Friday 23 February, 2007

அந்த ஒரு கேள்வி


அந்த ஒரு கேள்வி

2006 நவம்பர் 19 கல்கி

அந்த வயதானவர் எங்களையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"சேகர். அங்க நிக்கிறாரே அவர் யார்றா?"

"என்னடா. இவரை தெரியாது? எங்க ஷூட்டிங் நடந்தாலும் அங்க வந்திடுவாரு. என்ன, சான்ஸ் கேட்கத்தான். விட்றா. நம்ம வேலைய பார்போம். ஆர்டிஸ்ட் சீக்கெளன்ஸ் ரெடி செஞ்சுட்டியா,"

ஆனால் என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அவர் பார்த்த பார்வை ஏதோ சொல்லியது. என் பார்வையின் கூர்மையை உணர்ந்ததும் என்னை நோக்கி வந்தார்.

"ஸார். வணக்கம். இன்னிக்கு எனக்கு எதாவது ரோல் கிடைக்குமா?"

ஒல்லியான தேகம். முள்ளுமுள்ளான தாடி ஒரு வாரத்தை சொல்லியது. போட்டிருப்பது நிச்சயம் அவர் சட்டையாக இருக்காது.

அன்றைய ஷூட்டிங் ஷெட்யூலை புரட்டினேன். அவருக்கு ஏற்ற ரோலை தேடியதில்....

இருந்தது. ஆனால் டைரக்டர் அல்லது ப்ரொடக்ஷன் மேனேஜரை கேட்காமல் சொல்ல முடியாது.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டைரக்டர் வரட்டும். "

போய் தன் பழைய இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு, வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

டைரக்டர் வர மணி பத்தாகி விட்டது. வந்ததும் வராததுமாய் அந்த கேரக்டரை சொல்லி அவரைக் காட்டி கேட்டேன். அவரும் கொஞ்சம் யோசித்துவிட்டு சரியென சொல்லிவிட்டு ஃபீல்டுக்குள் போய்விட்டார்.

மிகுந்த உற்சாகத்தோடு அவரை அழைத்துச் சொன்னேன்.

"நிச்சயமா உண்டா?"

அவர் கேள்வி புதிராக இருந்தது.

"ஏன் கேட்கிறீங்க. டைரக்டரே ஓக்கே சொல்லியாச்சு. நிச்சயம் உண்டு."

"அப்ப, நான் டிபன் சாப்பிட்டுக்கலாம் இல்லையா."

அந்த பதிலில் பொதிந்திருந்த அவலம் என்னை என்னவோ செய்தது.

No comments: