Monday 5 February, 2007

முற்பகல் செய்யின்


முற்பகல் செய்யின்

1997 மார்ச் 02 வசந்தம் (தினகரன்) ஞாயிறு மலர்

சின்னதுரை பஸ்சுக்காக காத்திருந்தார். பஸ் வரவில்லையே என்ற கவலையை விட பணப் பிரச்னைதான் பெரிய கவலை. அவருக்கு ஒரு தனியார் கம்பெனியில் பியூன் வேலை. சொற்ப சம்பளம். ஆனால் குடும்பம் பெரிசு. மூத்த மகள் பிரசவத்துக்கு வந்திருக்கிறாள். தீபாவளி, பொங்கல் கடன்களே கழுத்து வரை இருக்கின்றன.

சின்னதுரைக்கு சம்பளத்தை தவிர கிடைக்கக்கூடிய ஒரே வருமானம் பயணப்படி. வாரத்தில் மூன்று நான்கு முறை தொலைவில் இருக்கும் பாக்டரிக்கு சில காகிதங்களை எடுத்துச் செல்ல பயணப்படி கிடைக்கும். இப்போது அந்த விஷயமாகத்தான் பஸ்சுக்கு காத்திருக்கிறார்.

அப்போதுதான் அதை கவனித்தார். எழுபது வயசான கிழவர் பிளாஸ்டிக் கூடையிலிருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்துப் பார்த்தார். நூறு ரூபாய் தாள்கள்! கிழவர் மறுபடியும் பையை சுருட்டி கூடைக்குள் வைத்து விட்டார். சரியான முட்டாள்! இவ்வளவு பணத்தை யாராவது கூடையில் வைப்பார்களா?

பணம்! ஆமாம்! உடனடியாகத் தேவை. கடனுக்குக்கூட யாரும் இப்போது தர மாட்டார்கள். யாரும் கவனிக்காதபோது எடுத்து விட்டால் என்ன? சே...சே... திருடுவது தப்பு. கொஞ்சம் தள்ளிப்போய் நின்று கொண்டார். மீண்டும் அந்த ரூபாய் கண் முன்னால் விரிந்தது. இதை விட்டால் வேறு வழியே இல்லை என்று பிசாசு மனசு கூச்சலிட்டது.

பஸ் வந்து விட்டது. நல்ல கூட்டம். பாய்ச்சலாய் பாய்ந்து பஸ்சில் ஏறினார். படிக்கட்டின் பின் சீட்டில் உட்காந்தவரிடம் தனது தோல் பையைக் கொடுத்தார். ஃபுட்போர்டில் தொங்கும் காலேஜ் பையன்கள் உள்ளே அழுத்த பஸ்சுக்கு மத்தியில் தள்ளப்பட்டார். நிமிர்ந்து பார்த்ததும் ஆச்சர்யம்!

அந்த கிழவர் அவருக்கு முன்னால்! அந்த பிளாஸ்டிக் கூடை வாய் பிளந்து மஞ்சள் பை எடுக்கும் வகையில்... பிசாசு மனசு எடு... எடு... என்றது. பஸ் நிற்காமல் போய்க் கொண்டிருந்தது. பஸ் பாக்டரியை அடைய அரை மணியாவது ஆகும். முன்னும் பின்னுமாக பயங்கரமாக குலுங்கியது. எடுக்கலாமா? இல்லை... இப்போது வேண்டாம். சிறிது நேரம் கழித்து...

அப்படியே பலமுறை யோசித்து கடைசியில் ஒரு குலுக்கலில் பையை எடுத்து விட்டார்! வியர்வை வெள்ளம். கை, கால்கள் லேசாக நடுங்கின. நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. யாராவது பார்த்திருப்பார்களோ?

பஸ் குலுக்கலுடன் நிற்கவும், நிறைய பேர் இறங்க ஆரம்பித்தனர். மாட்டிக் கொண்டு விட்டால்? சட்டென்று இறங்கி எதிர்பக்கம் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தார். பஸ் போய் விட்டது. அப்பாடி! சின்னதுரைக்கு உடம்பு முழுவதும் உஷ்ணம். ஒருவித திருப்தி.

திடீரென ஞாபகம் வந்தது. அந்த தோல் பை! ஆபீஸ் பேப்பர்கள் அடங்கிய தோல்பை! ஐயோ! பின் சீட்டில் கொடுத்ததை இறங்கும்போது இருந்த அவசரத்தில் வாங்க மறந்து விட்டேனே! ஷாக் அடிக்காத குறை. முகம் வெளிறிப் போயிற்று. செய்வதறியாமல் பேந்த பேந்த முழித்தார். திரும்பி பஸ் ஸ்டாப்புக்கு ஓடி வந்தார். வாய் விட்டு அலறினார். பஸ் ஸ்டாப்பில் இருந்தவர்கள் விசாரித்தார்கள். அழுகையூடே விவரங்கள் சொன்னார்.

"சார் அதில் பணம் வச்சிருந்தீர்களா?"

"இல்லையே! ஆபீஸ் பேப்பருங்க. முக்கியமான பேப்பருங்க. இது கிடைக்கலைன்னா வேலை போயிடுங்க."

"யார்கிட்டே கொடுத்தீங்கன்னு ஞாபகம் இருக்கா?"

"இல்லையே" கேட்டவர்கள் விவரங்கள் அறிவதில்தான் மும்முரமாக இருந்தார்கள். உதவுகிறவர்கள் யாருமில்லை.

"இதுக்குத்தான் முன்னே பின்னே தெரியாதவங்ககிட்டே பையை கொடுக்கக் கூடாது. இப்படித்தான் நான் ஒருமுறை நாகர்கோவில் பஸ்சுலே..."

"கூட்டம் ஜாஸ்தியா இருந்தா அடுத்த பஸ்சுலே போறதுதானே பெரியவரே?"

"ஆபீஸ்லே ஆட்டோல போறதுக்கு பைசா தரப்படாதோ? இவ்வளோ வயசானவரை பஸ்சுலே அனுப்ப எப்படி மனசு வந்ததோ தெரியலே"

"தோல் பைன்னு சொன்னாரு. தோல் பையே இருநூறு ரூபா தேறும். கிடைச்சவன் விடுவானா? பேப்பர்களை கடாசிட்டு பையை சுட்டுடுவான்."

"ஆமாம். போனது போனதுதான்."

ஆளுக்கு ஆள் கமெண்ட் அடித்தார்கள். யாரோ ஒருவர் "சார் நீங்க உடனே பஸ் புடிச்சு டெப்போவுக்கு போங்க. பஸ் நம்பரைச் சொல்லி டிக்கெட்டை காட்டுங்க. அந்த ஆள் கண்டக்டரிடம் கொடுத்தாலும் கொடுத்திருப்பான்."

எதிர்பக்க பஸ் பிடித்து டிப்போ போய் அலையோ அலையென்று அலைந்தார். அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்தார்கள். விவரங்கள் கேட்டு வெறுப்பேத்தினார்கள். கடைசியில் யாரோ ஒருவர் இரக்கப்பட்டு விவரங்கள் குறித்துக் கொண்டு மறுநாள் காலையில் பத்து மணிக்கு வரச் சொன்னார்.

வெளியே வந்தார். மண்டை கனத்தது. வேலை நிச்சயம் போகப் போகிறது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. மஞ்சள் பை கையில் லேசாக இருந்தாலும் கனத்தது. முள்ளாய் குத்தியது. பிரித்து, எண்ணியதில்... இரண்டாயிரத்து ஐநூறு!

உள்ளேயிருந்து ஒரு கடிதம் கீழே விழுந்தது. எடுத்துப் பிரித்தார். ஒரு அம்மா தன் பையனுக்குப் பாசத்துடன் லெட்டர் எழுதியிருந்தாள். பையன் அருகில் உள்ள காலேஜில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். வறுமைப்பட்ட குடும்பம். நிலத்தை ஒத்தி வைத்து காலேஜ் ஃபீஸ் கட்ட அனுப்பியிருக்கிறாள்.

சின்னதுரைக்கு தன்னை அடிக்காத குறை. என்ன காரியம் செய்து விட்டேன். இப்போது என் குடும்பமும் குட்டிசுவராகப் போகிறது. பணம் தொலைந்ததில் அந்த குடும்பமும் தள்ளாடப் போகிறது. என்ன ஆனாலும் பரவாயில்லை. பணத்தை அந்த பையனிடம் சேர்ப்பித்து விட வேண்டும்.

அங்கே இங்கே விசாரித்து காலேஜ் போய் ஹாஸ்டலில் அந்த பையன் ரூமை கண்டுபிடித்து விட்டார். பையை தவறவிட்ட அந்த பெரியவர் தலையில் கை வைத்தவாறு உட்காந்திருந்தார். பணத்தை கொடுத்ததும் கிழவர் வயதையும் மீறி சின்னதுரையின் கையை பிடித்துக்கொண்டு கதறி அழுதார். உடனிருந்த காலேஜ் நண்பர்கள் சின்னதுரையின் நேர்மையை வாயாரப் புகழ்ந்தனர். பஸ்சில் கீழே கிடந்ததாக சொல்லியிருந்தார். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு பாராட்டும் முள்ளாய் குத்தியது.

வீடு திரும்பினார். யாரிடமும் எதுவும் பேசவில்லை. நாளை காலையில் ஆபீஸ் போய் முதலாளி காலில் விழுந்து எப்படியாவது சமாளிக்க வேண்டும்.

காலையில் வழக்கம்போல் ஆபீஸ்னுள்ளே நுழைந்ததும் அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. ரிசப்ஷனில் ஒருவர் சோபாவில் உட்காந்திருந்தார். அவர் மடியில் அதே தோல் பை! சின்னதுரை 'முருகா' என்று உரக்கச் சொன்னார்.

1 comment:

✪சிந்தாநதி said...

நேர்மை!:)

சுட்டி இணைப்பிற்கு நன்றி

தமிழ்மணம் கருவிப் பட்டை இணைத்து விட்டீர்களா?