Monday 11 August, 2008

பூமராங்



மாதம் - 1

எம்.டி. பிரகாஷ் அதிரிச்சியுடன் கேட்டார். "என்ன ரமேஷ் இது! 150 பேரை வேலையை விட்டு தூக்கணும்னு எழுதியிருக்கீங்க"

ஜி.எம். ரமேஷ் நிதானமாகச் சொன்னார்... "ஆமாம் சார். நம்ம பொருட்கள் மார்கெட்ல நிக்கணும்னா, அதிரடியா விலைகளை கொறைச்சே ஆகணும். இல்லேன்னா, போட்டி கம்பனிகள் நம்மள சாப்பிட்டுட்டுடும். நம்ப தொழில்சாலையிலும், ஆபீஸ்லயும் ஒரு ரகசிய சர்வே செஞ்சேன். அதன்படி 150 பேர் அதிகப்படியா இருக்காங்க. இவங்களை தூக்கிட்டா உற்பத்தி செலவுகள் கணிசமா குறையும்."

"திடீர்னு வேலையை விட்டு எப்படி அனுப்ப முடியும்? எல்லாரும் பல வருஷம் சர்வீஸ் போட்டவங்க. பிரச்சனையாகிடாதா?"

"சார். பிசினெஸ்னு வந்துட்டா நோ சென்ட்டிமென்ட்ஸ். தீ பிடிச்சு குடிசைங்க எரியும்போது, அந்த தீயிலேர்ந்து காப்பாத்த, நல்ல குடிசை கூரைகளை பிரிச்சு எறியறோம் இல்லையா? அந்த மாதிரி மொத்த கம்பனியும் நஷ்டமாகி எல்லோர் வயத்திலேயும் ஈரத்துணி போடறதுக்கு பதிலா ஒரு சிலரை வீட்டு அனுப்பறதுதான் புத்திசாலித்தனம்."

மாதம் - 2

பல தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யபட்டனர். முரண்டு பிடித்த சிலர் மீது பொய் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் மனம் வெறுத்து அவர்களாகவே விலகினர். ரமேஷ் ஒரே தீர்மானமாக இருந்தான். அதன் பலனும் உடனே கிடைத்தது. அதிரடி விலை குறைப்பில், கம்பனியின் லாபம் கிடுகிடுவென உயர்ந்தது.

மாதம் - 3

பிரகாஷ் அவசரம் அவசரமாக ரமேஷை வரவழைத்தார்.

"ரமேஷ்! நம்ம அக்ரிமெண்ட்படி ஒரு மாச நோட்டீஸ் கொடுக்கணும் இல்லையா? அதன்படி இந்த மாசம்தான் உங்களுக்கு கடைசி மாசம்."

"சார்ர்....." அதிர்ந்தான் ரமேஷ்.

"ஆமாம்பா. என் மகன் எம்.பி.ஏ படிப்பை முடிச்சிட்டு அடுத்த மாசம் வர்றான். யோசிச்சு பார்த்தேன். அவன் இருக்கிற பட்சத்திலே உன் வேலை உபரியா பட்டுது. அதனால நீ விலகிடு. எனக்கும் உற்பத்தி செலவுகளை கொறைச்ச மாதிரி ஆகும். சரிதானே?"

(குங்குமம் - 14 ஆகஸ்ட் 2008)

No comments: