Monday 3 September, 2007

ஒரு பொண்ணு ஒரு பையன்


ஒரு பொண்ணு ஒரு பையன்

ஆனந்த விகடன் - 5 செப்டம்பர் 2007

போர்டு ஐகான் அதற்குறிய நான்கு மூலை மஞ்சள் கோட்டு எல்லைக்குள் இல்லாமல் கோணலாக நிறுத்தியதிலிருந்தே மாயாவின் மூடு சரியில்லை என்று தெரிந்து விட்டது. காலையில் படு பிரகாசமாக ஆபீஸ் போனவளுக்கு இப்போது என்ன வந்தது? யோசித்துக் கொண்டே லி·ப்டு வரை போன ஸ்ரீநிவாசன் திரும்பி வந்தார். திகம்பர் சென்குப்தாவின் காரை கிட்டத்தட்ட முத்தமிட்டுக் கொண்டிருந்தது ஐகான். அந்த தடியன் முதலில் ரிவர்ஸ் எடுத்து அப்புறம்தான் திருப்ப முடியும். சென்டிமெண்டலாக அதற்கு அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். நாலு பேரை கூட்டி அமர்க்களம் செய்வான்.

கொஞ்சம் யோசனையோடு ஐகான் கதவில் கை வைக்க அது திறந்து கொண்டது. ஸ்டியரிங் கழுத்தில் சாவி! முன் ஸீட்டில் ஹேண்ட் பேக்! சே! என்ன பெண் இவள்! உள்ளே உட்கார்ந்து நிதானமாக ஸ்டார்ட் செய்து, கொஞ்சம் முன்னே போய் வலது பக்கமாக ஒடித்து திரும்பி வந்தார். குதிரையை அதன் லாயத்தில் சரியாக கட்டிவிட்ட திருப்தியில், காரை பூட்டி நிமிர வாட்ச்மேன் ராஜு நின்று கொண்டிருந்தான். கைகளில் சில கடிதங்கள்.

"ஐயா! இந்தாங்க."

"ரொம்ப நன்றிப்பா. ஆமா, உன் பேத்தி உடம்பு இப்ப எப்படி இருக்கு? வயித்துப்போக்கு நின்னிடுச்சா ?"

"முன்னைக்கு பரவாயில்லைங்க. முழுக்க குணமாக இன்னும் ரெண்டு நாள் ஆகுமுங்க. சமயத்தில நீங்க பணம் கொடுத்து உதவலைன்னா என் பேத்தி என்னிக்கோ போயிருக்குங்க. ரொம்ப நன்றிங்க."

"சரிப்பா. பார்த்துக்க." நகர்ந்தவருக்கு, அவன் ஏதோ செல்ல தயங்குவதாகப் பட்டது.

"என்னப்பா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?

"ஒண்ணுமில்லீங்க. அது வந்துங்க. இந்த கடுதாசுகள உங்க பொண்ணு வந்தப்ப அவங்ககிட்டே கொடுக்கலாம்னு போனேன். என்னவோ ரெண்டு வார்த்தை இங்கிலீசுல திட்டிபுட்டு போயிடுச்சுங்க. ரொம்ப கோவமா இருக்காங்க போல. வந்து அரை மணி ஆவுது. போய் சமாதானம் செய்யுங்க."

ஸ்ரீநிவாசன் கொஞ்சம் கவலையுடன் லிப்ட் கதவை சாத்தி நாலாவது மாடி பட்டனை அழுத்தினார். எதிர்ப்பார்த்த மாதிரியே வாசல் கதவு 30 டிகிரி கோணத்தில் திறந்திருந்தது. உள்ளே வெளிச்சமில்லை. ஹால் விளக்கை போட்டார். அமைதியோ அமைதி. பிரம்பு கூடை ஊஞ்சலில் செல் குப்புற கிடந்தது. எடுத்துப் பார்த்ததில் உயிரற்று இருந்தது. வேறென்ன ? தீபக்கோடு சண்டை போட்டிருப்பாள். அவன் போன் வரக்கூடாது என்று ஸ்விட்ச் ஆ·ப் செய்து வைத்திருக்கிறாள். காதலிக்கும் போதே இவ்வளவு சண்டை என்றால் ஜனவரிக்கு அப்புறம் எப்படி இருக்கப் போகிறதோ? பாவம் தீபக். கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் அது சரியா என்ற கேள்வி உள்ளே எழுந்தது.

சிவப்பு புள்ளியோடு மௌனமாக இருந்த டி.வியின் ஸ்விட்சை ஆ·ப் செய்தார். இறைந்திருந்த சி.டிக்களை ஒரளவுக்கு அடுக்கி வைத்தார். மாயாவுக்கு ஜக்ஜித் சிங்/சித்ரா சிங் கஸல் பிடிக்கும். அவர் தேடிய சி.டி. எளிதாக கிடைத்தது. டி.வி.டியின் ரிமோட்டை அமுத்த டி.வி.டி. தன் தவளை நாக்கை நீட்டி, ஜக்ஜித் சிங்கின் கஸலை உள் வாங்கிக் கொண்டது. 'சிட்டி ந கொயி சந்தேஸ்' என்று தொடங்கும் பாடல். ஒரு கடிதமோ எந்த தகவலோ இல்லாமல் நீ எங்கே போய்விட்டாய் என்று ஜக்ஜித் சிங் உயிரின் உயிராக மெல்லிய குரலில் உருக ஆரம்பித்தார். காலில் இடறிய மஞ்சள் நிற மூடியை எடுத்து நோட்டம் விட்டதில் டைனிங் டேபிள் மேல் திறந்து கிடந்த டொமேட்டோ கெச்சப் பாட்டில் நீ தேடும் வஸ்து நான்தான் என்றது. மூடியை திருகி ·ப்ரிட்ஜில் வைத்தார். சுருட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பாதி பீட்ஸா இருந்தது. அதைத்தவிர சாப்பிட எதுவும் இல்லை. பசிக்கு எதையாவது சாப்பிட்டு வைக்க வேண்டும்.

மாயா எழுந்து வருவதாக தெரியவில்லை. ரூம் கதவை லேசாக தள்ளியதில் ஜில்லென்ற ஏ.சி.காற்று தாக்கியது. மரவட்டை மாதிரி உடம்பை குறுக்கி சுருண்டிருந்தாள். சண்டை போட்டுவிட்ட களைப்பில் தூங்கி போயிருக்கலாம். கதவை திறந்து தெரியாமல் மெதுவாக சாத்தினார். இன்றைய பிரச்னையை சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. நாலு வயசில் இவளை கையில் ஒப்படைத்து விட்டு போய் சேர்ந்துவிட்ட உஷாவை அப்படியே ஞாபகப்படுத்துகிறாள். அவளும் அப்படித்தான். பழியாய் சண்டை போடுவாள். ஆனால் அடுத்த கணமே இரண்டு மடங்கு அன்பை பொழிவாள். எல்லா சண்டையிலும் கணவனை ஜெயித்தவள், கடைசியில் ஒரு கான்சர் நோயிடம் போராடி தோற்றுப் போனாள்.

சமையல் அறைக்கு வந்து எதேச்சையாக குப்பை கூடையை எட்டிப் பார்த்ததில் அதில் சோனு நிகம் இசைக்கச்சேரியின் டிக்கெட்டுகள் நாலாக கிழிந்து கிடந்தன. இன்று மாலைக்கான நிகழ்ச்சி ! புரிந்து விட்டது. ஒரு வாரமாக இந்த நிகழ்ச்சியை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். கடைசி நிமிஷத்தில் தீபக் வரமுடியாமல் போயிருக்கலாம். உடனே இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்திருக்கும்.

தீபக் எதிர் பிளாக்கில் இருக்கிறான். சட்டையை போட்டுக் கொண்டு யோசித்தவாறே படியிறங்கினார்.

கதவை திறந்த தீபக் முகத்தில் இருந்த இறுக்கம் பிரச்சனையின் தீவிரத்தை சொல்லியது. எதுவும் பேசாமல் முன்னால் நடந்து போய் தான் ஒரு கூடை சேரில் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீநிவாசனுக்கு எதிர் இருக்கையை காட்டினான். அவஸ்தையான அரை நிமிட மௌனத்தை அவனே பிறகு உடைத்தான்.

"அங்கிள். நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு புரியுது. பட், இட் ஈஸ் எ க்ளோஸ்டு சாப்டர்"

"தீபக். எனக்கு எதுவும் தெரியாது. ஆனா எதுவோ பெரிசா ஆகியிருக்குன்னு தோணுது. நீயே சொல்லு."

"அங்கிள். என்னோட ஜாப் நேச்சர் உங்களுக்கே தெரியும். 600 கோடி ரூபாய் இன்டர்நேஷனல் ப்ராஜக்ட் ·பைனல் ஸ்டேஜ்ல இருக்கு. ஒரு வாரமா ராத்திரி பகல் தெரியாம உழைச்சிக்கிட்டு இருக்கோம். அதை புரிஞ்சுக்காம இப்பவே சோனு நிகம் ப்ரோகிராமுக்கு வந்தாதான் ஆச்சுன்னு அடம் பிடிச்சா எப்படி? உனக்கு என்னை விட அந்த வெள்ளக்காரிகளோட டிபன் சாப்பிடறதுதான் முக்கியமான்னு ... ஷி க்ரியேடட் எ சீன். ஐ ஆல்ஸோ லாஸ்ட் மை கூல். எக்கச்சக்கமா ஆயிடுச்சு."

"ஐயாம் சாரி. தீபக். அவ இன்னும் சைல்டாதான் இருக்கா. ஷி நீட்ஸ்.."

"நோ. அங்கிள். எனக்கு பயமாயிருக்கு. மூச்சு திணறுது. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டு ஹாப்பியா இருக்கமுடியாதுன்னு இப்பவே தோணுது. அவளே நீ வேண்டாம் போன்னு சொல்லிட்டா. ஐயாம் சாரி. உங்க பொண்ணு பத்தி உங்க கிட்டயே கம்ப்ளெயிண்ட் சொல்ல வேண்டியதாயிடுச்சு. பட், வேற வழியில்லை. உங்ககிட்ட என் முடிவையும் சொல்லிட்டு அம்மாவுக்கு போன் செய்யலாம்னு இருக்கேன். அம்மா இப்ப நீயூஜெர்ஸில இருக்காங்க. நாளைக்கு காலைலதான் ஹ¥ஸ்டன் திரும்பறாங்க.... அப்பறம்... நாளைக்கே இந்த ·ப்ளாட்டை காலி செய்யலாம்னு இருக்கேன்."

ஸ்ரீநிவாசன் பதில் பேசாமல் தீபக்கையே உற்று பார்த்தார். அந்த பார்வையும் மௌனமும் அவனை கொஞ்சம் சங்கடப்படுத்தியது. அது அவசியம் என்றே அவருக்கு பட்டது. பிறகு நிதானமாக ஆரம்பித்தார்.

"தீபக். உன்னோட முடிவு உன்னோடது. அதை நான் இன்·ப்ளுயன்ஸ் செய்ய முடியாது. பட், நீ பிரச்சனைகளை சமாளிக்காம ஓடி ஒளியறதை பார்த்தா வருத்தமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும்தான் வந்து லவ் பண்ணறோம்ன்னு சொன்னீங்க. நான் ஜாப்ல நல்ல ஒரு பொஷிஷன் வந்த பிறகு மாயாவை கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு நீதான் சொன்னே. அந்த மாதிரியே ஜனவரில தேதியும் குறிச்சாச்சு. இப்ப நீங்க ரெண்டு பேருமே வேண்டாம்னு முடிவு செஞ்சுருக்கீங்க. சரி. இதையும் ஏத்துக்கிறேன். ஆனா ப்ளாட்டை காலி செஞ்சுகிட்டு ஓடி போயிடறேன்னு சொல்லறயே, அப்ப என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா ?"

"இல்லை அங்கிள். நான் உங்களை ரொம்பவும் மதிக்கிறேன். நீங்க இல்லைன்னா நான் லை·ப்ல இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. உங்களுக்கும் மாயாவுக்கும் தர்மசங்கடத்தை கொடுக்க வேண்டாம்னுதான் நான் ஒதுங்கிக்கப் பார்த்தேன். நீங்கதான் அங்கிள் எனக்கு எப்பவும் குரு"

அப்பாடி. ஸ்ரீநிவாசனுக்கு சிக்கலை எடுப்பதற்கான முதல் நுனி கிடைத்து விட்டது.

"ஒகே தீபக். ஐயாம் ப்ரௌட் ஆ·ப் யூ. நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்பறேன். என் கண்ணை பார்த்து தயக்கமில்லாம உடனடியா எனக்கு பதில் சொல்லணும். அது உன் அடிமனசிலேர்ந்து வரணும்..... டு யூ லைக் ஹர் ?"

தீபக் இந்த அதிரடி தாக்குதலை எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் தடுமாறினான். ஸ்ரீநிவாசன் தீவிரமாக அவனை உற்று நோக்கினார்.

"யெஸ் அங்கிள். ஐ லைக் ஹர். பட்..."

அதன் பிறகு ஸ்ரீநிவாசனுக்கு எல்லாம் இலகுவாக போயிற்று. பத்தே நிமிடங்களில் அவனை சகஜ நிலைக்கு கொண்டு வந்து விட்டார். சிறு பையன். அப்பா இல்லாதவன். ஐந்து வயது சிறுவனாக அறிமுகம் ஆகி இன்றைக்கு தன் தோளுக்கும் தாண்டி வளர்ந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப் பட்டவனை எழுந்து அரவணைத்துக் கொண்டார். அடுத்து மாயாவின் ஞாபகம் வந்தது.

"தீபக். நான் வரேன். மாயாவை சரி செய்துட்டு உன்னை கூப்பிடறேன். அப்ப வா". ஸ்ரீநிவாசனை வாசல் வரை வந்து வழியனுப்பினான் தீபக்.

மாயாவை சமாளிப்பதில் ஸ்ரீநிவாசனுக்கு அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை. 'உன்னோடு பொம்மைகள் வைத்துக் கொண்டு விளையாடிய தீபக்கை இன்னமும் அப்படியே மனதில் வைத்துக் கொண்டிருக்காதே. அவன் உன் பொம்மையில்லை. உனக்கு கணவனாக வரப் போகிறவன்' என்று மென்மையாக புரியவைத்தார். மாயாவையும் நார்மலுக்கு கொண்டு வந்த பிறகு தீபக்கையும் வரவழைத்து இருவரையும் வலுக்கட்டாயமாக ஐஸ்க்ரீம் பார்லருக்கு அனுப்பி வைத்தார்.

அரை மணியில் மாயா ஆர்பாட்டமாக வந்தாள். "யூ ஆர் க்ரேட்! எப்படிப்பா? சைக்காலஜி படிச்சிருக்கியா? பேசாம நீ வி.ஆர்.எஸ். வாங்கிக்கிட்டு கவுன்சலிங் செய்யலாம். தாங்க்யூப்பா"

மாயா ஸ்ரீநிவாசனின் கைகளை பிடித்து குலுக்கினாள். இரண்டு கைகளாலும் மாலையாக ஸ்ரீநிவாசனின் கழுத்தை கட்டி கொண்டாள். ஸ்ரீநிவாசன் அவள் தலையை அன்புடன் கலைத்தார்.

"மை டியர் ·பூலிஷ் கேர்ள். முன்ன ஜாயிண்ட் ·பாமிலி சிஸ்டம் இருந்துது. சித்தப்பா, பெரியப்பா, அத்தைன்னு பெரிய கூட்டமே இருக்கும். வீட்டில எந்த ஜோடியாவது முறுக்கிக்கிட்டு இருந்தாக்க அவங்களோட ரியாக்ஷனை வைச்சே ஏதோ ப்ராப்ளம்ன்னு அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. சரியான நேரத்துல உள்ள நுழைஞ்சு சரி செய்வாங்க. இப்ப அதெல்லாம் போச்சு. எல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. அதுக்கும் வழி தெரியாம எத்தனையோ விவாகரத்துக்கள் நடக்குது. அப்பறம்... "

ஏதோ சொல்ல வந்ததை மென்று முழுங்கியதை மாயா கவனித்துவிட்டாள். "டாடி. ஏதோ சொல்ல வந்தீங்க. என்ன? சொல்லுங்க."

"அது வந்தும்மா... முன்னைக்கும் இப்பைக்கும் ஒரு சின்ன வித்தியாசம். அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் கவுன்சலிங் தேவையா இருந்துது. இப்ப கல்யாணத்துக்கு முன்னயே கவுன்சிலிங் செய்ய வேண்டியிருக்கு. அவ்வளவுதான்."

"போ. டாடி. யூ த ·பூலிஷ் ·பாதர்." ஸ்ரீநிவாசனின் நெஞ்சில் மாயா செல்லமாக குத்தினாள். அந்த இறுக்கத்தில் கண்களில் கண்ணீர் கொப்பளிக்க அதில் உஷா தெரிந்தாள்.

No comments: