Thursday 26 April, 2012

டிரைவிங் லைசன்ஸ் வாங்கலையோ?

இன்று காலையில் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போனேன். எனக்கு 50 வயது ஆகிவிட்ட காரணத்தால் தற்போதைய ஓட்டுனர் உரிமம் காலவதியாகிவிட்டது. புரோக்கர்கள் இல்லாமல் நேரடியாக புதுப்பிக்கும் உரிமம் பெறுவது என்ற முடிவோடு போனேன். தேவையான பாரம்ங்களை நெட்டிலிருந்து டவுண்லோடு செய்து கொண்டேன். அதன் படி நேற்று இரவு கால்கடுக்க ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் சர்டிபிகேட் வாங்க காத்திருந்து வாங்கினேன். தெரியாத்தனமாக எனது பெயரையும், எனது மச்ச விவரங்களையும் நானே எழுதிவிட்டேன். அதை பார்த்ததும் டாக்டர் பொங்கிவிட்டார். அந்த பார்ம் முழுவதும் அவர்தான் நிரப்ப வேண்டுமாம். தவிர மா.வ.போ.அலுவலகத்துக்கு வெளியே விற்க்கும் பார்ம்தான் சரி, டவுண்லோடு பார்ம் சரியில்லை என்று மீண்டும் அனல் கக்கினார். ராஜேந்திரகுமார் கதையில் வரும் கதாபாத்திரம் மாதிரி 'ஞே' என்று விழித்தேன். ஏதோ கருனை செய்து கையெழுத்து போட்டு, ஐம்பது வாங்கிக் கொண்டார். நாளை எப்படி நடக்கப் போகிறதோ என்று வயிற்றை கலக்கியது.

மா.வ.போ.அலுவலகம் போனதும் யாரை கேட்பது என்று தெரியவில்லை. என்னுடன் வந்த நண்பருக்கு தெரிந்த ஒரு க்ளார்க் பெண்மணியை கேட்டோம். 'எல்காட் பார்ம் எங்கே?' என்றார். அப்படியா? அது என்ன? என்றோம். பின்பக்கம் போய் எல்காட் பார்ம் வாங்கி வாருங்கள் என்றார். ஒரு ரூபாய்தான். அதில் அனைத்து விவரங்களும், அவர்களே நிரப்ப வேண்டும் என்று எழுதியிருந்தது. சரி என்று ஒன்றும் எழுதாமல் போனேன். 'ம். பார்மை நிரப்புங்கள்' என்றார். அப்ப அந்த டாக்டர் சொன்னது? அது டாக்டரோடு போச்சு. கடகடவென்று எழுதினேன். எல்காட் ரூமுக்கு போங்கள் என்றார்.

எல்காட் ரூமில் போனால் வழியெல்லாம் ப்ரோக்கர்கள். எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. எல்காட் ஆசாமி, என் பழைய ஓட்டுனர் உரிமத்தை அப்படியும் இப்படியுமாக பார்த்தார். :இது சென்னை எடுத்தது. தூத்துக்குடியில் செல்லாது. எனவே, சென்னையிலிருந்து தடையில்லா சான்று வாங்கி வாங்க' என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். "வேறு வழியே இல்லையா?" என்று மறுபடியும் 'ஞே' என்று விழித்தேன். அப்போது என்னையே அறியாமல் ஒரு மாஜிக் செய்திருந்தேன். எனது விசிடிங்க் கார்டை முன்னால் இனைத்திருந்தேன். அவருக்கு நபார்டு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மன்மோகன் சிங்கே வந்து மா.வ.போ.அலுவலகத்தில். ஏதாவது கேட்டாலும் அவருடைய பதவி பவிஷூ எடுபடாது, நாம் எந்த மூலை என்று நினைத்திருந்தேன். 'வேண்டுமானால் ஆர்.டி.ஓவை பாருங்கள்' என்று எனது அனைத்து காகிதங்களையும் என்னிடம் திருப்பி கொடுத்துவிட்டார்.

ஆ.டி.ஓ. காபினுக்கு போய் எனது விசிடிங் கார்டை நீட்டினேன். என்ன அதிசயம்! அவர் இன்முகம் காட்டி என்னை உட்காரச் சொல்லி, விசாரித்தார். சென்னை மேட்டருக்கு ஒரு அபிடவிட் கொடுக்கச் சொன்னார். பெல் அடித்து பியூனை வரவழைத்து ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி வரச் சொன்னார். வந்ததும் அபிடவிட்டை எழுதி கொடுத்தேன். பணம் நான் கொடுக்க பியூன் போய் கட்டி வந்தார். நேராக எல்காட் ரூமுக்கு போய் போட்டோ எடுத்துக் கொண்டேன். அரை மணி நேரத்தில் எனக்கு புதுப்பிக்கப்பட்ட லைசன்ஸ் கிடைத்து விட்டது.
 
 இரண்டு விஷயங்கள் நிரூபணம் ஆனது.
 
1. நபார்டின் விசிடிங் கார்டுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. 
 
2. மா.வ.போ.அலுவகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.·

No comments: