Friday 16 February, 2007

பூதரேக்கலூ


பூதரேக்கலூ

2006 ஏப்ரல் 09 குங்குமம்

"ஸார். ஒரு சின்ன ரிக்வெஸ்ட். எனக்கு அரை கிலோ பூதரேக்கலூ வாங்கி வரமுடியுமா? ப்ளீஸ்..."

என் காபினுக்குள் வந்தவன் எங்கள் வங்கியின் சம்பள செக்ஷனில் இருப்பவன் என்பது மட்டும் தெரியும்.

எங்கள் வங்கியின் டிரைனிங் காலேஜ் ஹைதராபாதில் இருக்கிறது. யாராவது டிரைனிங் போய் கொண்டே இருப்பார்கள். அந்த சமயத்தில் அங்கிருந்து ஏதாவது வாங்கிக்கொண்டு வர சக நண்பர்கள் சொல்லுவது வழக்கம்.

பணமும் அந்த ஸ்வீட் கடை முகவரியும் கொடுத்தான்.

பூதரேக்கலூ என்பது ஹைதராபாத்தின் ஸ்பெஷல் ஸ்வீட். பார்ப்பதற்கு சுற்றி வைத்த பேப்பர் மாதிரி இருக்கும். அப்படியே சாப்பிட வேண்டும். அருமையாக இருக்கும்.

என்னோடு நன்கு பழக்கம் இல்லாத போதிலும் என்னுடைய உயர் பதவியையும் பொருட்படுத்தாது என்னை ஸ்வீட் வாங்கி வரச் சொன்ன அவன் தைரியத்தை என்னவென்று சொல்வது?

'சரி, ஒழியறான் போ. சம்பள செக்ஷனில் இருக்கிறான். நாளைக்கு ஏதாவது ஒரு வழியில் உபயோகமாக இருக்கும்' என்று யோசித்து விட்டு விட்டேன்.

ஆனால் அவனின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எரிச்சலை உண்டாக்கின. நான் கிளம்பும் அவசரத்தில் இருந்தபோது அசடு வழிய நின்று ஞாபகம் மூட்டினான்.

அதுக்கூட பரவாயில்லை. ஹைதாராபாத்தில் டிரைனிங் முக்கியமான கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் போது எனக்கு எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து வந்தது. ரிமைன்டர். எனது பொறுமை எல்லை தாண்டிவிட்டது.

சென்னை வந்ததும் மற்ற எல்லாருக்கும் அவரவர்கள் பொருட்களை ப்யூன் மூலம் கொடுத்தனுப்பினேன். வேண்டுமென்றே பூதரேக்கலூவை என் டிராயரில் வைத்து பூட்டிவிட்டு உயர் அதிகாரிகள் மீட்டிங்குக்கு போய்விட்டேன்.

ஐந்து மணிக்கு என் காபினுக்கு திரும்பி வந்த போது பழியாக காத்திருந்தான். பொரிந்து தள்ளிவிட்டேன்.

"ஸாரி சார். என் மீதுதான் தவறு. மன்னிக்கவும். ஆனால் ஒன்று. நீங்கள் நினைப்பது மாதிரி நானோ என் வீட்டு மக்களோ சாப்பிட்டு மகிழ இல்லை."

அவன் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு....

"ஸார். எனக்கு 90 வயது அப்பா இருக்கிறார். பெரிய குடும்பம். நாங்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே செகந்திராபாதில்தான். அடுத்த வேளை சோற்றுக்குக்கூட என்ன வழி என்ற நிலமையில்தான் நாங்கள் வளர்ந்தோம். இப்போது வசதியாக இருக்கிறோம். என் அப்பாவுக்கு ஸ்வீட் சாதாரணமாகவே பிடிக்கும். அதுவும் பூதரேக்கலூ என்றால் கொள்ளை ப்ரியம். அவருக்கு அப்போது ஆசை மட்டும் இருந்தது. வசதி இல்லை. இப்போது கண் கூட தெரியவில்லை. ஆனாலும் அதை தடவி தடவி அவர் சாப்பிடுவதை பார்க்கும் போது...... "

"ஸாரிப்பா. நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் இல்லையா?"

"சொல்லியிருக்கலாம். அது என் தவறுதான். என் அப்பாவுக்கு நான் செய்கிறேன் பார் என்று பலரிடம் நான் பெருமை பட்டுக் கொள்ள விரும்பவில்லை. அவர் எங்களுக்கு செய்ததை ஒப்பிடும் போது நான் அவருக்கு செய்வது ஒன்றுமேயில்லை. ஸாரி சார்."

போய்விட்டான். ஆனால் அவன் நினைவுகள் இன்னும் பூதரேக்கலூவாகவே இருந்தது.

No comments: