Friday 11 January, 2008

எருமை சவாரி


ஆனந்த விகடன் - 06 ஜூன் 2007

'எச' ராமசாமியை நான் சந்திப்பேன், அதுவும் நான் பயணித்துக்கொண்டிருக்கும் விமானத்தின் பைலட்டாக அவன் இருப்பான் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த ஒல்லி குச்சி ஏர் ஹோஸ்டஸ் என்னை நோக்கி வந்தாள். பவ்யமாக குனிந்து கொழ கொழ ஆங்கிலத்தில் புரிந்ததும் புரியாதுமாக என் சொந்த ஊர், பள்ளிப் படிப்பை பற்றி விசாரித்தாள். பிறகு தன் ஸாட்டின் உள்ளங்கையால் என் கைகளை ஆராதித்து விட்டு, கேப்டன் டி.ஜி.ராம்சே உங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறார் என்றாள். 'பத்து நிமிடங்கள் பொறுங்கள். உங்களுக்கு அழைப்பு வரும்' என்று சொல்லிவிட்டு போனாள்.

அந்த நிமிடங்கள் போதும், என்னை பற்றி சொல்வதற்கு. அதற்கு வசதியாக கொஞ்சம் தரைக்கு வருவோமா? நான் ப்ளூ க்ராஸ் ராகவன் என்று மரியாதையோடும், மாட்டு சாணி, பூனை மூத்திரம், கொக்கு, குரங்கு, ஈ, கொசுக்களோடு வசிப்பவன் என்று வசையோடும் அழைக்கப்படுபவன். அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. என் கவலையெல்லாம் இந்த உலகத்தின் ஏகபோக உரிமை மனிதனுக்கு மட்டுமே இருக்கிறதே என்பதுதான். நகரம், மனித சுயநலத்தின் மொத்த உருவம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் ஒரு பென்ஷனர் இடமிருந்து வலமாக சாலையை கடக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த மூலையில் அவர் இருக்கும் போது பென்ஷனாக இருக்கும் அவரது ·பைல், அவர் அந்த பக்கம் போய் சேரும்போது ·பாமிலி பென்ஷனாகிவிடும். அந்த அளவுக்கு பாதசாரிகளை துச்சமாக மதிக்கிறார்கள், நம் வாகன ஓட்டிகள். இதில் அற்ப ஜந்துக்களான நாய்களுக்கும் மாடுகளுக்கும் எங்கே இடம்? ஏது மரியாதை? என் அவசரமும் வேகமும் என்னது, உன் விதியும் உயிரும் உன்னது என்பதாக போய்விட்டது.

நாய் மட்டும் ஏதோ ஓரளவுக்கு நகரசாலை போக்குவரத்தை புரிந்து வைத்துக் கொண்டுள்ளது என்று சொல்லலாம். அந்த பக்கம் போகும் வரை உயிருக்கு க்யாரண்டி இல்லை என்றாலும் கொஞ்சமாவது பதட்டப் பட வேண்டுமே? ம்ஹ¤ம். சிரித்த முகத்தோடு பொறுமையாக வாகன போக்குவரத்தை பார்த்துக் கொண்டிருக்கும். டென்ஷன்! அது! இது! என்று ஆலாய் பறக்கும் அல்ப மானுடர்கள், அந்த திருமுகத்தை பார்தாலே போதும். அதில் மிகப் பெரிய மேலாண்மை தத்துவங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஓரக்கண்ணால் அப்படி இப்படியுமாக பார்த்துக் கொண்டே இருந்து, சில நொடிகளுக்கு வாகனங்கள் வருவது குறையும்போது 'விலுக்கென்று' ஒரு பாய்ச்சலில் அந்தப் பக்கம் வந்துவிடும் அந்த அதி புத்திசாலி ஜந்து. அந்த மாதிரி வெற்றி நிகழ்சிகளை கண்டு களித்த நான், 'அறிவார்ந்த நாய் அவர்களே! நீவீர் அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால், புத்திசாலி மனிதனாக பிறப்பீராக. எத்தனை ஹார்ன் அடித்தாலும் அதை கிஞ்சித்தும் மதிக்காது அன்கண்டுகபிளாக இருக்கும் அற்ப மனிதர்கள் மண்டு நாய்களாக பிறந்து நகரத் தெருக்களில் லோல் படுவார்களாக' வரமும் சாபமும் அளித்திருக்கிறேன்.

பாவம் ஆடுமாடுகள்! எங்கேயாவது ஹைவேயில் கூட்டம் கூட்டமாக போய் கொண்டிருக்கும். தன் சுயநல தேவைகளுக்காக ஓடிஓடி சம்பாதிக்க மனிதன் போட்டிருக்கும் ராஜ பாட்டையை நாம் அடைத்துக் கொண்டு போகிறோம் என்று நினைவே இல்லாமல் இருக்கும் முட்டாள் ஜீவன்கள் அவை. புழுதி பறக்கும் அந்த காட்சியை பார்த்த மாத்திரத்திலேயே நம் வாகன ஓட்டிகளுக்கு பொறுமை போய்விடும். காதே கிழிந்து போகும் அளவுக்கு ஹார்ன் அடிப்பார்கள். அமெரிக்கையாக சென்று கொண்டிருந்தவைகளை மிரள வைத்து அங்கும் இங்கும் ஓட விடுவார்கள். மாட்டு இடையனை காது கூசும் அளவுக்கு திட்டி தீர்ப்பார்கள். நான் மட்டும் அந்த காலத்து ராஜாவாக இருந்து இவர்கள் என் கண்களில் பட்டால் ஒரே ஒரு அமுக்கு அமுக்கி கழுமரத்தின் கூர்முனையை அவர்களின் ஆசனவாய் சந்திக்க வைத்திருப்பேன்.

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தஞ்சாவூருக்கு பக்கத்தில் வெட்டாட்டாங்கரையில் இருக்கும் ஒம்பத்து வேலி எனப்படும் இயற்கை எழில் கொஞ்சும் குக்கிராமம். ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன், தவளை, வாத்து, பாம்பு, பல்லி, எலி, புறா, குரங்கு, நாய், கிளி, மைனா, வண்ணத்துப் பூச்சி, மண்புழு என்று விலங்குகள், பறவைகள், புழு, புச்சிகள் என்ற சூழலில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். எனவேதான் நகரத்தின் வாழ்வுரிமையில் அடிக்கடி முரண்பட்டுப் போகிறேன். இன்றைக்கு ஒம்பத்து வேலியில் பட்டணத்து பவுடர்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், கிராமமும் மக்களும் இன்னும் நகரம் அளவுக்கு மோசமாகிவிடவில்லை.

நானும் 'எச' ராமசாமியும் வாழ்ந்த அந்த இளமை பள்ளிப் பருவம் எங்களின் பொற்காலம். எதிர் வீடுதான் அவன் வீடு. வாய் பேசாத ஜீவன்களோடு எங்களுக்கு தொடர்பு மூன்று வயதிலேயே எற்பட்டது. எங்கள் வீட்டு காமாட்சி கன்று ஈன்றதை பார்க்க என் அம்மா விடாவிட்டாலும் கட்டை சுவர் ஏறி மரத்துக்கு தாவி தூரத்திலிருந்து பார்த்தோம். அவனை முசுகட்டை கடித்து கைகால்கள் கண்டு கண்டாக வீங்கியது ஒரு தனி கதை.

பசுவும் கன்றும் என்று ஆரம்பித்த எங்களது இனிய பொழுது போக்குகள் நாளுக்கு நாள் விரிவடைந்தன. துள்ளிக் குதிக்கும் கன்றை நான் வெளியே அழைத்து வந்தால் அனைத்து பால்ய கூட்டமும் கூடிவிடும். கன்று மண் தின்று விடக் கூடாது என்பதற்காக ஒரு ஓலைக் குவளையை அதன் வாயில் கட்டியிருப்ப்பார்கள். அதை ஒரு முறை ராமசாமி எடுத்து வந்து அவன் வாயில் கட்டிக் கொண்டு கன்றுக் குட்டி மாதிரி குதிக்க அவன் அம்மாவிடம் மொத்து வாங்கினான். ராமசாமி சும்மாவே இருக்க மாட்டான். படுத்திருக்கும் காமாட்சியின் கழுத்தில் இரண்டு கால்களையும் போட்டுக் கொண்டு அதன் மேல் உதடுகளை இரண்டு பக்கமும் உயர்த்தி 'ஈ' என செய்ய வைப்பான். தன் குட்டி வாலை சுழித்துக் கொண்டு ஓடும் பன்றிக் குட்டிகளை ஓட ஓட விரட்டுவான். உடம்பு முழுக்க துணியை சுற்றிக் கொண்டு நாவல் பழ மரம் ஏறி கிளிக் குஞ்சை பிடித்து வருவான். மழைக் காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீட்டிக் கொண்டிருக்கும் மண்புழுக்களை வெடுக்கென பிடிப்பான். அதற்காக நானும் அவனும் கட்டிப்புரண்டு சண்டை போட்டிருக்கிறோம். அவன் வண்ணத்து பூச்சி பிடித்து வந்தால் நான் அவன் கதற கதற வெளியே விட்டு விடுவேன். அதே நேரத்தில் தேனடை எடுக்கப் போய் குளவி கொட்டி வந்தால் நான் தான் அவனுக்கு வெங்காயம் தேய்த்து விடுவேன்.

இரட்டை மாட்டு வண்டி ஓட்டுவது என்பது மனதை கொள்ளை கொள்ளும் இனிய அனுபவம். ராமசாமிக்கு நான்தான் ஸ்டியரிங் பிடிக்க கத்துக் கொடுத்தேன். வலது பக்கமாக திரும்ப வேண்டுமென்றால், முதலில் வலது மாட்டின் மூக்கணங்கயிறை இழுத்துப் பிடிக்க வேண்டும். அது நின்று விடும். பிறகு இடது மாட்டின் கயிறை லூசாக விட்டு அதன் பின்பகுதியை இடது பக்கமாக தள்ளினால் அது திரும்ப ஆரம்பிக்கும். மறு நாளே ராமசாமி வண்டி ஓட்ட கற்றுக் கொண்டுவிட்டான். 'இங்கே பார். நான் ஹை ஸ்பீட் டிரைவிங் காட்டுகிறேன்' என்று சொல்லி இரண்டு மாடுகளின் கால்களுக்கு நடுவே அவன் கால்களை விட்டு ஒரு மாதிரியாக உராய, மாடுகள் பிய்த்துக் கொண்டு ஓடின. இன்றைக்கும் எனக்கு நகைச்சுவை மேலோங்கி இருப்பதற்கு காரணம் ராமசாமி.

ராமசாமியின் ஆசை வண்டி மாட்டு சவாரியோடு நிற்கவில்லை. எருமை மாட்டின் மீது உட்கார்ந்து கொண்டு போக வேண்டும் என்ற பேராவல் அவனுக்கு திடீரென வந்து விட்டது. எங்கள் வீட்டில் எருமை மாடு கிடையாது. ஒத்தைத் தெரு கலியமூர்த்தி வீட்டில்தான் இருக்கிறது. எருமை மாட்டின் மீது உட்காருவது மிக மிக அசௌகர்யமானது. எங்கும் பிடிமானமே இருக்காது. முதுகு எலும்பு கொஞ்சம் உறுத்தும். தவிர, எருமைகள் சோம்பல் சாவடிகள். நகரவே பத்து நிமிடங்கள் யோசிக்கும். நாங்கள் அவைகளை 'பிரேக் இன்ஸ்பெக்டர்கள்' என்று அழைப்போம்.

ராமசாமியின் அதீத ஆசையை கலியமூர்த்தி லேசில் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு மாதிரியாக அவரை சமாளித்து ராமசாமியை சிவன் கோயில் தேரில் ஏற்றுவது மாதிரி ஏற்றிவிட்டேன். ராமசாமி உருண்டையாக கொஞ்சூண்டு இளைத்த பக்கோடா காதர் மாதிரி இருப்பான். அவனது சவாரி முயற்சிகள் எருமைக்கே பிடிக்கவில்லை. தலையை ஆட்டியும் பின்பக்க கால்களை உதைத்தும் தன் எதிர்ப்பை பதிவு செய்தது. மாப்பிள்ளை கார் மாதிரி நகர்ந்து கொண்டிருந்த எருமையை ராமசாமி என்ன செய்தான் என்று தெரியவில்லை. திடீரென நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. எருமை ஓடினால் பயங்கரமாக இருக்கும். விஷயம் கைமீறி போய்விட்டது. கலியமூர்த்தி கத்திக் கொண்டே பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தார். எருமையின் கழுத்து பகுதிக்கு வந்து முன்னே சரிந்தவனை அது ஒரு உதறு உதற தலை குப்புற விழுந்தான். எருமையின் 'பேக் வீல்' அவன் தொடையை சரியாக பதம் பார்த்துவிட்டது. அன்றிலிருந்து ராமசாமிக்கு 'எருமை சவாரி' என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது.

விமானத்தில் அடிக்கடி போயிருந்தாலும் காக்பிட்டுக்குள் போகும் சந்தர்ப்பங்கள் வந்ததில்லை. எருமை சவாரி ராமசாமி.. இல்லை... கேப்டன் டி.ஜி.ராம்சே அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டார். என்னைப் பார்த்ததும் ராம்சே 'எச' ராமசாமி ஆகிப் போனான். நிறைய பேசினோம்.

"டேய். அன்னிக்கு எருமை சவாரி செஞ்சே. இப்ப ஆகாச எருமை, அதான் அலுமினிய எருமைய மேய்க்கிற. எப்படிடா இருக்கு."

"அடப் போடா. எருமை சவாரில இருக்கிற த்ரில் இதுல சுத்தமா இல்ல. இது வேகமா போனாலும் அந்த எருமையை விட மோசம். டேக் ஆ·ப் செஞ்சு, எலக்ட்ரானிக் பாதையில பிக்ஸ் செஞ்சதும் எங்க வேலை முடிஞ்சிடும். டர்புலண்ஸ் வந்தாத்தான் வேலை. அதையும் இந்த எல்லா மெஷின்களூம் பார்த்துக்கும். ஏ.எல்.எஸ் வந்ததும் லாண்டிங் கூட ஈசியா போச்சு. ஒரு மாசத்துக்கு எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சிட்டு, ஒம்பத்து வேலிக்கு போய் எருமை சவாரி போகனும்டா. அது சரி, உன் ப்ளூகிராஸ் எப்படி இருக்கு."

என் கவலையை கொட்டினேன். பூமியில் குறிப்பாக நகரங்களில் வாயில்லா ஜீவன்களுக்கு இடமில்லை என்பதை சொன்னேன்.

"ஆமா. முன்னேல்லாம் காக்காய் குருவிகள் உட்கார டி.வி. ஆன்ட்டனாக்கள் மொட்டை மாடியில் இருந்துச்சு. கேபிள் டி.வி. வந்து அதுவும் போயிடுச்சு. இன்னும் கொஞ்ச நாள் போனா காக்காய்களையும் குருவிகளையும் நகர குழந்தைகள் ஜூலதான் பார்க்க முடியும் போலிருக்கு." ராம்சே அலுத்துக் கொண்டான்.

"நல்ல வேளை. உன் ஆகாயம் மட்டும்தான் இன்னும் பறவைகளுக்காக இருக்குது. இல்லைலேன்னா அதையும் ப்ளாட் போட்டு வித்து காசு பார்த்துடுவாங்க நம்ம மக்கள்." என்றேன்.

"அடப் போடா. எங்கள் உலகத்தில பார்டு ஹிட்னு ஒன்னு இருக்குது. நாங்கள் தரை இறங்கும் சமயத்தில பறவைகள் எங்கள் பாதையில வந்துடக் கூடாது. பறவையோட அல்ப உயிரைவிட விமானத்தோட பாதிப்புதான் எங்கள் முதலாளிகளோட கவலையா இருக்கும். விமான இறக்கைகளில ·பான் மாதிரி ஒன்னு ஓடிக்கிட்டிருக்குமே, அதுல பறவைகள் சிக்கிக்கிட்டா அவ்வளவுதான். விமானம் மறுபடி பறக்க தயாராக நாட்கள் பிடிக்கும். என்கொயரியில ஆளுக்கு ஆள் குற்றம் சாட்டிப்பாங்க. ஏர்போர்டை சுத்தி பறவைகளே தென்படாதவாறு பார்த்துக்க ஒரு பெரிய டீமே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு."

"ஆமா. நமக்கு நெல்லு வேணும். ஆனால் பூச்சிகள் கூடாது. அடுக்கு மாடி வீடுகள் வேணும். ஆனா அங்க பாம்போ, பல்லியோ, பூரானோ, எலியோ வந்துடக் கூடாது. அதி வேக சாலைகள் வேணும். அங்க தப்பித் தவறி மாடோ நாயோ குறுக்கே வந்துடக் கூடாது. விமானம் வேணும். பறவைகள் அங்க வந்து பறக்கக் கூடாது."

"சுயநலம் பிடித்த மனிதர்கள் ஒழிந்து போவார்களாக" ரெண்டு பேரும் கோரஸாகச் சொன்னோம். விமானம் தரை இறங்க தன்னை தயார் செய்து கொள்ளஆரம்பித்தது.

இந்தக் கதையின் கருவுக்கான தீப்பொறி.....

1. ரஜினிகாந்தின் புன்னகை

ஒரு காட்டுப்பகுதியில் ரஜினி படத்தின் அவுட்டோர் ஷ¥ட்டிங். ஒரு பாம்பு படபிடிப்பு பகுதியில் வந்துவிட யூனிட்டே அல்லோலப் பட்டிருக்கிறது. ஒருவர் ரஜினியிடம் வந்து பாம்பு வந்ததினால் படப்பிடிப்பு தடைபட்டு போய்விட்டது என்று அலுத்துக் கொண்டாராம். ரஜினியிடமிருந்து மெல்லிய சிரிப்பு வந்ததாம். காரணம் கேட்டதற்கு, 'பாம்பு அதன் இடத்திலேயேதான் இருக்கிறது. நாம்தான் அன்னியர்கள்' என்றாராம்.

2. சிவகுமாரின் கோபம்

சென்னை நாகேஸ்வரன் பார்க்கில் 'சித்தி' தொலைகாட்சித் தொடர் ஷ¥ட்டிங். புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருக்கும் பார்வையற்ற பிச்சைக்காரனாக எனக்கு சிறு வேடம். வாழ்கையின் விரக்தி விளிம்பில் சிவகுமாரும் சுபலேகா சுதாகரும் என்னைத் தாண்டி போவார்கள். என்னைப் பார்த்ததும் அவர்களுக்கு வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகம் வரும். இதுதான் ஸீன். இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு வால் சிறுவன் குறுக்கே ஓடினான். டைரக்டர் கத்தி விட்டார். சாது சிவகுமாருக்கு வந்ததே கோபம்.' டைரக்டருக்கு திருப்தி இல்லை என்றால் கட் சொல்ல வேண்டியதுதானே. இது அவர்கள் விளையாடி மகிழ்வதற்கான பொது இடம். இங்கு நாம்தான் குறுக்கீடு செய்தவர்கள். அப்படியிருக்க எதற்கு கத்த வேண்டும்.' என்று பொங்கித் தள்ளிவிட்டார்.

1 comment:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் கதைகள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கின்றன. உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.