Sunday 25 February, 2007

அஞ்சு பலி


அஞ்சு பலி

2007 ஜனவரி 17 தேவி

எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை என்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த பூசாரியை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் சரளா இருக்கும் நிலையில் எதுவும் சொல்ல முடியவில்லை. என் அம்மாவும் அவள் கட்சியில் சேர்ந்துவிட்டாள்.

எனக்கும் சரளாவுக்கும் கல்யாணம் ஆகி முதல் இரண்டு வருடம் குழந்தைகளே இல்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று குறை பிரசவங்கள்.

அதில் போன வருடம் கொஞ்சம் கொடுமையானது. எட்டரை மாசம். முழு குழந்தையாகவே இறந்து பிறந்தது. சரளாவை சமாளிக்க நான் பெரும்பாடு பட்டேன்.

இந்த சந்தர்ப்பத்தில் யாரோ சொல்லி வந்த இந்த பூசாரி நான்கே மாதத்தில் எங்கள் வீட்டில் நங்கூரம் போட்டு விட்டான். நான் சொல்ல வந்த போது அதை தெய்வ குத்தம் என்று சொல்லி அம்மா தடுத்து விட்டாள். நானும் விட்டுவிட்டேன்.

அம்மாதான் இன்று காலையில் மெதுவாக ஆரம்பித்தாள்.

"சேகர். நம்ம பூசாரி சோழி போட்டு பார்த்ததில நமக்கு செய்வினை இருக்குதாம். ஒரு காளி கோயில்ல பூஜை போட்டு அஞ்சு பலி கொடுத்துட்டா, நம்ம பாவமெல்லாம் விலகிடுமாம்."

"அஞ்சு பலின்னா?"

"அதான்டா. காளிக்கு கோழி, மைனா, கெடா, வெள்ளாடு, எருமை மாதிரி அஞ்சு பலி கொடுக்கணுமாம். ஆனா. அதுக்கு பதிலா அஞ்சு கெடா வெட்டிட்டா போதுமாம்."

எனக்கு கண் முன்னால் ஐந்து ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக 'சொத்' 'சொத்' என பலியாவது வந்து போனது.

கூடவே சென்ற வருடம் நான் கையில் சுமந்து சென்ற அந்த குறை பிரசவ குழந்தை....

"வேண்டாம்மா. அஞ்சு பலிய கொடுத்துட்டு எனக்கு ஒரு கொழந்தை குடுன்ணு கேட்பது வேண்டாம்மா ப்ளீஸ். இதுக்கு மட்டும் என் பேச்சை கேளுங்க."

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கொஞ்சம் அதிகமாகவே நான் கத்திவிட இருவரும் கலவரப்பட்டு போனார்கள்.

கொஞ்ச நேர மெளன நிமிடங்களுக்கு பிறகு,

"நீங்க சொல்லறது சரிங்க. பலி கொடுத்துதான் நம்ம பாவங்கள் போய் குழந்தை பெத்துக்கணும்னா எனக்கு அந்த பாக்கியமே வேண்டாங்க."

சரளா சொன்னாள். அம்மா கண்களால் ஆமோதித்தாள். நான் எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கு நன்றி கூறினேன்.

No comments: