Tuesday 20 February, 2007

வல்லவன்



வல்லவன்

2006 செப்டம்பர் 24 குங்குமம்

கொல்கத்தா விமானம் தரை இறங்கிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் எங்கள் புதிய மண்டல மேலாளார் ம்ருனாள் தாஸ் குப்தா யார் என்பது தெரிந்துவிடும். இப்போதைக்கு எனக்குப் பெயர் மட்டும்தான் தெரியும், ஆள் எப்படி இருப்பார் என்பது தெரியாது. இந்தப் பெயருக்கு ஒரு முலாம்பழத் தலையும் சரிந்த தொந்தியுமாக ஒருவரைத்தான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.

‘டால்பின் ரிஸார்ட்ஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ (சுத்தப் பொய்!) என்று ஆங்கிலத்தில் எழுதிய 'டி' வடிவ தட்டியை பெருமாள் கோவில் தீவட்டி மாதிரி பயபக்தியுடன் உயர்த்தி பிடித்திருந்தான் டிரைவர் சுந்தரம். எங்கே கொஞ்சம் அசிரத்தையாக இருந்து, ஆரம்பமே கோணலாகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவனுக்கு.

எங்கள் கம்பனிக்கு சனி திசை கடந்த மூன்று வருடங்களாக ரொம்பவே உச்சத்தில் இருக்கிறது. விஸ்வநாத பிரதாப சர்மா (அப்படித்தான் சொல்லவும் வேண்டும். எழுதவும் வேண்டும். விஸ்வநாதவுக்கோ பிரதாபவுக்கோ புள்ளி வைத்தீர்கள் என்றால் நிச்சயம் சம்பள உயர்வுக்கு முற்றுப் புள்ளி) என்ற கிழம்தான் சென்ற சனிக்கிழமை வரை எங்களுக்கு பாஸ். திடீரென எங்கள் முதலாளி மீது கோபித்துக் கொண்டு ராஜினாமா செய்துவிட்டு அடுத்த பிளைட்டில் தன் சொந்த ஊரான டில்லிக்கு போய்விட்டது.

கொல்கத்தா பிரயாணிகள் வெளியே வருவது அதிகரித்து விட்டது. ஒரு கிழம் கிட்டதட்ட என் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் அது என்னை தாண்டிச் சென்று ஒரு கவுன் போட்ட கிழவியை அணைத்துக் கொண்டு சென்றுவிட்டது. அதன் பிறகு ஒரு சொட்டையை பார்த்து சந்தேகப்பட்டேன். அதுவும் இல்லை. நேரம் ஆக ஆக எனக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. முலாம்பழத்தை கோட்டை விட்டு விட்டேனா? அது எங்கயாவது போய் சந்தி சிரித்து கடைசியில் அலுவலகத்துக்கு வந்து என் சீட்டை கிழித்துவிட்டால்? நிற்க முடியவில்லை. ஆனால் விட்டுப் போக மனசில்லை.

இப்படியாக யோசித்து யோசித்து முடியை பிய்த்துக் கொள்ளாத குறையில் இருக்கும் போது நீல ஜீன்ஸ், கருப்பு டி சர்ட், ரேபான் பச்சை கண்ணாடி, லோட்டோ கான்வாஸ், ஆறடி உயரம், அத்லெடிக் பாடி, கோதுமை நிறம், மொத்தத்தில் ஹிந்தி சினிமா ஷூட்டிங்கிலிருந்து தப்பித்து வந்தவன் மாதிரியான ஒருவன் (ஸாரி ஒருவர்) எங்கள் தட்டியை அடையாளம் கண்டு கையசைக்க....

மை காட்! இவர்தான் ம்ருனாள் தாஸ் குப்தாவா?

பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் என்று 007 ஸ்டைலில் "நான் தாஸ் குப்தா. ம்ருனாள் தாஸ் குப்தா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நல்லவேளை கையில் சாக்பீஸ் சைஸில் கைதுப்பாக்கி இல்லை. கைகுலுக்கலில் கொஞ்சம் பெண்மை இருந்தது.

சே! மிகப் பெரிய பதவியில் இருப்பவர் இப்படி கெளபாய் மாதிரி... என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு குப்தாவை சுத்தமாக பிடிக்கவில்லை.

நானும் பதிலுக்கு "ஐ ம் கிருஷ்ணன் வினயா. கிருஷ்ணன் தாமோதரன் வினயா. டால்பின் ரிசார்ட்ஸின் சென்னை மண்டல அலுவலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது." என்றேன். சுந்தரத்திடமிருந்து ரோஜா மாலையை வாங்கி அணிவித்தேன்.

அதற்குள் கார் வந்து விட்டது. நானும் மடமடவென்று அலுவலக ரீதியாக சொல்ல வேண்டியவைகளை சொல்லித் தீர்த்து விட்டேன். அது மனதுக்குள் சென்றதா என்று தெரியவில்லை. பார்வை என்னவோ பல இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தது.

இனி எங்கள் ஆபீஸ் உருப்பட்ட மாதிரிதான். சர்மா ஆடியது ருத்ர தாண்டவம். இது ஆடப்போவது ப்ரேக் டான்ஸாகத்தான் இருக்கும். தமிழ் பேசியது ஆச்சர்யம் என்றால் (அம்மா தமிழச்சி) காரில் சுந்தரத்தோடு சமமாக உட்கார்ந்து கொண்டு பேசியது எரிச்சலோ எரிச்சல்.

ஹோட்டல் ரூமில் விட்டுவிட்டு அவசரம் அவசரமாக வீடு திரும்பினேன். என் மனைவியும் எங்கள் கம்பனியிலேயே வேலை பார்க்கிறாள். எதிர்பார்த்த மாதிரியே வித்யா மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.

"ஏங்க புது பாஸ் எப்படீங்க, கலகலவா சிடுசிடுவா,"

"இரண்டும் கெட்டான். இனிமே ஆபீஸ் ஆபீஸாக இருக்காதுன்னு நினைக்கறேன்."

வித்யாவை ஆபீஸ் வாசலிலில் இறக்கிவிட்டபோதுதான் ஞாபகம் வந்தது. ஸ்வீட் பாக்கெட்டுகளுக்கு சொல்லியிருந்ததை வாங்கிவரவில்லை.

வேலையை முடித்துக்கொண்டு செக்ஷனில் வந்து அமரவும் குப்தா அழைப்பதாக சுந்தரம் சொல்லிவிட்டுப் போனான்.

காபின் கதவை டொக் டொக்கி விட்டு உள்ளே சென்ற எனக்கு ஆயிரம் வோல்டில் ஷாக். சாம்பல் கலரில் உயர் தர கோட் சூட். தங்க பிரேமில் முட்டை வடிவ கண்ணாடி. குப்தா... அப்படியே உல்டா. என்னால் நம்பவே முடியவே இல்லை. ஏர்ப்போர்ட்டில் கெளபாய் மாதிரி இருந்தவர் இங்கு அனில் அம்பானிக்கு தம்பி மாதிரி இருந்தார்.

"மிஸ்டர் வினயா. இன்னும் ஐந்து நிமிடத்தில் நான் எல்லோரையும் சந்திக்கப்போகிறேன். தகவல் அனுப்பிவிடுங்கள். கான்பிரன்ஸ் ஹாலை தயார் செய்து வையுங்கள்."

முக்கிய ஆபீஸ் கோப்புகளில் அவர் சொன்ன குறிப்புகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. சர்மா விட்டுவிட்டு போன எல்லா பென்டிங் வேலைகளும் க்ளியர் ஆகியிருந்தன.

கான்பிரன்ஸ் ஹாலில் குப்தா வெளுத்து வாங்கினார். ரிசார்ட்ஸ் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். பல தகவல்கள் எங்களுக்கு புதிதாக இருந்தன. வந்து இரண்டு மணி நேரம்கூட ஆகியிருக்காது. அதற்குள் பொது மேலாளரிலிருந்து டிரைவர் வரை அனைவரின் பெயர்களும் டாண் டாண்னென்று வந்து விழுந்தன. தமிழில் மெல்லிய நகைச்சுவை இருந்தது.

மதியம் குப்தாவிடமிருந்து மறுபடி அழைப்பு வந்தது.

லாப்டாப்பில் மூழ்கியிருந்தார் குப்தா.

"ஸார். ஏர்ப்போட்டில் அதிகப்பிரசங்கித்தனமாக பேசியதற்கு மன்னிக்கவும். உங்கள் புத்திசாலித்தனம் எங்களை பிரமிக்க வைக்கிறது."

"நோ. நோ. வினயா. நீங்கள் ஒரு தவறும் செய்யவில்லை. நான் கம்பனியை விட்டு வெளியே வந்து விட்டால் மிக சாதாரண இளைஞன் மாதிரிதான் இருப்பேன். என் கண்டிப்பும், அதிகாரமும் அலுவலகத்துக்குள் மட்டும்தான். அதை விடுங்கள். இந்த கம்பனியில் உங்கள் வேலைகள் என்ன?"

"ஸார். நான் உங்களுக்கு செக்ரெட்டரி. கம்பனிக்கு பி.ஓ. வெளிநாட்டு வி.ஐ.பி. வந்தால் அவர்களோடு கூடவே செல்லும் சிறப்பு அதிகாரி. சில சமயங்களின் நம் ரிஸார்டுகளில் தொழிலாளிகள் பிரச்னை வந்தால் அதை சமாளிக்கப் போவது உண்டு."

"போதும் போதும். எனக்கு புரிந்து விட்டது. உங்கள் பளுவை உடனடியாக குறைக்க வேண்டும். ம்... ம்... என்ன செய்யலாம். ... சரி... எனக்கு தனி செக்ரெட்டரி தேவை. மற்ற வேலையெல்லாம் நீங்களே இப்போதைக்கு பார்த்துக் கொள்ளுங்கள். நம் ஆபீஸில் தகுதியானவர்கள் இருக்கிறார்களா?"

எனக்கு வித்யாவின் ஞாபகம் வந்தது. அக்கெளண்ட்ஸ் செக்ஷனில் இடுப்பொடிய வேலையிருப்பதாகவும் வேலையை விட்டுவிடலாமா என்று நச்சரித்து கொண்டிருக்கிறாள்.

"ஸார், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அக்கெளன்ட்ஸ் செக்ஷனில் வேலை பார்க்கும் வித்யாவை போடலாம். என் மனைவி என்பதற்காக இல்லை. திறமையானவள்."

"ஓகே. உடனடியாக என்னை பார்க்கச் சொல்லுங்கள். நான் வேலையில் காம்ப்ரொமைஸ் செய்து கொள்ள மாட்டேன். திறமையிருந்தால் நிச்சயம் கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியானால் உங்கள் வீட்டில் வைத்து எனக்கு விருந்து அளிப்பீர்களா?"

"நோ ப்ராப்ளம் சார். உங்களுக்கு இல்லாத விருந்தா? அது எங்கள் பாக்கியம் சார்."

வித்யா உள்ளே போய் ஐந்தாவது நிமிடத்தில் மலர்ந்த முகத்துடன் வந்தாள். துள்ளிக் குதித்து போய் அவளே ஆர்டரை டைப் செய்தாள். கையெழுத்து ஆகி வந்ததில் சம்பளம் கிட்டத்தட்ட இரட்டிப்பு ஆகியிருந்தது.

நாலு மணிக்கெல்லாம் குப்தா பிசினெஸ் விஷயமாக வெளியே போய்விட்டார். முன்பெல்லாம் சர்மா கிழம் வெளியே போனது என்றால் நாங்களெல்லாம் ஹுர்ரே என்று வெஸ்ட் இண்டீஸ் மாதிரி கைகளை மேலும் கீழுமாக தட்டிக் கொள்வோம். இப்போது அடியோடு மாறிவிட்டது. அவரவர்கள் அவர்கள் வேலையில் மூழ்கியிருந்தாகள்.

குப்தா பொறுப்பேற்றுக் கொண்டதைப் பற்றி ரிப்போர்ட் ஒன்றை எங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நேர்த்தியாக ரிப்போர்ட் தயார் செய்திருந்தார். உயர்தர ஆங்கிலம். ஹாவர்டில் எம்.பி.ஏ என்றால் சும்மாவா?

ஃபேக்சுக்கு எண்களை தட்டி தட்டி பொறுமை போனது. சில சமயங்களில் இப்படித்தான் ஆகும். ஃபேக்ஸ்தான் சண்டித்தனம் செய்கிறதே. ஈமெயிலில் அனுப்பி விடலாமா என்று கேட்க எங்கள் கொல்கத்தா முதலாளியின் பி.ஏ.வை டெலிபோனில் பிடித்தேன்.

"வணக்கம். நான் வினயா. சென்னை மண்டல அலுவலகம். திரு குப்தா அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டிருக்கிறார்கள். அது பற்றிய ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். ஃபேக்ஸில் ஏதோ ப்ராப்ளம். ஈமெயில் அனுப்பிவிடவா?"

"குப்தாவா. யார் ம்ருனாள் தாஸ் குப்தாவா?" (இங்கும் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலா!)

"ஆமாம்."

லேசாக நக்கலாக சிரிப்பது தெளிவாகக் கேட்டது. என்னால் பொறுக்க முடியவில்லை.

"என்ன விஷயம். எதற்கு சிரித்தீர்கள்? ஏன் ரொம்ப புத்திசாலியாகத்தானே தெரிகிறார்."

"அதிலெல்லாம் கில்லாடிய்யா. முதலாளிக்கும் ரொம்ப புடிச்ச ஆள்தான். ஆனா... எனக்கு எதுக்கு வம்பு? நீங்களே தெரிஞ்சுப்பீங்க."

"சார், சொல்லிடுங்களேன். எனக்கு மண்டை வெடிச்சுடும் போல இருக்கு."

"சரி. சொல்லறேன். ஆனா யாருக்கும் தெரியக்கூடாது. அதுவும் நான் சொன்னேன்னு."

"சரி. சொல்லுங்க."

"அந்த ஆளு பொம்பள விஷயத்திலயும் ரொம்ப கில்லாடிப்பா. அதுவும் கல்யாணமான பொண்ணுகள அவன் ப்ராகெட் போடற மாதிரி ஒரு பய போடமுடியாது. மும்பைலகூட இந்த பிரச்னை இருந்ததா கேள்வி."

எனக்கு தலை சுற்றியது.

No comments: