Wednesday 5 March, 2008

படுத்துக் கொண்டே ஜெயித்தவர்- பாபா ஆம்தே


இந்த தேசம் மற்றுமொரு மகத்தான காந்தியவாதியை இழந்திருக்கிறது. 93 வயது முரளீதர் தேவதாஸ் ஆம்தே சென்ற மாதம் அமரரானார். பாபா என்றவுடன் ஏதோ ஒரு ஆன்மிகவாதி என்று எண்ணிவிட வேண்டாம். மராட்டியர்கள் மதிப்பிற்குறிய பெரியவர்களை 'பாபா' என்றே அழைப்பார்கள்.

பாபா தன் வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே செலவிட்டிருக்கிறார். அப்போதெல்லாம் தொழு நோயாளிகள் என்றால் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் அல்லது பால்வினை நோய் என்றும் கருதுவதுண்டு. அவர்களை தொடுவதாலும் அல்லது அவர்கள் அருகில் இருப்பதாலும் நமக்கும் அந்நோய் வந்துவிடும். எனவே அவர்கள் சமுதாயத்திற்கு தேவையற்றவர்கள் என்ற தவறான எண்ணங்கள் இருந்தன. நோயின் தீவிரம் மற்றும் சமுதாய புறக்கணிப்புகளால் அவர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி, கவனிப்பாறின்றி செத்து மடிந்தனர்.

1951ம் ஆண்டு சந்திராபூர் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் 'ஆனந்த வனம்' என்ற ஆசிரமத்தை நிறுவினார் பாபா. சுற்றியுள்ள கிராமங்களில் பிரத்யேக க்ளினிக்குகள் தொடங்கப்பட்டன. அங்கு தொழு நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவம் அளிக்கப்பட்டது. ஆனந்த வனத்தை அவர் நிறுவியபோது அவருக்கு முப்பதிஏழு வயதுதான். கல்யாணம் ஆகி ஐந்தே வருடங்கள்! 'தேசிய விடுதலை என்கிற லட்சிய வேட்கையோடு போராடிய காந்தியடிகளை தன் நெஞ்சில் நிறுத்தி வாழ்வின் விளிம்புகளில் தத்தளிக்கும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டியவர் பாபா' என்று புகழ்மாலை சூட்டுகிறார்கள் சமுகவியலார். அவர் அன்று தொடங்கிய இயக்கம் தொய்வில்லாமல் இன்றும் தொடர்கிறது. அவரது மகன்களும், மருமகள்களும், பேரப்பிள்ளைகளும் இதே சமுதாயப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

'தொழுநோயாளிகளை விட மிக மோசமான ஒரு வாழ்க்கையை பழங்குடியினர் பெற்றிருக்கிறார்கள். இவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியாவின் வளர்ச்சியை பற்றி பேசுவது பேத்தலானது. மிகப் பெரிய அணைகள் கட்டப்படும்போது காடுகள் அழிகின்றன. பழங்குடியினர் அலைகழிக்கப்படுகிறார்கள். அரசாங்கம் அவர்களுக்கு மாற்று குடியமர்த்தல் ஏற்பாடுகளை கடனே என்று செய்கிறது. முடிவில் அவர்கள் நகரவீதிகளில் பிச்சை எடுக்கும் அவலத்திற்கு உள்ளாகிறார்கள்' என்கிறார் பாபா.

மேதா பட்கர் தலைமையில் 'நர்மதாவை காப்பாற்றுவோம்' என்ற ஏழுச்சி தீவிரம் அடைந்தபோது, பாபா துணிந்து ஒரு காரியம் செய்தார். நர்மதையில் அணை வருவதால் மூழ்கக்கூடிய நிஜிபல் என்ற கிராமத்துக்கு தனது வசிப்பிடத்தை மாற்றினார். மத்திய பிரதேச அரசு பாபாவின் போராட்டத்தை கண்டு மிரண்டது. ஒரு கட்டத்தில் போலீஸ் உதவியுடன் அவரை வலுக்கட்டாயமாக அந்த கிராமத்திலிருந்து அப்புறப்படுத்தியது. போராட்டம் தீவிரம் அடைய, அரசு பணிந்து வந்து, பேச்சு வார்த்தைகள் நடத்தியது. அதன் பலனாக பழக்குடியினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.

பாபாவின் மன உறுதிக்கு நேரெதிராக அவர் உடல் நிலை இருந்தது. முதுகுத்தண்டில் இரண்டு எலும்புகள் செயலற்று போனதால் அவரால் உட்கார முடியாது. நிற்கவும் படுக்கவும் முடியும். ஆனால் அவர் அசரவில்லை. படுத்துக் கொண்டே பல சாதனைகள் செய்தார்.

"பன்னாட்டு நிறுவனங்கள் நாடோடிகள் மாதிரி இங்கே வந்து, காலப்போக்கில் நம்மை ஆளுமை செய்கின்றன. வானுயர கட்டிடங்களும், பெப்சியும், கோக்ககோலாவும் இந்தியாவின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் அல்ல. ஒரு ஏழை பழங்குடி பெண் எந்த அவமானங்களுக்கும் உள்ளாகாமல் அவள் காலைக்கடன்களை கழிக்க முடிந்ததென்றால் அதுதான் இந்தியாவின் வளர்ச்சியென்பேன்" என்கிறார் பாபா. மேற்கத்திய பொருளாதார சிந்தனையில் திளைத்திருக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு அம்ட்டே விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கை காதில் விழுந்தால் இந்த தேசத்திற்கு நல்லது.

(அமுதசுரபி - மார்ச் 2008)

No comments: