Friday 9 February, 2007

விலகிப் போ காதலா


விலகிப் போ காதலா

1997 அக்டோபர் 17 குங்குமம்

சிவாவை கழற்றிவிடுவது என்று தீர்மானித்துவிட்டாள் மாயா. ஆனால் அதை எப்படி சொல்வது? நேற்று காலை வரை மனதுக்கு பிடித்தவன்தான். தற்போது எல்லாம் தலைகீழாகிவிட்டதே? என்ன செய்ய? சுயநலம்தான். நம் வளமான வாழ்வுதான் முக்கியம்.

இரவு முழுக்க யோசனை செய்ததில் ஒரு கேம் பிளான் தயாரானது. என்ன, ஒரு முறையாவது சிவாவிடம் நேரிடையாக ஐ லவ் யூ சொல்லியிருந்தால்தானே பிரச்சனை? இதுதான் சரி. விஷயத்தை ஒளிக்காமல் கண் முன்னால் சொல்லிவிட்டால் போயிற்று. மாயா இப்போது தயார் நிலையில்.

மாயாவை பொறுத்தவரை தனக்கு லைஃப் பாட்னராக வரப்போகிறவன் ஜம்மென்று வாட்டசாட்டமான அழகனாகவும் இருக்க வேண்டும். கை நிறைய சம்பாதிப்பவனாகவும் இருக்க வேண்டும். தவிர, அப்பா மாதிரி நல்லவனாகவும் இருக்க வேண்டும். இதையெல்லாம் கேட்டு பெறக்கூடிய அளவுக்கு மாயாவிடம் ஒரு அஸ்திரம் இருக்கிறது என்றால் அது அசத்தும் அழகு. அப்படியொரு அழகு.

சிவா எதிர் வீட்டில் இருக்கிறான். மாயா கணக்கில் வீக் என்பதால் தினமும் வந்து கணக்கு சொல்லிக் கொடுக்கிறான். பார்ப்பதற்கு அரவிந் சாமி மாதிரி இருப்பான். ரொம்ப நல்லவன்தான். ஆனால் எம்.எஸ்.ஸி. மாத்ஸ் படித்துவிட்டு சும்மாயிருக்கிறான். வேலையில்லாதவனைப் போய்....

இந்த சமயத்தில்தான் அப்பா திடீரென நேற்று மாலை ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அப்பாவின் தூரத்து உறவில் ஒரு பையன் டில்லியில் சிட்டி பாங்கில் உயர் அதிகாரியாக இருக்கிறானாம். அவன் மாயாவை ஏதோ ஒரு கல்யாண வீடியோ காசட்டில் பார்த்துவிட்டு விசாரித்தானாம். அதிலிருந்து கல்யாணம் என்றால் மாயாவோடுதான் என்று சொல்லிவிட்டானாம். அப்பாவின் வசதியின்மை தெரிந்து கொண்டு வரதட்சணை... நகை... மூச்... என்று சொல்லிவிட்டானாம். அப்பா மாயாவை கல்யாணம் பண்ணியே கொடுத்துவிட்ட மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார்.

மாயாவுக்குத்தான் குழப்பம். சிவாவா இல்லை சிட்டி பாங்கா? புதிதாய் திடீரென முளைத்தவன் மிக வசதியாக இருக்கிறான். ஆனால் அவன் யார்? எப்படி? சாதுவா? கோபக்காரனா? கெட்ட சகவாசம் ஏதாவது உண்டா? இல்லையா? ஒன்றும் தெரியாது. என்ன செய்ய?

ஆனாலும் பலத்த யோசனையில் சிவாவை கழற்றிவிடுவது என்று தீர்மானித்து விட்டாள். சிவா இப்படியேதான் இருப்பான். காதலாவது கத்திரிக்காயாவது. மூட்டை கட்டி வை. கணக்குப் போடு.

மணி எட்டு ஆயிற்று. சிவா வந்துவிட்டதாக தங்கை ராஜி சொல்லிவிட்டு ஓடிப் போனாள். மாயா மனதுக்குள் ஒருமுறை ரிஹர்ஸல் செய்து கொண்டாள். கணக்கு புத்தகம் மற்றும் நோட்டுகளை எடுத்து மேஜை மீது வைத்தாள்.

சிவா வந்துவிட்டான். எப்படி ஆரம்பிப்பது? சிவாவே மெளனத்தை உடைத்தான். இவள் சொன்னாள்.

சிவா நிமிர்ந்து சற்று நோக்கினான். "அப்ப என் மீது உனக்கு காதல் இல்லை. அதான் அப்பா பேச்சுக்கு தலையாட்டியிருக்கிறாய். ஓகே. பாடத்தை ஆரம்பிக்கலாமா?"

மாயா வியந்து போனாள். ஹா! இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே. "சிவா. நீ உண்மையிலேயே ஜென்டில்மேன்." மாயா உளறிக் கொட்டினாள்.

"அது இருக்கட்டும் மாயா. நீ ஒன்று சொன்னாயே நான் வேலையில்லாதவன் என்று. அதை மாற்றிக் கொள்ள வேண்டும். எனக்கு உலகமே மாத்ஸ்தான். நீ கூட அடிக்கடி உப்புக்கு கூட உதவாத மாத்ஸ் என்று கிண்டலடிப்பாய். நான் சட்டை செய்ததில்லை. ஒரு இன்டர் நேஷனல் மாத்ஸ் ஜர்னலில் எனது ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. அதற்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்தன. நேற்றுதான் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு செமினாருக்கு அழைப்பு வந்துள்ளது. கூடவே அங்கு ஃபேகல்டி மெம்பராக சேர எனது விருப்பத்தைக் கேட்டிருக்கிறார்கள். சகல வசதிகளும் தரவிருக்கிறார்கள். திருமணம் ஆகியிருந்தால் மனைவிக்கும் கிரீன் கார்டு கிடைக்க வழி செய்து தருவதாக எழுதியிருக்கிறார்கள். அப்பா அதைப் படித்ததிலிருந்து பிடிவாதமாக உடனே கல்யாணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உன் விருப்பத்தைக் கேட்டுச் செய்யலாம் என்று வந்தால் உன் முடிவு வேறு விதமாக இருக்கிறது. நான் உன்னை மனதார விரும்பினேன். எப்போது அடிமனதில் காதல் இல்லையோ இனிமேலும் பேசுவதில் அர்த்தமில்லை. பெஸ்ட் ஆஃப் லக் மாயா. சரி. நிறைய போர்ஷன் பாக்கியிருக்கிறது. படிப்பை ஆரம்பிக்கலாமா?"

சிவா பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாயாவுக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

1 comment:

Esha Tips said...

oh a very great story i wish you to join in our http://tamilparks.50webs.com/ to publish your short stories