Monday 25 February, 2008

காதலைச் சொல்லிவிடு


ஸ்ரீலேகா போட்டிக்கு தயாரானாள். பாஸ்கெட் பந்தை தரையில் இரு முறை தட்டி கூடையை நோக்கி வீச அது வளையத்தில் மோதி வலைக்குள் விழாமல் பக்கவாட்டில் விழுந்தது. கோர்ட்டுக்கு வெளியிலிருந்து அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் கோச் செல்வா. ரிலாக்ஸாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாலும் அவனுக்குள் ஒரு பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஸ்ரீலேகாவும் அவள் தோழி ஸ்வாதியும் அவனிடம் பாஸ்கெட் பால் கோச்சிங் எடுத்துக் கொள்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். அழகிய கல்லூரி மாணவிகள். ஸ்வாதியை செல்வாவுக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியானவள். தான் உண்டு தன் விளையாட்டு பயிற்சி உண்டு என்று இருப்பவள். பாஸ்கெட் பால் கோர்ட்டில் எந்த அளவுக்கு அவள் எதிரணியை அலற வைப்பாளோ அந்த அளவுக்கு படிப்பிலும் சூரப்புலி என்று கேள்விப்பட்டிருக்கிறான். அவளை ஏன் காதலிக்க கூடாது என்று சில வாரங்களாக அவனுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை அவளிடம் சொல்லத் தயக்கம். ஒரு வார்த்தை ஏதாவது எக்ஸ்ட்ராவாக பேசினால்தானே காதலைச் சொல்ல நம்பிக்கையும் தைரியமும் வரும். அப்படியே வலுக்கட்டாயமாக சொல்லி வைத்து, அவள் 'சாரி சார். எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டால் ?'

ஸ்ரீலேகா அதற்கு நேர் எதிர். லொடலொடவென்று ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாள். எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ் அனுப்புவாள். பூனை குட்டி மாதிரி செல்வாவை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருப்பாள். உரிமையோடு முதுகில் குத்துவாள். மூக்கை கிள்ளுவாள். அவள் தன்னை காதலிக்கிறாளோ என்ற பயம் செல்வாவுக்கு இருக்கிறது. உன் மேல் எனக்கு காதல் இல்லை ஸ்வாதியிடம்தான் என்று மூஞ்சியில் அடித்த மாதிரி எப்படி அவளிடம் சொல்வது? அதுவும் தப்பாகப் போய், 'சார். நீங்கள் உங்கள் கோச் வேலையை மட்டும் பாருங்கள். வீணாக எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள்' என்று ஆரம்பித்து வேலைக்கே உலை வைத்துவிட்டால் ?

சே! ஒருத்தியிடம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இன்னொருத்தியிடம் இல்லை என்று சொல்ல வேண்டும். காதலை சொல்வதில் எவ்வளவு சிக்கல் ? யோசித்து யோசித்து கடைசியில் செல்வாவுக்கு ஒரு ஐடியா உதித்தது. பாஸ்கெட் பாலில் ஸ்ரீலேகாவை ஒரு போட்டிக்கு இழுக்க வேண்டும். அது கடினமாக இருக்க வேண்டும். தோற்கடித்து தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும்.

"செல்வா சார்! நான் ரெடி. போட்டியை ஆரம்பிக்கலாமா?"

"ஸ்ரீ. கவனமா கேளு. இந்த போஸ்டிலிருந்து எதிர் போஸ்ட் வரைக்கும் நடந்துகிட்டே பந்தை மேல் நோக்கி தட்டிக்கிட்டே வரனும். நிற்கவோ, பந்தை கையால பிடிச்சுக்கிட்டோ நடக்கவோ கூடாது. பத்து தப்படில மொத்த தூரத்தையும் கடக்கனும். தவிர, நான் ஏதாவது பேச்சு கொடுப்பேன். அதுக்கும் பதிலும் சொல்லனும். ஓகே?"

"ஓகே. நான் ஜெயிச்சா நான் என்ன சொல்வேனோ அதை நீங்கள் கேட்கனும்."

"ஓகே. அதே மாதிரி நான் ஜெயிச்சா...."

"அதற்கு சான்ஸே இல்லை. நான்தான் ஜெயிப்பேன்."

ஆனால் செல்வாவுக்கு நம்பிக்கை இருந்தது. நிச்சயம் தோற்றுவிடுவாள். ரெகுலர் ஸ்போர்ட்ஸ் டிரெஸில் வராமல் சுடிதாரில் வந்திருக்கிறாள். துப்பட்டா நிச்சயம் தொந்திரவு செய்யும்.

ஸ்ரீலேகா முதல் அடி எடுத்து வைத்தாள். "ஸ்ரீ. இன்று நீ ரொம்பவும் அழகாய் இருக்கிறாய்."

"என்ன கிண்டலா?" ஹீரோ ஸ்டைலில் பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு குறுக்கிட்ட செல்வாவை சாமர்த்தியமாக கடந்து போனாள் ஸ்ரீலேகா.

செல்வா அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.

"ஆனால் உன் மூக்கு. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது."

"போட்டி முடியட்டும் சார். அதற்குள் உங்கள் மூக்கை இன்ஷூர் செஞ்சுடுங்க"

செல்வா சரமாரியாக கேள்விகளை அம்புகளாக வீசி வந்தாலும் ஸ்ரீ£லேகா அசரவில்லை. எட்டு தப்படி முடித்துவிட்டாள். இன்னும் இரண்டே தப்படிதான். செல்வாவுக்கு உலகமே காலுக்கடியில் சரிவது போல இருந்தது. தப்பு கணக்கு போட்டுவிட்டோமோ? வேறு வழியே இல்லை. எடு பிரமாஸ்திரத்தை. அதிரடியாக கேள்விகள் கேட்க வேண்டியதுதான். அதை கேட்டு அவள் கவனம் சிதற வேண்டும். அவள் தோற்க வேண்டும்.

"லுக். ஸ்ரீ. இது பர்சனல். உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதில் நட்பு மட்டுமே இருக்கு. அதற்கு மேல் இல்லை...."

"அப்படியா? போட்டி முடியட்டுமே. அதை நான் தீர்மானித்துவிடுவேனே?"

சரியாக பத்து தப்படியில் முடித்துவிட்டாள். பந்து கீழே விழவேயில்லை. சே! என்ன முட்டாள்தனம் !

"ஸ்ரீ. நீ ஜெயிசுட்ட. ஓகே. ஆனால் நான் சொல்லறத கொஞ்சம் கேளு. வாழ்கையென்பது ஒரு போட்டியில் முடிவு செய்யக் கூடிய அற்பமான விஷயமில்லை. இரண்டு மனசு சம்பந்தப்பட்டது." தோல்வி பயத்தில் செல்வா உளறினான்.

"அதெப்படி? போட்டி வைச்சது நீங்கள். ஜெயிச்சது நான். என்ன சொல்லணும்கிறத நான்தான் தீர்மானிப்பேன்."

"சரி. சொல்லு."

செல்வா அவஸ்தையாக நெளிந்தான். ஸ்ரீ£லேகா வெற்றிக் களிப்பில் செல்வா அருகில் வந்தாள். கண்ணோடு கண் நோக்கினாள். சட்டென்று விலகி பெரிசாக ஓடி ஓடி சிரித்தாள்.

"ஸார். தப்பா நினைச்சுக்காதீங்க. இப்ப உங்க மூஞ்சி ப்யூஸ் ஆன பல்பு மாதிரி இருக்கு."

"ஸ்ரீ... ப்ளீஸ்"

"ஓகே. ஐயாம் சீரியஸ். செல்வா சார். நீங்க ஸ்வாதியை கல்யாணம் செஞ்சுப்பீங்களா? அவ உங்ககிட்ட சொல்லத் தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கா. நீங்க அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டா அவ மனசு உடைஞ்சு போயிடுவா. நீங்க போட்டின்ணு சொன்னதும் எனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக பட்டது. அவளுக்காகத்தான் இந்த போட்டிக்கே நான் ஒத்துக்கிட்டேன்."

"தாங்க்ஸ் ஸ்ரீ. ஐ ஆம் சாரி. உன்னை எப்படியாவது ஜெயிக்கனுங்கற வேகத்துல உன் மனசு நோகற மாதிரி பேசிட்டேன்."

"பரவாயில்லை சார். நீங்க உண்மைத்தானே சொன்னீங்க. சார் நட்பை தவிர நம்மிடையே இன்னொன்றும் இருக்கு. அது இந்த பாஸ்கெட் பால் விளையாட்டு. அதைதான் நான் மிகவும் விரும்புகிறேன். இந்தாருங்கள்." பந்தை செல்வா நோக்கி வீசிவிட்டு சிட்டாக பறந்தாள் ஸ்ரீலேகா. செல்வாவின் இதயத்தில் பட்டாம் பூச்சிகள் பறந்தன.

(தேவி - 27 பிப்ரவரி 2008)

No comments: