Wednesday 21 February, 2007

கண் திறந்த ஓவியம்


கண் திறந்த ஓவியம்

2006 ஆனந்த விகடன் தீபாவளி மலர்

"சிந்துஜா. நல்ல பெயர். சிந்து பைரவி எனக்கு மிகவும் பிடித்த ராகம்"

பளீரென்று நெடுநெடுவென உயரமாக இருந்தாள். ஷாம்பு விளம்பரதாரர்கள் இவளைப் பார்த்தால் நிச்சயம் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள்.

"ம்.... சொல்லுங்கள். என்ன விஷயமாக என்னை சந்திக்க வந்திருக்கிறீர்கள்?"

"சார். சென்ற சனிக்கிழமை எங்கள் காலேஜ் ஆண்டு விழாவில் உங்கள் லெக்சர் சிம்ப்ளி சூப்பர்ப். உங்கள் எழுத்து மாதிரியே பேச்சும் இருக்கிறது. வீழ்வது தோல்வியல்ல. வீழ்ந்து கிடப்பதுதான் தோல்வி என்ற சிறு தலைப்பில் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிட்டீர்கள்."

"ரொம்ப நன்றி. நீங்கள் என்னைப் பார்க்க வந்தது குறித்து மகிழ்ச்சிதான். ஆனால், இதை அங்கேயே சொல்லியிருக்கலாம் அல்லவா?"

"மன்னிக்கவும். நான் சாதாரணமாக விஐபிகளை பொது இடங்களில் தொந்தரவு செய்வதில்லை. தவிர, உங்களிடம் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்."

"சொல்லுங்கள்."

"அன்றைக்கு விழா முடிந்ததும் நான் பஸ் பிடிக்க வந்து விட்டேன். அப்போது அந்த பக்கமாக உங்கள் கார் வந்தது."

"ஞாபகமில்லை. சொல்லுங்கள்."

"உங்கள் கார் வரவும், ஒரு மாணவன் வாழைப் பழத் தோலில் சறுக்கி விழவும் சரியாக இருந்தது. அனைவரும் முதலில் சிரித்தாலும் உதவிக்கு ஆள் தேடினோம். ஆணுக்கு ஆணாக நீங்கள் உதவ வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் கண்டும் காணாதது மாதிரி போய்விட்டீர்கள்."

"ஆமாம். எனக்கு உடனடியாக இன்னொரு இடத்திற்கு போக வேண்டியிருந்தது."

அவள் எதுவும் பேசாது என்னையே பார்த்தாள். என் பதிலில் அவளுக்கு திருப்தியில்லை என்று தெரிந்தது.

"ஸாரி. நான் கொஞ்சம் நின்று அவனுக்கு உதவியிருக்கலாம். உதவியிருக்க வேண்டும்."

அவள் மெதுவாக என்னைப் பார்ப்பதை தவிர்த்து கீழ் நோக்கிய பார்வையில்...

"ஸார். உங்கள் எழுத்திலும் பேச்சிலும் பிரமிப்போடு இருந்த நான் உங்களில் அந்த செயலில் நானே சறுக்கி விழுந்த மாதிரி அவஸ்தைப் பட்டேன். எனக்கு அன்றைக்கு முழுக்க தூக்கம் வரவில்லை. எழுத்தும் பேச்சும் அரை கிணறு சார். நான் உங்கள் பரம ரசிகை. என் ரோல் மாடல் நீங்கள். உங்களை முழு மனிதராகவே பார்க்க விரும்புகிறேன்."

அவள் வார்த்தைகளால் என்னை விளாசியிருந்தாலும் அதில் உள்ள உண்மையும் என் மேல் அவள் கொண்டிருந்த பற்றும் என் புத்திக்கு உடனடியாக உறைத்தது.

"ரொம்ப நன்றிம்மா. தயங்காம வந்து எடுத்துச் சொன்ன உன் தைரியத்தை பாராட்டறேம்மா. ஆமா, நீங்கள் ஒரு ஓவியரா?"

"இல்லையே. ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?"

"இல்லை. என் கண்களை திறந்து விட்டிருக்கிறீகளே. அதனால்தான் கேட்டேன்.... சிந்துஜா. நல்ல பெயர். சிந்து பைரவி எனக்கு மிகவும் பிடித்த ராகம்"

இந்த முறை அவள் புன்னகை பூத்தாள்.

No comments: