Showing posts with label 04தேவி. Show all posts
Showing posts with label 04தேவி. Show all posts

Wednesday, 27 August 2008

எங்கே ஊனம்?


தேவி - 19 ஆகஸ்ட் 2008

"இப்போது உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சியை அளிக்க திரு ப்ரகாஷ் ஆனந்த் அவர்களை அழைக்கிறேன்"

மைக்காளர் அறிவிக்கவும், ஒரு ஒளிவட்டம் சுழன்று அந்தச் சிறுவன் மேல் விழுந்தது. எழுந்த அவன் மேடையை நோக்கி முன்னேறினான். அடுத்த சில நிமிடங்களுக்கு எதிர்பார்ப்புகளுடன் கூடிய அமைதி நிலவியது. அனைவரின் உள்ளத்திலும் இவனா இவ்வளவு பெரிய எலக்ட்ரானிக் கீபோர்டில் பாட்டிசைக்கப் போகிறான் என்ற கேள்வி இருந்தது. காரணம், அவன் ஒரு சிறப்பு குழந்தை. உருவம் பத்து வயதுக்கு உரியதாக இருந்தாலும் அவன் நடையும் செய்கையும் ஐந்து வயது குறைந்தே இருந்தன.

அப்படியும் இப்படியுமாக சரி பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷ், திருப்தி பட்டு, தலை நிமிர்த்தி, மைக்காளரை கேள்வியாக பார்த்தான். அவர் உடனே கட்டைவிரல் உயர்த்தி தலையசைத்தார்.

அவ்வளவுதான்!!! மடை திறந்த வெள்ளமாக ஒரு இனிய இசை கீபோர்டிலிருந்து வெளிப்பட்டது! அது மிக பிரபலமான திரைப்படப் பாடலின் தொடக்க இசை! அப்போது தொடங்கிய மக்களின் ஆச்சரியம் இதழ் விரிக்கும் மலர்களைப் போலே பன்மடங்காகிக் கொண்டே போனது. ப்ரகாஷ் துளிக்கூட தடுமாறவில்லை. பிய்த்து உதறினான். அந்த பிரபல பாடலில் என்னென்ன நெளிவுகள் குழைவுகள் உண்டோ அத்தனையும் 24 காரட்டுகளாக டாண் டாண் என்று வந்து விழுந்தன. மகுடி பாம்பாய் தாளக் கட்டுக்கு ஏற்ப மக்கள் கைதட்டினார்கள். உற்சாகம் பீறிட்டெழுந்தது. பாடல் முடிந்ததே தெரியவில்லை. கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடித்தது.

தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷின் அம்மா வித்யா கண்கலங்கினாள். அருகில் இருந்த கணவன் ஆனந்த் தோள்களில் சாய்ந்து விம்மினாள். பின்னந்தலை மயிர்க் கற்றையை வருடி சமாதனபடுத்திய ஆனந்த், ஆள்காட்டி விரலால் அவள் முகவாயை நிமிர்த்தினான்.

"வித்யா இப்ப நீ என்ன நெனைக்கற சொல்லட்டுமா?"

"ம்....."

"கடவுளே! எனக்கு இப்படி சாதனைகள் படைக்கிற குழந்தையை எதற்காகக் கொடுத்தாய்? சாதாரண குழந்தையை கொடுத்திருந்தாலே நான் திருப்தி பட்டிருப்பேனே! அப்பிடின்னுதானே?"

"ஆமாங்க. என்னால இதையெல்லாம் மகிழ்ச்சியா ஏத்துக்க முடியலைங்க. நான் யாருக்கும் எந்த கெடுதலும்...."

"புரியாம பேசாத. நாமதான் ரணப்பட்டு ஊனமா போயிட்டோம். ப்ரகாஷை பாரேன். எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கான். அவனொட தனி உலகத்தில ராஜா மாதிரி இருக்கான். அங்கே அவனுக்கு எந்த ஊனமும் இல்லை. எதையோ நெனைச்சுக்கிட்டு, இல்லாததுக்கு ஏங்கி வாழ்க்கையை சிக்கலாக்கிக்கிறோம். இதுவரை நாம நமக்காக வாழ்ந்தாச்சு. இனி அவனுக்காக வாழ்வோமே. எரியற தீபத்துக்கு இருக்கும் ரெண்டு பக்க தடுப்பு மாதிரி நாம இருப்போம். வா."

வித்யா ஓடிச் சென்று ப்ரகாஷ் கன்னத்தில் தொடர் முத்தமிட மக்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.

Monday, 25 February 2008

காதலைச் சொல்லிவிடு


ஸ்ரீலேகா போட்டிக்கு தயாரானாள். பாஸ்கெட் பந்தை தரையில் இரு முறை தட்டி கூடையை நோக்கி வீச அது வளையத்தில் மோதி வலைக்குள் விழாமல் பக்கவாட்டில் விழுந்தது. கோர்ட்டுக்கு வெளியிலிருந்து அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் கோச் செல்வா. ரிலாக்ஸாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாலும் அவனுக்குள் ஒரு பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஸ்ரீலேகாவும் அவள் தோழி ஸ்வாதியும் அவனிடம் பாஸ்கெட் பால் கோச்சிங் எடுத்துக் கொள்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். அழகிய கல்லூரி மாணவிகள். ஸ்வாதியை செல்வாவுக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியானவள். தான் உண்டு தன் விளையாட்டு பயிற்சி உண்டு என்று இருப்பவள். பாஸ்கெட் பால் கோர்ட்டில் எந்த அளவுக்கு அவள் எதிரணியை அலற வைப்பாளோ அந்த அளவுக்கு படிப்பிலும் சூரப்புலி என்று கேள்விப்பட்டிருக்கிறான். அவளை ஏன் காதலிக்க கூடாது என்று சில வாரங்களாக அவனுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை அவளிடம் சொல்லத் தயக்கம். ஒரு வார்த்தை ஏதாவது எக்ஸ்ட்ராவாக பேசினால்தானே காதலைச் சொல்ல நம்பிக்கையும் தைரியமும் வரும். அப்படியே வலுக்கட்டாயமாக சொல்லி வைத்து, அவள் 'சாரி சார். எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டால் ?'

ஸ்ரீலேகா அதற்கு நேர் எதிர். லொடலொடவென்று ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாள். எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ் அனுப்புவாள். பூனை குட்டி மாதிரி செல்வாவை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருப்பாள். உரிமையோடு முதுகில் குத்துவாள். மூக்கை கிள்ளுவாள். அவள் தன்னை காதலிக்கிறாளோ என்ற பயம் செல்வாவுக்கு இருக்கிறது. உன் மேல் எனக்கு காதல் இல்லை ஸ்வாதியிடம்தான் என்று மூஞ்சியில் அடித்த மாதிரி எப்படி அவளிடம் சொல்வது? அதுவும் தப்பாகப் போய், 'சார். நீங்கள் உங்கள் கோச் வேலையை மட்டும் பாருங்கள். வீணாக எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள்' என்று ஆரம்பித்து வேலைக்கே உலை வைத்துவிட்டால் ?

சே! ஒருத்தியிடம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இன்னொருத்தியிடம் இல்லை என்று சொல்ல வேண்டும். காதலை சொல்வதில் எவ்வளவு சிக்கல் ? யோசித்து யோசித்து கடைசியில் செல்வாவுக்கு ஒரு ஐடியா உதித்தது. பாஸ்கெட் பாலில் ஸ்ரீலேகாவை ஒரு போட்டிக்கு இழுக்க வேண்டும். அது கடினமாக இருக்க வேண்டும். தோற்கடித்து தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும்.

"செல்வா சார்! நான் ரெடி. போட்டியை ஆரம்பிக்கலாமா?"

"ஸ்ரீ. கவனமா கேளு. இந்த போஸ்டிலிருந்து எதிர் போஸ்ட் வரைக்கும் நடந்துகிட்டே பந்தை மேல் நோக்கி தட்டிக்கிட்டே வரனும். நிற்கவோ, பந்தை கையால பிடிச்சுக்கிட்டோ நடக்கவோ கூடாது. பத்து தப்படில மொத்த தூரத்தையும் கடக்கனும். தவிர, நான் ஏதாவது பேச்சு கொடுப்பேன். அதுக்கும் பதிலும் சொல்லனும். ஓகே?"

"ஓகே. நான் ஜெயிச்சா நான் என்ன சொல்வேனோ அதை நீங்கள் கேட்கனும்."

"ஓகே. அதே மாதிரி நான் ஜெயிச்சா...."

"அதற்கு சான்ஸே இல்லை. நான்தான் ஜெயிப்பேன்."

ஆனால் செல்வாவுக்கு நம்பிக்கை இருந்தது. நிச்சயம் தோற்றுவிடுவாள். ரெகுலர் ஸ்போர்ட்ஸ் டிரெஸில் வராமல் சுடிதாரில் வந்திருக்கிறாள். துப்பட்டா நிச்சயம் தொந்திரவு செய்யும்.

ஸ்ரீலேகா முதல் அடி எடுத்து வைத்தாள். "ஸ்ரீ. இன்று நீ ரொம்பவும் அழகாய் இருக்கிறாய்."

"என்ன கிண்டலா?" ஹீரோ ஸ்டைலில் பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு குறுக்கிட்ட செல்வாவை சாமர்த்தியமாக கடந்து போனாள் ஸ்ரீலேகா.

செல்வா அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.

"ஆனால் உன் மூக்கு. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது."

"போட்டி முடியட்டும் சார். அதற்குள் உங்கள் மூக்கை இன்ஷூர் செஞ்சுடுங்க"

செல்வா சரமாரியாக கேள்விகளை அம்புகளாக வீசி வந்தாலும் ஸ்ரீ£லேகா அசரவில்லை. எட்டு தப்படி முடித்துவிட்டாள். இன்னும் இரண்டே தப்படிதான். செல்வாவுக்கு உலகமே காலுக்கடியில் சரிவது போல இருந்தது. தப்பு கணக்கு போட்டுவிட்டோமோ? வேறு வழியே இல்லை. எடு பிரமாஸ்திரத்தை. அதிரடியாக கேள்விகள் கேட்க வேண்டியதுதான். அதை கேட்டு அவள் கவனம் சிதற வேண்டும். அவள் தோற்க வேண்டும்.

"லுக். ஸ்ரீ. இது பர்சனல். உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதில் நட்பு மட்டுமே இருக்கு. அதற்கு மேல் இல்லை...."

"அப்படியா? போட்டி முடியட்டுமே. அதை நான் தீர்மானித்துவிடுவேனே?"

சரியாக பத்து தப்படியில் முடித்துவிட்டாள். பந்து கீழே விழவேயில்லை. சே! என்ன முட்டாள்தனம் !

"ஸ்ரீ. நீ ஜெயிசுட்ட. ஓகே. ஆனால் நான் சொல்லறத கொஞ்சம் கேளு. வாழ்கையென்பது ஒரு போட்டியில் முடிவு செய்யக் கூடிய அற்பமான விஷயமில்லை. இரண்டு மனசு சம்பந்தப்பட்டது." தோல்வி பயத்தில் செல்வா உளறினான்.

"அதெப்படி? போட்டி வைச்சது நீங்கள். ஜெயிச்சது நான். என்ன சொல்லணும்கிறத நான்தான் தீர்மானிப்பேன்."

"சரி. சொல்லு."

செல்வா அவஸ்தையாக நெளிந்தான். ஸ்ரீ£லேகா வெற்றிக் களிப்பில் செல்வா அருகில் வந்தாள். கண்ணோடு கண் நோக்கினாள். சட்டென்று விலகி பெரிசாக ஓடி ஓடி சிரித்தாள்.

"ஸார். தப்பா நினைச்சுக்காதீங்க. இப்ப உங்க மூஞ்சி ப்யூஸ் ஆன பல்பு மாதிரி இருக்கு."

"ஸ்ரீ... ப்ளீஸ்"

"ஓகே. ஐயாம் சீரியஸ். செல்வா சார். நீங்க ஸ்வாதியை கல்யாணம் செஞ்சுப்பீங்களா? அவ உங்ககிட்ட சொல்லத் தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கா. நீங்க அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டா அவ மனசு உடைஞ்சு போயிடுவா. நீங்க போட்டின்ணு சொன்னதும் எனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக பட்டது. அவளுக்காகத்தான் இந்த போட்டிக்கே நான் ஒத்துக்கிட்டேன்."

"தாங்க்ஸ் ஸ்ரீ. ஐ ஆம் சாரி. உன்னை எப்படியாவது ஜெயிக்கனுங்கற வேகத்துல உன் மனசு நோகற மாதிரி பேசிட்டேன்."

"பரவாயில்லை சார். நீங்க உண்மைத்தானே சொன்னீங்க. சார் நட்பை தவிர நம்மிடையே இன்னொன்றும் இருக்கு. அது இந்த பாஸ்கெட் பால் விளையாட்டு. அதைதான் நான் மிகவும் விரும்புகிறேன். இந்தாருங்கள்." பந்தை செல்வா நோக்கி வீசிவிட்டு சிட்டாக பறந்தாள் ஸ்ரீலேகா. செல்வாவின் இதயத்தில் பட்டாம் பூச்சிகள் பறந்தன.

(தேவி - 27 பிப்ரவரி 2008)

Monday, 27 August 2007

கல்வெட்டு


கல்வெட்டு

'டும்,' 'டமால்', 'டுப்', 'டம்', 'டம்', 'டும்,' 'டமால்'. பாறைகள் வெடித்து சிதறின. திடீரென ஒரு தொழிலாளி கத்தினான்.

குரல் வந்த திசையை நோக்கி சுந்தர் ஓடினான். முதலாளி செல்லமுத்துவும் பதட்டத்துடன் பின் தொடர்ந்தார்.

"ஐயா. இங்க பாருங்க. பாறையில என்னென்னவோ எளுதியிருக்குது."

சுந்தருக்கு பார்த்ததுமே புரிந்துவிட்டது! சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள்! சிதறியிருந்த மற்ற பாறைகளிலும் கல்வெட்டுக்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினான்.

"அப்பாடி. நம்ம ஆள்படைகளுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே? இவன் சவுண்டு வுட்டதும் பயந்திட்டேன். போடா, போய் மத்த வேலையப் பாரு. என்ன சுந்தரு? ஏதாவது புதையல் மாதிரியா? "

"கிட்டத்தட்ட புதையல் மாதிரித்தான் சார். இவைகளெல்லாம் நம்ம ராஜா காலத்து கல்வெட்டுக்கள். தொல்பொருள் இலாக்காகிட்ட சொன்னோம்னா அவங்க நம்மள பாராட்டுவாங்க. டி.வி.காரங்க பத்திரிக்கைகாரங்க வந்து போட்டோ புடிப்பாங்க. ஒங்கள பேட்டி எடுப்பாங்க."

சுந்தர் மகிழ்ச்சியில் அடுக்கிக் கொண்டே போனான். அவனுக்கு கால்கள் பரபரத்தன.

நீண்ட யோசனைகளுக்கு பிறகு செல்லமுத்து கேட்டார். "சுந்தரு. பாராட்டு, பேட்டியல்லாம் இருக்கட்டும்யா. பணம் எவ்வளவு தருவாங்க?"

அதிர்ந்து போனான் சுந்தர். "நஷ்ட ஈடு நிச்சயம் தருவாங்க சார். தவிர, இவைகள்..."

"யப்பா. இப்பத்தான் கஷ்டப்பட்டு அவனை இவனை புடிச்சி கான்ட்ராக்ட் எடுத்திருக்கேன். நஷ்ட ஈட வாங்கிக்கிட்டு நாக்கு வளிக்கறதா? இத மாதிரி நூத்துக் கணக்கில நாட்ல இருக்குதுப்பா. என் கொளுந்தியா கிராமத்து வீட்டாண்ட கொல்ல கக்கூசுக்கு பக்கத்தில ஒரு இருட்டு மண்டபம் இருக்குது. அங்க இத மாதிரி ஏகத்துக்கும் எளுதியிருக்குது. வௌவ்வா புளுக்க வீச்சம் அடிக்கும். அத வுடு. நீ சொன்ன மாரியே நான் போய் சொன்னா என்ன ஆகும் தெரியுமா? வேலை நின்னிடும். போட்டோ புடிப்பானுவ. ஆளாளுக்கு வருவானுவ. இன்னொரு கான்ட்ராக்ட் கெலிக்கற வரைக்கும் மிசினு வாடகை, ஆள் கூலி, உன் சம்பளம், என்னோட வருமானத்துக்கு என்ன வளி?"

செல்லமுத்து கிடுகிடுவென அடுத்த பெரு வெடிக்கு கட்டளையிட்டார்.

"சுந்தரு. நல்லா கேட்டுக்க. நாலு மணிக்குள்ளார எளுத்து இருக்கிற எல்லா கல்லும் தூளாகி லாரில ஏறிடணும். புரிஞ்சிச்சா. துடிப்பான பையனா இருக்காங்காட்டி ஒன்னிய வேலைக்கு வைச்சிருக்கேன். அதிகமா ரோசனை செய்யாம வேலையப் பாரு."

எந்த சிக்கலும் இல்லாமல் மாலைக்குள் வேலை முடிந்த திருப்தியில் வீட்டுக்கு போனார் செல்லமுத்து.

அவர் பேரன் சந்தீப் எதிர் கொண்டு வரவேற்றான்.

"தாத்தா. இந்த ஹிஸ்ட்டரி ரொம்ப போரு தாத்தா. அக்பர் குளம் வெட்டினாராம். சாலைகள் ஓரத்தில மரம் நட்டாராம். இப்ப இருக்கிற கம்ப்யூட்டர் வேர்ல்டுல இதுக்கு என்ன தாத்தா அவசியம்?"

தாத்தாவுக்கு ஏற்ற பேரன்!

Sunday, 25 March 2007

காக்க. காக்க. ரகசியம் காக்க


காக்க. காக்க. ரகசியம் காக்க

தேவி மார்ச் 28, 2007

பால் பாக்கெட்டாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாக கதவை திறந்த ஜெயாவுக்கு ஆச்சர்யம்.

ஆறு அடி உயரத்தில் ஜீன்சும் டி சர்ட்டுமாக ஆத்மா!!!

அந்த வீடு அடுத்த சில நொடிகளில் கலகலப்பானது. வாட்ச்மேன் இரண்டு ராட்சத பெட்டிகளை மூச்சிரைக்க கொண்டு வந்து வைத்துவிட்டு போனார்.

"அண்ணா. எனக்கு வாட்ச் வாங்கிருக்கியா" தங்கை ரம்யா கேட்டாள்.

"டேய். பெரிய அத்தான் கேட்ட டிஜிடல் காமிரா. அப்பறம் சின்ன அத்தானுக்கு டி.வி.டி பிளேயர் வாங்கிட்டயா." இது அப்பா.

ஆத்மா சொல்வதற்கு வாயெடுப்பதற்குள் ஜெயா இடைமறித்தாள். "அட. அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமே.” ஜெயா எல்லாரையும் விரட்டாத குறையாக அனுப்பி வைத்தாள்.

ஆத்மா ஜெயாவின் ஒரே செல்ல மகன். கம்ப்யூட்டரில் சூரப்புலி. மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். வேலையில் சோந்த இரண்டு வருடங்களில் இரண்டு அக்காக்களுக்கு திருமணம் முடித்து விட்டான். இன்னும் தங்கை ரம்யா திருமணத்திற்கு காத்திருக்கிறாள். வாங்கிய கடன்களுக்கு இன்னும் இ.எம்.ஐ. கட்டிக் கொண்டிருக்கிறான்.

எல்லோரும் போய்விட்டார்கள். ஜெயா யாரும் கவனிக்காத போது பூனை மாதிரி ஆத்மா ரூமுக்கு போனாள்.

"அம்மா. ராகவ் கொடுத்த பேக். ரகசியமா இருக்கா." ஆத்மா கீச்சு குரலில் கேட்டான்.

"பத்திரமா வச்சுருக்கேன். என்ன விசயம். எதுவும் தப்புதண்டா இல்லைதானே."

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எடு சொல்லறேன். "

எடுத்து பிரித்ததில்.... எல்லாம் ஃபாரின் சாமான்கள். ஜெயா குழம்பினாள்.

"அம்மா. எல்லாருக்கும் ஃபாரின் சாமான்கள் வாங்கிக்கொடுக்க எனக்கு ஆசைதான். ஆனா உண்மை என்னன்னா. எல்லாமே இந்தியாவுல சீப்பா நல்ல குவாலிடியில கெடைக்குதும்மா. கணக்கு போட்டு பார்த்தேன். ஐநூறு டாலர் மிச்சம் பிடிக்க முடியற மாதிரி ஐடியா வந்திச்சு. என் ப்ரெண்ட் ராகவ் டெல்லியில இருக்கான். அவன் பக்காவா எல்லாத்தையும் வாங்கி கொடுத்திட்டான். ரம்ஸ் கல்யாணம் நிச்சயம் கிற நேரத்தில எதுக்கு அனாவசிய ஆடம்பர செலவு. சொன்னா புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க விருப்பத்தை நிறைவேத்தறது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நாம நம்ம நெலமையும் பார்த்துக்கணும் இல்லையா. அதான். தப்பு இல்லே. அவங்க பார்க்கறதுக்கு முன்னால என் பொட்டியில வச்சுடலாம். சீக்கிரம். உஷ்... காக்க. காக்க. ரகசியம் காக்க."

'இவனல்லவோ பிள்ளை?' ஜெயா மெய்சிலிர்த்துப் போனாள்.

Sunday, 25 February 2007

அஞ்சு பலி


அஞ்சு பலி

2007 ஜனவரி 17 தேவி

எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை என்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த பூசாரியை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் சரளா இருக்கும் நிலையில் எதுவும் சொல்ல முடியவில்லை. என் அம்மாவும் அவள் கட்சியில் சேர்ந்துவிட்டாள்.

எனக்கும் சரளாவுக்கும் கல்யாணம் ஆகி முதல் இரண்டு வருடம் குழந்தைகளே இல்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று குறை பிரசவங்கள்.

அதில் போன வருடம் கொஞ்சம் கொடுமையானது. எட்டரை மாசம். முழு குழந்தையாகவே இறந்து பிறந்தது. சரளாவை சமாளிக்க நான் பெரும்பாடு பட்டேன்.

இந்த சந்தர்ப்பத்தில் யாரோ சொல்லி வந்த இந்த பூசாரி நான்கே மாதத்தில் எங்கள் வீட்டில் நங்கூரம் போட்டு விட்டான். நான் சொல்ல வந்த போது அதை தெய்வ குத்தம் என்று சொல்லி அம்மா தடுத்து விட்டாள். நானும் விட்டுவிட்டேன்.

அம்மாதான் இன்று காலையில் மெதுவாக ஆரம்பித்தாள்.

"சேகர். நம்ம பூசாரி சோழி போட்டு பார்த்ததில நமக்கு செய்வினை இருக்குதாம். ஒரு காளி கோயில்ல பூஜை போட்டு அஞ்சு பலி கொடுத்துட்டா, நம்ம பாவமெல்லாம் விலகிடுமாம்."

"அஞ்சு பலின்னா?"

"அதான்டா. காளிக்கு கோழி, மைனா, கெடா, வெள்ளாடு, எருமை மாதிரி அஞ்சு பலி கொடுக்கணுமாம். ஆனா. அதுக்கு பதிலா அஞ்சு கெடா வெட்டிட்டா போதுமாம்."

எனக்கு கண் முன்னால் ஐந்து ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக 'சொத்' 'சொத்' என பலியாவது வந்து போனது.

கூடவே சென்ற வருடம் நான் கையில் சுமந்து சென்ற அந்த குறை பிரசவ குழந்தை....

"வேண்டாம்மா. அஞ்சு பலிய கொடுத்துட்டு எனக்கு ஒரு கொழந்தை குடுன்ணு கேட்பது வேண்டாம்மா ப்ளீஸ். இதுக்கு மட்டும் என் பேச்சை கேளுங்க."

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கொஞ்சம் அதிகமாகவே நான் கத்திவிட இருவரும் கலவரப்பட்டு போனார்கள்.

கொஞ்ச நேர மெளன நிமிடங்களுக்கு பிறகு,

"நீங்க சொல்லறது சரிங்க. பலி கொடுத்துதான் நம்ம பாவங்கள் போய் குழந்தை பெத்துக்கணும்னா எனக்கு அந்த பாக்கியமே வேண்டாங்க."

சரளா சொன்னாள். அம்மா கண்களால் ஆமோதித்தாள். நான் எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கு நன்றி கூறினேன்.