Saturday 13 March, 2010

சந்தோஷத் தீவு

முன் குறிப்பு :-

கடவுள் மனிதனை படைத்தான். மனிதன் தன் பங்குக்கு பிரச்சனைகளை படைத்தான்.
இன்று நாம் சிக்கித் தவிக்கும் பல பிரச்சனைகள், மனிதன் தன் சுய
லாபங்களுக்காக எப்போதோ உருவாக்கப்பட்டவை. வரம் கொடுத்தவனையே பதம் பார்க்க
வந்த பஸ்மாசுரன் மாதிரி, இந்த மாதிரியான பிரச்சனைகள் பல சிக்கல்களுக்கு
உள்ளாகி, வெவ்வேறு வடிவம் எடுத்து, கடைசியில் பூதாகரமாக
உருவெடுத்துவிடும் போது, 'தீர்வு என்ன?' என்று தலையை பிய்த்துக்
கொள்கிறோம். காஷ்மீராகட்டும், காவிரியாகட்டும், கட்சத் தீவாகட்டும், அதன்
வேர்கள் ஒன்றே.

தமிழகக் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில், வங்கக் கடலில் ஒரு தீவு
உருவானால்? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? அந்த கற்பனையில்
கொஞ்சம் காரம் சேர்க்க, சில பிரச்சனைகளை அதில் நாம் சேர்ப்போமா? இதோ கதை
தொடங்குகிறது.....

2016, அக்டோபர் மாதம் 14ம் தேதி, வெள்ளிக்கிழமை. மதியம் இரண்டு மணிக்கு
பிடித்த மழை இன்னும் விடவில்லை. சென்னை நகரமே மழை நீரில் பெருங்காயம்
மாதிரி கரைந்து போய்விடுமோ என்ற அளவுக்கு மழையின் தீவிரம் இருந்தது. இது
போதாதென்று, பின் இரவில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் அதிபயங்கர புயல்
தாக்கக்கூடும் என்று வானிநிலை அறிவித்திருந்தது. அதற்கு க்ளாரா என்று
பெயரிட்டிருந்தார்கள்.

ஒரு பக்கம் தமிழக மக்கள் ஈரமும் குளிருமாக தவித்துக் கொண்டிருந்தாலும்
இன்னொரு பக்கம் மாநில போலீசும் அரசுத் துறை அதிகாரிகளும் ஏக டென்ஷனில்
இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி இரண்டு வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்து
கொண்டிருந்தார்கள் அதுதான், சந்தோஷத் தீவு! மழையும், புயலும் சற்றே அதன்
முக்கியத்துவத்தை குறைத்திருந்தாலும், நேற்றும், இன்றும், நாளையும்
அதுதான் செய்திகளின் கதாநாயகன்.

அன்றைய காலை தினசரிகளில் தடித்த எழுத்துக்களில் சந்தோஷத் தீவில் நடக்கப்
போகிற கரசேவை பற்றிய செய்திகளே இடம் பிடித்திருந்தன. 'சந்தோஷத் தீவில்
இனி யாருக்கும் அனுமதி இல்லை! மத்திய அமைச்சரவை ரகசிய முடிவு ?', என்று
கொட்டை எழுத்துக்களுக்கு சிவப்பு அடிக்கோடிட்டு புதிய செய்தியை முந்தித்
தந்திருந்தது ஒரு தினசரி. அதுதான் உண்மையோ என்ற மாதிரி அதை உறுதிப்
படுத்தும் விதமாக அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இன்னொரு தினசரி தன் பங்குக்கு சந்தோஷத் தீவில் நிர்மானிக்கப் படப்போகிற
நாற்பது அடி உயர அனுமன் சிலையின் ஏ4 சைஸ் வண்ண ஃபோட்டோவை இலவச இணைப்பாக
வழங்கியிருந்தது. அரசியல் சார்பு தினசரிகள் ஒருவர் மேல் ஒருவர்
புழுதிவாரி தூற்றிக் கொண்டும் தங்களுக்கு சாதமான விஷயங்களை முன்னிலை
படுத்தியும் செய்திகளை திரித்தும் எழுதியிருந்தன.

அரசியல், மதம், நீதி மன்றம் என்று ஏகப்பட்ட சிக்கல்களில் தற்போது
திண்டாடிக் கொண்டிருக்கும் சந்தோஷ தீவிற்கு பெயரில்தான் சந்தோஷம். கடந்த
மூன்று வருடங்களாக அதன் பிரச்சனைகள் தீவிரமடையும் போதெல்லாம் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொது சொத்துக்கள் நாசமாயின. விலைவாசியின்
அம்புக்குறி அடிக்கடி மேல் நோக்கி மிரட்டியது. பங்கு வர்த்தகத்தில்
கரடிக்கு அதிகம் வேலையிருந்தது.

ராமேஸ்வரத்திலிருந்து வடக்கு பக்கமாக 36 நாட்டிகல் மைல் தொலைவில் இரண்டு
கி.மீ. நீளம், மூன்று கி.மீ. அகலத்திற்கு 2010 ஜனவரி மாதத்தில் உருவான
அந்த குட்டித் தீவுக்கு அடுத்த பத்தாவது நாளே சிக்கல் ஆரம்பித்தது.
இந்தியா, இலங்கையும் அதற்கு உரிமை கோரின. ரோந்துப் பணி கப்பலுக்களூக்கு
இடையே அடிக்கடி சிறு சிறு மோதல்கள் ஆரம்பித்தன. வெளிவிவகாரத் துறை
மந்திரிகள், தூதுவர்கள், செயலாளர்கள் ஏசி அறைகளில் அடிக்கடி கூடிக் கூடி
விவாதித்தார்கள். மூக்கை இடிக்கும் செய்தியாளர்களின் மைக்குகளில்
'மீண்டும் சந்திப்போம், பேசுவோம்' என்றார்கள். வரைபடங்கள் சரிபார்க்கப்
பட்டன. பாரளுமன்றம் அடிக்கடி ஸ்தம்பித்தது.

மாநில கட்சிகளும் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்பினார்கள். சந்தோஷத்
தீவுக்கு அருகில் மீண்பிடிக்கப் போன நூற்றுக் கணக்கான மீனவர்கள் இலங்கை
ராணுவத்தினரால் கைது செய்யப்பட, மீனவர் நலன் என்ற போர்வையில் ஒரு வட்டார
கட்சி களத்தில் இறங்கியது. அதன் வளர்ச்சியை கண்டு சகிக்க முடியாத எதிர்
கட்சி, 'கட்ச தீவைப் போல இந்த தீவுக்கும் இலங்கை உரிமை கோரினால், தமிழ்
நாட்டில் ரத்த ஆறு ஓடும்', என்ற மிரட்டலோடு சிறை நிரப்பும் போராட்டத்தை
துவக்க, ஆளும் கட்சி எதைப் பிடித்தால் தங்களுக்கு அரசியல் இலாபம்
கிடைக்கும் என்று தேடி திண்டாடியது.

ஒரு வழியாக எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அது இந்தியாவுக்குதான்
என்று முடிவானது. ஆனால் அதில் தமிழர் நலனை நிலை நாட்டியது யார் என்பதில்
குடுமிபிடி சண்டைகள் தொடங்கின. அவர்களுக்கு அவர்களே வாழ்த்திக் கொண்டு
போஸ்டர் அடித்து விழா கொண்டாடினார்கள். கவிஞர்கள் தங்கள் அரசியல்
தலைவர்களை வாழ்த்துப் பாமாலை பாடி பரிசில் பெற்றார்கள். சிங்கப்பூருக்கு
அருகில் இருக்கும் சென்டோஸா தீவைப் போல் சந்தோஷத்தீவை மேம்படுத்துவோம்
என்று மெரீனா கடற்கரை கூட்டத்தில் முழங்கிய மாநில முதல்வரின் பேச்சை
கேட்டு வயிறெரிந்தார்கள் எதிர் கட்சியினர்.

அரசியல் குழப்பங்கள் கொஞ்சம் தணிந்ததும் வியாபார போட்டா போட்டிகள்
தொடங்கின. சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஸ்டீமெர்கள் கான்ட்ராக்ட்
கொடுத்ததில்/எடுத்ததில் பெரும் அரசியல் புள்ளிகள் பணம் பார்த்தார்கள்.
காசு பார்க்க முடியாத கோஷ்டியும், காசு ஏராளாமாக கண்டுவிட்ட கோஷ்டியும்
சந்தோஷத் தீவிலேயே துரத்தி துரத்தி அடித்து கொண்டார்கள். அதை வெளியிட்ட
ஒரு புலனாய்வு பத்திரிக்கையின் ரேட்டிங் கூடியது. சந்தோஷத் தீவுக்கு
அடியில் இருக்கும் பவழப் பாறைகளை சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவதாக
அரசியல் பின்னணியில் ஒரு பெரிய நிறுவனம் களத்தில் குதிக்க, சுற்றுசூழல்
ஆர்வலர்கள் கோர்ட்டுக்கு போக, நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது.

சந்தோஷத் தீவை ஒரு வசூல் ராஜாவாக ஒரு கூட்டம் போற்றி புகழ்ந்தாலும்,
இன்னொரு பிரிவினர் அதை மர்ம நாயகனாகவே பாவித்து செய்திகளில் அவ்வப்போது
பயமுறுத்தி கொண்டிருந்தனர். சந்தோஷத் தீவில் அதிக அளவில் யுரேனிய
படிமங்கள் கண்டுபிடிப்பு! அமெரிக்கா அங்கே ஒரு ராணுவ தளம் அமைக்கும்!
சந்தோஷத் தீவு ஒரு தனித் தீவு அல்ல. இது போல இன்னும் 50க்கும் மேற்பட்ட
தீவுகள் சென்னை வரை உருவாகலாம்! அப்போது துறைமுகங்களுக்கு ஆபத்து வரலாம்!
சுனாமி வருவது சர்வ சாதாரணமாகி விடும்! தென் தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக
மூழ்கக் கூடும்! என்று கிளி ஜோஸ்யம் மாதிரி அரை வேக்காட்டு அறிவியல்
அறிஞர்கள் துணை கொண்டு மர்மங்கள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்தன.

தினம் தினம் ஒரு மர்ம முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த சந்தோஷத் தீவு,
ஒரு புத்தம் புதிய திருப்பம் கண்டது. யாரோ ஒருவர் ராமாயண நிகழ்வுகள்படி
அனுமன் பெரிய உரு கொண்டு இலங்கையை நோக்கி பறக்க உந்தி எழுந்த இடம் அந்த
தீவுதான் என்றும், சந்தோஷத் தீவின் ஒரு பாறையின் மீது அந்த கால் தடங்கள்
இருப்பதாக ஆதார விளக்கங்கள் அளிக்க, பிரச்சனை அனுமன் மாதிரியே விஸ்வரூபம்
எடுத்தது.

மூலை முடுக்கு கோயில்களுக்கெல்லாம் குடும்பம் குடும்பமாக வேன் எடுத்துக்
கொண்டு விசிட் அடித்து சலித்து போய்விட்ட பக்தர்கள் கூட்டத்திற்கு அது
ஒரு பெரிய வரப்பிரசாதமாக போய்விட்டது. அது வரை இயற்கை ஆர்வலர்கள்
விரும்பும் சுற்றுலாத்தலமாக இருந்த சந்தோஷத்தீவின் மீது பக்தர்கள்
படையெடுக்கவும், புதிய ஆதாய கோஷ்டிகள் அங்கே தங்களது சுய இலாபங்களை அங்கே
அரங்கேற்றினர்.

இரவோடு இரவாக ஒரு பக்த கோஷ்டி அனுமன் சிலையை அந்த இடத்தில் பிரதிஸ்டை
செய்து ஒரு தற்காலிக கோயில் செய்துவிட, பிரச்சனை இன்னும் தீவிரம்
அடைந்தது. கூடவே நாலு கால பூஜையும் தொடங்கிவிட்டது. எதிர்ப்பாளார்கள்
கொதித்தெழ விஷயம் நீதி மன்றம் வரை போனது. இதற்கிடையில் தீவின் இன்னொரு
மூலையில் மீனவ கிருஸ்தவர்கள் ஒரு தேவாலயத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட,
சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் அபாயம் ஏற்பட்டது. துரதிர்ஷடவசமாக, ஒரு சிறு
நாட்டு வெடி குண்டு ஒண்று வெடிக்காத நிலையில் அங்கேகண்டுபிடிக்கப்படவும்,
நாட்டில் பல இடங்களில் மதக் கலவரங்கள் நிகழ்ந்தன.

பெருவாரியான மக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்பதால் தற்போது
உள்ள கோயிலும், கோயில் பூஜையும் தொடரலாம் என்றும் ஆனால் நீதி மன்ற இறுதி
தீர்ப்பு வரும் வரை எந்த வித நிரந்தர கட்டுமானப் பணிகள் கூடாது என்ற ஒரு
குழப்பமான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் அளித்தது. அரசியல் கட்சிகள் இந்த
பக்கமும் அந்த பக்கமும் மாறி மாறி ஊதி தங்கள் கணக்குகளை சரி செய்து
கொண்டார்கள்.

அகில உலக இந்து மக்கள் சேவா தளம் என்ற அமைப்பு அசுர வளர்ச்சி பெற்றது.
அனுமன் எழுந்த இடத்தில் மிகப் பெரிய உருவச் சிலை வைப்பதுதான் சரி என்று
அவர்களே தீர்மானித்து 40 அடி சிலை செய்தார்கள். கன்யாகுமரியில்
திருவள்ளுவருக்கு சிலை இருக்கலாம், ஹைதராபாதில் புத்தருக்கு சிலை
இருக்கலாம், சந்தோஷத் தீவில் அனுமன் சிலை இருக்கக் கூடாதா என சேவா தள
தலைவர் அறைகூவல் விட அவர் மிகவும் பிரபலமானார். மிகப் பெரிய கோயில் கட்ட
மக்களிடம் வசூல் வேட்டை நடந்தது. மக்களின் நம்பிக்கையில் நீதி மன்றம்
தலையிடுவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அறிவித்தது சேவா தளம்.

ஆனால் இந்த விஷயத்தில் ஆன்மிகத்துக்கு துளிகூட சம்பந்தமில்லை என்றும் மத
ரீதியாக மக்களை திசைதிருப்பி அரசியல் ஆதாயம் பார்க்கிறது ஒரு கூட்டம்,
சத்தியம் நிச்சயம் வெல்லும் என்று உண்மையான ஆன்மிகவாதிகள் மறுத்து
அறிக்கை விட்டார்கள்.

இதற்கிடையில் இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் அனுமன் சிலை செய்தியை
ஒளிபரப்பி அதை குரங்குக் கடவுள் என்று சொல்லிவிட நாடு முழுவதும் கண்டன
ஆர்பாட்டங்கள் நடந்தன.

சென்னை கமிஷனரின் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கவும் சொல்லி
வைத்தமாதிரி மழை தீவிரம் சற்று குறைந்தது.

"கமிஷனர் அவர்களே! நாளைய ஊர்வலம் சட்டம் ஒழுங்கு காரணமாக தடை
செய்யப்படுமா?"

"நிச்சயமாக இல்லை. சிலையின் நெடும் பயணத்திற்கு தகுந்த பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் சட்ட ஒழுங்கு மீறப்பட்டால் கடுமையான
நடவடிக்கைகள் எடுப்போம்."

"சந்தோஷத் தீவில் இருந்த அனைத்து கோயில் நிர்வாகிகளையும் வலுக்கட்டாயமாக
அழைத்து வரப்பட்டார்களா? எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு அந்த கோயில்
தரைமட்டமாக்கப்படும் என்று பேச்சு உள்ளதே?"

"இதற்கு முதலமைச்சர் காலையிலேயே பதிலளித்துவிட்டார். கடும் மழை
காரணமாகத்தான் அவர்கள் சம்மதத்தோடு நாங்கள் அழைத்து வந்தோம். உச்ச நீதி
மன்ற தீர்ப்பு வரும் வரை கோயிலுக்கு எங்களின் பாதுகாப்பு தொடரும். அதில்
தயவு செய்து சந்தேகப் பட வேண்டாம்."

"கமிஷனர் சார். ஒரு தனியார் சேனலில் அவர்கள் போலீசின்
தொந்தரவினால்தான்..."

"பொய் சொல்லுகிறார்கள். எங்களுக்கு அவப் பெயரை உண்டாக்கினால் சிலருக்கு
ஆதாயம் என்பதால் பொய் சொல்ல வைக்கப்படுகிறார்கள்."

"ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக..."

"அது புயல், மழை, வெள்ளத்தை சமாளிக்க. தயவு செய்து இந்த விஷயத்தோடு
முடிச்சு போடாதீர்கள்."

ஒரு தனியார் தொலைக்காட்சி சேவா தளத்தின் தலைவர் அனல் கக்கும் பேட்டியை
நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. நீதி மன்ற தீர்ப்பை மீறி செங்கல்
பூஜை சந்தோஷத் தீவில்தான் நடைபெறும் என்றும் வீராவேசமாக பேசிக்
கொண்டிருந்தார். 'காவிரி பிரச்சனையில் நீதி மன்ற தீர்ப்புக்கு கர்நாடக
அரசாங்கம் எங்கே கட்டுப்பட்டது? முல்லை பெரியார் தீர்ப்பை இன்னமும் கேரள
அரசு மதிக்கவில்லையே? அவர்களுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா?'
என்று பேட்டி சூடு பறக்க போய் கொண்டிருந்தது.

புது டில்லியில் பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த
உள்துறை மந்திரியை நிருபர்கள் சூழ்ந்து சந்தோஷத் தீவு பற்றி சரமாரியாக
கேள்விகள் கேட்கவும் அவர் பதிலளிக்க தொடங்கிய அடுத்த ஐந்தாவது நொடியில்
அனைத்து சானல்களும் நேரடி ஒளிபரப்பை தொடங்கின.

'திட்டமிட்டபடி சேவா தளத்தின் ஊர்வலம் தொடங்குமா?"

"இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். சேவாதளத்திடம் கேளுங்கள்."

'சேவா தளத்திற்கு உங்கள் கட்சி மறைமுகமாக உதவி வருவதாக பேச்சு
அடிபடுகிறதே?"

"கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கெட்ட எண்ணங்களோடு எங்களை வீண்
வம்புக்கு இழுக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் கேள்வி இது. எங்கள்
கட்சி நீதி மன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்கும்."

"நீதி மன்றத் தீர்ப்பு உங்கள் கட்சிக்கு சாதகமாக வர வேண்டும்
என்பதற்காகத்தான் தலைமை நீதிபதி சமீபத்தில் ராஜினாமா செய்யும்படி
நிர்பந்திக்கப் பட்டாரா?"

'இங்கே பாருங்கள். உங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதற்காக
ஒரு நீதிபதி தனது உடல் நிலை காரணமாக பதவி விலகியதை திரித்து விஷயத்தை
பெரிது படுத்தாதீர்கள்."

"பிரதமரின் நாளைய அமெரிக்கப் பயணம் சந்தோஷத் தீவு காரணமாக ரத்து செய்யப்
பட்டு விட்டதா?"

"எனக்கு தெரியாது"

தமிழக கடலோரப்பகுதியில் மீண்டும் மழைபிடித்துக் கொண்டுவிட செய்தி
சானல்கள் புயல், மழை, வெள்ளம் என்ற தலைப்புக்கு மாறின.

பிள்ளையார் பிடிக்க குரங்காய் போன இந்த சிக்கலில் போலீசும் அரசுத்துறை
அதிகாரிகளும் முழிபிதுங்கி தவித்தார்கள். அரசியல் கட்சிகளும் வெறுத்து
போனார்கள். சந்தோஷத் தீவுக்கு என்னதான் தீர்வு? இதுவும் அயோத்தி மாதிரி
இழுத்துக் கொண்டே போகுமா? யாரையும் பாதிக்காத ஒரு முடிவுதான் என்ன ?

அந்த முடிவு அன்று இரவே வந்தது. அதிகாலை மூன்று மணியளவில் மாநில
முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், பிரதம மந்திரி, போலீஸ் உயர்
அதிகாரிகளின் படுக்கையறை கதவுகள் தட்டப்பட்டன. செல்போன்கள் சினுங்கின.
மகிழ்சியான செய்திகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாரிக் கொண்டார்கள். அது-

கடும் கடல் கொந்தளிப்பில் சந்தோஷத் தீவு காணாமல் போனது.

(கலைமகள் - அக்டோபர் 2009)

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சீனு said...

நாட்டில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் கலந்து கட்டிய பதிவு. பிரச்சனைகளை படிக்கும் பொழுதே தலை சுற்றுகிறது. இந்தியா ரொம்ப பாவம் சார்