Monday 12 February, 2007

சின்னு


சின்னு

1997 டிசம்பர் 12 குங்குமம்

"குட்டிம்மா... இங்க பாரு... அம்மா என்ன வாங்கிண்டு வந்திருக்கா பாரு."

டைனிங் டேபிளுக்கு அடியில் சப்பையாய்ப் போன பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த எங்கள் ஒரே வாரிசான சின்னு என்கிற குட்டிப் பெண், சரோவின் குரல் கேட்டு தத்தக்கா பித்தக்கா என்று ஓடிவந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்டது.

சரோவுக்கு சாதாரணமாகவே ஆர்ப்பாட்டம் அதிகம். குழந்தைக்காக டிரெஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தால் கேட்கவா வேண்டும்!

அட்டைப் பெட்டியை பிரித்தாள். உள்ளே...

நீல நிறத்தில் ஜீன்ஸ் சட்டை! பாண்ட்!. இத்துனூண்டு குழந்தைக்கு இந்த சைஸில் எங்குதான் இவளுக்குக் கிடைக்கிறதோ?

"ஏங்க. சின்னுவுக்கு ஒரு டிரெஸ் போட்டு வைக்கக் கூடாது? ஜட்டியோட அலைசிண்டு இருக்கே".

சரோ என் எண்ணத்தைக் கலைத்தாள். சரோவுக்கு குழந்தைக்கு விதவிதமாக டிரஸ் போட்டு வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் நான் அதற்கு நேர் எதிர். எங்களை மாதிரியே எங்கள் சின்னுவும் ஸ்தூல சரீரம். மெல்லிசாக சட்டை மாதிரி போட்டால்கூட தொப்பலாய் வியர்த்துவிடும். எனவே ஃப்ரீயாக விட்டுவிடுவேன். ஆனால் சரோ பாம்பாய் சீறுவாள்.

பரபரவென நீல ஜீன்ஸ் போட்டுவிட்டாள். கஷ்டப்பட்டு இடுப்பு பித்தானை உள்ளே நுழைத்து ஜிப்பை ஏற்றினாள்.

குழந்தை பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தது.

"சரோ. இதுக்கு அடுத்த சைஸ் கிடைக்கலையா. ரொம்ப டைட்டா இருக்கே."

சரோ சுள்ளென நிமிர்ந்தாள். சரிந்த மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் கோபம் கொப்பளிக்க,

"ஜீன்ஸ் பாண்ட்னா டைட்டாதான் போட்டுக்கணும். எதிர்த்தாத்து ஆராவமுது ஐயங்கார் போட்டுக்கற மாதிரி இழுத்துக் கட்டிண்டா போட்டுக்கிறது. உங்களுக்கு ரசனையே கிடையாது. சொன்னாலும் புரியாது".

சரோவின் தீர்ப்புக்கு அப்பீலே இல்லை. குழந்தையை வாரியள்ளிக் கொண்டு கீழ்வீட்டு மாமியிடம் காட்டப் போய் விட்டாள். சின்னுவை நினைத்தால் பாவமாய் இருந்தது.

அரைமணியில் சரோ வந்தாள்.

"என்னங்க கிளம்பலையா? ஏழு மணிக்கெல்லாம் நாம அங்கிருக்கணுங்க."

ஆமாம்! மறந்தேவிட்டது. சரோவின் மாமா பெண் ராதாவுக்கு இன்று ரிசப்ஷன். நாளை கல்யாணம்.

ஓஹோ! இப்போது புரிந்துவிட்டது. ஜீன்ஸ் பாண்ட், சட்டை இதற்காகத்தானா ?

பத்து நிமிடத்தில் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தோம். "சரோ. ஆட்டோல போயிடலாமா? நம்ம மூனு பேருக்கும் இந்த மொபெட் வசதியா இருக்காது. சின்னு ரொம்ப சிரமப்படும்."

மெதுவாய் சொல்லி வைத்தேன். அவ்வளவுதான்!

"என்னது... ஆட்டோவா... போறதுக்கே நிச்சயம் முப்பது ரூபா கேப்பானுங்க. திரும்பி வர ஒம்பது மணியாயிடும். நிச்சயம் அம்பதுக்கு குறையமாட்டானுங்க. என்ன, பணம் வீட்ல விளையறதா? சும்மா வாங்க. சின்னுவ எப்படி செளகர்யமா வச்சுக்கணும்னு எனக்குத் தெரியும்".

மறு பேச்சில்லை. மொபெட்டில் உட்கார்ந்த மாத்திரத்திலேயே சின்னு அழத் தொடங்கிவிட்டது. உடனே எனக்கும் சேர்த்து அர்ச்சனை.

கல்யாண சத்திரத்திலும் சின்னுவின் அழுகை தொடர்ந்தது. டிரஸ் ரொம்ப டைட்டாக இருக்கிறது என்று என்னையறியாமல் ஒரு முறை சொல்லிவிட ஒரு முறைப்பில் அடக்கினாள். குழந்தையின் டிரஸ் ரொம்ப பிரமாதம் என்ற சர்டிபிகேட்டை அடிக்கடி வாங்கிக் கொண்டதில் பெருமையோ பெருமை.

நிலை கொள்ளாமல் அழுததில் குழந்தை தூங்கிவிட்டது. ரிசப்ஷன் முடிந்து எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வர ஒன்பதரை கிவிட்டது.

மறுபடியும் நெரிசலான மொபெட் பயணம். வழியில் முழித்துக்கொண்டு சிணுங்கியது சின்னு.

"சனியனே! அங்கதான் மானத்தை வாங்கினேன்னா வழியிலுமா மானத்தை வாங்கணும்."

சிக்னலில் நிற்கும்போது பஸ்ஸில் இருந்த யாரோ ஒருவர் குழந்தையின் தலை சரிந்திருப்பதைச் சுட்டிக் காட்டவும் சரோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"சரிதான் போடா!" பஸ் நகர்ந்ததும் சரோ முனகினாள்.

வீட்டில் நுழைந்ததும் சரோவின் ஒவ்வொரு இயக்கத்திலும் கோபம் கொப்பளித்தது. பால் சாப்பிட மறுத்த சின்னுவுக்கு ஒரு மொத்தல். மறுநாள் கல்யாணத்துக்கு வர முடியாது என்பதால் அட்வான்ஸாக அவள் மாமா கொடுத்த முகூர்த்தப் பையை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டதற்காக எனக்கு ஒரு அர்ச்சனை.

ஒரு ரவிக்கையை எடுத்துத் தலையில் இறுக்கக் கட்டிக் கொண்டு தூங்கப் போய்விட்டாள்.

எனக்கு அரைமணி நேர ஆபீஸ் வேலை பாக்கியிருந்தது. எல்லாவற்றையும் முடித்ததும் தூக்கம் கண்களைச் சுழற்றியது. படுக்கைக்கு வந்தபோது சின்னு கால் பரப்பி தூங்கிக் கொண்டிருந்தது. ஜீன்ஸ் பாண்ட்!

சின்னு ராத்தியில் ஒன்றுக்குப் போகும். ஐய்யையோ! காலையில் புதுத்துணி கெட்டுப் போனதற்குத் திட்டு விழும். நிதானமாகக் கழற்றினேன்.

விடுதலை கிடைத்ததும் சுகமாகப் புரண்டு படுத்துக் கொண்டது. முகத்தில் நிம்மதி துல்லியமாய்த் தெரிந்தது.

சரோ தூங்கிக் கொண்டிருந்தாள். நல்ல வேளை!

No comments: