லுவேன்!
கோவிந்த் தவே பரபரப்பு பேட்டி!!

ராஞ்சி. மார்ச் 15. முகுந்த் தவே கொலை வழக்கில் நாளுக்கு நாள் பரபரப்பு
கூடி வருகிறது. ஐ.ஐ.டி. மாணவர்கள் ஒன்று சேர்ந்து அதிகார, பண பலத்துக்கு
எதிராக தொடங்கிய போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதற்கு நடுவில், நக்ஸல்
தீவிரவாதியான கோவிந்த் தவே (முகுந்த் தவேயின் தம்பி), இந்த வழக்கில்
சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கொல்வேன் என்று
சூளுரைத்திருப்பதாக தெரிகிறது.

அஜய் சிங் புல் வெளியில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருப்பது
தெரிந்தது. அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். எனக்கு
புரிந்துவிட்டது. அஜய் சிங் இங்கிருந்து தப்பிக்கப் போகிறான்.

ஒரு ஜீப் நிறைய போலீஸ் காண்ஸ்டபிள்கள் வந்திறங்கினார்கள். முழங்கையைத்
தாண்டி நீளும் டார்ச்சை அடித்து ஒவ்வொரு இஞ்ச் இஞ்சாக தேடினார்கள். ஓளிக்
கம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தன. மீண்டும்
இடம் மாற வேண்டியதுதானா?

"மேவலால்! அந்த ஸ்பிளிட் ஏ.சி. அவுட்டர் பின்னால செக் பண்ணு" ஒரு
இன்ஸ்பெக்டர் கத்தினார்.

"ஜீ சாப்."

அந்த கான்ஸ்டபிள் ஒளிக்கம்பத்தை என்னை நோக்கி திருப்புவதற்குள் ஒரு
அதிசயம் நடந்தது. எங்கோ ஒரு மூலையில் சலசலப்பு கேட்க அனைவரும் ஓடினர்.

எனக்கு மிக சௌகர்யமாகப் போனது. யாருமே இல்லை! நிதானமாக கீழே வந்து அஜய்
சிங்குக்காக நிறுத்தியிருந்த காரின் டிக்கியில் ஒளிந்து கொண்டேன்.

நெற்றியில் கட்டைவிரலால் தீற்றிய செந்தூரத்துடன் அஜய் சிங் வந்தான்.
கடவுள் படங்கள் பலவற்றை பிரார்த்தித்துக் கொண்டு காரை கிளப்பினான்.
'மவனே. உனக்கு யாரும் உதவப் போவதில்லை. நீ தொலைந்தாய். வா! நீயே வந்து
வலிய மாட்டிக் கொள்கிறாய்!'

"காரை தரோவா செக் செஞ்சுட்டீங்களா?" அஜய் சிங் காரை உருட்டிக் கொண்டே
கேட்டான்.

"ஜீ சாப்." ஒரு கான்ஸ்டபிள் மரியாதைக்கு பின் சீட்டில் எட்டிப்
பார்த்தான். 'முட்டாள்களே! நான் டிக்கியில் அல்லவா இருக்கிறேன்.'

கார் சீறிக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பாய்ந்து, ஒரு நீண்ட
நெடுஞ்சாலையில் பயணிக்கத் தொடங்கியது. 'நீ எங்கு வேண்டுமானாலும் போ!
உன்னை அங்கு கொல்வேன்'.

எனக்கு உடனே லக் அடித்தது. ஆள் அரவமற்ற சாலையில் போய் கொண்டிருக்கும்
போது திடீரென கார் நின்றது. கிளம்ப சண்டித்தனம் செய்தது. அஜய் பானட்டை
திறந்து குடாய்ந்து கொண்டிருந்தபோது, நான் மெதுவாக டிக்கியிலிருந்து
வந்து பின் சீட்டில் ஒளிந்து கொண்டேன்.

அரை மணி நேர போராட்டங்களுக்கு பிறகு கார் உறுமியது. மீண்டும் கார் பயணம்.
அஜய் சிங் சுத்தமாக நொறுங்கிப் போயிருந்தான். உச்சபட்ச ஏ.சியிலும்
அவனுக்கு வியர்த்தது. நான் பின் சீட்டில் கவலையின்றி பயணித்துக்
கொண்டிருந்தேன். ஏதேச்சையாக பின் சீட்டில் திரும்பிப் பார்த்தவன்,
மிரண்டு போனான்.

"நீ! நீ! நீயா?"

அவன் கைகள் ஸ்டியரிங்கிலிருந்து தடுமாறின. கால்களை கன்னாபின்னாவென
உதைத்தான். அவன் கண்கள் கலவரத்தில் பிதுங்கி வெளியே வந்துவிடுவது மாதிரி
இருந்தன. அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறியது. இரண்டு
கைகளையும் விட்டுவிட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். 'ப்ளக்'கென அவன்
வாயில் நுரை எட்டிப்பார்த்தது. கைகள் ஒரு பக்கமாக 'விலுக், விலுக்'கென
இழுத்துக் கொண்டன. கார் ரோட்டை விட்டு விலகி, ஒரு மைல் கல் மீது மோதி,
கரப்பான் பூச்சி மாதிரி தலை கீழாய் கவிழ்ந்து ஐம்பது அடிக்கு குறையாமல்
தரையை சிராய்த்துக் கொண்டு போனது. தீப்பொறிகள் சிதறின.

கழுத்து திரும்பிய நிலையில் அவன் தன் கடைசி மூச்சை விட காத்திருந்தான்.
நான் உரக்க சப்தமிட்டேன். அவன் அதை கேட்டானா தெரியவில்லை. "நான்தான்டா.
என்னை துடிக்க துடிக்க ஆள் வைத்து கொன்றாயல்லவா? இப்போ நீ துடிக்க
துடிக்க சாவாதை நான் பார்க்கிறேன். செத்துப்போடா சதிகாரா!"

எனக்கு காற்று புகும் சிறு இடைவெளி போதும். கிடைத்த சிறு இடைவெளியில்
வழிந்து நான் வெளியே வந்தேன். இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள்.
எனக்கு அவசர வேலைகள் மீதி இருக்கின்றன.

(தினமலர் - வாரமலர் - 14 நவம்பர் 2010)

Monday, 4 October 2010

ரசிகன்



ஆட்டோவை தள்ளிக் கொண்டு என் முன்னால் வந்த குழந்தை ஏசு என் பார்வையை தவிர்க்க பக்கவாட்டில் திரும்பி நின்றிருந்தான்.
"என்னப்பா? நேத்து ஏன் நடைக்கு வரலை?"
அவனிடமிருந்து பதில் வராது என்று எனக்கு தெரியும். அவன் ஆதர்ச ஹீரோ ஆதித்யாவின் படம் நேற்று ரிலீஸ்! எப்படி ஆட்டோ ஓடும்?
ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டிய காம்பவுண்ட் சுவரில் எட்டு கால போஸ்டரில் ஆதித்யா ரத்தம் தோய்ந்த அறிவாளை குரோதத்துடன் ஓங்கியிருந்தான். பக்கத்தில் தொப்புள் தெரிய ஒரு கேரளத்து பைங்கிளி, 'இன்னும் எதை கழற்றி எறியட்டும்' என்பது மாதிரி இருந்தாள். கீழே பாஸ்போர்ட் சைசில் ஏகமாய் மனிதத் தலைகள்.
"சார் நேத்து ரொம்ப பிசின்னு கேள்விப்பட்டேன். கட்டவுட்டுக்கு பால் ஊத்தி அபிஷேகம் செஞ்சீங்களாமே? தீபாராதனை, சுண்டலெல்லாம் கொடுத்தீகளோ? அப்படியே ஒரு கோயிலையும் கட்டி, கும்பாபிஷேகம் செஞ்சிட்டு அங்கனயே பூசாரியா உட்கார்ந்திடறது."
"சார் கிண்டல் பண்ணாதீங்க. வாங்க. உட்காருங்க. போகலாம்." ஏசு விருட்டென ஆட்டோவை கிளப்பினான்.
நான் தினமும் என் அலுவலகத்துக்கு ஆட்டோவில், அதுவும் என் தெரு முனை ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து, குழந்தை ஏசுவின் ஆட்டோவில்தான் போவேன். கிட்டத்தட்ட இரண்டு வருஷ பழக்கம். குழந்தை ஏசு தீவிர சினிமா ரசிகன் என்று சொல்லுவதை விட இன்றைய முன்னனி ஹீரோ ஆதித்தியா மீது பக்தி வெறி பிடித்து அலைபவன் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். அவன் ஆட்டோவின் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் ஆதித்யாவின் விதவிதமான வண்ணப்படங்கள் எப்போதும் இருக்கும். புது படங்கள் வர வர, ஸ்டிக்கர்கள் மாறுமே தவிர அதில் எப்போதும் ஆத்தியாதான். ஒரு முறை, "எங்கள் பகுதியின் ஆதித்யா நற்பணி மன்றத்தின் செயலாளர் ஆயிட்டேன்" என்று அவன் பெருமை பொங்கச் சொல்ல, அதற்கு நக்கலாக புன்னகைத்துவிட, என்னிடம் இரண்டு நாள் அவன் பேசவில்லை.
ஏசுவோடு எனக்கு ஏற்பட்ட பழக்கமே வித்தியாசமானது. அந்தப் பகுதிக்கு குடி வந்த புதுசில் அவன் ஆட்டோவில்தான் பிரயாணித்தேன். அவன் பெயரே வித்தியாசமாக இருந்தது.
"ஏம்பா! உனக்கு எந்த ஊரு?"
"நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்"
"நாசரேத்தா? நல்லது. உங்க ஊரோட முக்கியத்துவம் தெரியுமோ?
"தெரியாதுங்களே."
"என்னப்பா, ஆதித்யாவை பத்தி முழு பயோடேட்டா வைச்சுருக்கே. ஒரு கிருஸ்துவனா இருந்துக்கிட்டு நாசரேத் பத்தி தெரியாம இருக்கேயே. ஏசு பெத்தலஹேமில் பிறந்தாலும், நாசரேத்தில்தான் வாழ்ந்தாரு. அந்த ஞாபகமாத்தான் உங்க ஊருக்கு அந்த பேர் வந்திச்சு."
"அப்டீங்களா?", என்னை திரும்பிப் பார்த்து சிரித்தான். "எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்காது இல்லீங்களா? அது சரி, தூத்துக்குடிக்கு ஏன் அப்படி ஒரு பேரு வந்திச்சுன்னு உங்களுக்கு தெரியுமுங்களா?"
நான் அவன் ஹீரோவை சம்பந்தப்படுத்தி காயப்படுத்திவிடேன் என்ற அர்த்தத்தில் எதிர் கேள்வி போட்டு என்னை மடக்கப் பார்த்தான்.
"தெரியுமே? துவர்ப்புக் குடி என்பது மறுகி தூத்துக்குடியாயிடுச்சுன்னு எங்கோ படிச்சிருக்கிறேன். உப்பு காய்ச்சற மக்கள் இருப்பதால அந்த பேரு வந்ததா சொல்றாங்க"
"அது மட்டும் இல்லீங்க. இன்னொரு வழக்கும் இருக்குது. ராமாயண காலத்துல இலங்கைக்கு தூதுவனாப் போன அனுமன் அங்க வந்து தங்கிப் போனதால தூதுவன் குடின்னு பேரு வந்திச்சாம். அதுதான் மறுகி தூத்துக்குடியாயிடுச்சு"
இந்துவாக இருந்துக்கிட்டு இது கூட உங்களுக்கு தெரியலியே என்று சொல்லாமல் சொன்ன மாதிரிப் பட்டது. என் சிறுபிள்ளைதனத்துக்கு சரியான பதிலடியாக இருந்தது. ஆட்டோ ஒட்டுனர்களில் இவன் வித்தியாசமானவன் என்று அப்போதே புரிந்து விட்டது.
"சபாஷ். ரொம்ப துடிப்பாதான் இருக்கே. என்ன படிச்சிருக்கே?"
"சாயர்புரம் போப் கல்லூரில பி.ஏ படிச்சேன், சார். ஏதோ பேருக்கு படிச்சேன். சரியான வேலை கிடைக்கலே. ஒரு தாட்டி நம்ம ஊரு பக்கத்துல தொடுத்தாப்பல நாலூ நாள் தலைவர் சூட்டிங் நடந்திச்சு. ரொம்ப தயக்கத்தோட போய் கை கொடுத்தேன். கொஞ்சமும் அலட்டிக்காம என் கூட பேசினாரு. என் படிப்பை விசாரிச்சாரு. குடும்பத்துக்கு விஸ்வாசமா இருக்கச் சொன்னாரு. அப்ப தொட்டு அவரு என் தலைவர் ஆயிட்டாரு."
ஏசு சிகரெட் பிடித்து நான் பார்த்ததில்லை. அதே மாதிரி அவனுக்கு டாஸ்மாக் பார்களில் ஒதுங்கும் வழக்கமும் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நாசரேத்தில் இருக்கும் தன் தாய் தந்தையருக்கு, மாசம் தவராமல் பணம் அனுப்புவான். அவன் தம்பி பொறியியல் கல்லூரியில் படிக்கிறான். ஆனால் சினிமா வெறித்தனம்தான் முரணாக இருந்தது.
பொதுவாகவே சினிமா, அரசியல், இதைத் தாண்டி சராசரி தமிழன் சிந்திப்பதாக தெரியவில்லை. நாட்டின் பொருளாதரம் பற்றியோ, சமூக சிக்கல்கள் பற்றியோ பெரும்பாலருக்கு தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. எல்லா ஊடகங்களிலும் எதிர்மறை பரபரப்பு செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒன்று போனால் இன்னொன்று. பழசு மறந்து போகிறது. புதுசு பற்றி எரிகிறது.
எனக்கும் ஏசுவுக்கும் அடிக்கடி ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். கடைசியில் அது சினிமாவில், அதுவும் ரசிகர் மன்றத்தில்தான் நிலைத்து நிற்கும். அது ரசிகர் மன்றம் இல்லை, நற்பணி மன்றம் என்று எதிர் பேச்சு பேசுவான். சென்னைக்கு அடிக்கடி வரும் அவன் அப்பா சகாயராஜ் என் வீட்டில்தான் ராத்தங்குவார். நிறைய தடவை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
லேசான மன நெருடல்களுடன் ஆட்டோவில் அமர்ந்தேன். ஏதோ சென்னை நகரமே ஆதித்யாவின் பட ரிலீசுக்கு விழா எடுத்த விட்ட மாதிரி இருந்தது. தெருக்களில் நூறு அடி இடைவெளியில் பெரிதும் சிறிதுமாக கட்டவுட்டுகள்.
"அதென்னப்பா ஆதித்யா பின்னால ஏதோ கொடி மாதிரி வரைஞ்சிருக்குது"
"என்ன சார், நாட்டுநடப்பு எதுவும் தெரியாம இருக்கீங்க!. தலைவரு அரசியல் கட்சி தொடங்கப் போறாரு. வரப்போற சட்டசபை தேர்தல்ல பாருங்க. கலக்கலா இருக்கும்."
எனக்கு மனசு வலித்தது. எவனோ காசு மேல காசு சேர்த்து மாடி மேல மாடி கட்ட இவர்கள் பலக்கு தூக்குகிறார்கள். பகுத்தறிவு பாசறைகள் புறப்பட்ட அதே நிலத்தில்தான் இது போன்ற சமான்யர்களிடையே மூடத்தன வேர்கள் ஆழமாக ஊடுருவியிருக்கின்றன. போன வாரம் ஏசுவோடு விவாதித்தது ஞாபகத்துக்கு வந்தது.
"ஏசு. மும்பையில எந்த ஹிந்தி சினிமா ஹிரோவுக்கும் ரசிகர் மன்றம் இல்லையாம். தெரியுமா? இங்க மட்டும்தான் இப்படி. தவிர, நாம எல்லாமே கொஞ்சம் ஒவர்தான். கத்தி பேசறோம். தனி நபர் துதி ரொம்ப அதிகமா இருக்கு. சினிமாவுல கெடைச்ச பலத்தை வைச்சுகிட்டு, இன்னும் என்ன செய்யலாம்னு ஒரு கூட்டம் அலையுது. அதுக்கு உன்ன மாதிரி ஒரு கூட்டம் பலி கடா ஆகுது."
"சார். நீங்க சினிமாவை ஒரு பொழுது போக்குன்னு சொல்லி, எட்ட நின்னு வேடிக்கை பார்த்துட்டு போயிடறீங்க. ஆனா நாங்க உடம்பு வலிக்க வேலை செய்யறோம் சார். எங்களுக்கு ஒரு வடிகால் வேணுமில்லையா?. கிட்ட போய், முங்கி குளிச்சு, ஆண்டு அனுபவிக்கறோம் சார்."
"இதுவும் ஒரு போதை மாதிரிதான் ஏசு. மயக்கம் இருக்கற வரைக்கும் மகிழ்ச்சியா இருக்கும். தெளிஞ்சதும் ச்சீன்னு ஆயிடும்."
"சார். நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க. பல பேரு திருபதி சாமிக்கோ அல்லது ஐயப்பனுக்கோ விரதமிருந்து, விழா எடுத்து, காசு செலவழிக்கிறாங்க இல்லையா? அதுல அவங்களுக்கு திருப்தி கெடைக்குது. அப்ப அதுவும் ஒரு போதைதானே?"
"ஏசு. எல்லை மீறின எல்லாமே தப்புதான். உப்போட சிறப்பு அதோட அளவுல இருக்குதுன்னு சொல்லுவாங்க. சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம்பா. அதுக்கு மேல முக்கியத்துவம் கொடுக்காதீங்கன்னு சொல்ல வர்றேன். இந்த மாதிரி வெறி பிடிச்ச ரசிகர்கள் இருப்பதாலத்தான், சில ஹீரோக்களுக்கு என்னென்னமோ ஆசைகள் வருது. செருப்பு காலை பாதுகாக்குது. அது நமக்கு தேவைதான். ஆனா, அதை வாசல்லேயே விட்டுடறதுதான் நல்லது."
"சார். விடுங்க. நான் இன்னிக்கு பொறுப்பா இருக்கேன்னா, அது என் தலைவராலத்தான். ஏதோ என்னால முடிஞ்ச நல்ல காரியங்களை தலைவர் பேரச் சொல்லி செய்யறேன். இன்னும் கூடுதலா, ஒரு அமைப்பா செய்யனும்ணும்னு என் தலைவர் விருப்பப்பட்டார்னா, அதுக்கும் அவர் வழிகாட்டுவார். நான் ஸ்டியாத்தான் இருக்கேன் சார். நீங்கதான் ஏதேதோ கற்பனை செஞ்சுக்கிட்டு, கவலைப்படுறீங்க."
என் அலுவலகம் வந்து விட்டது. ஏசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் இறங்குவதற்கு எதிர் பக்கம் நின்று கொண்டு மீண்டும் என் பார்வையை தவிர்த்தான்.
"ஏசு. என்ன ஆச்சு? தலைவர் படம் ஹிட்டு ஆகனுமேன்னு கவலையா?"
"இல்லை சார். நான் நல்லாத்தான் இருக்கேன். ஒன்னுமில்லே"
"இல்லை ஏசு. உன்னக்குள்ளே ஏதோ பிர்ச்சனை இருக்கு. எங்கிட்ட சொல்ல மாட்டேங்கிற."
"சாயங்காலம் ஆபீஸ் விட்டு வாங்க சார். விவரமா பேசுவோம்." ஏசு வழக்கம் போல விருட்டென ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, போய் விட்டான்.
எனக்கு ஆபீஸில் வேலையே ஓடவில்லை. ஏசு என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே மனசு, சுழல் காற்றில் மிதக்கும் காகிதம் மாதிரி எழும்பியும், அடங்கியதுமாக இருந்தது.
சரியாக ஐந்தரை மணிக்கெல்லாம் ஏசு வந்து விட்டான். முன்னைவிட இறுக்கமாக இருந்தான். வீடு திரும்பும் வரை ஒன்றும் பேசவில்லை. சூடாக ஒரு காப்பி போட்டு அவன் முன்னால் நீட்டினேன். நிமிர்ந்தவன் கண்களில் கண்ணீர்.
"ஏசு. என்னாச்சு?"
"சார். நீங்க அடிக்கடி பல்லக்கு தூக்கறேன்னு சொல்வீங்களே. அது உண்மையாடுச்சு சார். நாங்கெல்லாம் பல்லக்கு தூக்கவும், கொடி கட்டவும், கோஷம் போடவும், எதிர் ஆசாமிங்களோட மல்லுக்கு நிக்கவும்தான் இருக்கோம். பல்லக்குல உட்கார்ந்து போக இன்னொரு கூட்டம் இருக்குது. அதுக்கு முள்ளங்கி பத்தையா நோட்டு வேணும்."
"புரியலை ஏசு. விவரமாச் சொல்லு."
"சார். தலைவரோட ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போது என்னமா உழைச்சிருக்கேன், தெரியுமா? ஆனா கட்சின்னு வரும்போது, கட்சி மாறி வந்த ஒரு துட்டு பார்ட்டிக்குதான் பதவியாம். எனக்கு இல்லே. இது எப்படீங்க நியாயம்?"
"ஏசு. உனக்கு தெரியும்தான். இருந்தாலும் சொல்லறேன். சினிமா ஒரு தொழில்ங்கிற மாதிரி, அரசியலும் ஒரு தொழிலாயிடுச்சுப்பா. இதுலேயும் முதல் போட வேண்டியிருக்கு. லாபம் பார்த்து அடுத்த தேர்தலுக்கு செலவழிக்க வேண்டியிருக்கு. நாட்டு நல்லது செய்யணும்னு அரசியலுக்கு வர்றவங்களே இல்லேன்னு ஆயிடுச்சு."
ஏசு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான். ஆதரவாக அவனை என் தோள்களில் சாய்த்துக் கொண்டேன்.
"ஏசு. அவங்க எப்படி அவங்க தொழில்ல கண்ணும் கருத்துமா இருக்காங்களோ, அதே மாதிரி நீ உன் ஆட்டோ தொழில்ல இருந்துடேன். யாரு வேணும்னாலும் வரட்டும். அதை மக்கள் பார்த்துப்பாங்க. உங்கள மாதிரி ஆசாமிங்க ஒதுங்கி நின்னீங்கன்னா சினிமாவும் உருப்படும். அரசியலும் உருப்படும்."
ஏசு என்னிடமிருந்து விலகி கொஞ்சம் நேரம் குனிந்த படி உட்கார்ந்திருந்தான். திடீரேன எழுந்து ஒரே மடக்கில் அத்தனை காப்பியையும் குடித்து விட்டு, இடக்கை புறங்கையால் வாயை துடைத்துக் கொண்டே எதுவும் சொல்லாமல் போனான். நான் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அதில் வருத்தமில்லை. மனசுக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் வெளிச்சம் பரவுவது மாதிரி இருந்தது.
மறுநாள் நான் ஆட்டோ ஸ்டாண்டை அடைந்த போது ஏசுவின் ஆடோவை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஆட்டோதானா என்று சந்தேகமாக இருந்தது. ஒரே ஒரு ஸ்டிக்கர் மட்டும் இருந்தது. மரியண்ணை குழந்தை ஏசுவை அணைத்தபடி இருந்தாள். ஆதித்யா அஸ்தமனமாகியிருந்தான்.
"சார். வாங்க. உட்காருங்க. இன்னும் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கு." ஏசு அகலமாக புன்னகைத்தான்.
"ஏசு. எனக்கு தூரத்தை பத்தி கவலையில்லேப்பா. சரியான பாதையா? அதுதான் முக்கியம்"
என் கண் சிமிட்டலுக்கு ஏசுவிடம் மீண்டும் புன்னகை. ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த அனைவரும் குபீரென சிரித்தார்கள்.

(AIR தூத்துக்குடி - படிப்பரங்கம் - 06 ஆகஸ்ட் 2010)

Saturday, 13 March 2010

சந்தோஷத் தீவு

முன் குறிப்பு :-

கடவுள் மனிதனை படைத்தான். மனிதன் தன் பங்குக்கு பிரச்சனைகளை படைத்தான்.
இன்று நாம் சிக்கித் தவிக்கும் பல பிரச்சனைகள், மனிதன் தன் சுய
லாபங்களுக்காக எப்போதோ உருவாக்கப்பட்டவை. வரம் கொடுத்தவனையே பதம் பார்க்க
வந்த பஸ்மாசுரன் மாதிரி, இந்த மாதிரியான பிரச்சனைகள் பல சிக்கல்களுக்கு
உள்ளாகி, வெவ்வேறு வடிவம் எடுத்து, கடைசியில் பூதாகரமாக
உருவெடுத்துவிடும் போது, 'தீர்வு என்ன?' என்று தலையை பிய்த்துக்
கொள்கிறோம். காஷ்மீராகட்டும், காவிரியாகட்டும், கட்சத் தீவாகட்டும், அதன்
வேர்கள் ஒன்றே.

தமிழகக் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில், வங்கக் கடலில் ஒரு தீவு
உருவானால்? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? அந்த கற்பனையில்
கொஞ்சம் காரம் சேர்க்க, சில பிரச்சனைகளை அதில் நாம் சேர்ப்போமா? இதோ கதை
தொடங்குகிறது.....

2016, அக்டோபர் மாதம் 14ம் தேதி, வெள்ளிக்கிழமை. மதியம் இரண்டு மணிக்கு
பிடித்த மழை இன்னும் விடவில்லை. சென்னை நகரமே மழை நீரில் பெருங்காயம்
மாதிரி கரைந்து போய்விடுமோ என்ற அளவுக்கு மழையின் தீவிரம் இருந்தது. இது
போதாதென்று, பின் இரவில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் அதிபயங்கர புயல்
தாக்கக்கூடும் என்று வானிநிலை அறிவித்திருந்தது. அதற்கு க்ளாரா என்று
பெயரிட்டிருந்தார்கள்.

ஒரு பக்கம் தமிழக மக்கள் ஈரமும் குளிருமாக தவித்துக் கொண்டிருந்தாலும்
இன்னொரு பக்கம் மாநில போலீசும் அரசுத் துறை அதிகாரிகளும் ஏக டென்ஷனில்
இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி இரண்டு வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்து
கொண்டிருந்தார்கள் அதுதான், சந்தோஷத் தீவு! மழையும், புயலும் சற்றே அதன்
முக்கியத்துவத்தை குறைத்திருந்தாலும், நேற்றும், இன்றும், நாளையும்
அதுதான் செய்திகளின் கதாநாயகன்.

அன்றைய காலை தினசரிகளில் தடித்த எழுத்துக்களில் சந்தோஷத் தீவில் நடக்கப்
போகிற கரசேவை பற்றிய செய்திகளே இடம் பிடித்திருந்தன. 'சந்தோஷத் தீவில்
இனி யாருக்கும் அனுமதி இல்லை! மத்திய அமைச்சரவை ரகசிய முடிவு ?', என்று
கொட்டை எழுத்துக்களுக்கு சிவப்பு அடிக்கோடிட்டு புதிய செய்தியை முந்தித்
தந்திருந்தது ஒரு தினசரி. அதுதான் உண்மையோ என்ற மாதிரி அதை உறுதிப்
படுத்தும் விதமாக அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இன்னொரு தினசரி தன் பங்குக்கு சந்தோஷத் தீவில் நிர்மானிக்கப் படப்போகிற
நாற்பது அடி உயர அனுமன் சிலையின் ஏ4 சைஸ் வண்ண ஃபோட்டோவை இலவச இணைப்பாக
வழங்கியிருந்தது. அரசியல் சார்பு தினசரிகள் ஒருவர் மேல் ஒருவர்
புழுதிவாரி தூற்றிக் கொண்டும் தங்களுக்கு சாதமான விஷயங்களை முன்னிலை
படுத்தியும் செய்திகளை திரித்தும் எழுதியிருந்தன.

அரசியல், மதம், நீதி மன்றம் என்று ஏகப்பட்ட சிக்கல்களில் தற்போது
திண்டாடிக் கொண்டிருக்கும் சந்தோஷ தீவிற்கு பெயரில்தான் சந்தோஷம். கடந்த
மூன்று வருடங்களாக அதன் பிரச்சனைகள் தீவிரமடையும் போதெல்லாம் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொது சொத்துக்கள் நாசமாயின. விலைவாசியின்
அம்புக்குறி அடிக்கடி மேல் நோக்கி மிரட்டியது. பங்கு வர்த்தகத்தில்
கரடிக்கு அதிகம் வேலையிருந்தது.

ராமேஸ்வரத்திலிருந்து வடக்கு பக்கமாக 36 நாட்டிகல் மைல் தொலைவில் இரண்டு
கி.மீ. நீளம், மூன்று கி.மீ. அகலத்திற்கு 2010 ஜனவரி மாதத்தில் உருவான
அந்த குட்டித் தீவுக்கு அடுத்த பத்தாவது நாளே சிக்கல் ஆரம்பித்தது.
இந்தியா, இலங்கையும் அதற்கு உரிமை கோரின. ரோந்துப் பணி கப்பலுக்களூக்கு
இடையே அடிக்கடி சிறு சிறு மோதல்கள் ஆரம்பித்தன. வெளிவிவகாரத் துறை
மந்திரிகள், தூதுவர்கள், செயலாளர்கள் ஏசி அறைகளில் அடிக்கடி கூடிக் கூடி
விவாதித்தார்கள். மூக்கை இடிக்கும் செய்தியாளர்களின் மைக்குகளில்
'மீண்டும் சந்திப்போம், பேசுவோம்' என்றார்கள். வரைபடங்கள் சரிபார்க்கப்
பட்டன. பாரளுமன்றம் அடிக்கடி ஸ்தம்பித்தது.

மாநில கட்சிகளும் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்பினார்கள். சந்தோஷத்
தீவுக்கு அருகில் மீண்பிடிக்கப் போன நூற்றுக் கணக்கான மீனவர்கள் இலங்கை
ராணுவத்தினரால் கைது செய்யப்பட, மீனவர் நலன் என்ற போர்வையில் ஒரு வட்டார
கட்சி களத்தில் இறங்கியது. அதன் வளர்ச்சியை கண்டு சகிக்க முடியாத எதிர்
கட்சி, 'கட்ச தீவைப் போல இந்த தீவுக்கும் இலங்கை உரிமை கோரினால், தமிழ்
நாட்டில் ரத்த ஆறு ஓடும்', என்ற மிரட்டலோடு சிறை நிரப்பும் போராட்டத்தை
துவக்க, ஆளும் கட்சி எதைப் பிடித்தால் தங்களுக்கு அரசியல் இலாபம்
கிடைக்கும் என்று தேடி திண்டாடியது.

ஒரு வழியாக எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அது இந்தியாவுக்குதான்
என்று முடிவானது. ஆனால் அதில் தமிழர் நலனை நிலை நாட்டியது யார் என்பதில்
குடுமிபிடி சண்டைகள் தொடங்கின. அவர்களுக்கு அவர்களே வாழ்த்திக் கொண்டு
போஸ்டர் அடித்து விழா கொண்டாடினார்கள். கவிஞர்கள் தங்கள் அரசியல்
தலைவர்களை வாழ்த்துப் பாமாலை பாடி பரிசில் பெற்றார்கள். சிங்கப்பூருக்கு
அருகில் இருக்கும் சென்டோஸா தீவைப் போல் சந்தோஷத்தீவை மேம்படுத்துவோம்
என்று மெரீனா கடற்கரை கூட்டத்தில் முழங்கிய மாநில முதல்வரின் பேச்சை
கேட்டு வயிறெரிந்தார்கள் எதிர் கட்சியினர்.

அரசியல் குழப்பங்கள் கொஞ்சம் தணிந்ததும் வியாபார போட்டா போட்டிகள்
தொடங்கின. சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஸ்டீமெர்கள் கான்ட்ராக்ட்
கொடுத்ததில்/எடுத்ததில் பெரும் அரசியல் புள்ளிகள் பணம் பார்த்தார்கள்.
காசு பார்க்க முடியாத கோஷ்டியும், காசு ஏராளாமாக கண்டுவிட்ட கோஷ்டியும்
சந்தோஷத் தீவிலேயே துரத்தி துரத்தி அடித்து கொண்டார்கள். அதை வெளியிட்ட
ஒரு புலனாய்வு பத்திரிக்கையின் ரேட்டிங் கூடியது. சந்தோஷத் தீவுக்கு
அடியில் இருக்கும் பவழப் பாறைகளை சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவதாக
அரசியல் பின்னணியில் ஒரு பெரிய நிறுவனம் களத்தில் குதிக்க, சுற்றுசூழல்
ஆர்வலர்கள் கோர்ட்டுக்கு போக, நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது.

சந்தோஷத் தீவை ஒரு வசூல் ராஜாவாக ஒரு கூட்டம் போற்றி புகழ்ந்தாலும்,
இன்னொரு பிரிவினர் அதை மர்ம நாயகனாகவே பாவித்து செய்திகளில் அவ்வப்போது
பயமுறுத்தி கொண்டிருந்தனர். சந்தோஷத் தீவில் அதிக அளவில் யுரேனிய
படிமங்கள் கண்டுபிடிப்பு! அமெரிக்கா அங்கே ஒரு ராணுவ தளம் அமைக்கும்!
சந்தோஷத் தீவு ஒரு தனித் தீவு அல்ல. இது போல இன்னும் 50க்கும் மேற்பட்ட
தீவுகள் சென்னை வரை உருவாகலாம்! அப்போது துறைமுகங்களுக்கு ஆபத்து வரலாம்!
சுனாமி வருவது சர்வ சாதாரணமாகி விடும்! தென் தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக
மூழ்கக் கூடும்! என்று கிளி ஜோஸ்யம் மாதிரி அரை வேக்காட்டு அறிவியல்
அறிஞர்கள் துணை கொண்டு மர்மங்கள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்தன.

தினம் தினம் ஒரு மர்ம முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த சந்தோஷத் தீவு,
ஒரு புத்தம் புதிய திருப்பம் கண்டது. யாரோ ஒருவர் ராமாயண நிகழ்வுகள்படி
அனுமன் பெரிய உரு கொண்டு இலங்கையை நோக்கி பறக்க உந்தி எழுந்த இடம் அந்த
தீவுதான் என்றும், சந்தோஷத் தீவின் ஒரு பாறையின் மீது அந்த கால் தடங்கள்
இருப்பதாக ஆதார விளக்கங்கள் அளிக்க, பிரச்சனை அனுமன் மாதிரியே விஸ்வரூபம்
எடுத்தது.

மூலை முடுக்கு கோயில்களுக்கெல்லாம் குடும்பம் குடும்பமாக வேன் எடுத்துக்
கொண்டு விசிட் அடித்து சலித்து போய்விட்ட பக்தர்கள் கூட்டத்திற்கு அது
ஒரு பெரிய வரப்பிரசாதமாக போய்விட்டது. அது வரை இயற்கை ஆர்வலர்கள்
விரும்பும் சுற்றுலாத்தலமாக இருந்த சந்தோஷத்தீவின் மீது பக்தர்கள்
படையெடுக்கவும், புதிய ஆதாய கோஷ்டிகள் அங்கே தங்களது சுய இலாபங்களை அங்கே
அரங்கேற்றினர்.

இரவோடு இரவாக ஒரு பக்த கோஷ்டி அனுமன் சிலையை அந்த இடத்தில் பிரதிஸ்டை
செய்து ஒரு தற்காலிக கோயில் செய்துவிட, பிரச்சனை இன்னும் தீவிரம்
அடைந்தது. கூடவே நாலு கால பூஜையும் தொடங்கிவிட்டது. எதிர்ப்பாளார்கள்
கொதித்தெழ விஷயம் நீதி மன்றம் வரை போனது. இதற்கிடையில் தீவின் இன்னொரு
மூலையில் மீனவ கிருஸ்தவர்கள் ஒரு தேவாலயத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட,
சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் அபாயம் ஏற்பட்டது. துரதிர்ஷடவசமாக, ஒரு சிறு
நாட்டு வெடி குண்டு ஒண்று வெடிக்காத நிலையில் அங்கேகண்டுபிடிக்கப்படவும்,
நாட்டில் பல இடங்களில் மதக் கலவரங்கள் நிகழ்ந்தன.

பெருவாரியான மக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்பதால் தற்போது
உள்ள கோயிலும், கோயில் பூஜையும் தொடரலாம் என்றும் ஆனால் நீதி மன்ற இறுதி
தீர்ப்பு வரும் வரை எந்த வித நிரந்தர கட்டுமானப் பணிகள் கூடாது என்ற ஒரு
குழப்பமான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் அளித்தது. அரசியல் கட்சிகள் இந்த
பக்கமும் அந்த பக்கமும் மாறி மாறி ஊதி தங்கள் கணக்குகளை சரி செய்து
கொண்டார்கள்.

அகில உலக இந்து மக்கள் சேவா தளம் என்ற அமைப்பு அசுர வளர்ச்சி பெற்றது.
அனுமன் எழுந்த இடத்தில் மிகப் பெரிய உருவச் சிலை வைப்பதுதான் சரி என்று
அவர்களே தீர்மானித்து 40 அடி சிலை செய்தார்கள். கன்யாகுமரியில்
திருவள்ளுவருக்கு சிலை இருக்கலாம், ஹைதராபாதில் புத்தருக்கு சிலை
இருக்கலாம், சந்தோஷத் தீவில் அனுமன் சிலை இருக்கக் கூடாதா என சேவா தள
தலைவர் அறைகூவல் விட அவர் மிகவும் பிரபலமானார். மிகப் பெரிய கோயில் கட்ட
மக்களிடம் வசூல் வேட்டை நடந்தது. மக்களின் நம்பிக்கையில் நீதி மன்றம்
தலையிடுவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அறிவித்தது சேவா தளம்.

ஆனால் இந்த விஷயத்தில் ஆன்மிகத்துக்கு துளிகூட சம்பந்தமில்லை என்றும் மத
ரீதியாக மக்களை திசைதிருப்பி அரசியல் ஆதாயம் பார்க்கிறது ஒரு கூட்டம்,
சத்தியம் நிச்சயம் வெல்லும் என்று உண்மையான ஆன்மிகவாதிகள் மறுத்து
அறிக்கை விட்டார்கள்.

இதற்கிடையில் இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் அனுமன் சிலை செய்தியை
ஒளிபரப்பி அதை குரங்குக் கடவுள் என்று சொல்லிவிட நாடு முழுவதும் கண்டன
ஆர்பாட்டங்கள் நடந்தன.

சென்னை கமிஷனரின் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கவும் சொல்லி
வைத்தமாதிரி மழை தீவிரம் சற்று குறைந்தது.

"கமிஷனர் அவர்களே! நாளைய ஊர்வலம் சட்டம் ஒழுங்கு காரணமாக தடை
செய்யப்படுமா?"

"நிச்சயமாக இல்லை. சிலையின் நெடும் பயணத்திற்கு தகுந்த பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் சட்ட ஒழுங்கு மீறப்பட்டால் கடுமையான
நடவடிக்கைகள் எடுப்போம்."

"சந்தோஷத் தீவில் இருந்த அனைத்து கோயில் நிர்வாகிகளையும் வலுக்கட்டாயமாக
அழைத்து வரப்பட்டார்களா? எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு அந்த கோயில்
தரைமட்டமாக்கப்படும் என்று பேச்சு உள்ளதே?"

"இதற்கு முதலமைச்சர் காலையிலேயே பதிலளித்துவிட்டார். கடும் மழை
காரணமாகத்தான் அவர்கள் சம்மதத்தோடு நாங்கள் அழைத்து வந்தோம். உச்ச நீதி
மன்ற தீர்ப்பு வரும் வரை கோயிலுக்கு எங்களின் பாதுகாப்பு தொடரும். அதில்
தயவு செய்து சந்தேகப் பட வேண்டாம்."

"கமிஷனர் சார். ஒரு தனியார் சேனலில் அவர்கள் போலீசின்
தொந்தரவினால்தான்..."

"பொய் சொல்லுகிறார்கள். எங்களுக்கு அவப் பெயரை உண்டாக்கினால் சிலருக்கு
ஆதாயம் என்பதால் பொய் சொல்ல வைக்கப்படுகிறார்கள்."

"ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக..."

"அது புயல், மழை, வெள்ளத்தை சமாளிக்க. தயவு செய்து இந்த விஷயத்தோடு
முடிச்சு போடாதீர்கள்."

ஒரு தனியார் தொலைக்காட்சி சேவா தளத்தின் தலைவர் அனல் கக்கும் பேட்டியை
நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. நீதி மன்ற தீர்ப்பை மீறி செங்கல்
பூஜை சந்தோஷத் தீவில்தான் நடைபெறும் என்றும் வீராவேசமாக பேசிக்
கொண்டிருந்தார். 'காவிரி பிரச்சனையில் நீதி மன்ற தீர்ப்புக்கு கர்நாடக
அரசாங்கம் எங்கே கட்டுப்பட்டது? முல்லை பெரியார் தீர்ப்பை இன்னமும் கேரள
அரசு மதிக்கவில்லையே? அவர்களுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா?'
என்று பேட்டி சூடு பறக்க போய் கொண்டிருந்தது.

புது டில்லியில் பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த
உள்துறை மந்திரியை நிருபர்கள் சூழ்ந்து சந்தோஷத் தீவு பற்றி சரமாரியாக
கேள்விகள் கேட்கவும் அவர் பதிலளிக்க தொடங்கிய அடுத்த ஐந்தாவது நொடியில்
அனைத்து சானல்களும் நேரடி ஒளிபரப்பை தொடங்கின.

'திட்டமிட்டபடி சேவா தளத்தின் ஊர்வலம் தொடங்குமா?"

"இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். சேவாதளத்திடம் கேளுங்கள்."

'சேவா தளத்திற்கு உங்கள் கட்சி மறைமுகமாக உதவி வருவதாக பேச்சு
அடிபடுகிறதே?"

"கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கெட்ட எண்ணங்களோடு எங்களை வீண்
வம்புக்கு இழுக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் கேள்வி இது. எங்கள்
கட்சி நீதி மன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்கும்."

"நீதி மன்றத் தீர்ப்பு உங்கள் கட்சிக்கு சாதகமாக வர வேண்டும்
என்பதற்காகத்தான் தலைமை நீதிபதி சமீபத்தில் ராஜினாமா செய்யும்படி
நிர்பந்திக்கப் பட்டாரா?"

'இங்கே பாருங்கள். உங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதற்காக
ஒரு நீதிபதி தனது உடல் நிலை காரணமாக பதவி விலகியதை திரித்து விஷயத்தை
பெரிது படுத்தாதீர்கள்."

"பிரதமரின் நாளைய அமெரிக்கப் பயணம் சந்தோஷத் தீவு காரணமாக ரத்து செய்யப்
பட்டு விட்டதா?"

"எனக்கு தெரியாது"

தமிழக கடலோரப்பகுதியில் மீண்டும் மழைபிடித்துக் கொண்டுவிட செய்தி
சானல்கள் புயல், மழை, வெள்ளம் என்ற தலைப்புக்கு மாறின.

பிள்ளையார் பிடிக்க குரங்காய் போன இந்த சிக்கலில் போலீசும் அரசுத்துறை
அதிகாரிகளும் முழிபிதுங்கி தவித்தார்கள். அரசியல் கட்சிகளும் வெறுத்து
போனார்கள். சந்தோஷத் தீவுக்கு என்னதான் தீர்வு? இதுவும் அயோத்தி மாதிரி
இழுத்துக் கொண்டே போகுமா? யாரையும் பாதிக்காத ஒரு முடிவுதான் என்ன ?

அந்த முடிவு அன்று இரவே வந்தது. அதிகாலை மூன்று மணியளவில் மாநில
முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், பிரதம மந்திரி, போலீஸ் உயர்
அதிகாரிகளின் படுக்கையறை கதவுகள் தட்டப்பட்டன. செல்போன்கள் சினுங்கின.
மகிழ்சியான செய்திகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாரிக் கொண்டார்கள். அது-

கடும் கடல் கொந்தளிப்பில் சந்தோஷத் தீவு காணாமல் போனது.

(கலைமகள் - அக்டோபர் 2009)

Tuesday, 9 March 2010

சிக்கியது பறவை


அவள் அநியாயத்துக்கு அழகாக இருந்தாள். பார் இணைக்கப்பட்ட அந்த
ரெஸ்டொரண்ட்டின் அரையிருட்டில் கூட பளீரென்று தெரிந்தாள். கன்னம்
குழிவதில் ப்ரீதி ஜிந்தா, நீல கண்களில் ஐஸ்வர்யா ராய், ஸ்லிம் பாடியில்
சிம்ரன், மூக்கில் அந்த காலத்து ஸ்ரீதேவி என்று 'எல்லாம் சேர்ந்த
கலவையாக' இருந்தாள்.

இப்படிக் கூட ஒருத்தி அழகாய் இருக்க முடியுமா? ராஜீவ் வியந்து வியந்து
போனான். 'இவள்தான். இவளேதான். நான் வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்தவள்.
என் இன்றைய டார்கெட்', ராஜீவ் மனசில் டிக் செய்து கொண்டான். முதலில் தான்
மட்டும் அவளை 'பார்த்துக் கொண்டிருப்பதாக' நினைத்திருந்தான். அங்கும்
இங்கும் நோட்டம் விட்டதில் இருபது கண்களுக்கு மேல் அவள் மீது மேய்ந்து
கொண்டிருப்பது தெரிந்தது.

அவளோடு வந்திருந்த அந்த தாடித் தடியன் மது மயக்கத்தில் சரிந்திருந்தான்.
முடி குவியலுக்குள் மூக்கும் வாயும் சொருகப்பட்டது மாதிரி இருந்தது.
பிர்... பிர்... என்று ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தான். டேபிளில்
ஏகத்துக்கு தந்தூரி ஐயிட்டங்கள் சிதறி இருந்தன. ஏதோ ஒரு காரணத்துக்காக
எழுந்தவள் விறுவிறுவென ராஜீவை தாண்டிப் போனாள். பின் பக்கத்தில் ஏஞ்சலினா
ஜூலியை ஞாபகப்படுத்தினாள். சராசரிக்கும் அதிகமான உயரம். மெல்லிய சென்ட்
வாசனை அவனை கிறங்க அடித்தது. அவள் திரும்பி வரும் வரை காத்திருந்தான்.

வெயிட்டரிடம் ஏதோ சொல்லிவிட்டு வந்தவளை இடைமறித்தான். "மேடம்.
நீங்கள்தானே ஷெரீன் தாமஸ், சில்வர் மீடியா சொலூஷன்ஸ்"

"நோ. யூ ஆர் ராங்க்." சரசரவென அவனை தாண்டிப் போய்விட்டாள். ராஜீவ் அவளை
விடவில்லை. அவள் டேபிள் அருகே போனான்.

"மேடம். ஐயாம் சாரி. தவறாக சொல்லிவிட்டேன். நீங்கள் வித்யா
ஸ்ரீராம்தானே?"

"மிஸ்டர். உங்களுக்கு என்ன வேண்டும்."

"யு ஆர் ஸ்மார்ட். நீங்கள்தான் வேண்டும். உங்களோடு பேச வேண்டும். நீங்கள்
என்னை என்னவோ பண்ணுகிறீர்கள்." ராஜீவ் கைகளை நீட்டினான். அதற்குள்
தாடித்தடியன் அரைகுறையாக புரிந்து கொண்டு உளர ஆரம்பித்தான். அவனை மெல்லிய
குரலில் அதட்டி அமைதி படுத்தினாள். சிவப்பு நிற திரவம் ஊற்றப்பட்ட
கோப்பையை அவன் கைகளில் திணித்தாள்.

"மிஸ்டர். போங்கள். உங்கள் இடத்திற்கு போய் அளவாக குடியுங்கள். அழகான
பெண்களிடம் தத்துபித்து என்று உளறாதீர்கள். இன்னும் பேச்சைச்
தொடர்ந்தீர்கள் என்றால் கூச்சல் போடுவேன். போலீஸ் வரும்"

"போலீஸ் வராது." ராஜீவ் இரண்டு கைகளையும் அகலமாக விரித்து ஒரு ஒரு அடியாக
பின்னால் போனான். கண்களை சிமிட்டினான். அவள் நிமிர்ந்து அவனை எரிப்பது
போல பார்த்தாள். மை காட்! கோபப்படுவதில் கூட எவ்வளவு அழகாக இருக்கிறாள்!

ராஜீவ் அவளை விட்டுப் பிடிப்பது என்று தீர்மானித்து தன் டேபிளில் வந்து
அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு யோசிக்க ஆரம்பித்தான். உடனடியாக
அதிர்ஷ்டக் காற்று அவனை நோக்கி வீசியது, ரம் ரூபத்தில். "ஓ நோ!" என்ற
அவளின் அலறலும் தொடர்ந்து வந்தது.

தாடித்தடியனுக்கும் அவளுக்கும் ஏதோ வாக்குவாதம் வந்திருக்க வேண்டும்.
அவன் மிச்சமிருந்த ரம் கோப்பையை அவள் மீது குறிதவறி வீச அது ராஜீவை இடது
பக்கமாக குளிப்பாட்டியது.

அவள் ஓரேயடியாக மாறிப்போனாள். ஒரு நிமிடத்தில் நூறு சாரி சொன்னாள். அவளே
வலுக்கட்டயமாக ராஜீவின் கோட்டை கழற்றினாள். நடுங்கும் கைகளோடு டிஷ்யூ
பேப்பரால் ரம் கொட்டிய பகுதிகளை துடைத்து விட்டாள். அவளின் குஷன் விரல்
ஸ்பரிசத்தில் ராஜீவுக்கு உச்சி குளிர்ந்தது. நடுநடுவே தாடிக்கார தடியனை
திட்டித் தீர்த்தாள். ராஜீவ் எவ்வளவோ கெஞ்சியும் அவள் கோட்டை
திருப்பித்தரவில்லை. 'உலர் சலவை செய்துதான் திருப்பித் தருவேன்' என்று
அடம்பிடித்தாள். பறவை சிக்கிவிட்டது!

"சார். நீங்கள் உங்கள் பெயரை சொல்லவே இல்லையே." சினேக பார்வையுடன்
மென்மையாக இழுத்தாள்.

"ராஜீவ். சார், மோர் எல்லாம் தேவையில்லை. ராஜீவ் என்று அழைத்தாலே
போதும்."

"நான் ரமா வெங்கடேஷ்"

ராஜீவ் கேள்வியாக அந்த தாடித்தடியனை பார்த்தான். அவள் மப்பில் டேபிளில்
சரிந்திருந்தான்.

"வெங்கடேஷ் என் அப்பா. இவனை விட்டுத்தள்ளுங்கள். இவனால்தான் என்
வாழ்க்கையே நாசமாகிவிட்டது. ராஜீவ், ஒரு சின்ன உதவி செய்யேன். இவனை கீழே
கொண்டு காரில் விட்டுவிட்டு வந்துவிடலாம். டிரைவர் இருக்கிறான். அவன்
பார்த்துக் கொள்வான். நான் இன்னும் சரியாக சாப்பிடவே இல்லை"

ராஜீவும் ரமாவும் அந்த தாடித்தடியனை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போய்
காரில் திணித்தார்கள். அந்த சமயத்தில் ராஜீவுக்கு செல் அழைப்பு வந்தது.

"ஓகே ரமா. நான் போய் எனக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன்.
இவனை ஒழுங்குபடுத்திவிட்டு மேலே வா"

ராஜீவ் தலை மறையும் வரை ரமா காத்திருந்தாள். லிப்ட் கதவு மூடியதும்
தாடிக்காரனை ஓங்கி ஒரு தட்டு தட்டினாள். அவன் விருட்டென எழுந்து
உட்கார்ந்து கொண்டான். "என்ன பறவை சிக்கிடுச்சா? செம துட்டு பார்ட்டியா?"
ரமா தன் சிவந்த இதழ்களில் விரல் வைத்து 'ஷ்ஷ்' என்றாள்.

"அவன் கோட்டு பாக்கெட்டில் பார்த்தேன். ஏழெட்டு கிரெடிட் கார்டுகள்
வைத்திருக்கிறான். ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக அவன் பர்ஸ் புடைப்பாக
இருந்தது. அரை மணி பொறு. நான் அவனை கொத்திக் கொண்டு வந்துவிடுகிறேன்."

வெகு இயல்பாக லிப்ட் ஏறியவள் ராஜீவை பார்த்ததும் பொய்யான பதட்டத்தை
வரவழைத்துக் கொண்டாள்.

"சொல்லுங்கள் ராஜேஷ். நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்."

"ரமா. நான் ராஜேஷ் இல்லை. ராஜீவ். தி.நகரில் இருக்கும் ஜே,கே.ஆர். கோல்ட்
ஹவுஸ் தெரியுமா?"

ரமாவின் இரண்டு கண்களும் திடீரென ஒளிர்ந்தன.

"யெஸ் ரமா. அதன் நான்கு பார்ட்னர்களில் நானும் ஒருவன். தினம் ஒரு லட்சம்
என்று செலவழித்தால் கூட இன்னும் அறுபது வருஷத்துக்கு கவலையில்லை."

"ராஜீவ். நான் மிகவும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கிறேன். எங்கள்
வீட்டில் சாதாரண மாருதி 800தான் இருந்தது. ஏ.சி. கூட விண்டோ ஏசிதான். என்
அப்பா பாக்கெட் மணியாக கேவலம் ஐநூறு ரூபாய்தான் கொடுப்பார். எனக்கு நிறைய
பணம் தேவைப்பட்டது. மாடலிங்கில் நுழைந்தேன். இந்த தாடிக்காரன் பேச்சை
கேட்டு கொஞ்சம் திசை மாறிப் போய்விட்டேன்"

மெல்லிதாக அழுதாள். ராஜீவ் பதறிப்போய் அவள் கண்களைத் துடைத்தான்.
வேண்டுமென்றே சில பகுதிகளில் கைகளை ஓடவிட்டான். அவள் அதை அனுமதித்தாள்.

"ரமா. நீ என்னிடம் வந்து விட்டாயல்லவா. இனி உன் பிரச்சனை தீர்ந்தது.
இன்னும் ஆறே மாசத்தில் நீதான் நம்பர் ஒன் மாடல். குறித்து வைத்துக் கொள்"

"தாங்க்ஸ் ராஜீவ். உன்னிடம் ஆரம்பத்தில் கோபித்துக் கொண்டு விட்டேன்.
மன்னித்துவிடேன்."

"அதை அப்போதே மறந்துவிட்டேன்."

ரமாவும் ராஜீவும் கீழே வந்த போது அந்த தாடிக்காரன் குடிபோதையில் மயங்கிக்
கிடப்பது மாதிரி கார் பின்சீட்டில் சரிந்திருந்தான்.

"ராஜீவ். நான் உன் காரில் வருகிறேனே." அவன் தோள்களில் சரிந்தாள்.

ராஜீவின் ஷெவர்லே இருந்த இடம் கொஞ்சம் இருளடைந்த பகுதியாக இருந்தது.
முதலில் காரை பார்த்து வியந்தவள், டிரைவர் ஸீட்டில் அமர்ந்த ராஜீவ் மீது
ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, அவனை அணைத்து, இதழ்களை ஈரப்படுத்தினாள். ராஜீவ்
தடுமாறிப்போனான்.

கார் வேகமெடுத்து பிரதான சாலைக்கு வந்தபோது, சென்னை வேக வேகமாக கவியும்
இரவுக்குள் தன்னை ஒடுங்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தது. ரமா ராஜீவை
தொடர்ந்து தொந்திரவு செய்து கொண்டிருந்தாள். ராஜீவ் மெதுவாக
ஆரம்பித்தான்.

"ரமா. நான் ஒரு உல்லாச ப்ரியன். நான் ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ள
மாட்டாயே?"

"சொல்லு." நிமிண்டும் விரல்களூக்கு சற்று ஓய்வு கொடுத்தாள்.

"என் இரவுக்கு ஒரு பெண் பத்தாது. நீதான் லீட் கிடார் என்றால், எனக்கு
ஐந்து அல்லது ஆறு செகன்டரி கிடார்கள் வேண்டும். உனக்கு தெரிந்தவர்கள்
இருக்கிறார்களா?"

"ராஜீவ்! யூ ஆர் வெரி நாட்டி!" இடுப்பில் குத்தினாள். "பெரிசாக
செலவாகும். பரவாயில்லையா?" என்றாள்.

"பணத்தைப் பற்றி கவலைப் படாதே. எனக்கு வேண்டியது பெண்கள்."

ரமாவின் செல்போன் தொடர்ந்து இயங்கியது. "டன் ராஜீவ். இன்னும் அரை மணியில்
உன்னை மகிழ்விக்க அரை டஜன் அழகுப் பெண்கள் காத்திருப்பார்கள்."

சென்னை புறநகர் பகுதியில் ஒரு சொகுசு பங்களாவின் முன்னால் காரை நிறுத்தச்
சொன்னாள். ராஜீவ் ஆச்சர்யப்பட்டான். 'அட! என்னிடம் கூட இப்படி ஒரு பங்களா
இல்லையே?'.

"இது வாடகை வீடு ராஜீவ். வா! உண்னோடு நிறைய வேலை இருக்கிறது." ராஜீவை
தரதரவென இழுத்துக் கொண்டு போனாள்.

பத்து நிமிட இடைவெளியில் தாடிக்காரனின் கார் சத்தமின்றி நின்றது. அப்போது
பின் சீட்டில் சரிந்திருந்த தடியன் இப்போது முன் சீட்டில் ஒய்யாரமாக
அமர்ந்திருந்தான். பின் சீட்டில் மூன்று தடியர்கள் இருந்தார்கள்.
அவர்களிடம் ஸ்டில் காமிரா, மூவி காமிரா என்று சகல எலக்ட்ரானிக்
வஸ்துகளும் இருந்தன.

"மாம்ஸ். எல்லாரும் கொடுத்த வேலையை சரியா செய்யணும் புரிஞ்சுதா? வேலை
பர்ஃபெக்டா முடிஞ்சா பேமெண்ட் டபுள். ஓகே?"

தலையாட்டினார்கள்.

பங்களாவுக்குள் ரமாவின் அனுமதி வாங்கிக் கொண்டு ஒரு தனிமையான
பாத்ரூமுக்குள் போனான் ராஜீவ். செல்லை இயக்கினான். எதிர் முனையில்

"சார். பறவைகள் கூட்டமா சிக்குது. ஆர் யூ இன் கண்ட்ரோல்?"

"யெஸ். நாங்க எல்லாரும் நீ இருக்கிற பங்களாவிலேர்ந்து இருநூறு மீட்டர்
தூரத்திலே இருக்கோம். கம்பிளீட் கண்ட்ரோல். கவலைப்படாதே."

"ஓகே சார். இன்னும் அரை மணியில என்னோட அடுத்த சிக்னல் வரும். ரவுண்டப்
செஞ்சுடுங்க. பார்டி பெரிய பார்ட்டி. எந்த பறவையையும் விட்டுடாதீங்க."

"கோ அஹேட் மேன்."

மெல்லிய புன்சிரிப்புடன் செல்லை ஆஃப் செய்தான் ராஜீவ் என்ற புனைப் பெயர்
கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன். அஸிஸ்டென்ட் கமிஷ்னர் ரவி யாதவ்
தலைமையில் ஒரு போலீஸ் கூட்டம் வெளியே இருளில் காத்திருந்தது.

(தினமலர் - வாரமலர் - 21 பிப்ரவரி 2010)

Monday, 8 March 2010

ஆபரேஷன் மோஹினி


ஆபரேஷன் மோகினி

இந்த கதைக்கு அதி முக்கியமானவர்கள் இருவர். ஒருவன் கோட்டை மனோ. இன்னொருவன் பல்ஸ் முத்து (பல்ஸர் என்பதன் சுருக்). இருவருமே லோக்கல் தாதாக்கள். சினிமாவில் மட்டுமே இவர்களைப் போன்றவர்களை அநியாயத்துக்கு உயர்த்தி காட்டுவார்கள். கண்கள் சிவக்க, கை நரம்புகள் புடைக்க அவர்கள் செய்யும் ரத்தக்களறிக்கு நியாயம் சொல்வார்கள். மும்பை இறக்குமதி பால் பப்பாளி ஹீரோயின்கள் அவர்களை துரத்தி துரத்தி காதலிப்பார்கள். யதார்தத்தில், இந்த கதையில், கோட்டையும் பல்ஸும் கெட்டவன்கள்.

மணலியில் ஆரம்பித்து மூலக்கடை வரை கோட்டையும் பல்ஸும் வைத்ததுதான் சட்டம். மூலக்கடை நாற்சந்தியில் ஒரு குட்டி நகைக்கடை வைத்திருக்கும் மோதிலால் சேட் ஒரு முறை கரீம் பாயிடம் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனை தராமல் இழுத்தடித்தான். கோட்டையும் பல்ஸும் உடனே களத்தில் இறங்கினார்கள். அவர்கள் ஸ்டைலே தனி. முதலில் அதிரடி அடி. அப்புறம்தான் பேச்சு. மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொப்பளிக்க மிதிபட்ட கரப்பான் பூச்சி மாதிரி மோதிலால் சேட் தன் ஏராளமான தொப்பையுடன் பிளிறிக்கொண்டே ஓடியதை முன்னூறு பேருக்கு குறையாமல் வேடிக்கை பார்த்தார்கள். அதில் டிராஃபிக் போலீசும் சேர்த்தி. இது போன்ற சாகச பட்டியல்கள் அருகில் இருக்கும் போலீஸ் ரிகார்டுகளில் ஏகமாக குவிந்து, பழுப்பேறிக் கொண்டிருக்கின்றன. எல்லா அட்டகாசங்களையும் காவல் துறை சகித்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மாண்புமிகு மதிவாணன். அதாவது லோக்கல் பேச்சுவழக்கில் 'அமைச்சர்'.

அந்த பேச்சு வழக்கை மீறி மணலி ஏரியாவில் அவரை யாராவது 'மதிவாணன்' என்று பெயர் சொல்லி அழைத்து விட்டால், அவனும் மோதிலால் சேட் மாதிரி ரத்தம் கக்க வேண்டியிருக்கும். இத்தனைக்கும் மதிவாணன் தற்போது அமைச்சர் இல்லை. இருந்தாலும் அந்த கூட்டத்திற்கு அவர் எப்போதும் அமைச்சர்தான். ஒரு காலத்தில், ஒரு அரசியல் கட்சியால் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டு 'அழகு' பார்க்கப்பட்டவர். ஆனாலும் தன் நிழல் சமாசாரங்களை எந்தவிதத்திலும் இம்மியளவும் குறைக்காமல் இருந்துவிட, அந்த அரசியல் கட்சிக்கு அவரை கழட்டி விடும் நிர்பந்தம் வந்தது. மதிவாணனின் சுட்டுவிரல் அசைவுக்கு வட சென்னை கட்டுப்பட்டு இருப்பதால் பதவிக்கு வந்த எந்த அரசியல் கட்சியும் அவரை எதிர்க்க பயந்தன. எவனுக்கும் பயப்படாமல் தெனாவட்டாக இருந்த மதிவாணன் ஒரு சில மாதங்களாக தூக்கமில்லாமல் அலைகிறார். அவருக்கு செக் வைக்க வந்திருப்பவர், அந்த பகுதிக்கு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உதவி போலீஸ் கமிஷ்னர், திரு ரவி யாதவ்.

ஏ.சி. ரவி யாதவை யாரும் முதலில் கண்டு கொள்ளவில்லை. ஆனால் எந்த அரசியல் குறுக்கீடுகளுக்கும் பயப்படாமல் ஒவ்வொரு ரௌடியாக அவர் உள்ளே தள்ள ஆரம்பிக்க, மற்ற கேடிகள் அரை மப்பில் 'மெர்சலான' குடியர்கள் மாதிரி ஆனார்கள். அதுவும் சில நாட்களுக்கு முன்னால், மாத்தூர் மில்க் காலனியில் ஆஸ்டின் செல்வா என்ற ரௌடியை பட்ட பகலில் ஓட ஓட விரட்டி அவர் சுட்டுக்கொன்றதை பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகள், அடுத்த குறி 'கோட்டை?' என்று பரபரப்பை உண்டாக்கியிருந்தன. ரவி யாதவின் வேகத்துக்கு, இன்னும் வலு சேர்க்கும் விதமாக அங்கே உதயமானவள்தான், சிட்டு.

சிட்டுவுக்கு சொந்த ஊர் சித்தூர். ஆனால் நகரியில்தான் தொழில். நெடுஞ்சாலை லாரி டிரைவர்களூம், க்ளீனர்களூம்தான் அவள் வாடிக்கையாளர்கள். இரவு நேர மாமாக்களின் கமிஷன் கட்டிங்குகள், ஆந்திரா போலீசின் மாமுல்கள், மற்ற இதர தொந்தரவுகள் அவளுக்கு பாரமாக இருந்தன. அந்த சமயத்தில்தான் கோட்டை மனோவுக்கு ஓரிரவு விருந்தாகும் வாய்ப்பு வந்தது. சாதாரணமாக இரவு பெண்களை, வந்த வேலை முடிந்ததும், அந்த நிமிடமே மறந்துவிடும் மனோவுக்கு, சிட்டு வித்தியாசமாக தெரிந்தாள். "மணலிக்கு வருகிறாயா?" என்று கேட்டு விட்டான். சிட்டுவும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தாள். ஆனால் மணலிக்கு வந்ததும் சிட்டு கட்சி மாறினாள். அதற்கு காரணம், பல்ஸ்.

கோட்டை மனோவை பொறுத்தவரை பெண் என்பது இரவு நேரத்தில் வயிறு முட்ட குடித்தபின், தூங்குவதற்கு முன்பு கையாளப்படும் ஒரு பாலியல் வஸ்து. அதற்கு ஆசா பாசங்கள் உண்டு என்பதை அறியாத முரடன். இந்த அனுகுமுறை சிட்டுக்கு எரிச்சலை தந்தது. ஆனால் அவன் மூலமாக அறிமுகமான பல்ஸ் அப்படியல்ல. ஒரு பூவை கையாள்வது மாதிரி சிட்டுவை கையாண்டான். மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் படம் காட்டினான். பெரிய பெரிய ஏ.சி. கடைகளில் அழைத்து போய் அவளுக்கு விதவிதமான மார்டன் உடைகளை வாங்கிக் கொடுத்தான். நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துப்போய், அரை இருட்டில் அவள் காதுகளில் கிசுகிசுத்தான். ஆண்வர்க்கத்தின் உஷ்ண மூச்சுக்காற்றை மட்டுமே அறிந்து வந்தவள், பல்ஸின் மென்மையில் கிறங்கிப்போனாள். பல்ஸ் கொடுத்த தைரியத்தில் கோட்டைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தாள். தான் அழைத்து வந்தவளை, பல்ஸ் கொத்திக் கொண்டு போனது, கோட்டையை உசுப்பி விட்டது. வந்தது பிரச்சனை. பல்ஸ் முத்து, கோட்டையின் முதல் எதிரியானான்.

முதலில் அடிபொடிகளில் ஆரம்பித்த அடிதடி, கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து நேரடி மோதலுக்கு வழி வகுத்தது. கண்ணாமூச்சி விளையாடுபவர்கள் மாதிரி, நாளுக்கு நாள், மூலைக்கு மூலை, கோட்டையின் ஆட்களும், பல்ஸின் ஆட்களும் அடித்துக் கொண்டார்கள். ரவி யாதவ் சுறுசுறுப்பானார். மதிவாணன் கவலையுற்றார். சமரசம் செய்விக்க, இருவரையும் உடனடியாக அழைத்தார்.

மதிவாணனின் நிழல் சமாசாரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகத்துக்குள் அனைவரும் கூடியிருந்தார்கள். வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ ஒன்று டயர்கள் தேய குலுங்கி நிற்கவும், அனைவரும் சுறுசுறுப்பானர்கள். வெள்ளை வேட்டி, மல் ஜிப்பா, வெள்ளை செருப்பு, அரை கிலோ தங்க ஆபரணங்கள் சகிதமாக மதிவாணன் வெளிப்பட்டார். கையில் அசாதாரண நீள அகலத்தில் உறையிடப்படாத செல் ஒன்று இருந்தது.

"என்னப்பா கோட்டை வந்துட்டானா?"

"எல்லோரும் உங்களுக்காக காத்திருக்காங்கண்ணா. ஆனா...."

"ஆனா என்னய்யா?"

"பல்ஸ், அப்பறம் அந்தப் பொண்ணு?"

"என்னவாம்"

"அண்ணே.... அவங்க வரமாட்டாங்களாம்.... பாதுகாப்பு இல்லையாம்...... நீங்க வந்த
சேதி தெரிஞ்சதும்தான் வருவாங்களாம்"

"வந்துட்டேன்ல. வரச்சொல்லு".

அடுத்த பத்து நிமிட பரபரப்புக்கு பின் பல்ஸ் அவன் சகாக்களுடன் வந்தான். ஆளாளுக்கு விரைத்துக் கொண்டார்கள். முறைத்துக் கொண்டார்கள். மதிவாணனின் அதட்டலுக்கு அடங்கினார்கள்.

"கோட்டை, பல்ஸ், உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா சொல்லறேன். நீங்க ரெண்டுபட்டு நின்னீங்கன்னா, அது நமக்குதான் வீக்கு. நேத்து வரைக்கும் ப்யூசாகிப் போன பார்ட்டிங்க, நாளைக்கு நம்மளை சப்பையா பார்ப்பாங்க. தேவையா? சரி, மனோ, உன் பிரச்சனை என்னன்னு சொல்லு."

"நான்தான் அந்த பொம்பளையை இட்டாந்தேன். ஒண்ணு அவ எனக்கு.... எனக்கு மட்டும் இருக்கணும். இல்லேன்னா இந்த இடத்தை விட்டே போயிடணும்."

மதிவாணன் பல்ஸ் பக்கம் திரும்பினார்.

"அண்ணே. நான் அவளை கட்டிக்கறதா முடிவு செஞ்சுட்டேன்." பல்ஸ் ஆதரவு கோஷ்டி கைதட்டி ஆரவாரம் செய்ய எதிர் கோஷ்டி சூடானது.

"நீ என்னமா சொல்லற"

"ஐயா. இவரு ரொம்ப நல்லவருதாங்க. ஆனா அந்த ஆளு இருக்கிறவரைக்கும் நாங்க நிம்மதியா இருக்க முடியாது. இவரும் தொழில் செய்ய முடியாது. அதுனால நான் போயிடறேங்க."

"சிட்டு நீ ஏன் போகணும். கண்ட சொறி நாயிக்கெல்லாம் பயந்துக்கிட்டு....."

"டேய்! என்னியா சொறி நாயின்னே?" அதுவரை உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த மனோ திடீரென பல்ஸ் மேல் பாய்ந்தான். முதல் கத்திக் குத்து பல்ஸின் விலாவில். அடுத்து அவன் கழுத்துப் பகுதியில். எவ்வளவோ பேர் அவனை விலக்க முயசித்தும், அவன் கை இயங்கிக் கொண்டே இருந்தது. முழுவதுமாக விலக்கி, பல்ஸை விலக்கிப் பார்த்த போது அவன் முழுவதுமாக பஞ்சர் ஆகியிருந்தான்.

"அண்ணே! உன்னை கொன்னுட்டானா அந்த நாயீ..." பல்ஸ் ஆதரவாளன் கதறிக் கொண்டே, தன் இடுப்பிலிருந்து ஒரு ரிவால்வரை எடுத்து கோட்டையை குறி வைத்தான். முதல் குண்டு அவன் கண்களை பதம் பார்த்தது. இரண்டாக மடங்கி விழுந்தவனின் முதுகில் மற்ற குண்டுகள் பொத்தல் போட்டன.

அதன் பிறகு அந்த இடம் போர்க்களமானது. அது முக்கியமில்லை. இந்த தகராறில் இம்மியளவும் பாதிக்காது சிட்டு ஓட்டமெடுத்தாள். இரண்டு மூன்று பஸ்கள் மாறி, கோயம்பேட்டை அடைந்தாள். காலியாக இருந்த திருநெல்வேலி பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். உடம்பில் எங்கோ ஒளித்து வைத்திருந்த செல்லை எடுத்து இயக்கினாள்.

"ஐயா. நான் வடக்கன்குளம் போயிக்கிட்டு இருக்கேங்க. அங்க அல்லாரும் அடிச்சிக்கிட்டு சாவறானுவ. கோட்டை, பல்ஸு ரெண்டு பேருமே அவுட்டு."

"சரி. சரி. நீ ஊருக்கு போய் நான் சொன்ன ஆள பாரு. சின்னதா பொட்டிக் கடை வைக்க உனக்கு உதவி செய்வாரு. உடம்ப விக்கற வேலைய விட்டுட்டு இனிமேலாவது கௌரவமா வாழப் பாரு."

"சரிங்கய்யா."

எதிர் முனையில் செல்லை ஆஃப் செய்த ஏ.சி. ரவி யாதவ், உடனடியாக தன் உயரதிகாரிக்கு தகவல் அனுப்பினார்.

"ஸார்! ஆப்பரேஷன் மோகினி சக்ஸஸ்"

(தினமலர் - வாரமலர் - 07 மார்ச் 2010)

Wednesday, 4 March 2009

தெய்வம் தந்த வீடு


சிவாவுக்குள் பிசாசு மனம் கூச்சலிட்டது. "ஏமாந்தியா, முட்டாளே. ஹைகோர்ட்டே சொல்லியும் உன் சித்தப்பா கேட்கல. அப்பீல் செஞ்சிருக்காரு, பாரு. நான் சொல்லறத கேளு. ஒரே வாரத்தில சித்தப்பா உன் காலடில வீட்டு சாவியை மரியாதையோடு வைப்பாரு."

கொஞ்சம் நின்று யோசித்தான். சித்தப்பாவாயிற்றே என்று இரக்கப்பட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி என் வீட்டை தான் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

ஆனால் அடுத்த நொடியே அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. "சிவா. அவனுக்கு இன்னும் ஆறே மாசம் டைம் கொடுடா. உன் சித்தியின் கேன்சர் டிரீட்மெண்டுக்காக அலைஞ்சுக்கிட்டிருக்கான்டா."

"அப்பா பேச்சை கேட்கப் போறியா? போச்சு. நாலு வருசமா பெண் கல்யாணக் கடன்களைச் சொல்லி ஏமாத்தியாச்சு. இப்போ கேன்சர். அதற்கு பிறகு ஏதாவது இல்லாமலா போய்விடும்?"

மனப்பிசாசு சொல்வதுதான் சரி.

"சாரி அப்பா."

தனக்குள் பேசிக் கொண்டே வந்த சிவா ரோட்டில் கிடந்த அமாவாசை பூசனிக்காயை கவனிக்கவில்லை. மடேரென்று வழுக்கி விழுந்தான். பின் மண்டையிலும் இடுப்புப் பகுதியிலும் சரியான அடி. பின்புறம் அனலாய் தகித்தது. எழ முயன்றான். முடியவில்லை. மணிக்கட்டு பகுதியில் ஆயிரம் ஊசிகளை சொருகிவிட்ட மாதிரி வலித்தது.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ரோடு. ஆட்டோக்களும் பைக்குகளும் விர்விர்ரென்று போய் கொண்டிருந்தாலும் உதவிட யாருமில்லை.

வேகமாக போய் கொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென ஓரம் கட்டி நின்றது. அதிலிருத்து குதித்து இறங்கினான் ஒரு இனைஞன். மகேஷ்! சித்தப்பாவின் இரண்டாவது மகன்.

முதுகு பக்கம் அவன் பிடிக்க, அவன் நண்பன் கால் பக்கம் பிடிக்க சிவா ஆட்டோவில் திணிக்கப்பட்டான்.

உடனே பிசாசு உரக்க கத்தியது. "சிவா மறுபடியும் ஏமாறாதே. உதவி செய்யுற மாதிரி செஞ்சுட்டு வீட்டை அமுக்கிடுவாங்க. ஜாக்கிரதை"

"ரொம்ப நன்றி மகேஷ். நீ மட்டும் இல்லேன்னா நான் ரோட்டில அனாதையாக கிடந்து செத்தே போயிருப்பேன். உங்க குடும்பத்துக்கு பொறுக்கமுடியாத தொல்லைகள் எவ்வளவோ கொடுத்திருக்கேன். இருந்தாலும், எனக்கு உதவியிருக்கியே, யு ஆர் கிரேட்!"

"அண்ணா, உங்களுக்கும் அப்பாவுக்கும் இருக்கும் சண்டையில எனக்கு என்னன்னா சம்பந்தம்?"

அந்த பதிலில் சிவா கூனிக் குறுகிப் போனான். "அது சரி, வேறு வீட்டுக்கு என்ன செய்யப் போகிறீங்க?"

"கஷ்டம்தான்னா. இவ்வளவு காலம் படியளந்த கடவுள் இதுக்கும் வழி காட்டாமலா போவார்"

கொஞ்சம் அவஸ்தையான யோசனைகளுக்கு பிறகு, "வேண்டாம், மகேஷ். அப்பாகிட்டே சொல்லிடு. நீங்க அங்கேயே இருந்துகுங்க.."

வீடு, வீடு என்று பேராசையில் அலைந்து, கடைசியில் தூக்க ஆளில்லாமல் வீதியில் சாக கிடந்தேனே! என்ன முட்டாள் நான்?

மறுபடியும் பிசாசு குரல் எழுப்ப எத்தனிக்க, "ஓடிப்போ பிசாசே. உள்ளத்தினுள் அகல் விளக்கை இப்போதுதான் ஏற்றி வைத்திருக்கிறேன்."

"என்ன அண்ணா?"

"ஒன்றுமில்லை." தம்பியை அணைத்த கைகள் வலித்தன. ஆனால் மனசில் வலி இல்லை.

(கலைமகள் - மார்ச் 2009)

Friday, 30 January 2009

வா! வா! விரைந்து வா!


குங்குமம் - 01 ஜனவரி 2009

"உட்கார்"

தீபக் சோப்ராவின் அந்த வார்த்தையில் அதிகாரமும் மிரட்டலும் இருந்தது. சோனாலி பொறியில் சிக்கிக் கொண்ட எலி மாதிரி முழித்தாள். எதிரே இருந்த கையில்லா நாற்காலியின் நுனியில் அவஸ்தையுடன் அமர்ந்தாள். சோப்ரா அவளை ஒரு கேவலமான ஜந்துவை பார்ப்பது மாதிரி பார்த்தான்.

"இந்த மாதிரி எத்தனை நாள... இல்லை மாசமா, வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கே?"

"சார். இதுதான் முதல் தடவை. ஏதோ இல்லாமையிலே தப்பு செஞ்சுட்டேன் சார். தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க. உங்களை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்." எழுந்து நின்று கொண்டாள்.

சோப்ரா மீண்டும் கைகளை உயர்த்தி அவளை உட்காரச் சொன்னான். "உன்னை அவ்வளவு சுலபமா விட்டுட முடியுமா? நான் யார் தெரியுமா? இருபது வருஷம் மிலிட்டிரியில ஆபீசரா இருந்தவன். எதை வேணும்னாலும் மன்னிப்பேன். திருட்டுக்கு மன்னிப்பே கிடையாது. புரிஞ்சுதா, மை டியர் யங் அண்ட் ப்யூட்டிஃபுல் கேர்ல்"

சோனாலி அடிபட்ட கோழிக்குஞ்சு மாதிரி தலையாட்டினாள். "நீ திருடியிருக்கியே, அந்த ஸ்கர்ட் என்ன விலை இருக்கும் தெரியுமா?"

"சார். என் வீட்டுக்காரருக்கு சரியான வேலை இல்லே. என் சம்பளத்தை நம்பி வீட்டுல ஆறு பேரு இருக்காங்க. அதுவும் பத்தலே. என் பக்கத்துவீட்டுக்காரிதான் ஒண்ணு, ரெண்டு ஸ்கர்ட்டுங்கள எடுத்தா. நான் வித்துத் தரேன். ஆபத்துக்கு பாவமில்லேன்னா. எனக்கு திருடத் தெரியாது சார். அதான் மாட்டிக்கிட்டேன்."

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் செக்யூரிடி ஆபீஸர். நீ திருடினத மறைவா இருந்த க்ளோஸ் சர்க்யூட் கேமிரா படம் புடிச்சிடுச்சு. வசமா மாட்டிக் கிட்டே. இப்ப நான் என் ட்யூட்டிய செஞ்சே ஆகனும்."

"சார். மொதலாளிக்கு தெரிஞ்சா வேலை போயிடும். தவிர, திருடி பட்டத்தோட வெளியில போனா, எங்கையும் வேலை கிடைக்காது. சார்.. சார்.. உங்களை கடவுளா நெனைச்சு...."

"நான் சென்ஸ். உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா, எம்.டி.கிட்டே சொல்லியிருக்கணும். அல்லது அட்லீஸ்ட் எங்கிட்டேயாவது சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு திருடினா எப்படி?"

"தப்புதான் சார். இந்த தடவை, பெரிய மனசு வைச்சு, விட்டுடுங்க. இனிமே செத்தாலும் திருடமாட்டேன்."

சோப்ரா பதிலேதும் சொல்லாமல் அவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"சார். ப்ளீஸ்."

"ஓகே. நான் உன்னை காப்பாத்தறேன். ஆனா, உன்னை காப்பாத்தறதுல எனக்கு என்ன லாபம்?"

சோப்ரா கோணலாக சிரித்தான். சோனாலியை கீழ் பார்வையில் பார்த்தான். "உனக்கு தண்டனையும் கொடுக்கணும். அதே சமயத்துல எனக்கு லாபமும் இருக்கணும். டூ இன் ஒன். அந்த மாதிரி எங்கிட்டே ஒரு திட்டம் இருக்கு."

"சார். நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல"

"வேலையில்லாதவன் பொண்டாட்டியா இருந்தாலும், இளமையாகவும், அழகாகவும் இருக்கே....."

சோனாலி விலுக்கென்று எழுந்து கொண்டாள். கண்களில் கோபம் கொப்பளித்தது. "சார். எனக்கு வேலை போனாலும் பரவாயில்லை. நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே"

எழுந்தவளை மீண்டும் அதட்டினான். "நான் சொல்லறதை முழுசா கேட்காம நீயே ஒரு முடிவுக்கு வந்தா எப்படி?

சோனாலி தன் புடவை தலைப்பை சரி செய்து தோள்களை போர்த்திக் கொண்டாள். "சோனா, நீ நெனைக்கிற மாதிரி உன்னை நான் தப்பு காரியம் செய்ய சொல்லப்போறதில்லே. எனக்கு சில வெளிநாட்டு நண்பர்கள் இருக்காங்க. அவங்கெல்லாம் ஆர்மியில இருந்து ரிடயர் ஆனவங்க. அவங்களுக்கு இந்திய பெண்கள் மேல எப்பவுமே ஒரு கண்ணு உண்டு. அவங்களுக்கு தேவையான பெண்களை தேடி பிடிச்சு, அப்பப்ப நான் கொடுப்பேன். இன்னிக்கு என்னோட ஒரு நண்பருக்கு ஒரு புது மாதிரியான கஸ்டமர் தேவைப்படுது. அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. உன்னை ஒண்ணும் செய்யமாட்டார். நீ அவருக்கு துணையா இருக்கணும். அப்பப்ப தோள்ல உரசுவாரு. கன்னத்துல முத்தம் கொடுப்பாரு. இடுப்பை பிடிப்பாரு. அவ்வளவுதான். நீ அதை கொஞ்சமும் கண்டுக்காம அவருக்கு டிரிங்க்ஸ் கலந்து கொடுக்கணும். சாப்பிட ஹெல்ப் செய்யணும். ஆனா எல்லை மீற மாட்டார். இதை அவரே சொல்லியிருக்கார்."

"சார். நான் இப்பவும் முடியாதுன்னு சொன்னா?"

"இந்த வேலை போயிடும். குடும்பம் நடு ரோட்டுக்கு வரும். லுக் சோனாலி. இன்னிக்கு, ஒரே ஒரு நாள். உன்னோட பிக் அப்புக்கும், டிராப்புக்கும் பக்காவா ஏற்பாடு செய்யறேன். நாளை காலையிலேர்ந்து நீ ஃப்ரீ"

சோனாலி கெஞ்சினாள். என்னென்னவோ சொல்லி சொல்லி பார்த்தாள். சோப்ரா அசைவதாக இல்லை. "சார். நீங்க என்னை அப்பறம் ஏமாத்த மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?"

"ஓ. உனக்கு அந்த சந்தேகம் இருக்கா. இங்க பாரு. நீ இப்ப பார்த்தியே, நீ திருடினதை. அதை சிஸ்டத்துலேர்ந்து எடுத்து, இந்த சி.டி.யில போட்டுட்டேன். நீயே வேணும்னாலும் செக் பண்ணிக்க. ஆபீஸ்ல எந்த பைல்லையும் இல்லே. நீ எனக்கு இன்னிக்கு ஒத்துழைப்பு கொடுத்துட்டா, அடுத்த நிமிஷமே அந்த சி.டி.ய உங்கிட்டே கொடுத்துடறேன். இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிறத அப்படியே ஒரு ஆடியோ பைலா போட்டு உங்கிட்டே கொடுத்துடறேன். நான் எல்லை மீறினா, இதை மொதலாளிகிட்டே போட்டு காட்டி, என் வேலைக்கு வேட்டு வை. எப்படி! என் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்"

போய்யா, நீயும். உன் ஜெண்டில்மேன் அக்ரிமெண்டும். சோனாலி மனதுக்குள் சோப்ராவை சபித்தாள். "சார். இப்பவே சொல்லறேன். பல்லை கடிச்சுக்கிட்டு, ஒரு தாத்தாவுக்கு, ஒரு தாதி மாதிரி வேலை செஞ்சு ஒப்பேத்திடறேன். எங்கையாவது என்னை கவுக்க முயற்சி செஞ்சீங்கன்னா... நான் உயிருக்கும் அஞ்சாம உங்களை ஒரு வழி செஞ்சுடுவேன். திருட்டு மாதிரியே எனக்கு இதெல்லாம் பழக்கமில்லே."

"அப்ப. நீ வற்ர"

மிகுந்த மகிழ்சியுடன் கைகுலுக்க வந்தவனை தவிர்த்தாள். அவள் வர வேண்டிய இடம், நேரம் ஆகியவற்றை குறித்துக் கொண்டாள். விருட்டென அவன் அறையை விட்டு வெளியேறினாள்.

கீழ்தளம் வந்ததும், தீடீரென அவளுக்குள் ஒரு புதிய சிந்தனை வந்தது. திருடியது தப்பு. அதிலிருந்து தப்பிக்க, அதைவிட கொடுமையான இன்னொரு தப்பை செய்வதா? முதலாளியிடம் சோப்ராவின் கெட்ட எண்ணத்தை சொல்லி அவரிடமே மன்னிப்பை கேட்டால்? அது சரி. ஆனால் திருட்டை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?

ஆனால் நிச்சயமாக சோப்ரா சொன்ன இடத்துக்கு போகப் போவதில்லை. சோனாலி தீர்மானித்து விட்டாள்.

இந்தக் கதை முடிவு பெற ஒரு சில குறிப்புகளை பின் இணைப்பாக தர அவசியம் இருக்கிறது.

சோப்ராவின் வெளிநாட்டு கிழம் தங்கியிருந்த ஹோட்டல், மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர தாஜ் ஹோட்டல்.
வரச் சொன்ன தேதி 26-12-2008. இரவு 9.00 மணி.
சோப்ராவும், அந்த கிழமும் தரைதள லவுஞ்சில் சோனாலியின் வருகைக்காக காத்திருந்தார்கள்.
மறுநாள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் இருவர் பெயர்களும் இருந்தன.

Monday, 19 January 2009

கோயில் அத்தை


(2008 தினமலர் வார மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)
பெரிய அத்தையின் விரல் நிரடல்களில் கோலமாவு வளைந்தும் நெளிந்தும் ஓடிக்கொண்டிருந்தது. அவள் போடும் கோல அழகைக் காண்பதற்கு கருவறையில் வீற்றிருக்கும் அந்த லஷ்மிநாராயணரே வெளியே வந்து விட்டலநாராயணன் மாதிரி இடுப்பில் கை வைத்துக்கொண்டு ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்ப்பார் என்றே நினைக்கிறேன். சரி, அத்தையாகவே நிமிர்ந்து பார்க்கட்டும், அது வரை நானும் ரசிப்பது என்று தீர்மானமாக நின்று கொண்டிருந்தேன்.

கோலத்தை நிறைவு செய்த்துவிட்ட திருப்தியுடன் அதை பார்த்துக் கொண்டே பிரதட்சிணமாக வலம் வந்தவள், காதோரத்தில் அரும்பியிருந்த வியர்வையை கட்டைவிரலால் வழிக்கப்போனவள், குறுக்கிட்ட என்னை நிமிர்ந்து பார்த்து திகைத்துப் போனாள். சிரமப்பட்டு அடையாளம் கண்டு கொண்டாள். பரவசத்தில் கண்கள் அகலமாக விரிந்தன.

"சுரேஷ்! நீயாடா? எப்படா வந்தே? யாரோ அர்சனை செய்ய வந்திருக்காங்கன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். சே! என்ன முட்டாள் நான்? இவ்வளவு நேரம் காக்க வைச்சிட்டேனே? என்னடா இப்படி திடீர்னு?"

அகன்ற புன்னகையை மட்டுமே பதிலாக வைத்தேன். சாதாரணமாகவே அத்தைக்கு என்னைக் கண்டால் தலைகால் புரியாது. அதுவும் பல வருடங்கள் கழித்து அவளை பார்ப்பதற்காகவே டெல்லியிருந்து களஞ்சேரிக்கு திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்திருக்கிறேன் என்றதும் பதட்டம் கூடிப் போனது. நடுங்கும் கைகளோடு என் கையை பிடித்துப் பார்த்தாள். கோலமாவு கையாலேயே தலையை கோதினாள். என்ன செய்கிறோம் என்று புரியாமல் சின்னக் குழந்தை மாதிரி அங்கும் இங்கும் ஓடினாள். விறுவிறுவென என்னை கோயிலுக்கு வெளியே இழுத்து வந்து வெளிச்சத்தில் ஆசை தீர பார்த்தாள். என்னென்னவோ தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே வந்தாள். எதிர்ப்படுபவர்களிடம், "என் மருமவன். என்னை பார்க்கணும்னு வந்திருக்கான். டெல்லியிலே நல்ல வேலையிலே இருக்கான்." என்று சொல்லி பெருமை பட்டுக் கொண்டே இருந்தாள்.

"அத்தை. உங்க கோயில் வேலை முடிஞ்சிடுச்சா? வீட்டுல போய் நிதானமா பேசலாமே? எதிர் வீட்டுல என் பொட்டிய கொடுத்திட்டு வந்திருக்கேன்"

"இன்னும் பத்து நிமிஷ வேலைதான்டா. கொஞ்சம் பொறு. இல்லைன்னா, பிரகாரத்தை நாலு தடவை சுத்து. வாச படியிலே வந்து உட்கார்ந்துக்க. இதோ வந்திட்டேன்"

எழுபது வயது ஆனாலும், எவ்வளவோ கஷ்டங்கள் வந்து அவளை அலைக்கழித்தாலும், அதை துளி கூட பொருட்படுத்தாமல் சிரித்த முகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் என் அத்தையை பார்க்கும்போது நெஞ்சில் ரத்தம் கசிந்தது. பின்னுக்கு போய்விட்ட நினைவுகள் மீண்டும் சிலிர்த்தெழுந்து என்னுள் முட்டி மோதின.

எனக்கு அத்தைகள் இரண்டு என்றாலும் அத்தான் ஒன்றுதான். கிரிஜா அத்தைதான் பெரிய அத்தை. சொந்த மாமாவுக்குதான் கட்டிக் கொடுத்தார்கள். அத்தானுக்கு மேலக்குளத்துக்கு பக்கத்தில் சின்னதாக ஒரு ரைஸ் மில் இருந்தது. அது நஷ்டத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது. அத்தை தன் உழைப்பை கொட்டி ஒரே வருடத்தில் லாபம் காட்டினாள். அந்த வருடமே கடைத்தெருவில் ஒரு மளிகை கடை போட்டு அதில் அத்தானை உட்கார வைத்துவிட்டு தான் ரைஸ்மில்லின் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டாள். காசு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என்று எல்லோரும் சொல்ல ஆரம்பிக்க, ஒரு துணிச்சலோடு என் சின்ன அத்தை வனஜாவையே, அத்தானுக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைத்தாள். அக்காளும், தங்கையுமாக இருந்தால், சொத்து பிரச்சனை, சக்களத்தி சண்டை வராது என்பதை பொய்யாக்கியவள் என் சின்ன அத்தை.

அப்போதெல்லாம் எனக்கு பள்ளிக்கூடம் போகும் வயது. சின்ன அத்தை, பெரிய அத்தையை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதும், இரண்டு பேர்களுக்கு நடுவே என் அத்தான் தடுமாறி தவிப்பதும், ஆளாளுக்கு வந்து வக்காலத்து வாங்குவதும் அடிக்கடி நடக்கும். பெரிய அத்தை உழைக்கும் வகை என்பதால் எப்போதும் தன்னை அலங்கரித்து கொள்வதில் நாட்டம் கொண்டதில்லை. தனி ஆளாக ஒரு மூட்டை நெல்லை எடுத்து ஹல்லரில் கவிழ்ப்பாள். பெரும்பாலும் இரவில்தான் கரண்டு வரும் என்பதால் சில நாட்கள் நெல் மூட்டை மீது படுத்து தூங்கிவிடுவாள். வேலையாள் இல்லையென்றால் அவளே மாவரைப்பாள். தவிடு பிடிப்பாள். வீட்டில் தன் பிடி அற்று போவது தெரியாமல் பொன்னும் பொருளும் சேர்த்து கொடுத்துக் கொண்டிருந்த சொந்த அக்கா, தன் தங்கையாலேயே ஏமாற்றப்பட்டாள்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை. வனஜா அத்தை தலைவிரி கோலமாக நடுதெருவில் நின்று கொண்டு ஏகத்துக்கும் சத்தம் போட்டு தகாராறு செய்ய, ஊரே கூடியது. என் அப்பாவும் தாத்தாவும் மற்ற உறவுக்காரர்களும் வரவழைக்கப்பட்டு விடிய விடிய பேசினார்கள். அதன்படி கோயில் பக்கத்தில் அரதபழசான, ஓடு வேய்ந்த வீட்டுக்கு மட்டும் பெரிய அத்தை சொந்தக்காரியானாள். அத்தான் பெயரிலும், பெரிய அத்தை பெயரிலும் இருக்கும் மற்ற எல்லா சொத்துக்களும் வனஜா அத்தையின் பெயருக்கு உடனடியாக மாற்றி கொடுத்துவிட வேண்டும் என்பதாக முடிவானது. சின்ன அத்தையை அடிக்கப்போன அத்தானை பெரிய அத்தைதான் தடுத்தாள்.

சொத்துக்கள் தன் கைக்கு வந்ததும், கொஞ்ச நாட்களிலேயே எல்லாவற்றையும் விற்று விட்டு தன் மூன்று பெண் குழந்தைகளுடன் தஞ்சாவூர் போனாள் சின்ன அத்தை. அங்கு மளிகை கடை வைத்தாள். அத்தான் சின்ன அத்தைக்கு தெரியாமல் அவ்வப்போது களஞ்சேரிக்கு வந்துவிட்டு போவார். அந்த சமயத்தில்தான் அத்தானின் முகத்தில் நிம்மதியை பார்க்கமுடியும். ரைஸ் மில் கையைவிட்டு போய்விட்டாலும், பெரிய அத்தை உழைப்பதை நிறுத்தவில்லை. ஊரில் ஒரு வீடு பாக்கியில்லாமல் எந்த வேலையென்றாலும் முகம் சுளிகாமல் இழுத்து போட்டுக் கொண்டு செய்வாள்.

பெரிய அத்தைக்கு நன்றாக பாட வரும். கிணற்றடியில் துணி தோய்க்கும் கல்லில் பெரிய அத்தை குத்துகாலிட்டு மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருக்க அத்தான் அதற்கு பக்கத்திலிருக்கும் தூணில் சரிந்தவாறு ரசித்துக் கொண்டிருப்பார். காதல் கசிந்துருகிக்கொண்டிருக்கும் போது நான் கரடியாய் பல தடவை நுழைந்திருக்கிறேன்.

"வாடா மீசை மொளைச்ச என் மருமவனே! ரம்யாவை கட்டிக்கிறயா?" என்பாள். ரம்யா வனஜா அத்தையின் மூத்தப் பெண்.

"போ அத்தை! வனஜா அத்தை மாமியார்னா வேண்டாம். நீ எனக்கு மாமியாரா இருக்கியா? கட்டிக்கறேன்"

"பார்த்தீங்களா, உங்க மருமவன் பேசறத"

அத்தான் சாமர்த்தியமாக பேச்சை மாற்றிவிடுவார். பெரிய அத்தையிடம் வசதிகள் குறைவாக இருந்தாலும் எனக்கு பெரிய அத்தைதான் பிடிக்கும். நான் படிப்பதற்க்கு சென்னை போனதும் பெரிய அத்தையிடமிருந்து தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. படிப்பு முடித்து, எனக்கு டெல்லியில் வேலை கிடைத்ததும், நான் அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டு டெல்லி வந்துவிட்டேன்.

அதன் பிறகு இரண்டு சம்பவங்கள் மிக முக்கியமானது. சின்ன அத்தையின் மூத்த பெண், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே யாரோ ஒருவனை காதலித்திருக்கிறாள். கொஞ்சம் வசதி குறைவு. கீழ் ஜாதி வேறு. சின்ன அத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ரம்யா ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், அந்த பையனுடன் களஞ்சேரி பெரிய அத்தை வீட்டில் தஞ்சம் புகுந்து விட்டாள். பெரிய அத்தை எல்லாவற்றையும் விசாரித்து விட்டு, அத்தானை வர வழைத்து, அவர் கையாலேயே ஆசிகள் வாங்க வைத்து திருமணத்தை நடத்திவிட்டாள். சின்ன அத்தை போலீசை வரவழைத்து ஊரே வேடிக்கை பார்க்கும் படி செய்தாளாம். ஆனால் பெரிய அத்தையின் உறுதியை கண்டு, அத்தானே மிரண்டு போனாராம்.

அடுத்து என் அத்தான் காலமானது. நாட்கள் போக போக, அத்தான் அதிக நாட்கள் பெரிய அத்தை வீட்டிலேயே இருப்பது அதிகமானதாம். அத்தான் உடலளவில் திடமாக இருந்து வந்தாலும், மனசளவில் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தார். களஞ்சேரி வீட்டில் இருந்தபோது அவர் இறந்து போயிருக்கிறார். அதுவும் பெரிய அத்தையின் மடியில். சின்ன அத்தைக்கு தகவல் போனதாம். அதன் பிறகு அவள் செய்ததுதான் மிகக் கொடூரம். எல்லோர் பேச்சையும் மீறி அத்தானின் சவத்தை தஞ்சாவூர் எடுத்துக் கொண்டு போனாள். பெரிய அத்தையை அந்த சமயத்திலிருந்து எந்த சடங்கிலும் சேர்த்துக் கொள்ளவேயில்லை. பெரிய அத்தை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், எங்கள் உறவிலும், உள்ளூர் மக்களும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.

அதன் பிறகு பெரிய அத்தையின் உழைப்பு பெருமாளை நோக்கி திரும்பி விட்டது. சதா சர்வகாலமும் லஷ்மிநாராயணரே கதி என்று இருந்துவிட்டாள். 'என் சன்னிதி சுத்தமோ சுத்தம். ஆஹா!' என்று அந்த கடவுளே பெருமை பட்டுக்கொள்கிறார் என்றால் அதற்கு பெரிய அத்தைதான் காரணம். கோயிலுக்காகவே தன்னை கட்டிப்போட்டுக் கொண்டுவிட்டதால் பெரிய அத்தை ஊருக்கு கோயில் அத்தை ஆனாள்.

பெருமாளுக்கு சாயரட்சை ஆனது. அதன் பிறகுதான் பெரிய அத்தை வந்தாள். நானும் பெரிய அத்தையும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருந்தோம். நாளைக்கே போக வேண்டும் என்றதும் பொய்யாக கோபித்துக் கொண்டாள். அப்புறம் தானே சமாதானம் செய்து கொண்டாள். அடிக்கடி வரச்சொன்னாள். குடும்பத்தோடு வரச்சொன்னாள். அவசியம் தஞ்சாவூர் போய் சின்ன அத்தையையும் பார்த்துவிட்டு போகச் சொன்னாள். அதற்கு என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். சின்ன அத்தைக்கு இப்போது படுத்த படுக்கையாக இருக்கிறாளாம். ஆனால் வசதிக்கு எந்த குறைவும் இல்லையாம்.

நான் களஞ்சேரிக்கு வந்த வேலை இனிமேல்தான் ஆரம்பிக்க இருக்கிறது. அத்தையை எப்படியாவது சமாளித்து, டெல்லிக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று என் மனைவி சொல்லியனுப்பியிருக்கிறாள். ஆனால், அத்தையின் போக்கை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும், மெதுவாக ஆரம்பித்தேன்.

"அத்தை! நீங்க இங்க ஒண்டியா இருந்துக்கிட்டு எதுக்கு கஷ்டப்படனும். என் கூட வந்திடுங்களேன். சரளா நீங்க டெல்லிக்கு வரப்போறதை ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா?"

என் பேச்சை பெரிய அத்தை எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரம் கண் மூடி யோசித்தாள். பிறகு நிதானமாக கீழ் குரலில் ஆரம்பித்தாள்.

"சுரேஷ் ! மஹாபாரத போர்ல கிருஷ்ணன் யார் பக்கங்கிறதுலேங்கறதுல துரியோதனனுக்கும், அர்ஜுனனுக்கும் போட்டா போட்டி நடந்துச்சாம். அந்த கதை தெரியுமா?"

"ஏதோ ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும் நீங்களே சொல்லுங்களேன்"

"கதை ரொம்ப பெரிசு. அதனால சுருக்கமாச் சொல்லறேன். கிருஷ்ணர் துரியோதனன்கிட்டே, 'உனக்கு நான் மட்டும் வேணுமா? இல்லே, என்னுடைய யாதவ சேனை மொத்தமும் வேணுமா?' ன்னு கேட்டாராம். அதுக்கு துரியோதனன், 'உன் யாதவ சேனைதான் வேணும்' னு சொன்னானாம். 'கிருஷ்ணா! எனக்கு நீ மட்டும் இருந்தா போதும்' னு அர்ஜுனன் சொன்னானாம். துரியோதனன் போன பிறகு, கிருஷ்ணர் அர்ஜுனன் கிட்டே அதுக்கான விளக்கம் கேட்டாராம். 'கிருஷ்ணா! நீ எங்கே இருக்கே என்பதுதான் முக்கியம். எனக்கு யாதவ சேனை எவ்வளவு பெரிசு என்பது முக்கியமில்லை' ன்னு அர்ஜுனன் அதுக்கு பதில் சொன்னானாம். அந்த மாதிரி என்கிட்டே காசு பணம் வேணுமானா கொறைவா இருந்திருக்கலாம். ஆனா உங்க அத்தான் மனசு எப்போதும் என்னோடதான்டா இருந்துச்சு. அவர் மனக்கஷ்டத்தோட நொந்து வரும்போதெல்லாம் நாந்தான்டா அவருக்கு மருந்தா இருந்திருக்கேன். அவருக்கு சாவு வந்தபோதுகூட, அது என் மடியிலேதான் வந்திச்சு. நிம்மதியா செத்தார். அதுக்கப்பறம் அந்த உடம்புதான் அவ கிட்டே போச்சு. நான் எப்போதுமே அவர் என்னை விட்டு பிரிஞ்சதா நெனைக்கலே. கிருஷ்ண பரமாத்மா மாதிரி என்னோட எப்பவும் இருக்காரு. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி மாதிரி நம்ம ஊரு பெருமாளுக்கும் ருக்மணி, சத்யபாபான்னு ரெண்டு பொண்டாட்டி. இப்ப நான் அவருக்கு ஊழியம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு ஒரு குறைவும் இல்லாம அவர் என்னை காப்பாத்திக்கிட்டு வராரு. ஊரே 'கோயில் அத்தை! கோயில் அத்தை!' ன்னு என்னை கொண்டாடுது. நான் இன்னமும் பெருமாளை வேண்டறது என்ன தெரியுமா? 'பெருமாளே! அந்த வனஜாவுக்கு நல்லதை செய். அவ சம்சாரி. அவளை ஏதாவது தண்டிக்கணும்னா, அந்த தண்டனையை எனக்கு கொடு' ன்னு கெஞ்சுவேன். சுரேஷ்! நான் என்னிக்கும் தைரியமா இருக்கறதுக்கு ஒரே காரணம், அத்தான் இருந்த வரைக்கும் அத்தான். அவர் போன பிறகு நம்ம பெருமாள். காசு பணமெல்லாம் யாதவ சேனை மாதிரி. அது முக்கியமேயில்லே....."

"அது சரி அத்தை, உங்களுக்கு வயசாகிறது இல்லையா?"

"அதை பத்தி நான் கவலைப்பட்டதே இல்லே, சுரேஷ். பாஞ்சாலி முழு சரணாகதி அடைஞ்ச மாதிரி நான் பெருமாள் கிட்டே என்னை கொடுத்திட்டேன். அவர் பார்த்துப்ப்பார். அத்தான் போகும் போது, எனக்கு பெருமாள் கிட்டே கை காமிச்சு விட்ட மாதிரி, பெருமாளே ஒரு நாள், 'சுரேஷ்! உன் அத்தையை கூட்டிக்கிட்டு போ'ன்னு சொல்லுவாரு. அப்படி ஒரு நிலை ஏற்பட்டா நான் வந்துதானே ஆகனும்."

என் கண்களுக்கு பெரிய அத்தை தெரியவில்லை. தாயார் சன்னிதியில் கொலுவீற்றிருக்கும் அந்த கற்சிலையே உருமெடுத்து எதில் அமர்ந்திருப்பதாகப் பட்டது. எழுந்து, நெற்றி நிலத்தில் பட அவளை நமஸ்கரித்தேன். கோயில் அத்தை அப்போதும் புன்னகை பூத்திருந்தாள்.

(தினமலர்-வாரமலர் 21 டிசம்பர் 2008)

Monday, 1 December 2008

இந்த வார விகடனில் - பல்லி


பல்லி

வித்யாதரனின் பார்வை எதேச்சையாக அந்த பல்லியின் பக்கம் திரும்பியது. பிறகு அதிலேயே நிலைத்து விட்டது.

தன்னை சுற்றி கோலம் போட்ட மாதிரி புள்ளி புள்ளிகளாய் பச்சை நிற பூச்சிகள் உட்கார்ந்து கொண்டு, பறந்து கொண்டு இருந்தாலும் அந்த பல்லி அவற்றைக் கண்டு கொள்ளவே இல்லை. எதற்கோ காத்திருந்த மாதிரி இருந்தது. உடம்பில் துளி கூட அசைவில்லை. அதன் வால் மட்டும் மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. சாம்பாரும், ரசமும் சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கு அலுத்து போன மாதிரி ஒரு வேளை பச்சை பூச்சிகள் அதற்கு அலுத்துப் போயிருக்கலாம். அவர் முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு வெளிப்பட்டது. இதை கவிதாவிடம் சொன்னால் அவள் வேறு கோணத்தில் சொல்லுவாள். 'ஒருவன் மா மரத்தின் மாங்கனியை சாப்பிட குறி வைக்கிறான் என்றால், அதை சுற்றியிருக்கும் மாவிலைகளை சாப்பிட்டு அலுத்துப் போனவன் என்றா எடுத்துக் கொள்ள முடியும்? பச்சை பூச்சிகள்தான் அதன் உணவு என்று நீங்கள் எப்படி தீர்மானிக்கலாம்?' என்று மடக்குவாள். வர வர தான் என்ன யோசிக்கிறோம் என்பதை விட, இதில் கவிதாவின் பார்வை எப்படியிருக்கும் என்ற எண்ணம், வெளிச்சத்தை ஒட்டிய நிழல் மாதிரி கூடவே அவர் மனசில் வந்து அமர்ந்து விடுகிறது.

பல்லி திடீரென்று சுறுசுறுப்பானது. தலை தூக்கி கழுத்தை முறுக்கிக் கொண்டது மாதிரி பக்கவாட்டில் பார்த்தது. ஆமாம்! இளம் சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு எறும்புக்கு கண்ணாடி இழைகளால் ஆன இறக்கை முளைத்தது மாதிரியான ஒரு ஈசல் அப்போதுதான் சுவற்றில் அமர்ந்திருந்தது. பல்லி தன் கால்களை நிதானமாக அகட்டி, அகட்டி முதலை தண்ணீரில் நீஞ்சுவது மாதிரி சலனமில்லாமல் அதன் பின்பக்கம் பார்த்து முன்னேறியது. ஓரளவுக்கு நெருங்கியவுடன் ஒரு அசுர பாய்ச்சல்! அடுத்த வினாடி, அந்த ஈசல் பல்லியின் வாயில்! நாக்கை சுழற்றி உள்ளே தள்ளியது. பிறகு ஏதோ ஒரு அதிர்வை உணர்ந்ததும், கலவரப்பட்டு ஓடி மறைந்துவிட்டது.

பல்லி ஓடிவிட்டாலும் அந்த காட்சி மட்டும் வித்யாதரனின் மனசைவிட்டு விலகவில்லை. தான் ஏன் அதில் அதிக கவனம் கொண்டோம் என்று யோசிக்கலானார். அந்த வன்முறை பிடித்திருந்ததா? இல்லை.... மை காட்! அவர்தான் அந்த பல்லியா? அப்படியென்றால் இளஞ் சிவப்பு...மஞ்சள்... கண்ணாடி இழை.... ஆமாம்! கவிதாவும் கிட்டத்தட்ட அந்த நிறம்தான். கண்ணாடி அணிந்திருக்கிறாள். சே! என்ன மட்டரகமான உருவகம்!! ஏன் இப்படி சிந்தனை போகிறது? உயர்ந்த சிந்தனைகள், தர்க்க வாதங்களை உள்வாங்கும் மனசு, ஏன் இப்படி அடிக்கடி குப்பை தொட்டியாகி விடுகிறது?

வித்யாதரனின் மனைவி சரளா அவரிடமிருந்து சட்டப்படி விடுதலை பெற்று மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. திருமணம் செய்து கொண்டு, மன வேறுபாடுகளால் ஒருவரை ஒருவர் கீறிக் கொண்டது அவர் வாழ்வில் மிக கொடுமையான துன்பியல் சம்பவங்கள். எழுத்துலகில் எந்த அளவுக்கு மலை உச்சிகளை எட்டினாரோ, அந்த அளவுக்கு நேர் எதிராக சொந்த வாழ்க்கையில் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளில் விழுந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எதற்கு இந்த மன உளைச்சல்? பிரிந்திருந்தால் இருவருக்குமே மகிழ்ச்சிதானே என்பது புரிந்தவுடன், அந்த முடிவுக்கு தயாரானார். விண் விண்ணென்று தெரித்துக் கொண்டிருக்கும் கட்டி உடைந்து, சீழ் வெளியேறி, மருந்து கட்டு போட்டதும் ஒரு நிம்மதி வருமே அந்த மாதிரி விவாகரத்து பெற்ற அன்று உணர்ந்தார்.

கவிதா ஒரு ரசிகையாகத்தான் வித்யாதரனுக்கு அறிமுகமானாள். தன் வீட்டு பெண்ணோடு அவரால் சுமுகமாக இருக்கமுடியவில்லையே தவிர, அவரது கதைகளில் வரும் கற்பனை கதாநாயகிகள் உயர்தர பெண்ணியம் பேசுவார்கள். உளவியல் ரீதியாக பல பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு கொடுப்பார்கள். அதனால் அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவர்கள் நேரிலும், போனிலும் மணிக்கணக்காக பேசியிருக்கிறார்கள். அவர்களில் கவிதா மட்டும் வித்தியாசமாக தெரிந்தாள். சரளாவுக்கு நேர் எதிர். முதலில் அவரது கதைகளை பற்றி ஆழமாக விமர்சித்து வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் மீது தன் ஆளுமையை தொடர்ந்தாள். அதை அவர் அனுமதித்தார் என்றே சொல்ல வேண்டும்.

பேனாவும், வெள்ளை பேப்பருமாக எழுதிக் கொண்டிருந்தவரை, அவள்தான் கணினியில் நேரடியாக தட்டச்சு செய்ய பழக்கினாள். முதலில் அடம் பிடித்தவரை, தட்டி கொட்டி அவள் விருப்பத்திற்கு கொண்டு வந்தாள். கணினி பழகியதும், அவரால் நிறைய எழுத முடிந்தது. பத்திரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடிந்தது. அடுத்த பாய்ச்சலாக, இணைய தளத்தில் வித்யாதரனுக்காக ஒரு வலைமணையை உருவாக்கிக் கொடுத்தாள். அதில் வரும் கடிதங்களுக்கு பதில் எழுதவும், அவ்வப்போது அதை புதுப்பிக்கவும் அடிக்கடி வர ஆரம்பித்தாள். பிறகு அவருக்கு உதவியாளர் என்ற பொறுப்பை அவளே ஏற்றுக் கொண்டாள். அவர் சொல்லச் சொல்ல அவள் கணினியில் சேர்ப்பாள். இடையிடையே விவாதமும் செய்வாள். பல சமயங்களில் எப்படி இந்த சின்னப் பெண்ணை இவ்வளவு தூரம் அனுமதித்தோம்? இது சரியா? இல்லை தவறா? என்று யோசித்து குழம்பியிருக்கிறார். கடந்த ஒரு சில மாதங்களாக கவிதா இல்லாமல் அவரால் ஒரு வாக்கியம் கூட எழுத முடியவில்லை.

வாசலில் காலிங் பெல் ஒலித்தது. அது ஒலித்த விதத்தில் கவிதாதான் வந்திருக்கிறாள் என்று புரிந்தது. வித்யாதரன் இருபது வயது இளைஞன் மாதிரி ஓடிச் சென்று கதவை திறந்தார். கவிதாவேதான்!

"கவிதா! வா! இப்போதான் ஒரு பல்லி, பூச்சியை வேட்டையாடினத பார்த்துகிட்டுருந்தேன்."

"ஆமாம். வீழ்த்துவதும். வீழ்ந்தபின் வெற்றிக் கொடி நாட்டுவதும் ஆண்களின் வழக்கமல்லவா?"

"என்ன கவிதா! வந்ததுமே கத்தியை சுழற்ற தொடங்கிட்டே. இன்னிக்கு என்னை ஒரு வழி செஞ்சுட்டு போறதா எண்ணமா?"

"ஐய்ய! நான் சொன்னது உங்க வசனம்தான். மகரந்த பூக்கள் நாவல்ல உங்க கதாநாயகி ரம்யா சொல்லறதுதான் அது."

"நதியின் நீரை எடுத்து நதிக்கே அர்ப்பணம் செஞ்ச மாதிரி" என்று சொல்லிவிட்டு அவளை முதன் முறையாக கூர்ந்து கவனித்தார். மனசு மீண்டும் குப்பைக் கூடை ஆனது.

"என்ன சார்! மணிரத்னம் படத்திலே ஹீரோ ஹீரோயினை பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க?"

வித்யாதரன் உள்ளுக்குள் விகிர்த்து போனார். கிராதகி! ஒரு நொடியில் உள் மனதை புரிந்து கொள்கிறாளே! "இல்லே. எங்கிருந்தோ வந்தாய். எழுத்து சாதி நான் என்றாய். எழுத்தையும் தாண்டி எனக்கு பல விதங்களில் உதவியாய் இருக்கிறாய். வம்பு சண்டையும் போடுகிறாய். நீ யார்? ஏன் என் பக்கம் வந்தாய்? உன்னை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை." அவருக்குள் காமத்தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

"சார். பேச்சு தடம் மாறி எங்கேயோ போகுதுன்னு நினைக்கிறேன். என்ன சொல்லணுமோ சொல்லிடுங்க"

"கவிதா. தப்பா எடுத்துக்காதே. மணிரத்னத்துக்கு கூட ரெண்டாவது படம்தான் ஹிட்டு. அது மாதிரி முதல் முயற்சியில தோல்வியடைஞ்சிட்டு, ரெண்டாவதுல வெற்றி பெற்றவங்க நிறைய பேர் இருக்காங்க....."

தட்டு தடுமாறி தன் உள்ளத்து ஆசையை போட்டு உடைத்துவிட்டார். அது கவிதாவுக்கு ஷாக்காக இருந்திருக்க வேண்டும். மெனமாக தலையை குனிந்த படி இருந்தாள். மூச்சு மேலும் கீழுமாக போனது. கைகள் இரண்டும் இறுகின. நிமிர்ந்ததில் கண்களில் கண்ணீர்.

"சார்! இதை நான் எதிர்பார்க்கல. நீங்களும் ஒரு சாதாரண ஆம்பிளைன்னு நிரூபிச்சிட்டீங்க."

"நானும் சாதாரண ஆம்பிளைதான் கவிதா. எழுத்தாளர்னா ஏதோ ஆகாசத்துலேர்ந்து குதிச்சவங்க இல்லே. நான் என் எண்ணத்தைச் சொன்னேன். உனக்கு இஷ்டம்னா ஒத்துக்க. இல்லேன்னா விட்டுடு"

"அது எப்படி? எப்படி நீங்க என்னை அந்த மாதிரி கேட்கலாம்? நீங்க என்ன வேணும்னாலும் கேக்கலாம். அதுக்கு நாங்க உண்டு இல்லேன்னு மட்டும் பதில் சொல்லணும். இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். இந்த சுடிதார்க்குள்ள என்ன இருக்குன்னு பார்க்கிற ஆசை உங்களுக்கு வந்திடுச்சு. உங்க அல்டிமேட் கோல் அதுதான். என்னை உரிச்சு பார்த்துட்டீங்கன்னா..."

"கவிதா! ப்ளீஸ். ஸ்டாப். என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கே. ஏதோ உடல் இச்சைக்காக அலைபவன்னு நினைச்சுக்கிட்டே"

"அதுதானே உண்மை." அவள் குரல் கூடியது. கத்தி மாதிரி அந்த வார்த்தைகள் பாய்ந்து வந்து அவரை தாக்கின. படபடப்புடன் எழுந்தாள். சரிந்த கண்ணாடியை நடுங்கும் கைகளால் பிடுங்கி கை பைக்குள் போட்டுக் கொண்டாள். மீண்டும் ஆரம்பித்தாள்.

"உங்களோட எழுத்துக்கள் அனைத்தும் போலி"

"ஆமாம். எழுத்துக்கள் எல்லாமே கற்பனைகள். போலிதான். ஒரு கதையிலே கொலை செய்யறது மாதிரி விவரிச்சுருக்கேன். அதுனால நான் கொலைகாரன்னு ஆகிவிட முடியுமா?

"ஓ! பிரபல எழுத்தாளர்! வார்த்தைகளின் வித்தகர்! எல்லாத்துக்கும் ரெடியாக பதில் வைச்சுருக்கீங்க. பொய்யாக யோசித்து, பொய் வாழ்க்கை வாழ்ந்து..... இரட்டை வேடதாரி.... நீங்க ஒரு ஹிப்போக்கிரேட்."

"வானத்து நட்சத்திரங்களை வியந்து பார்த்துக் கொண்டே, யதார்த்தம் புரியாமல் பள்ளத்தில் விழுபவன்தான் எழுத்தாளன், கவிதா. என்னை நம்பு. எனக்கு கொஞ்சம் இரக்கம் காட்டேன்."

கண்ணீர் கொப்பளித்த சிவந்த கண்களுடன் 'இதுதான் உன்னோடு கடைசி' என்ற மாதிரி ஒரு அம்பு பார்வையை வீசி விட்டு, விறு விறுவென தன் தோள் பையை எடுத்து மாட்டிக் கொண்டு, வாசல் கதவை படீரென சாத்திக் கொண்டு போய்விட்டாள்.

வித்யாதரனை அந்த தனிமை கொல்லத் தொடங்கியது. சே! அவசரப்பட்டு விட்டோமோ? ஒரு தீவிர ரசிகையை கொச்சைப்படுத்திவிட்டோமோ? அவள் செல்லுக்கு முயற்சி செய்தார். முதல் முறை ரிங் போனது. பிறகு கட் செய்யப்பட்டது. அடுத்த முறை ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டது. வித்யாதரனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவளுடைய ஒர்கிங் வுமன் ஹாஸ்டலுக்கு போனார். அங்கேயும் இல்லை. அவளுக்கு நண்பர்கள் வட்டம் மிக குறைவு. அவர்களிடம் இவளை பற்றி விசாரித்தால் பல எதிர் கேள்விகள் வரும். டீரென அந்த பல்லி ஈசலை சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. மாறுபட்ட பல யோசனைகளுடன் அங்கும் இங்கும் அலைந்தார். திஉணர்ச்சி மிகுதியில், ஒரு வேளை அவள் ஏதாவது விபரீதமான முடிவுகளை எடுத்துவிட்டால்? அவள் செய்யக் கூடியவள்தான். எல்லாவற்றிலும் தீவிரம். ஆசை காட்டுவதிலும் தீவிரம். எதிர்ப்பதிலும் தீவிரம். எங்கே போய் அவளை தேடுவது? எப்படி தடுப்பது ? தன்னைத்தானே நொந்து கொண்டார்.

இரண்டு மணி நேர அலைச்சலுக்கு பிறகு அவர் வீடு திரும்பியதில் ஆச்சர்யம் இருந்தது. கவிதா அவருக்காக வீட்டு வாசலில் காத்திருந்தாள். முகம் காட்டாமல் திரும்பியிருந்தாள்.

கதவை திறந்து, உள்ளே வந்த பிறகும் அமைதி தொடர்ந்தது. வித்யாதரன் பொறுமை காத்தார். பிரம்பு கூடை ஊஞ்சலில் உம்மென்று தலை குனிந்து உட்கார்ந்திருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை.

"கவிதா! நான் ரொம்பவும் டயர்டா இருக்கேன். இன்னொரு தடவை உன்னோட சண்டை போட ......"

"நான் ஹாஸ்டலை காலி பண்ணப் போறேன்."

"லுக்! நான் ஏதோ சொன்னதுக்காக, ஹாஸ்டலை காலி பண்ணி, வேலையை விட்டுட்டு, வேற ஊருக்கு போயி...."

"நான் ஏன் வேற ஊருக்கு போகணும்?"

பளீரென நிமிர்ந்தவளின் முகத்தில் கோபமில்லை. ஒரு புன்னகை கூட்டமே வெடித்து சிதற காத்திருந்தது. "என் வீடுதான் இங்க இருக்கே! இங்க வந்துட்டா போச்சு"

ஓடிவந்து வித்யாதரனின் தோள்களைப் பற்றிக் கொண்டாள். கவிதாவை இவ்வளவு நெருக்கத்தில் அவர் பார்த்ததில்லை. அடுத்த நொடியிலேயே அந்த நெருக்கம் இன்னும் அதிகரித்தது.

"கவி! நான் ஒண்ணு சொல்லட்டுமா? அறிவுப்பூர்வமாக எடுக்கப்பட்ட சில முடிவுகளைவிட முட்டாள்தனமாக எடுக்கப்பட்ட பல முடிவுகள்தான் ஜெயிச்சுருக்கு. நான் முட்டாளாகவே இருக்க ஆசைப்படறேன்."

"நானும்தான்."

எழுச்சியும் வீழ்ச்சியும் தொடர்வது என்பது பிரபஞ்சத்தின் இயக்கம். இது ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் பொருந்தும். அதில் எது வீழ்ச்சி? எது எழுச்சி? என்பதை அனுமானித்தல் மிக கடினம். இது சரி, அது தவறு என்பது மானுடப்பார்வையின் பேதம். ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் கோணங்கள் மாறுபடும்.

கவிதாவின் அணைப்பில் வித்தியாதரன் ஒரு எழுச்சி பெற்று உயரே பறப்பது போல உணர்ந்தார். அடுத்த வாரம் பத்திரிக்கைகளுக்கு செம தீனி காத்திருக்கிறது.

அது வித்யாதரனின் எழுச்சியா? வீழ்ச்சியா?

(ஆனந்த விகடன் - 03 டிசம்பர் 2008)

Monday, 20 October 2008

இது, அது அல்ல


"ச்சீ!.... என்ன ராஜேஷ்?..... யூ ஆர் வெரி நாட்டி" ஷர்மிளா முகம் சிவந்தாள். அவளின் ரோஜா நிற மெல்லிய உதடுகளின் மேல் சின்னச் சின்னதாய் நீர் மொட்டுக்கள்.

"கமான் ஷர்ம்ஸ். இதவிட பவர்ஃபுல்லா இன்னொண்ணு இருக்கு.. வேணுமா?" ராஜேஷ் விஷமத்தனமாக சிரித்தான். அவனுள்ளே இளமையின் வேகம் ஓவர்டைம் செய்து கொண்டிருந்தது.

"நோ தாங்க்ஸ். ராஜேஷ், வரவர நீ ரொம்பவே கெட்டுப் போய்ட்டே. புதுப் பெண்டாட்டியிடம் பேசும் பேச்சா இது?" முகத்துக்கு முன்னால் வந்துவிட்ட மயிற்கற்றைகளை காதுக்குப் பின்னால் தள்ளினாள். காதலிக்கும் போது எப்படி மென்மையாக இருந்த ராஜேஷ், இப்படி வல்கராக மாறியிருக்கிறான்! எல்லாம் காமம் படுத்தும் பாடு!!

"ஷர்ம்ஸ். நீயும்தான் ரொம்ப மாறிட்டே. சும்மா ஒரு எரொட்டிக் மூடுக்கு கொண்டுவரலாம்னு பார்த்தா, அதப் போய் சீரியஸ்ஸா எடுத்துக்கறயே?" ராஜேஷ் கிடைத்த ஒரு சில மென இடைவெளியில் ஷாம்பெயினை ஒரு சிறிதளவு சிப்பிக் கொண்டான். ஹு... ஹூ என்று சம்பந்தமில்லாமல் கத்தினான்.

"ராஜேஷ். நோ ஜோக்ஸ் ப்ளீஸ். ஐயாம் வெரி சீரியஸ். உன் பேச்சில் காதல் இல்லை. காமம்தான் இருக்கு. நான் வேண்டாம். என் உடம்புதான் வேணும், இல்லையா?" ஷர்மிளா அழத் தொடங்கினாள்.

"ஹேய்! என்ன இது?.... ஓகே... ஸாரி.... ஐம் ஸோ ஸாரி. என்னை மன்னிச்சுடும்மா. என்ன இவ்வளவு சென்சிடிவ்வா இருக்கே?" சில்லென்ற ஏ.சி.யில் அவனுக்கும் வியர்த்தது. காது மடல்களில் வெப்பத்தை உணர்ந்தான்.

"............."

"என்னடா? கோவமா?"

"நீ ரொம்மான்டிக்கா இருக்கிறதவிட அதிகமாவே டிராமாட்டிக்கா இருக்கே. எனக்கு பொய் வாழ்க்கை போரடிச்சு போச்சு, ராஜேஷ். திகட்டுது. எனக்கு நீ வேணும்.. நீ மட்டும் முழுசா வேணும். காலேஜில் பார்த்த, பழகிய அந்த ராஜேஷ் வேணும்." ஷர்மிளாவின் மார்புகள் விம்மி அடங்கின. கண்ணீர் கன்னங்கள் வழியாக இறங்கி, உதடுகளை ஈரப்படுத்தி உப்பு கரித்தது.

"ஷர்ம்ஸ். சின்னச் சின்ன பொய்கள்தான் வாழ்க்கையோட அஸ்திவாரமே. நீ கோபப்படும்போது கூட அழகாயிருக்கேன்னு நான் அடிக்கடி சொல்வேன் இல்லையா?"

"இது ரொம்பவே ஓவர். இதை ஜோக்கா எடுத்துக்க மாட்டேன். இதை ஒரு ஸ்டேட்மென்டா.....'

"மறுபடியும் மன்னிப்பு ப்ளீஸ். என் இன்பத் தலைவியே"

"ராஜேஷ். ஐ லவ் யூ". ஷர்மிளா அபாயகரமாக நெளிந்தாள்.

"ஐ டூ லவ் யூடா" ராஜேஷ் கரைந்துவிடுவான் போலிருந்தது.

ஒரு மென இடைவெளிக்கு பிறகு, "ஓகே ராஜேஷ். எனக்கு கண்ணைச் சொக்குது. நான் தூங்கப் போறேன். மிச்சம் மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம்" ஷர்மிளாவின் பட்டாம்பூச்சி இமைகள் துடித்தன.

"நோ நோ ஷர்ம்ஸ். இன்னும் பத்தே நிமிஷம். ஜஸ்ட்.... லெட்ஸ் ஹாவ் ஒன் மோர் ஃபன்"

"உனக்கு ராத்திரி, பகல்ன்னு வித்தியாசமே கிடையாது. எப்பவும் இதே நினைப்புதான். நீ திருந்தவே மாட்டே. நாளைக்கு ஒரு ப்ராஜெக்ட்டை கம்ப்ளீட் செஞ்சாகணும், ராஜேஷ். ஐ நீட் ரெஸ்ட்."

"ஷர்ம்ஸ்... ப்ளீஸ்.... லிசன் டு மீ...."

ஷர்மிளா இன்டர்னெட் சாட்டிங்கை மூடிவிட்டு தூங்கப் போனாள். உலகத்தின் இன்னொரு கோடியில், சியாட்டிலில், தனிமையில் வாடிக் கொண்டிருந்த ராஜேஷ் சுறுசுறுப்பாக ஆபீசுக்கு கிளம்பினான்.

(ஆனந்த விகடன் தீபாவளி மலர் - 2008)