Monday 3 December, 2007

நதியின் குற்றமா?


காஸ்ட்லியான சில ஆம்ப்யூல்களை உடைத்து விட்டேன். எதையோ நினைத்துக் கொண்டு ·பிரிட்ஜிலிருந்த ஒரு ட்ரேயை நகர்த்தினேன். முந்திரிக் கொட்டை மாதிரி முன்னால் இருந்த அந்த கண்ணாடி குப்பிகள் பிதுங்கி தொப்பென விழுந்தன. கிழம் வந்தவுடன் அந்த ஸ்மெல்லை வைத்தே கண்டுபிடித்துவிடும். 'காள் காள்' என்று ஹை டெசிபலில் விடாமல் டாபமர்மன் மாதிரி கத்தும். 'தீர்ந்தது உன் கணக்கு' என்று சீட்டை கிழிக்கும். இதோடு ஆறே மாசத்தில் நான்கு இடங்களில் வேலை பார்த்தாகிவிட்டது. எல்லாம் இந்த மாதிரி சேல்ஸ்மேன் வேலைகள்தான். எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

நானும் இஞ்சினீயரிங் காலேஜில் படித்தவன்தான். படிக்கும் போது வருங்காலத்தில் பெரிய உச்சாணி கொம்பில் இருப்பது மாதிரி கனவுகளோடு இருந்தேன். த்ரிஷாவும் அசினும் என் கனவுகளில் அடிக்கடி வந்து 'என்னை கல்யாணம் செய்து கொள்ளேன்' என்று அடம் பிடித்திருக்கிறார்கள். படிப்பு முடியும் சமயத்தில்தான் நான் எதிர்பார்க்காத டிராஜிடி க்ளைமாக்ஸ் என் வாழ்வில் வந்தது. என்னோடு படித்தவர்களுக்கெல்லாம் காம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்து சென்னை, பெங்களூர், கொச்சின் என்று போய்விட்டார்கள். நான் இன்னும் தஞ்சாவூரின் சந்து பொந்துகளிலேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏன் நல்ல வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது? புரியவே இல்லை.

நான் படிப்பில் ஆவரேஜ்தான். ஆனால் என்னைவிட ஆவரேஜ்கள் நல்ல வேலையில் சேர்ந்திருக்கிறார்களே? அது எப்படி? அவர்களின் அப்பாக்கள் அங்கே இங்கே ஆள் பிடித்து, பணத்தால் அடித்து, இன்·புளுயன்ஸ் செய்து வேலை கிடைக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் என் அப்பா அப்படியெல்லாம் செய்யமாட்டாராம். அப்பா நிழலில் மகன் சுகம் காணக் கூடாதாம். தானும் ஒரு இன்·போசிஸ் நாராயண மூர்த்தி என்ற நினைப்பு அவருக்கு. போன வாரம் வீட்டில் ஏக ரகளை ஆனது. அம்மா ஓவென அழுதாள். என்னை இந்த உலகம் வஞ்சித்து விட்டது. கடவுள் கூட வேண்டியர், வேண்டாதவர் பார்க்க ஆரம்பித்துவிட்டார். நான் இனி எதற்கு வாழ வேண்டும் ? செத்துப் போய்விடலாம் என்று தீர்மானித்துவிட்டேன்.

கிழம் வந்து அதே மாதிரி கத்தியது. நானும் பதிலுக்கு கத்தினேன். கஸ்டமர்கள் வேடிக்கை பார்த்தார்கள். நிறைய அட்வைஸ் செய்தார்கள். 'நீயுமாச்சு உன் வேலையுமாச்சு' என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். சரி, எப்படி சாவது? நீண்ட யோசனைகளுக்கு பிறகு ரயில் முன் பாய்ந்து உயிரை விடுவது என்று தீர்மானித்தேன். ரெயில்வே டிராக்கை நோக்கி நடையை செலுத்தினேன்.

திடீரென எனக்கு முன்னே ஒரு சிறுவன் பொம்மை துப்பாக்கியை நீட்டினான்.

"அங்கிள் நீங்கள் ஜெயிச்சுட்டீங்களா? இல்லை, தோத்துடீங்களா?"

"நான் தோத்துட்டேன்ப்பா."

தோள்களை குறுக்கி கைகளை விரித்தேன், வேலு நாயக்கர் மாதிரி.

"அப்டீன்னா, நீங்க ஜெயிக்கப் போறீங்கன்னு அர்த்தம்." சிறுவன் கலகலவென சிரித்தான்.

"சரி. ஜெயிச்சுட்டேன்னா?"

"இன்னும் ஜெயிக்கப் போறிங்கன்னு அர்த்தம்" என்று சொல்லிக் கொண்டே ஓடிப் போய் விட்டான். என் பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது. 'தோல்வியைக் கூட பாசிடிவ்வாக யோசி' என்று சொல்லிவிட்டு போய்விட்டானே? 'டேய்! அந்த பையன் சொல்வது என்ன? நான் சொல்வதைக் கேள். முதலில் உன்னை சரி செய்து கொள். பிறகு மற்றவர்களில் குறை காணலாம்' என்று உள்மனது சொன்னது. ஆமாம்! என் படகில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள்! அதைவிட்டு விட்டு நதியை குறை சொன்னால் எப்படி?

இனி நான் புது மனிதன். ஜெயிக்கப் போகிறேன். இன்னும் ஜெயிக்கப் போகிறேன்.

என் நடையை கூட்டினேன், நம்பிக்கையோடு.

இந்த கதைக்கான தீப்பொறி.... (செல்வி ரம்யா)

விஸ்காம் எக்ஸாம், குறும்படம், எ·ப் எம் லைவ் ஷோ, தொகுப்பாளினி என மிகுந்த டென்ஷனோடு நான் அலைந்ததை என் அப்பா கவனித்து, 'நீ பின்னாளில் என்னவாக இருக்கப் போகிறாய் என்பதை தெளிவாக தீர்மானம் செய். செய்யும் வேலையை ரசித்து ரசித்து செய். உனக்கு இன்னும் பலம் சேருமே தவிர அலுப்பே தட்டாது" என்றார்.

(விகடன் தீபாவளி மலர் 2007)

No comments: