முன் குறிப்பு :-
கடவுள் மனிதனை படைத்தான். மனிதன் தன் பங்குக்கு பிரச்சனைகளை படைத்தான்.
இன்று நாம் சிக்கித் தவிக்கும் பல பிரச்சனைகள், மனிதன் தன் சுய
லாபங்களுக்காக எப்போதோ உருவாக்கப்பட்டவை. வரம் கொடுத்தவனையே பதம் பார்க்க
வந்த பஸ்மாசுரன் மாதிரி, இந்த மாதிரியான பிரச்சனைகள் பல சிக்கல்களுக்கு
உள்ளாகி, வெவ்வேறு வடிவம் எடுத்து, கடைசியில் பூதாகரமாக
உருவெடுத்துவிடும் போது, 'தீர்வு என்ன?' என்று தலையை பிய்த்துக்
கொள்கிறோம். காஷ்மீராகட்டும், காவிரியாகட்டும், கட்சத் தீவாகட்டும், அதன்
வேர்கள் ஒன்றே.
தமிழகக் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில், வங்கக் கடலில் ஒரு தீவு
உருவானால்? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? அந்த கற்பனையில்
கொஞ்சம் காரம் சேர்க்க, சில பிரச்சனைகளை அதில் நாம் சேர்ப்போமா? இதோ கதை
தொடங்குகிறது.....
2016, அக்டோபர் மாதம் 14ம் தேதி, வெள்ளிக்கிழமை. மதியம் இரண்டு மணிக்கு
பிடித்த மழை இன்னும் விடவில்லை. சென்னை நகரமே மழை நீரில் பெருங்காயம்
மாதிரி கரைந்து போய்விடுமோ என்ற அளவுக்கு மழையின் தீவிரம் இருந்தது. இது
போதாதென்று, பின் இரவில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் அதிபயங்கர புயல்
தாக்கக்கூடும் என்று வானிநிலை அறிவித்திருந்தது. அதற்கு க்ளாரா என்று
பெயரிட்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் தமிழக மக்கள் ஈரமும் குளிருமாக தவித்துக் கொண்டிருந்தாலும்
இன்னொரு பக்கம் மாநில போலீசும் அரசுத் துறை அதிகாரிகளும் ஏக டென்ஷனில்
இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி இரண்டு வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்து
கொண்டிருந்தார்கள் அதுதான், சந்தோஷத் தீவு! மழையும், புயலும் சற்றே அதன்
முக்கியத்துவத்தை குறைத்திருந்தாலும், நேற்றும், இன்றும், நாளையும்
அதுதான் செய்திகளின் கதாநாயகன்.
அன்றைய காலை தினசரிகளில் தடித்த எழுத்துக்களில் சந்தோஷத் தீவில் நடக்கப்
போகிற கரசேவை பற்றிய செய்திகளே இடம் பிடித்திருந்தன. 'சந்தோஷத் தீவில்
இனி யாருக்கும் அனுமதி இல்லை! மத்திய அமைச்சரவை ரகசிய முடிவு ?', என்று
கொட்டை எழுத்துக்களுக்கு சிவப்பு அடிக்கோடிட்டு புதிய செய்தியை முந்தித்
தந்திருந்தது ஒரு தினசரி. அதுதான் உண்மையோ என்ற மாதிரி அதை உறுதிப்
படுத்தும் விதமாக அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இன்னொரு தினசரி தன் பங்குக்கு சந்தோஷத் தீவில் நிர்மானிக்கப் படப்போகிற
நாற்பது அடி உயர அனுமன் சிலையின் ஏ4 சைஸ் வண்ண ஃபோட்டோவை இலவச இணைப்பாக
வழங்கியிருந்தது. அரசியல் சார்பு தினசரிகள் ஒருவர் மேல் ஒருவர்
புழுதிவாரி தூற்றிக் கொண்டும் தங்களுக்கு சாதமான விஷயங்களை முன்னிலை
படுத்தியும் செய்திகளை திரித்தும் எழுதியிருந்தன.
அரசியல், மதம், நீதி மன்றம் என்று ஏகப்பட்ட சிக்கல்களில் தற்போது
திண்டாடிக் கொண்டிருக்கும் சந்தோஷ தீவிற்கு பெயரில்தான் சந்தோஷம். கடந்த
மூன்று வருடங்களாக அதன் பிரச்சனைகள் தீவிரமடையும் போதெல்லாம் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொது சொத்துக்கள் நாசமாயின. விலைவாசியின்
அம்புக்குறி அடிக்கடி மேல் நோக்கி மிரட்டியது. பங்கு வர்த்தகத்தில்
கரடிக்கு அதிகம் வேலையிருந்தது.
ராமேஸ்வரத்திலிருந்து வடக்கு பக்கமாக 36 நாட்டிகல் மைல் தொலைவில் இரண்டு
கி.மீ. நீளம், மூன்று கி.மீ. அகலத்திற்கு 2010 ஜனவரி மாதத்தில் உருவான
அந்த குட்டித் தீவுக்கு அடுத்த பத்தாவது நாளே சிக்கல் ஆரம்பித்தது.
இந்தியா, இலங்கையும் அதற்கு உரிமை கோரின. ரோந்துப் பணி கப்பலுக்களூக்கு
இடையே அடிக்கடி சிறு சிறு மோதல்கள் ஆரம்பித்தன. வெளிவிவகாரத் துறை
மந்திரிகள், தூதுவர்கள், செயலாளர்கள் ஏசி அறைகளில் அடிக்கடி கூடிக் கூடி
விவாதித்தார்கள். மூக்கை இடிக்கும் செய்தியாளர்களின் மைக்குகளில்
'மீண்டும் சந்திப்போம், பேசுவோம்' என்றார்கள். வரைபடங்கள் சரிபார்க்கப்
பட்டன. பாரளுமன்றம் அடிக்கடி ஸ்தம்பித்தது.
மாநில கட்சிகளும் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்பினார்கள். சந்தோஷத்
தீவுக்கு அருகில் மீண்பிடிக்கப் போன நூற்றுக் கணக்கான மீனவர்கள் இலங்கை
ராணுவத்தினரால் கைது செய்யப்பட, மீனவர் நலன் என்ற போர்வையில் ஒரு வட்டார
கட்சி களத்தில் இறங்கியது. அதன் வளர்ச்சியை கண்டு சகிக்க முடியாத எதிர்
கட்சி, 'கட்ச தீவைப் போல இந்த தீவுக்கும் இலங்கை உரிமை கோரினால், தமிழ்
நாட்டில் ரத்த ஆறு ஓடும்', என்ற மிரட்டலோடு சிறை நிரப்பும் போராட்டத்தை
துவக்க, ஆளும் கட்சி எதைப் பிடித்தால் தங்களுக்கு அரசியல் இலாபம்
கிடைக்கும் என்று தேடி திண்டாடியது.
ஒரு வழியாக எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அது இந்தியாவுக்குதான்
என்று முடிவானது. ஆனால் அதில் தமிழர் நலனை நிலை நாட்டியது யார் என்பதில்
குடுமிபிடி சண்டைகள் தொடங்கின. அவர்களுக்கு அவர்களே வாழ்த்திக் கொண்டு
போஸ்டர் அடித்து விழா கொண்டாடினார்கள். கவிஞர்கள் தங்கள் அரசியல்
தலைவர்களை வாழ்த்துப் பாமாலை பாடி பரிசில் பெற்றார்கள். சிங்கப்பூருக்கு
அருகில் இருக்கும் சென்டோஸா தீவைப் போல் சந்தோஷத்தீவை மேம்படுத்துவோம்
என்று மெரீனா கடற்கரை கூட்டத்தில் முழங்கிய மாநில முதல்வரின் பேச்சை
கேட்டு வயிறெரிந்தார்கள் எதிர் கட்சியினர்.
அரசியல் குழப்பங்கள் கொஞ்சம் தணிந்ததும் வியாபார போட்டா போட்டிகள்
தொடங்கின. சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஸ்டீமெர்கள் கான்ட்ராக்ட்
கொடுத்ததில்/எடுத்ததில் பெரும் அரசியல் புள்ளிகள் பணம் பார்த்தார்கள்.
காசு பார்க்க முடியாத கோஷ்டியும், காசு ஏராளாமாக கண்டுவிட்ட கோஷ்டியும்
சந்தோஷத் தீவிலேயே துரத்தி துரத்தி அடித்து கொண்டார்கள். அதை வெளியிட்ட
ஒரு புலனாய்வு பத்திரிக்கையின் ரேட்டிங் கூடியது. சந்தோஷத் தீவுக்கு
அடியில் இருக்கும் பவழப் பாறைகளை சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவதாக
அரசியல் பின்னணியில் ஒரு பெரிய நிறுவனம் களத்தில் குதிக்க, சுற்றுசூழல்
ஆர்வலர்கள் கோர்ட்டுக்கு போக, நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது.
சந்தோஷத் தீவை ஒரு வசூல் ராஜாவாக ஒரு கூட்டம் போற்றி புகழ்ந்தாலும்,
இன்னொரு பிரிவினர் அதை மர்ம நாயகனாகவே பாவித்து செய்திகளில் அவ்வப்போது
பயமுறுத்தி கொண்டிருந்தனர். சந்தோஷத் தீவில் அதிக அளவில் யுரேனிய
படிமங்கள் கண்டுபிடிப்பு! அமெரிக்கா அங்கே ஒரு ராணுவ தளம் அமைக்கும்!
சந்தோஷத் தீவு ஒரு தனித் தீவு அல்ல. இது போல இன்னும் 50க்கும் மேற்பட்ட
தீவுகள் சென்னை வரை உருவாகலாம்! அப்போது துறைமுகங்களுக்கு ஆபத்து வரலாம்!
சுனாமி வருவது சர்வ சாதாரணமாகி விடும்! தென் தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக
மூழ்கக் கூடும்! என்று கிளி ஜோஸ்யம் மாதிரி அரை வேக்காட்டு அறிவியல்
அறிஞர்கள் துணை கொண்டு மர்மங்கள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்தன.
தினம் தினம் ஒரு மர்ம முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த சந்தோஷத் தீவு,
ஒரு புத்தம் புதிய திருப்பம் கண்டது. யாரோ ஒருவர் ராமாயண நிகழ்வுகள்படி
அனுமன் பெரிய உரு கொண்டு இலங்கையை நோக்கி பறக்க உந்தி எழுந்த இடம் அந்த
தீவுதான் என்றும், சந்தோஷத் தீவின் ஒரு பாறையின் மீது அந்த கால் தடங்கள்
இருப்பதாக ஆதார விளக்கங்கள் அளிக்க, பிரச்சனை அனுமன் மாதிரியே விஸ்வரூபம்
எடுத்தது.
மூலை முடுக்கு கோயில்களுக்கெல்லாம் குடும்பம் குடும்பமாக வேன் எடுத்துக்
கொண்டு விசிட் அடித்து சலித்து போய்விட்ட பக்தர்கள் கூட்டத்திற்கு அது
ஒரு பெரிய வரப்பிரசாதமாக போய்விட்டது. அது வரை இயற்கை ஆர்வலர்கள்
விரும்பும் சுற்றுலாத்தலமாக இருந்த சந்தோஷத்தீவின் மீது பக்தர்கள்
படையெடுக்கவும், புதிய ஆதாய கோஷ்டிகள் அங்கே தங்களது சுய இலாபங்களை அங்கே
அரங்கேற்றினர்.
இரவோடு இரவாக ஒரு பக்த கோஷ்டி அனுமன் சிலையை அந்த இடத்தில் பிரதிஸ்டை
செய்து ஒரு தற்காலிக கோயில் செய்துவிட, பிரச்சனை இன்னும் தீவிரம்
அடைந்தது. கூடவே நாலு கால பூஜையும் தொடங்கிவிட்டது. எதிர்ப்பாளார்கள்
கொதித்தெழ விஷயம் நீதி மன்றம் வரை போனது. இதற்கிடையில் தீவின் இன்னொரு
மூலையில் மீனவ கிருஸ்தவர்கள் ஒரு தேவாலயத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட,
சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் அபாயம் ஏற்பட்டது. துரதிர்ஷடவசமாக, ஒரு சிறு
நாட்டு வெடி குண்டு ஒண்று வெடிக்காத நிலையில் அங்கேகண்டுபிடிக்கப்படவும்,
நாட்டில் பல இடங்களில் மதக் கலவரங்கள் நிகழ்ந்தன.
பெருவாரியான மக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்பதால் தற்போது
உள்ள கோயிலும், கோயில் பூஜையும் தொடரலாம் என்றும் ஆனால் நீதி மன்ற இறுதி
தீர்ப்பு வரும் வரை எந்த வித நிரந்தர கட்டுமானப் பணிகள் கூடாது என்ற ஒரு
குழப்பமான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் அளித்தது. அரசியல் கட்சிகள் இந்த
பக்கமும் அந்த பக்கமும் மாறி மாறி ஊதி தங்கள் கணக்குகளை சரி செய்து
கொண்டார்கள்.
அகில உலக இந்து மக்கள் சேவா தளம் என்ற அமைப்பு அசுர வளர்ச்சி பெற்றது.
அனுமன் எழுந்த இடத்தில் மிகப் பெரிய உருவச் சிலை வைப்பதுதான் சரி என்று
அவர்களே தீர்மானித்து 40 அடி சிலை செய்தார்கள். கன்யாகுமரியில்
திருவள்ளுவருக்கு சிலை இருக்கலாம், ஹைதராபாதில் புத்தருக்கு சிலை
இருக்கலாம், சந்தோஷத் தீவில் அனுமன் சிலை இருக்கக் கூடாதா என சேவா தள
தலைவர் அறைகூவல் விட அவர் மிகவும் பிரபலமானார். மிகப் பெரிய கோயில் கட்ட
மக்களிடம் வசூல் வேட்டை நடந்தது. மக்களின் நம்பிக்கையில் நீதி மன்றம்
தலையிடுவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அறிவித்தது சேவா தளம்.
ஆனால் இந்த விஷயத்தில் ஆன்மிகத்துக்கு துளிகூட சம்பந்தமில்லை என்றும் மத
ரீதியாக மக்களை திசைதிருப்பி அரசியல் ஆதாயம் பார்க்கிறது ஒரு கூட்டம்,
சத்தியம் நிச்சயம் வெல்லும் என்று உண்மையான ஆன்மிகவாதிகள் மறுத்து
அறிக்கை விட்டார்கள்.
இதற்கிடையில் இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் அனுமன் சிலை செய்தியை
ஒளிபரப்பி அதை குரங்குக் கடவுள் என்று சொல்லிவிட நாடு முழுவதும் கண்டன
ஆர்பாட்டங்கள் நடந்தன.
சென்னை கமிஷனரின் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கவும் சொல்லி
வைத்தமாதிரி மழை தீவிரம் சற்று குறைந்தது.
"கமிஷனர் அவர்களே! நாளைய ஊர்வலம் சட்டம் ஒழுங்கு காரணமாக தடை
செய்யப்படுமா?"
"நிச்சயமாக இல்லை. சிலையின் நெடும் பயணத்திற்கு தகுந்த பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் சட்ட ஒழுங்கு மீறப்பட்டால் கடுமையான
நடவடிக்கைகள் எடுப்போம்."
"சந்தோஷத் தீவில் இருந்த அனைத்து கோயில் நிர்வாகிகளையும் வலுக்கட்டாயமாக
அழைத்து வரப்பட்டார்களா? எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு அந்த கோயில்
தரைமட்டமாக்கப்படும் என்று பேச்சு உள்ளதே?"
"இதற்கு முதலமைச்சர் காலையிலேயே பதிலளித்துவிட்டார். கடும் மழை
காரணமாகத்தான் அவர்கள் சம்மதத்தோடு நாங்கள் அழைத்து வந்தோம். உச்ச நீதி
மன்ற தீர்ப்பு வரும் வரை கோயிலுக்கு எங்களின் பாதுகாப்பு தொடரும். அதில்
தயவு செய்து சந்தேகப் பட வேண்டாம்."
"கமிஷனர் சார். ஒரு தனியார் சேனலில் அவர்கள் போலீசின்
தொந்தரவினால்தான்..."
"பொய் சொல்லுகிறார்கள். எங்களுக்கு அவப் பெயரை உண்டாக்கினால் சிலருக்கு
ஆதாயம் என்பதால் பொய் சொல்ல வைக்கப்படுகிறார்கள்."
"ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக..."
"அது புயல், மழை, வெள்ளத்தை சமாளிக்க. தயவு செய்து இந்த விஷயத்தோடு
முடிச்சு போடாதீர்கள்."
ஒரு தனியார் தொலைக்காட்சி சேவா தளத்தின் தலைவர் அனல் கக்கும் பேட்டியை
நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. நீதி மன்ற தீர்ப்பை மீறி செங்கல்
பூஜை சந்தோஷத் தீவில்தான் நடைபெறும் என்றும் வீராவேசமாக பேசிக்
கொண்டிருந்தார். 'காவிரி பிரச்சனையில் நீதி மன்ற தீர்ப்புக்கு கர்நாடக
அரசாங்கம் எங்கே கட்டுப்பட்டது? முல்லை பெரியார் தீர்ப்பை இன்னமும் கேரள
அரசு மதிக்கவில்லையே? அவர்களுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா?'
என்று பேட்டி சூடு பறக்க போய் கொண்டிருந்தது.
புது டில்லியில் பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த
உள்துறை மந்திரியை நிருபர்கள் சூழ்ந்து சந்தோஷத் தீவு பற்றி சரமாரியாக
கேள்விகள் கேட்கவும் அவர் பதிலளிக்க தொடங்கிய அடுத்த ஐந்தாவது நொடியில்
அனைத்து சானல்களும் நேரடி ஒளிபரப்பை தொடங்கின.
'திட்டமிட்டபடி சேவா தளத்தின் ஊர்வலம் தொடங்குமா?"
"இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். சேவாதளத்திடம் கேளுங்கள்."
'சேவா தளத்திற்கு உங்கள் கட்சி மறைமுகமாக உதவி வருவதாக பேச்சு
அடிபடுகிறதே?"
"கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கெட்ட எண்ணங்களோடு எங்களை வீண்
வம்புக்கு இழுக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் கேள்வி இது. எங்கள்
கட்சி நீதி மன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்கும்."
"நீதி மன்றத் தீர்ப்பு உங்கள் கட்சிக்கு சாதகமாக வர வேண்டும்
என்பதற்காகத்தான் தலைமை நீதிபதி சமீபத்தில் ராஜினாமா செய்யும்படி
நிர்பந்திக்கப் பட்டாரா?"
'இங்கே பாருங்கள். உங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதற்காக
ஒரு நீதிபதி தனது உடல் நிலை காரணமாக பதவி விலகியதை திரித்து விஷயத்தை
பெரிது படுத்தாதீர்கள்."
"பிரதமரின் நாளைய அமெரிக்கப் பயணம் சந்தோஷத் தீவு காரணமாக ரத்து செய்யப்
பட்டு விட்டதா?"
"எனக்கு தெரியாது"
தமிழக கடலோரப்பகுதியில் மீண்டும் மழைபிடித்துக் கொண்டுவிட செய்தி
சானல்கள் புயல், மழை, வெள்ளம் என்ற தலைப்புக்கு மாறின.
பிள்ளையார் பிடிக்க குரங்காய் போன இந்த சிக்கலில் போலீசும் அரசுத்துறை
அதிகாரிகளும் முழிபிதுங்கி தவித்தார்கள். அரசியல் கட்சிகளும் வெறுத்து
போனார்கள். சந்தோஷத் தீவுக்கு என்னதான் தீர்வு? இதுவும் அயோத்தி மாதிரி
இழுத்துக் கொண்டே போகுமா? யாரையும் பாதிக்காத ஒரு முடிவுதான் என்ன ?
அந்த முடிவு அன்று இரவே வந்தது. அதிகாலை மூன்று மணியளவில் மாநில
முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், பிரதம மந்திரி, போலீஸ் உயர்
அதிகாரிகளின் படுக்கையறை கதவுகள் தட்டப்பட்டன. செல்போன்கள் சினுங்கின.
மகிழ்சியான செய்திகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாரிக் கொண்டார்கள். அது-
கடும் கடல் கொந்தளிப்பில் சந்தோஷத் தீவு காணாமல் போனது.
(கலைமகள் - அக்டோபர் 2009)
என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Showing posts with label 05கலைமகள். Show all posts
Showing posts with label 05கலைமகள். Show all posts
Saturday, 13 March 2010
Wednesday, 4 March 2009
தெய்வம் தந்த வீடு
சிவாவுக்குள் பிசாசு மனம் கூச்சலிட்டது. "ஏமாந்தியா, முட்டாளே. ஹைகோர்ட்டே சொல்லியும் உன் சித்தப்பா கேட்கல. அப்பீல் செஞ்சிருக்காரு, பாரு. நான் சொல்லறத கேளு. ஒரே வாரத்தில சித்தப்பா உன் காலடில வீட்டு சாவியை மரியாதையோடு வைப்பாரு."
கொஞ்சம் நின்று யோசித்தான். சித்தப்பாவாயிற்றே என்று இரக்கப்பட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி என் வீட்டை தான் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஆனால் அடுத்த நொடியே அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. "சிவா. அவனுக்கு இன்னும் ஆறே மாசம் டைம் கொடுடா. உன் சித்தியின் கேன்சர் டிரீட்மெண்டுக்காக அலைஞ்சுக்கிட்டிருக்கான்டா."
"அப்பா பேச்சை கேட்கப் போறியா? போச்சு. நாலு வருசமா பெண் கல்யாணக் கடன்களைச் சொல்லி ஏமாத்தியாச்சு. இப்போ கேன்சர். அதற்கு பிறகு ஏதாவது இல்லாமலா போய்விடும்?"
மனப்பிசாசு சொல்வதுதான் சரி.
"சாரி அப்பா."
தனக்குள் பேசிக் கொண்டே வந்த சிவா ரோட்டில் கிடந்த அமாவாசை பூசனிக்காயை கவனிக்கவில்லை. மடேரென்று வழுக்கி விழுந்தான். பின் மண்டையிலும் இடுப்புப் பகுதியிலும் சரியான அடி. பின்புறம் அனலாய் தகித்தது. எழ முயன்றான். முடியவில்லை. மணிக்கட்டு பகுதியில் ஆயிரம் ஊசிகளை சொருகிவிட்ட மாதிரி வலித்தது.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ரோடு. ஆட்டோக்களும் பைக்குகளும் விர்விர்ரென்று போய் கொண்டிருந்தாலும் உதவிட யாருமில்லை.
வேகமாக போய் கொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென ஓரம் கட்டி நின்றது. அதிலிருத்து குதித்து இறங்கினான் ஒரு இனைஞன். மகேஷ்! சித்தப்பாவின் இரண்டாவது மகன்.
முதுகு பக்கம் அவன் பிடிக்க, அவன் நண்பன் கால் பக்கம் பிடிக்க சிவா ஆட்டோவில் திணிக்கப்பட்டான்.
உடனே பிசாசு உரக்க கத்தியது. "சிவா மறுபடியும் ஏமாறாதே. உதவி செய்யுற மாதிரி செஞ்சுட்டு வீட்டை அமுக்கிடுவாங்க. ஜாக்கிரதை"
"ரொம்ப நன்றி மகேஷ். நீ மட்டும் இல்லேன்னா நான் ரோட்டில அனாதையாக கிடந்து செத்தே போயிருப்பேன். உங்க குடும்பத்துக்கு பொறுக்கமுடியாத தொல்லைகள் எவ்வளவோ கொடுத்திருக்கேன். இருந்தாலும், எனக்கு உதவியிருக்கியே, யு ஆர் கிரேட்!"
"அண்ணா, உங்களுக்கும் அப்பாவுக்கும் இருக்கும் சண்டையில எனக்கு என்னன்னா சம்பந்தம்?"
அந்த பதிலில் சிவா கூனிக் குறுகிப் போனான். "அது சரி, வேறு வீட்டுக்கு என்ன செய்யப் போகிறீங்க?"
"கஷ்டம்தான்னா. இவ்வளவு காலம் படியளந்த கடவுள் இதுக்கும் வழி காட்டாமலா போவார்"
கொஞ்சம் அவஸ்தையான யோசனைகளுக்கு பிறகு, "வேண்டாம், மகேஷ். அப்பாகிட்டே சொல்லிடு. நீங்க அங்கேயே இருந்துகுங்க.."
வீடு, வீடு என்று பேராசையில் அலைந்து, கடைசியில் தூக்க ஆளில்லாமல் வீதியில் சாக கிடந்தேனே! என்ன முட்டாள் நான்?
மறுபடியும் பிசாசு குரல் எழுப்ப எத்தனிக்க, "ஓடிப்போ பிசாசே. உள்ளத்தினுள் அகல் விளக்கை இப்போதுதான் ஏற்றி வைத்திருக்கிறேன்."
"என்ன அண்ணா?"
"ஒன்றுமில்லை." தம்பியை அணைத்த கைகள் வலித்தன. ஆனால் மனசில் வலி இல்லை.
(கலைமகள் - மார்ச் 2009)
Monday, 19 February 2007
தேடிச் சோறு நிதந்தின்று....

தேடிச் சோறு நிதந்தின்று....
2006 செப்டம்பர் கலைமகள்
"எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல்லை ஸார். செத்துடலாமான்னு பார்க்கறேன். ஏதாவது நோய் நொடில போயிடலாம்னு பார்த்தா எனக்கு ஒரு ஜலதோஷம் கூட வந்ததில்லை. உடம்பு என்னவோ பெருமாள் கோயில் துவாரபாலகர் மாதிரி வளர்ந்திண்டேயிருக்கு. ஷேவிங் செஞ்சுக்கும் போது என் உடம்ப பார்த்து எனக்கே பயமாயிருக்கு.
போன வருஷம் காலரா வந்து ஊர்ஊரா ஜனங்கள் செத்து மடிஞ்சா. ஊரு முழுக்க இப்படி வியாதி வந்து கொல்லறதே எனக்கு ஒன்னும் வரமாட்டேங்கறதே ஏன்னு தெரியாத்தனமா கோயிலாத்து அம்பிகிட்டே கேட்டது என் தப்பு. அவன் சொல்லறான். அது ஓடியாடி வேலை செஞ்சு நல்ல வேலையில இருக்கறவாளுக்கு. ஒன்ன மாதிரி திண்ணை தூங்கிகளுக்கில்லேங்கறான். கம்மனாட்டி. இதுக்காகவே நாக்கைப் பிடிங்கிண்டு சாகலாம்ன்னு பார்க்கறேன். ஆனா நாக்கைப் பிடிங்கின்டா ரத்தம் கொட்டுமாமே. வலிக்குமாமே. உடனே உயிர் போகாதாமே. அது சரிப்படாது.
சாகணும் சாகணும்ங்கறேனே, ஏன்னு கேக்கறேளா ? வேற ஒன்னுமில்ல. என்னால யாருக்கும் தம்பிடி ப்ரயோஜனமில்லே. தோன்றினா புகழோடு இல்லேன்னா வேஸ்ட்டுன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கா இல்லையா? நான் ஒரு ஆளு ஒழிஞ்சேன்னா இந்த பஞ்ச பாட்டு பாடற சர்க்காருக்கு ப்ரயோஜனமா போகும். அடுத்த ஜன்மத்துலையாவது காதுல கடுக்கன், அப்பளாக் குடுமின்னு இல்லாம நன்னா கிராப், கிருதாவோட பொறந்து தொலைக்கணும். குளத்துல விழுந்து ப்ராணனை விடலாம்னு பார்த்தா எனக்கு நீச்சல் தெரியுமே? தவிர மூக்கு வழியா லங்ஸ் முழுக்க ஜலம் போய் உயிர் போக ரொம்ப நேரம் ஆகுமாமே? ம்ஹூம்.. அதுவும் சரிபடாது.
சரி... தூக்கு மாட்டின்டு சாகலாம்ன்னா. நெஞ்சு குரல்வளை பொடலங்கா ஒடியர மாதிரி பொடக்குனு ஒடியுமாமே? என்ன கஷ்டம்டா இது, நன்னா வயறு நிறையா சாப்டோமா, சின்ன திண்ணைல வந்து படுத்துண்டு அப்படியே மேல போனோமான்னு இருக்க வேண்டாமோ ? இப்படித்தான் மூணாந்தெரு கொழந்த கிட்டா போனான். பேருதான் கொழந்தை கிட்டா. கோட்டான் வயசு. நேத்திக்கு எல்லாம் ஆச்சு. சட்டுன்னு வ்ராட்டி படுக்கைக்குள்ளே பூந்துண்டு என் மேல கொள்ளிய வைய்யுங்கோங்கற மாதிரி படுத்துண்டுடலாம்ன்னு தோணித்து.
என்னடாப்பா நாப்பது வயசிலேயே இப்படி பொலம்பறானேன்னு பார்கறேளா? உன் பையன் 16-ம் வருஷத்திலே பொறந்து 16 சம்பத்துகளுக்கும் அதிபதியாகி இருப்பான்னு பெருமாள் கோயில் பட்டாசாரியார் சொன்னதாக என் தோப்பனார் அடிக்கடி சொல்லுவார். சம்பத்தாவது? சர்பத்தாவது? ஒன்னுத்துக்கும் வழியில்லே.
ஜென்மம் எடுத்த நாள்லேர்ந்து எதுவும் என் இஷ்டப்படி இல்லே. முதல் பதினாறு வருஷம் என் தோப்பனார் நரசிம்மர் கன்ட்ரோல்ல இருந்தேன். இந்த ஸ்லோகத்தை சொல்லு அந்த ஸ்லோகத்தைச் சொல்லுன்னு என் தொடையை கிள்ளிண்டே இருந்தது இப்பவும் வலிக்கறது. பெரியவாள்ளாம் கோவிச்சுக்கக் கூடாது. இப்ப யாராவது ருத்ரம், சமகம்ன்னா நான் ஜோட்தலைய எடுத்து மொத்திப்பிடுவேன். எல்லாமே வெறுத்துப் போயிடுத்து. அவரை நடுக் கூடத்திலே போட்டு விளக்கேத்தி வைச்சபோது கூட என் தொடையத்தான் தடவிண்டேன். அழுகை துளிக்கூட வர்லே. ஆளாளுக்கு கோவிச்சுண்டா.
சரி.. ஒரு சனி விட்டுது. இனி கொஞ்சம் செளகர்யமா வெங்காய கொட்சும், பூண்டு ரசமுமா இருக்கலாமேன்னு பார்த்தா இன்னோரு சனி என் ஆத்துக்காரி ரூபத்திலே வந்தது. கல்யாண ஜோர்ல, பார்க்கறதுக்கு சின்னக் கொழந்தே மாதிரி இருக்காளேன்னு நெனைச்சிண்டு அடியே, பங்கஜம் நீ ரொம்ப அழகா இருக்கே, ஆனா உன்னோட மூக்கு சித்த கோணல்னேன். உள்ளது உள்ளபடியேச் சொன்னது தப்பாபோயிடுத்து. ரெண்டு பசங்க பொறந்து, வளர்ந்து, பட்ணத்துக்கு படிக்க போனாளோல்லியோ, ஆரம்பிச்சுட்டா. நீங்க அன்னிக்கு அப்படிச் சொன்னேளே இப்படிச் சொன்னேளேன்னு ஒரே ஹிம்சை. விட்டுடுத்து எல்லாம்னா உங்களுக்கு நல்லா புரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கிறேன்.
கோபக்கார தோப்பனார் ருத்ர தாண்டவம் ஆடினார்னா, இவ பக்தி திலகம். கைல சப்பளாக் கட்டைய எடுத்துண்டு வீடு வீடா பஜனை. ஒரு சாயங்காலம் எதிர்வீட்டு சேது என்ன கேட்டான் தெரியுமா, கோபாலா எங்காத்துல இன்னிக்கு ராத்திரி திவ்ய நாம பஜனை. வர செளகர்யப்படுமா? உங்காத்து மாமிதான் சீஃப் கெஸ்ட்ன்னு சொல்லிப்பிட்டு கண்ணடிக்கறான். படவா ராஸ்கோல். நீங்களே சொல்லுங்கோ. நன்னாவா இருக்கு? ஏண்ணா? ஈரோட்டுக்கு பக்கத்திலே ஏதோ ஒரு மலை ஜாதிக்காரா அப்படியே மூச்சை தம்பிடிச்சிண்டு உசிரை விட்டுடுவாளாமே? நெசமாவா? ம்... அப்படியே இருந்தாலும் எனக்கு சரி வராது. பிராணாயாமத்துக்கே மூச்சை பிடிச்சுக்க கஷ்டமா இருக்கு, இதுல போயி மூச்சை பிடிச்சு உசிரை விடறதாவது?
ஆத்துக்காரி அப்படீன்னா, இந்த குலக் கொழுந்துகள் இருக்கே, பீடைகள். கன்னம் முழுக்க புஸ்புஸ்ன்னு கிருதா. தலைல குருவிக் கூடு மாதிரி முன்னுச்சி மயிர். கருகருன்னு தொங்கு மீசை. எனக்கு மரியாதையே கொடுக்காதுகள். எல்லாம் அம்மா ராஜ்யம். ஏன்னா எங்கிட்ட காசு இல்லையே. அப்படியே ஓடிப் போய் ரயில் தண்டவாளத்துலப் படுத்துன்டுடலாமான்னு தோண்றது. சே... வேண்டாம். சாகறதுதான் சாகறோம். பீஸ் பீஸ் போகாம முழுசா செத்துத் தொலைப்போமே.
இது வரைக்கும் நான் சொல்லறதைக் கேட்டே உங்களுக்கு த்சோ.. த்சோன்னு தோணறதோல்லியோ. இன்னும் கேளுங்கோ. இது போன மாசத்தில ஆரம்பிச்சது.
திவ்யநாமம்ன்னு பக்கத்தாத்துக்கும் எதிர்தாத்துக்கும் போயிண்டு இருந்ததுக்கு வந்தது கேடு. ஒரு சேட்டுக் குடும்பம் ஸ்னேகிதம் ஆச்சு. வீடு நாடகக் கொட்டா ஆயிடுத்து. பக்தி சிரத்தையா இருக்கறவா கோவிச்சுக்கக் கூடாது. ஸ்வாமிக்கு தீபாராதனைன்னா ஒரு ஐஞ்சு செகண்டு காட்டுவோம். அப்பறம். கீழே வைச்சுட்டு. எல்லாரும் எடுத்துக்கோங்கோன்னு சொல்லிடுவோமில்லையா. இங்க என்ன தெரியுமா? அந்த கடோத்கஜன் அவன் ஆம்பிடையா பூதகியோட ஈஷிண்டு தீபாராதனைத் தட்டை எடுத்துண்டு காட்டறா காட்டறா அரை மணி நேரமா. டோலக்கு என்ன? தபலா என்ன? அட்டகாசம். இரு, இரு, இதே மாதிரி நார்மடி கட்டிண்டு செய்வேடி. நான் ஒருத்தன் குத்துக் கல்லாட்டம் இருக்கேன், என்னை விட்டுட்டு பூஜை புனஸ்காரம் என்ன வேண்டிக் கெடக்கு?
ஏங்க? சவரக் கத்தியால நாடி நரம்பை வெட்டிண்டா வலிக்காம உயிரு போயிடுமாமே? அப்படியா? இதைத்தான் நான் மளிகைக் கடை பாலுகிட்டே கேட்டுத் தொலைச்சுட்டேன். தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிட்டு போகவேண்டியதுதானே? அதை விட்டுட்டு, என்கிட்டே நெல்லுக்குத் தெளிக்கற பூச்சி மருந்து இருக்கு. அதுல ஒரு டம்பளர் மோர் சாப்பிடற மாதிரி கடகடன்னு சாப்ட்டுடு. வண்டிமாடு மாதிரி நுரை கக்கிச் சாவேங்கரான். ஏன்டா கேட்டேன்னு ஆயிடுத்து. நான்னா எல்லாக்கும் கேலியும் கிண்டலுமா இருக்கு.
சரி. எல்லாத்தையும் விட்டுடுவோம். சயனைடுன்னு ஏதோ ஒன்னு இருக்காமே? அதைப் பென்சில் நுனியளவுக்கு நாக்கில வச்சிண்டா போதுமாமே? அதை பத்தின விவரம் ஏதாவது தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன். ப்ளீஸ்.... "
மன்னிக்கவும். மேலே உள்ளவை யாவும் திரு கோபாலன் அவர்கள் 1956 ல் சொன்னது. அவர் மனைவி பங்கஜமும், மூத்த மகனும் தற்போது உயிரோடு இல்லை. மிக முக்கியமான, சுவாரஸ்யமான ஒரு விஷயம் உண்டு என்றால் அது கோபாலன் இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்பதுதான்.
Subscribe to:
Posts (Atom)